Saturday, July 10, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 5

17. மேலும் சந்நியாசிகளின் இலக்கணத்தைக் கூறவந்த தொல்காப்பியர்,

"நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய
"
[தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71]

என்று சொல்லியிருப்பதிலிருந்து பூணூலையும், முக்கோலாகிற திரிதண்டத்தையும் தரித்த பெரியவர்களே அந்தக்காலத்தில் சந்நியாசிகளாகக் கருதப்பட்டனர் என விளங்குகிறது. பூணூலும், முக்கோலுமில்லாத சைவசந்நியாசிகளும், அத்வைத சந்நியாசிகளும் அக்காலத்தில் தோன்றவில்லையென்றோ, சான்றோர்களால் சந்நியாசிகளாகக் கருதப்படவில்லையென்றோ விளங்குகிறது. மற்ற சங்க இலக்கியங்களிலும் 'முக்கோற்பகவர்' என்று இவர்களை பாகவத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக எடுக்கையால் இவர்கள் பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்கள் எனத்தேறுகிறது. இவ்வண்ணமாக, சங்ககாலத்தில் விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட வைஷ்ணவ மதம் ஒன்றே வைதிகமதமாகக் கொள்ளப்பட்டிருக்கும்போது, சங்ககாலத்தமிழர்களை சைவர்கள் என்று ம.பொ.சி. எழுதியது அடியோடு பொருந்தாது என்று நடுநிலையாளர்க்கு நன்கு விளங்கும்.

18. இதற்குமேல் ம. பொ. சி. கேட்கக்கூடும். சங்ககாலத்தில் முருகபக்தர்களும், சிவபக்தர்களும் இருந்திருக்கிறார்களே; முருகனுக்கே திருமாலைக்காட்டிலும் பரிபாடலில் அதிகமான பாடல்கள் உள்ளனவே; ஆகையால் சங்ககாலத்தில் சைவர்கள் மிகுதியானவர்கள் என்று கூறித்தானே ஆகவேண்டும் என்பது அக்கேள்வி. இதற்கு பதில் பின்வருமாறு: -

19. முருகன் முதலான மற்ற தெய்வங்களுக்கு மிகுதியான பாடல்கள் இருந்தாலும் அப்பாடல்களில் பரம்பொருளுக்குரிய பெருமைகள் எதுவுமே பாடப்படவில்லை. திருமால்பற்றிய பாடல்களிலேயே பரம்பொருளுக்குரிய அத்தனை பெருமைகளும் காணக்கிடக்கின்றன. இதிலிருந்து சங்ககாலத்திலிருந்த அனைவருமே திருமாலை வேதம் புகழும் பரம்பொருளாகக் கொண்டிருந்தனர் என்றும், மோட்சத்தை விரும்பியவர்கள் அவனையே அடைந்து அதைப் பெற்றுப் போந்தனர் என்றும், மற்ற பயன்களை எளிதில் பெறவிரும்பியவர்கள் மற்ற தெய்வங்களையும் வழிபட்டனர் என்றும் விளங்குகிறது. மோட்சம் ஒன்றையே விரும்பியவர்களாகையாலே திருமாலைத் தவிர வேறு எவரையும் தொழாத முக்கோற்பகவர்களும், அவர்களது சீடர்களும் அக்காலத்தில் இருந்தார்கள் என்பதையும் மறுக்க இயலாது. இவர்கள் வைஷ்ணவர்களில் தலைசிறந்தவர்கள். சங்ககாலத்தில் இருந்த மற்றவர்கள் மற்ற பலன்களுக்காக மற்ற தெய்வங்களை அடைந்தாலும், அவர்களைப் பரம்பொருளாக நினையாமல் திருமால் ஒருவனையே பரம்பொருளாகக் கொண்டிருந்தார்களாகையாலே அவர்களும் வைஷ்ணவர்களே. இக்காலத்திலும் வைஷ்ணவர்களில் பெரும்பான்மையானவர்கள் இவ்வுலகப்பயன்களுக்காக மற்ற தெய்வங்களையும் வணங்குகின்றனர் என்பதும், மோட்சம் ஒன்றையே விரும்பும் ஒரு சில தலைசிறந்த வைஷ்ணவர்களே திருமாலைத்தவிர வேறு எந்த தெய்வங்களையும் நினையாத, மறந்தும் புறந்தொழாமாந்தர்களாக உள்ளனர் என்பதும் குறிக்கொள்ளத்தக்கது. கீதாசார்யனும் கீதையில் "வாஸுதே3வஸ்ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப4:" [கீ3தை 7 - 19] [கண்ணனே எல்லாம் என்று கூறும் மஹாத்மா எனக்கே மிகவும் கிடைத்தற்கு அரியவனாகவே உள்ளான்] என்று வருத்தப்பட்டானன்றோ.

20. சங்கநூல்களில் பரம்பொருளுக்குரிய எல்லாப்பெருமைகளும் திருமால் ஒருவனுக்கே கூறப்பட்டுள்ளது. மற்ற எந்த தெய்வத்திற்கும் கூறப்படவில்லை. திருமாலுக்குத் தாழ்வைக் கூறும் பிற்காலக் கட்டுக்கதைகளான (1) அடிமுடிதேடிய கதை, (2) கண்ணைப்பிடுங்கி அர்ச்சனை செய்தகதை, (3) சிவன் மத்ஸ்யாவதாரத்தை அழித்த கதை, (4) சிவன் கூர்மாவதாரத்தின் ஓட்டைப்பிரித்துத் தனக்கு ஆபரணமாகக்கொண்ட கதை, (5) சிவன் வராஹாவதாரத்தின் கொம்பை ஒடித்த கதை, (6) நரஸிம்மாவதாரத்தை, சிவன் சரபமாய் வந்து கிழித்த கதை, (7) திரிவிக்ரமனின் தோலை சிவன் உரித்து, சட்டையாகப் போர்த்துக்கொண்ட கதை, (8) ராமன் சிவலிங்க பூஜைசெய்த கதை முதலான சிவபுராணக் கதைகளில் ஒன்றுகூட சங்கநூல்களில் எடுக்கப்படவில்லை; முருகன், பிரமனைச்சிறையில் அடைத்து, படைப்புத் தொழிலை மேற்கொண்ட கதை, முருகனுடைய மயில் வைகுண்டத்தை அழித்த கதை, தகப்பனாகிய சிவனுக்கே பிரணவத்தின் பொருளை உபதேசித்த கதை முதலான கந்தபுராணக் கதைகள் எதுவும் முருகனைப்பற்றிய சங்கநூற் பாடல்களில் காணப்படவில்லை. இக்கதைகள் நாயன்மார்களுக்கு முற்பட்ட எந்தத்தென்மொழி வடமொழிக்கவிஞர்களாலும் பாடப்படவில்லை என்பதும், குறிப்பாக சிவபக்தனான காளிதாசனாலும் கூடத் தனது குமாரசம்பவத்தில் பாடப்படவில்லை என்பதும் குறிக்கொள்ளத்தக்கது.

21. பிற்காலத்தில் சைவர்கள் சிவனுக்கு "பிறவாயாக்கைப் பெரியோன்" என்று பெருமை சொல்லிக்கொள்ளத் தலைப்பட்டனர். சங்கநூலான பரிபாடலிலோ திருமாலே சிவனையுள்ளிட்ட எல்லா ஜீவர்களையும் படைத்தவன் என்று முழங்கப்படுகிறது. பிற்காலச் சைவர்கள் திருமால் அவதாரங்களை எடுக்கையாலே பரம்பொருளாக முடியாது என்று வாதம் செய்தனர். சங்கநூலான பரிபாடலோ "முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே" [பரிபாடல் 3 - 71,72] என்று திருமால் எடுக்கும் பலவகைப்பட்ட அவதாரங்கள் அனைத்தும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கே என்றும், அவன் தானே தன்விருப்பத்தால் பிறக்கிறானேயொழிய அவனைப் பிறப்பித்தவர்கள் எவரும் இலர் என்றும் முழங்கிற்று. பிற்காலத்தில் சிவபக்தரான நாயன்மார்கள் சிவனே பிறவாமையாகிற வீட்டைத்தரவல்லவன் என்று பாடினார்கள். சங்கநூல்கள் எதிலும் சிவன் அப்படிப் பாடப்பெறவில்லை. திருமாலைப்பற்றிய பாடல்களிலேயே,

"மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே
" [பரிபாடல் 3 - 2,3]

[மறுபிறப்பை அறுத்துவிடும் குற்றமற்ற திருவடிகளையுடைய நீலமணியைப்போன்ற திருமேனியைக்கொண்ட மாயோனே] என்றும், "நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்" [பரிபாடல் 15 - 15,16] [மணம்மிக்க துழாய் மாலையை அணிந்த திருமால் அளித்தாலல்லது எவராலும் வீட்டுலகத்திற்கு ஏறமுடியாது] என்றும் திருமாலே மோட்சமளிக்கவல்லவன் என முழங்கப்பெற்றது. இவற்றிலிருந்தும், சங்ககாலத் தமிழர் சமயத்தில் நாம் காட்டிய நூற்றுக்கணக்கான பிற சங்கநூல் மேற்கோள்களிலிருந்தும் சங்ககாலத்தில் அனைவரும் விஷ்ணுவையே பரம்பொருளாகக்கொண்ட வைஷ்ணவர்களாகவே விளங்கினர் என்றும், சிவன், சக்தி, முருகன் முதலான மற்ற எந்த தெய்வத்தையும் எவருமே பரம்பொருளாகக் கொள்ளவில்லையென்றும் கையிலங்கு நெல்லிக்கனியாகவும், வெள்ளிடை மலையாகவும் விளங்குகிறது.

22. மூன்று, நான்காவது பரிபாடல்களில் பரம்பொருளுக்கேயுரிய எல்லாப் பெருமைகளையும் அடுக்கடுக்காகத் திருமாலுக்குப் பாடிய கடுவன் இளவெயினனாரே, முருகனைப் பற்றிய ஐந்தாம் பாடலில் சிவனும், பார்வதியும் புணர்ந்ததனால் வீரியம் வெளிப்பட்டு, அதிலிருந்து பிறந்த குழந்தை முருகன் என்று மிகத்தெளிவாகப் பாடினார். இதிலிருந்து சிவனும், பார்வதியும் ஆண், பெண் சேர்க்கையினால் வீரியம் வெளிப்படும் ஜீவர்களே என்றும், அந்த வீரியத்திலிருந்து பிறந்த முருகனும் ஜீவனே என்றும் சங்ககாலச் சான்றோர்கள் கருதினார்கள் என்று விளங்குகிறது. ஆக, சங்ககாலத்தில் சிவனையோ, சக்தியையோ, முருகனையோ பரம்பொருளாகக்கொண்ட சைவம், சாக்தம், கௌமாரம் என்னும் மதங்கள் வழக்கில் இல்லையெனத் தெளிவாகத் தெரிகிறது. இதிலிருந்து "சங்ககாலத்தில் சிவனையும், திருமாலையும் மனவேறுபாடின்றித் தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது" என்று ம. பொ. சி. எழுதியது அப்பட்டமான பொய் என விளங்குகிறது.

Friday, July 9, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 4

13. இவ்வண்ணமாக, சங்ககாலத்திலேயே குறிஞ்சிநிலத்திலும், மருதநிலத்திலும் பல திருமால் கோயில்கள் இருந்ததாகச் சங்ககாலச் சான்றோர்கள் கூறுகையால் ம.பொ.சி.யின் வாதம் தவறானது என விளங்குகிறது. மேலும் 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' என்னும் தொல்காப்பிய அடியின்படி மருதநிலத்தில் இந்திரனுக்கு கோயில் இருந்ததாக சங்கநூல்களில் எங்கும் காணப்படவில்லை. 'வருணன் மேய பெருமணல் உலகமும்' என்னும் தொல்காப்பிய அடியின்படி வருணனுக்கு நெய்தல் நிலத்தில் கோயில் இருந்ததாக எங்கும் சங்கநூல்களில் காணப்பட்டவில்லை. 'சீரலைவாய்' என்னும் திருச்செந்தூராகிற நெய்தல் நிலத்தில் முருகனுக்கே கோவிலிருந்ததாகச் சங்கநூலில் காணப்படுகிறது. ஆகையால் 'மாயோன் மேய காடு உறை உலகமும்' என்று தொடங்கும் தொல்காப்பியப்பாடலுக்கு ம.பொ.சி. கூறும்பொருள் அடியோடு பொருந்தாது எனத் தெரிகிறது. இதன் சரியான பொருளை இனிக் காண்போம்.

14. இங்கு 'மாயோன்' என்றது திருமாலின் அவதாரமான கண்ணனை. 'மேய' என்றதற்கு 'ரட்சகனாகப் பொருந்திய' என்று பொருள். கண்ணன் காடுவாழ் சாதியாகப் பிறந்து, ஆயர்களைத் தன் உயிருக்கும் மேலாக ரட்சித்தவன். அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனைக் காடும் காடு சார்ந்த நிலமுமான முல்லைநிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். முருகன் மலைப்பாங்கான நிலத்தில் வாழ்ந்த வேடர்களின் செல்வியான வள்ளியை மணந்து அந்நிலத்திலே பல வீரவிளையாட்டுக்களைப் புரிந்தவன். அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனை மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்கு ரட்சகனாகக் கொண்டார்கள். இந்திரன் மழை பொழிவிக்கும் தெய்வம். வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதநிலம் மழையின்றேல் அழிந்துவிடும். அதனால் தமிழகச் சான்றோர்கள் அவனை மருதநிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். வருணன் கடலுக்கு அதிதேவதை. அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனைக் கடலும் கடல்சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். இப்பொருளில் எவராலும் எக்குற்றமும் கூற முடியாது.

15. இதில் பாடியிருக்கும் முறையிலும் ஒரு பொருத்தம் காண்கிறது. சங்ககாலத்தில் பரம்பொருளாகவும், ஸர்வரட்சகனாகவும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட மாயோனை முதலில் வைத்தார் தொல்காப்பியர். வீரம் முதலான நற்குணங்களில் மாயோன் ஒருவனுக்கே அடுத்தபடி உள்ளவனாய், சிறு குழந்தையாயிருக்கும் போதே இந்திரனையும் வெற்றிகொண்டவனான முருகனை இரண்டாம் படியில் வைத்தார். அடுத்து இந்திரனை மூன்றாம்படியில் வைத்தார். இந்திரனுக்கு அடங்கியவனான வருணனை நான்காம்படியில் வைத்தார். ரட்சகர்களல்லாத உருத்திரன், யமன் முதலானோர்க்கு நிலமே ஒதுக்கப்படவில்லை. ஆக, இப்பொருளே மிகப்பொருத்தமான பொருள் என விளங்குகிறது.

16. இப்படிக் கொள்ளாமல் திருமால் சங்ககாலத்தில் முல்லை நிலத்தில் மட்டும் கோயில் அமைத்து வழிபடப்பெற்றான் என்று ம.பொ.சி. கூறும் பொருளைக் கொண்டால் முற்கூறிய பல குற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும், "மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின் வயின் பரந்தலைய உரைத்தேம். மாயா வாய்மொழி உரை தர" [பரிபாடல் 3 - 9,10,11] [மாயோனே! எல்லா உலகங்களும், உலகினில் உள்ள ஜீவர்கள் அனைவரும் உன்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அழியாத வேதம் சொல்ல நாங்கள் உரைத்தோம்.] "நின் சேவடி தொழாரும் உளரோ" [பரிபாடல் 3 - 19] என்று சங்ககாலச் சான்றோர்கள் பாடியிருக்கும்போது திருமாலை முல்லைநிலத்திற்கு மாத்திரம் உரியவன் என்றோ, அந்நிலத்தினரால் மாத்திரம் தொழப்படுபவன் என்றோ எவர் கூறமுடியும்? ஆகையால் பரிபாடல் முதலானவற்றில் திருமால் ஒருவனே வேதத்தால் பரம்பொருளாக முழங்கப்படுபவன் என்று கூறியதை இத்தொல்காப்பியப்பாடல் வலியுறுத்துகின்றதேயொழிய, அதற்கு முரணாகப் பேசவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

Friday, July 2, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 3

8. தொல்காப்பியத்தில் முதலாவதான அகத்திணை இயலில் ஐந்தாவது பாடலாக உள்ளது பின்வருமாறு:-

"மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதல், நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"

இப்பாடலுக்கு ம.பொ.சி. கூறும் பொருள் தவறானது. ஏனெனில்: (சங்ககாலத்திலேயே) முல்லைநிலத்தில் மாத்திரமல்லாமல் மற்ற நிலங்களிலும் திருமால் கோவில்கள் இருந்தன என்பதைக் காண்கிறோம்.

9. கல்லாடனார் என்னும் புலவர் இயற்றிய அகநானூற்றின் ஒன்பதாவது பாடலில், வேங்கடமலையைக் கடந்துசென்று பொருளீட்டி வினைமுடித்து மீண்டதலைமகன், தேர்ப்பாகனுக்குக் கூறியதாக உள்ள பாடலில்,

"அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல்பாணி
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழியப் போகி"

என்றவிடத்தில் 'நெடுமால் வரைய - குன்று ஒழியப் போகி' என்னும் தொடரால் நெடுமாலாகிற திருமால் எழுந்தருளியிருக்கும் வேங்கடக் குன்றையும் கடந்து தான் சென்றதாகக் குறிப்பிட்டான். தலைவன் வேங்கடமலைக்கும் அதைக்கடந்து அப்பாலும் சென்று பொருளீட்டி வருவது என்னும் மரபு அகநானூற்றின் பல பாடல்களில் காணப்படுவதால் இங்கு வேங்கடமலையைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தம். அகநானூற்றில் அறுபத்தோராம் பாடலில் 'விழவுமலி வேங்கடம்' என்று வருவதும் இதை வலியுறுத்துகிறது. எப்படியும் 'நெடுமால் வரைய - குன்று ஒழியப்போகி' என்னும் தொடர் சங்க காலத்திலேயே திருமால் மலையாகிற குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியிருந்ததைக் காட்டுகிறது.

10. அகநானூறு நூற்றிமுப்பத்தேழாம் பாடலில் உறையூர் முதுகூத்தனார் என்னும் புலவர்

"வென்று எறிமுரசின் விறல் போர்ச் சோழர்
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இரு கரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண்பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே"

என்னும் பாடற்பகுதியில், 'தலைமகன் பிரியப்போகிறான்' என நினைத்து வேறுபட்ட தலைமகளின் நிலையைக் கூறும்போது, "திருவரங்கத்தில் பங்குனி உத்தரத் திருநாளின் போது, மக்கள் மிகுதியாகத் திரண்டு காவிரியின் இருகரைகளிலும் உள்ள சோலைகளில் தங்கியிருந்தபோது பொலிவுடையதாகத் தோன்றிய அச்சோலைகள், அவ்விழாவின் முடிவில் அனைவரும் அரங்கத்தைவிட்டுப் போனபின் பொலிவிழந்து தோன்றுவதுபோல், தலைமகன் பிரிவை எண்ணிய தலைமகளின் நெற்றியும் பொலிவிழந்து தோன்றுகிறது" என்கிறார். இன்றும் திருவரங்கத்தில் பங்குனி பிரம்மோத்ஸவம் நடைபெறுவது அனைவரும் அறிந்தது. அந்த உத்ஸவம் சங்க காலத்திலேயே நடந்துவந்தது என்று இப்பாடலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. திருமாலைப் பற்றிய நான்காவது பரிபாடலில், "நல்யாற்று நடுவும் கால்வழக்கு அறுநிலை குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்' (67 - 69) என்னும் பகுதி நல்யாற்று நடுவாகிற திருவரங்கமும், காலவழக்கை அறுத்து முக்தி அளிக்கும் குன்றமாகிற வேங்கடமும் திருமால் வெவ்வேறு பெயர்களுடன் எழுந்தருளியிருக்கும் இடங்கள் என்று பாடியிருப்பதிலிருந்து முற்கூறிய அகநானூற்றுப் பாடல்களில் வேங்கடத்திலும், திருவரங்கத்திலுமிருந்தது திருமால் கோவில்களே என்று தெளிவாகிறது. இதிலிருந்து சங்ககாலத்திலேயே மருதநிலத்திலும் திருமால் கோவில் கொண்டிருந்தான் என விளங்குகிறது. சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகளால் இவ்விஷயம் விரித்துரைக்கப்பட்டது. பதினைந்தாவது பரிபாடலில் திருமாலிருங்குன்றமாகிய குறிஞ்சிநிலத்திலும் திருமால் எழுந்தருளியிருந்தது விரிவாக வருணிக்கப்படுகிறது. பரிபாடல் திரட்டின் முதல்பாடலில் கூடல்மாநகரில் இருந்தையூர் என்னும் பகுதியில் திருமால் கோயில்கொண்டிருந்தது சிறப்பாக வருணிக்கப்படுகிறது. இதிலிருந்து மருதநிலத்திலும் சங்ககாலத்தில் திருமால்கோயில் உண்டென்று தெரிகிறது.

11. பதிற்றுப்பத்து என்னும் சேரவேந்தர்களைப் பற்றிய சங்க நூலில் நான்காம்பத்தின் தொடக்கத்தில்,

"வண்டு ஊது பொலிதார், திரு ஞெமர் அகலத்து
கண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்
அலங்கல், செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர
மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு"

[திருஞெமர் அகலம் - ஸ்ரீதேவி வாழும் மார்பு. திகிரி - சக்கரம். துழாஅய் அலங்கல் செல்வன் - துழாய் மாலையணிந்த உயபவிபூதி செல்வத்தையுடைய திருமால். கோடு - திருவிதாங்கோடு என்று வழங்கப்படும் திருவனந்தபுரம். ]

என்னும் பாடற்பகுதியில் குறிஞ்சிநிலமான திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலைப் பாடியிருப்பதிலிருந்து சங்ககாலத்தில் குறிஞ்சி நிலத்திலும் திருமால் கோயில்கொண்டிருந்தார் எனத் தெரிகிறது.

12. பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில்,

"நீடுகுலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்,
குறுங்கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடி ... ...
அருந்திறற் கடவுள் வாழ்த்தி"

என்னும் பகுதியில் மலையில் யானை படுத்திருப்பது போலே காஞ்சியில் (திருவெஃகாவில்) பாம்பணைப்பள்ளியில் திருமால் கிடக்குமழகு பாடப்படுகிறது. இதிலிருந்தும் சங்ககாலத்தில் மருதநிலத்தில் திருமால் கோயில்கொண்டு எழுந்தருளியிருந்தது காட்டப்படுகிறது.