Wednesday, November 25, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 6 உருவம் - 1

'எங்கும் இறை' என்பது மனத்துக்குப் பொருளாமாறு, அதனை அட்டமூர்த்தம் என்றும், இயற்கை இறை என்றும் விளக்கிய அவ்வளவில் ஆழ்வார் நின்றாரில்லை. அவர் மேலுஞ் சென்றனர். இயற்கை இறையை உருவமாகவும் அவர் அருளியுள்ளார். அது சிலர்க்குப் பிடிப்பதில்லை. இறை எங்கும் உள்ளது என்று அருளிய ஆழ்வாரே, இறையை உருவமாகவும் அருளியுள்ளாராதலின், அவர்தம் உட்கிடக்கையை உணர முயல வேண்டுவது அறிஞர் கடமை. ஆழ்வாரது உட்கிடக்கை முற்றும் என்போன்றார்க்கு விளங்குதல் அரிதே. ஆயினும் இயற்கை இறைவழி நின்று, ஒல்லும் வகையாதல் உண்மை காண முயல்கிறேன். முயற்சி அளவில் இயற்கை இறை துணை செய்யாமற் போகாது.

இறையை நேரே மனவுணர்வின் உணர்தல் இயலாது. இறையை உணர்தற்கு இயற்கையின் துணை தேவை. இயற்கை வழி நின்று இறையை உணர்தல் வேண்டும் என்பதும், இயற்கையை விடுத்து இறைய உணர்தல் இயலாது என்பதும் முன்னே விளக்கப்பட்டன. காவியர் ஓவியர் முதலியோர் இறையின் உடலாகிய இயற்கைக் கோலங்களைப் பாக்களாக எழுதியும், ஓவியங்களாக வரைந்தும் வடித்தும் இன்புறுவது வழக்கம். அவர்தம் பாக்களிலும் ஓவியங்களிலும் இயற்கைக் கோலங்கள் படிகின்றன. அப் படிவுகளால் இயற்கைப் படங்கள் முகிழ்க்கின்றன. அப் படங்களின் கூறுகளைச் சிந்தையாற் பெருக்கிப் பெருக்கிப் பார்த்தால், அவைகள் இயற்கைக் கோலங்களாக முடிதல் காணலாம். வெறும் எழுத்தும், கீறலும், சாந்தும், பிறவும் படங்களாகா. அவ்வெழுத்து முதலியவற்றில், காவிய ஓவியர் அறிவில் படிந்து இறங்கி அமையும் இயற்கைக் கோலமே 'படம்' என்னும் பெயர் பெறுகிறது. இயற்கைப் படங்களினின்றும் உருவங்கள் பிறக்கின்றன. அவ்வுருவங்கள் இயற்கைக் கோலங்களின் அறிகுறிகள் என்பதை மறத்தலாகாது. இதைப் பற்றி 'முருகன் அல்லது அழகு' என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். அதையே ஈண்டு மீண்டுங் கூற வேண்டியதில்லை. விரிவு ஆண்டுக் காண்க.

தொடக்கத்தில், உருவம், இயற்கை இறையை நினைவூட்டும் அறிகுறியாகக் கொள்ளப்பட்டது. நாளடைவில் அதற்கு வழிபாடு ஏற்பட்டது. இயற்கை இறை நினைவின்றி, உருவத்தையே பொருளாகக் கொண்டு, அதையே நினைந்து நினைந்து செய்யப்படும் வழிபாடு தவறுதலுடையது. அவ் வழிபாடு விக்கிரக ஆராதனையின்பாற்பட்டது. உருவத்தைப் பொருளாகக் கொள்ளாது, அவ்வுருவம் உணர்த்தும் தத்துவத்தைப் பொருளாகக் கொண்டு, செய்யப்படும் வழிபாட்டுக்கு அர்த்தம் உண்டு. அது நாளடைவில் இயற்கை இறையை உணர்த்துவதாகும். தத்துவ உணர்வின்றி, வெறும் உருவத்தை மட்டும் வழிபடுவது, இயற்கை இறையை உணர்த்துவதாகாது.

காவியத்தின் வழியும் ஓவியத்தின் வழியும் பிறந்த வடிவங்கள் பலப்பல; அவ் வடிவங்களினின்றும் எழுந்த புராணக் கதைகளும் பலப்பல. தொடக்கத்தில் அவைகள் இயற்கைத் தத்துவ நுட்பங்களுக்கு அறிகுறிகளாகக் கொள்ளப்பட்டன. பின்னே காவியம் ஓவியம் புராணம் என்னும் பெயர்களால் பலப்பல ஆபாசங்கள் தோன்றிக் குவிந்தன. அவ்வாபாசங்கள் இயற்கைத் தத்துவத்துக்கு அடங்காதனவாய்க் கிடக்கின்றன. அவைகளால் நாடு பல வழியிலும் பாழ்படுகிறது. இங்கே இயற்கைத் தத்துவத்துக்கும் பொருளாகிப் பொருந்தும் சில வடிவங்களை நோக்குவோம்; அவைகளை ஆழ்வார் திருப்பாடல் வாயிலாக நோக்குவோம்.

தாம்பாலாப்... ...
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.

எல்லாவற்றிலும் நீக்கமற நின்று, அதை அதை உருப்படுத்தும் இறை, சித்தாய் (அறிவாய்)ப் பொலிவது. அதுவே அதன் தொல்லுருவம்; அழியா உருவம். அது வாக்கு மனங்கட்கு எட்டாதது. இறைவனைக் 'காண்டற்கரியன்' என்று ஆழ்வார் பலவிடங்களில் அருளியுள்ளார். வாக்கு மனங்கடந்த முழுமுதற் பொருளை வாக்கு மனமுடையார் எப்படி வழிபடுவது? இதற்கு இயற்கைவழிபாடென்றும், இயற்கைப்பட வழிபாடென்றும் இரண்டு ஏற்பட்டிருக்கின்றன. இயற்கைப்பட வழிபாடு, இயற்கை இறையை உணர்த்தும். இயற்கை வழிபாடு தனித்த இறையை உணர்த்தும்.

கண்ணுஞ்செந் தாமரை கையும்
அவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை
போன்று மதவிகற்பால்
விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்
குமற்றெப் பால்யவர்க்கும்
எண்ணு மிடத்ததுவோ எம்பி
ரான தெழில்நிறமே.

இத் திருவாக்கை நெஞ்சிற் கொள்வோம். 'கண்ணும் செந்தாமரை - கையும் அவை - அடியோ அவையே - வண்ணம் கரியதோர் மால்வரை...'- இஃதோர் இயற்கைப்படம். கண்ணும் கையும் அடியும் செந்தாமரை. மேனி கரியது; மால் வரை போன்றது. கரிய நீலமேனியில் செந்தாமரைக் கண்; செந்தாமரைக் கை; செந்தாமரை அடி. கருநீலத்தில் செம்மை மலர்வது அழகியதன்றோ?

வானளாவிய நீலமலை; அதன் முடியிலும் நடுவிலும் அடியிலும் செவ்விய தாமரைக்காடு. இக் காட்சியை நோக்குவோம். இது புலன்களுக்கு விருந்தாகிறது. இதில் இயற்கை அன்னையின் எழில் மணம் வீசுகிறது. அவ்வெழிலில் நெஞ்சம் படிகிறது; திளைக்கிறது; எழுகிறது; அதை முன்னுகிறது. அழகுத் தோற்றம் மனத்தில் படமாகிறது. படம் பாவலர்க்குப் பாட்டாகிறது; ஓவியர்க்கு ஓவியமாகிறது. பாட்டும் ஓவியமும் இயற்கையின் அமைவு அல்லவோ? பாட்டும் ஓவியமும் தம்பால் ஈடுபடுவோரைப் பாலம்போல நின்று, இயற்கை அன்னையுடன் சேர்க்கின்றன. இயற்கை அன்னை என்ன செய்கிறாள்? தன்பால் அணைந்த ஆருயிர்களைத் தன் வயப்படுத்தி, அப்பனாம் இறையினிடஞ் சேர்க்கிறாள். அதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை. அது சொல்லற்கரியது. சொல்லற்கரிய நிலை, பாட்டின் பின்னிரண்டடியில் திகழ்கிறது.

'விண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும்,
எண்ணுமிடத்தவோ எம்பி ரான தெழில் நிறமே'

என்பது வாக்கு மனங் கடந்த இறை நிலையை உணர்த்துவது.

இறை நிலையையும், அதன் நிறம் கோலம் முதலியவற்றின் நுட்பத்தையும்,

நிறமுயர் கோலமும் பேரு
முருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள்
பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்
காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்
பிரான் பெருமையையே.

என்று ஆழ்வார் விளக்கியுள்ளதைச் சிந்தித்துப் பார்க்க; சிந்தித்துச் சிந்தித்து உண்மை தெளிக.

Monday, November 9, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 5. இயற்கை - 2

இதுகாலை, நமது நாட்டில் பறவை முதலியவற்றை நோக்கிப் பாடுவோருளரோ? பறவைகளும் வாடுங்காலமன்றோ இக்காலம்? பறவைகளுக்கே மகிழ்ச்சியில்லை எனில் பாடுவோர்க்கு மகிழ்ச்சி ஏது? பாட்டென்பது மகிழ்ச்சியின் பொங்கலன்றோ? பறவைகளே! உங்களைக் கூவிக் கூவிக் கடவுளைப் பாடுவோர் இப்போது இல்லை. உங்கள் முன்னோரை நம்மாழ்வார் பாடியிருக்கிறார்! அழைத்திருக்கிறார்; தூது கொண்டிருக்கிறார். இப்பொழுதோ? உங்கள் தலை எழுத்தோ? எங்கள் தலை எழுத்தோ? தெரியவில்லை.

இவ்வாறு நம்மாழ்வார் இயற்கை வாயிலாக் கடவுளைக் கண்டு மகிழ்ந்து பாடிய முறையால் தமிழ் நாட்டை வளர்த்தது கருதற்பாலது.

'இயற்கை உடல் இறை உயிர்' என்பதை ஆழ்வார் இன்னும் எத்தனை எத்தனையோ விதம் விதமாக விளக்கியுள்ளார். அவைகளில் இங்கே ஒன்று சிறப்பாகக் குறிக்கத் தக்கது. அஃது ஆழ்வார் முன்னே இயற்கையை வருணித்துப் பின்னே மூர்த்தியைப் போற்றுவது. இதன் நுட்பம் என்னை?

திருப்பதிகளில் மூர்த்தி எழுந்தருளி யிருக்கிறார். அம்மூர்த்தியைப் பெரிதும் சோலையோ ஆறோ பிறவோ சூழ்ந்திருக்கும். இயற்கை வளம் மிகுந்துள்ள இடங்களிலேயே பண்டை நாளில் பெருங்கோயில்கள் கட்டப்பட்டன. இயற்கை உடல் என்பதும், இறை உயிர் என்பதும் மேலே விளக்கப்பட்டன. இவ்வுண்மையை உள்ளத்திற் கொண்டு, இயற்கை வளஞ்சூழ்ந்த திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள மூர்த்தியைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். சிந்தித்துப் பார்க்கப் பார்க்க, 'இயற்கை உடல் இறை உயிர்' என்னும் உண்மைக்கு, இயற்கை வளஞ் சூழ்ந்த இடத்தில் மூர்த்தி எழுந்தருளியிருப்பது ஒருவித அறிகுறி என்பது புலனாகும். 'இயற்கை உடல் - இறை அதன் உயிர்' என்பதை உணர்த்துதற்குத் திருக்கோயில்கள் சிறந்த இலக்கியங்களாகவும் படங்களாகவும் பொலிதருகின்றன.

நம்மாழ்வார், 'இயற்கை உடல் இறை உயிர்' என்னும் உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிந்தவர். அவர் அவ்வுண்மையைச் சீரிய செந்தமிழ்ப் பாக்களால் உலகுக்கு உணர்த்துகிறார். ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர்; பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.

சொன்னால் விரோதம் ... ... ...
தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை... ...

ஆரா அமுதே ... ... ...
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ... ...

மானேய் நோக்கு நல்லீர் ... ... ...
வானோர் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும்
கோனாரை ... ....

என்றுகொல் தோழிமீர் ... ... ...
பொன் திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி
தென்றல் மணங்கம ழுந்திரு வல்லவாழ் நகருள்
நின்ற பிரான் ... ...

நிச்சலும் ...
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதண வும்தண் திருவல்லவாழ்
நச்சர வின் அணை மேல்நம் பிரானது நன்னலமே.

காண்பதெஞ் ஞான்று... ...
பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்
மாண்குறள் கோலப்பிரான்...

பாதங்கள் ... ... ...
ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை ...

நாடொறும் ... ...
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் ...

கழல்வளை ... ...
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலில் மலிசக்கரப் பெருமான்...

உணர்த்த லூடல்... ...
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானை...

நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு
செந்நெ லோங்கு செந்தாமரை
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை
வண்துலை வில்லி மங்கலம்...

காலம் பெற ... ...
கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல்
திருப்பேரையிற்கே.

எளிதாயின ... ...
கிளிதா வியசோலை கள்சூழ் திருப்பேரான்...

உண்டுகளித் ... ...
வண்டுகளிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்...

ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்த இத் திருமொழிகளில் இயற்கை இறைமணங் கமழ்தலைத் தேர்க.

இயற்கை இன்பத் துறைகளுள் தலையாயது பெண்ணின்பம். பெண்ணின்பத்தைத் துறப்பது, இயற்கை இன்பத்தைத் துறப்பதாகும். இயற்கை இன்பத்தைத் துறத்தல் இறை இன்பத்தைத் துறத்தலாகும். இயற்கை அமைப்பைக் கூர்ந்து நோக்கி, அதன்வழி ஒழுகினால், இறை இன்பத்துக்கு ஊற்றாயிருப்பது பெண்ணின்பமென்பது நனி விளங்கும்.

இப்பெற்றி வாய்ந்த பெண்ணின்பத்தைத் துறத்தல் வேண்டுமென்றும், அத்துறவு பேரின்பத்தைக் கூட்டுமென்றும் ஓரிழிந்த கொள்கை இடைக்காலத்தில் உலகிடை நுழையலாயிற்று. அக் கொள்கையைப் பின்னவர், பெரியோர் உரைகள் மீது ஏற்றிவிட்டனர். இஃது அறியாமை.

பெண்மை துறக்கத் தக்கதாயின், அஃது இயற்கையில் அமைய வேண்டுவதில்லை. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தல் கண்கூடு. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தலால், அதன் உயிராகிய இறையும் அம் மயமாயிருத்தல் வேண்டும். இயற்கை வழி இறை உண்மையை உணர்ந்த ஆன்றோர், இறையின்பால் பெண் ஆண் கூறு இருத்தலை உலகுக்கு உரைத்தனர். இவ்வுண்மை கண்ட நாடு நமது நாடு. இப் பெரு நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? பெண்ணைத் துறந்தால் பேரின்பத்திற்கு வழியுண்டாகும்' என்னுஞ் சோம்பேறி ஞானம் பேசி, அடிமை இருளில் அது வீழ்ந்து கிடக்கிறது. பெண்மை இல்லையேல் உலகம் ஏது? தாய்மைக்கு இடம் ஏது? தாயைப் பழித்த பாவம் நாட்டைச் சூழ்ந்து நிற்கிறது. இது குறித்துப் 'பெண்ணின் பெருமை' முதலிய நூல்களில் விரித்துக் கூறியுள்ளேன்.

நம்மாழ்வார் இறையருள் பெற்றவர்; இறையையுணர்ந்தவர்; இயற்கை வடிவாக இறை பொலிவதைக் கண்டவர்; இயற்கையின் பெண்மையும் ஆண்மையும் அதன் உயிராயுள்ள இறையினிடத்தும் இருத்தலைத் தெளிந்தவர். அதனால் எல்லாப் பெண்மைக்கும் ஆண்மைக்கும் வித்தாயுள்ள இறையின் பெண்மையைத் தாய் என்றும், அதன் ஆண்மையைத் தந்தை என்றும் அவர் பாடலானார்.

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ ...

மாயோனிகளாய் ... ...
... ... எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் ...

நீயும் நானும் ... ...
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.

ஒத்தார் ...
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த
அத்தா ...

போகின்ற ... ... தாய் தந்தை உயிர்
ஆகின்றாய்...

மேலாத்... ...
மேலாத் தாய் தந்தையும் அவரே...

வந்தருளி ...
முந்தைத் தாய் தந்தையே முழுவேழுலமுண்டாய்...
சிந்தையாலும் ... தேவபிரானையே
தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்...

இறையின் பெண்மை நலந்துயிக்க உயிர்கள் பெண்ணலம் பேணுதல் வேண்டும். பெண்ணலம் பேணப் பேணப் பெண்மை பரிணமிக்கும். பெண்மையாவது, பொறாமை முதலிய தீநீர்மைகள் ஒழிந்து, பொறுமை முதலிய நன்னீர்மைகளைப் பெறுவது - அதாவது அருள்நிலை பெறுவது. இப் பெண்மை பெறாதவர் மாக்களாக உலகில் வாழ்ந்து பிறர்க்குத் தீங்கு விளைத்த வண்ணமிருப்பர். அவரைப் பண்படுத்தவல்லது இறையின் பெண்மைக் கூறாகும்.

ஆழ்வார் இறைவனது பெண்ணலந் துய்த்துப் பெண்மை நிலை எய்திப் பேறு பெற்றவர். இதற்கு அவர் தம் அருட்டிருப்பாக்களே சான்று கூறும். நம்மாழ்வார் பாக்களில் அகத்துறை நலம் கமழ்தல் கருதற்பாலது. பொதுவாக அவர்தம் பாக்களில் பலவற்றிலும் - சிறப்பாக அவர்தம் திருவிருத்தத்திலும் அகத்துறை நலங் கமழ்தல் வெள்ளிடைமலை. அந் நலம்பட ஆழ்வார் எற்றுக்குப் பாடினார்? உலகம் அந் நலம் பெறுதல் வேண்டுமென்பது அவரது உள்ளக்கிடக்கை.

இடைநாளில் பெண்ணைப் பற்றிய சிறுமைகள் பல உலகிடைப் பரவின. இதற்குப் போலிச் சந்நியாசிகளும் போலி ஞானிகளுமே காரணர்களாவார்கள். இவர்கள் பெண்ணை மாயை என்றும், பெண் பிறவிக்கு வீடு பேறில்லை என்றும், பெண்ணைத் துறந்தால் பேரின்பம் விளையும் என்றும் பல கதைகளைக் கட்டிவ் விட்டார்கள். அக் கதைகளால் உலகம் கெடலாயிற்று. அக் கேட்டினை ஒழிக்கவே ஆங்காங்குப் பெரியோர் தோன்றினர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தாம் நுகர்ந்த இறையின்பத்தை அகத்துறைப் பாக்களாக வார்த்து உலகுக்கு உதவினார். அப் பாக்களில் தமிழ்ப் பெண்மை தாண்டவம் புரிகிறது.

திண் பூஞ்சுடர் நுதி நேமியஞ்
செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணிவல்லி யாரே
பிரிபவர் தாம் இவையோ
கண்பூங்கமலம் கருஞ்சுட
ராடிவெண்முத்தரும்பி
வண்பூங்குவளை மடமான்
விழிக்கின்ற மாயிதழே.

மாயோன் வடதிருவேங்கட
நாடவல்லிக் கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்
றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினை
யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடுந்தொண்டையோ அறை
யோவிதறிவரிதே.

அருளார் திருச்சக் கரத்தால்
அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல்
நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ வெனுமிகழ் வோஇவற்
றின்புறத் தாளென் றெண்ணோ
தெருளோம் அரவணை யீர் இவள்
மாமை சிதைக்கின்றதே.

பண்டும் பலபல வீங்கிருள்
காண்டும் இப்பாயிருள்போல்
கண்டு மறிவது கேட்பதும்
யாமிலம் காளவண்ண
வண்டுண் துழாய்ப் பெருமான்மது
சூதனன் தாமோதரன்
உண்டு முமிழ்ந்தும் கடாயமண்
ணேரன்ன ஒண்ணுதலே.

வண்ணம் சிவந்துள வானோ
டமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகன் தன்
னொடும் காதல் செய்தேற்
கெண்ணம் புகுந்தடி யெனொடிக்
கால மிருக்கின்றதே.

காலும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரரைச் செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன்னாள் கண்களாய துணைமலரே.

கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே.

பலபலவே யாபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவுபண் பெண்ணில்
பலபல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணைமே லாற்கேயோ.

உகவை யால்நெஞ்ச முள்ளு ருகியுன்
தாமரைத் தடங்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான்
அழித்தாயுன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்
யாமடுசிறு சோறுங் கண்டுநின்
முகவொளி திகழ முறுவல்
செய்து நின்றிலையே.

இத் தமிழ்ப் பெண்மையில் தோய்ந்து தமிழ்ப் பெண்மை பெறுக.

இயற்கை, இறையின் உடலாகலான், அஃது இன்பமுடையது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அத்தகைய ஒன்றை வெறுத்துத் துறப்பது இறைநெறி நிற்பதாகாது. இக்கால உலகம் பெரிதும் இயற்கையினின்றும் வழுக்கிச் செயற்கையிலே வீழ்ந்து கிடக்கிறது. அதனால் அஃது உற்றுவருந் துன்பத்துக்கு ஓர் அளவில்லை. இப்பொழுது உலக முழுவதும் குழப்பமாயிருத்தல் கண்கூடு. அக்குழப்பம் எப்படி ஒழியும்? உலகம் இயற்கைவழி நிற்பதாயின், குழப்பம் ஒழிதல் திண்ணம். ஆழ்வார் தமிழில், இயற்கை நெறிமிக அழகுபடப் பொலிகிறது. அந் நெறி நிற்பதற்குக் கட்டில்லை; காவலில்லை. அந் நெறியில் உலகம் ஏன் நிற்றல் கூடாது? நிற்க எழுக! எழுக! உலகமே எழுக!