Sunday, March 20, 2011

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் கட்டுரை

நாராயணனே ராமன்: பரமபத நாதனாகிய நாராயணனே இராமனாக அவதரித்தான் என்ற செய்தியைக் கம்பநாடன் காவியத்தில் பல இடங்களில் பெற வைக்கின்றான். இராமனது அவதாரத்தைக் கூறும் கவிஞன்


"ஒருபகல் உலகெலாம் உதரத் துட்பொதிந்(து)
அருமறைக்கு உணர்வரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை" (பால-திருவ 2 - 10 - 3)

என்று கூறுவன். பிரளயகாலத்தில் எல்லாவுலகங்களையும் தன் திருவயிற்றில் மறைத்து வைப்பவன் நாராயணன்; உலகம் உண்ட பெருவாயன்; [திருவாய் 6 - 10 - 1] பாலனாய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலையில் அன்னவசம் செய்யும் அண்ணல் அவன் [திருவாய் 4 - 2 - 1] நான்மறைகளாலும் உணர முடியாத அவனை, அந்த அஞ்சனக் கருமுகிலை, கோசலை மகனாகப் பெற்றாள். இதனையே பிறிதோரிடத்தில்,

"எழுதரிய திருமேனிக் கருங்கடலைச்
செங்கனிவாய்க் கவுசலையென் பாள்பயந்தாள்" [பால - குலமுறை 20]

என்று மேலும் வற்புறுத்துவன். இக்குழந்தைக்கு 'இராமன்' எனப் பெயரிடப் பெற்றது என்பதைக் கூறும் கவிஞன் இதனை வலியுறுத்துகிறான்.

"கராம்மலை யத்தளர் கைக்கரி எய்த்தே
அராவணை யில்துயில் வோயென அந்நாள்
விராவி அளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே
'இராமன்' எனப்பெயர் ஈந்தனன் அன்றே" [பால - திருவ 119]

[கராம் - முதலை; கைக்கரி - யானை; அராவணை - பாம்புப் படுக்கை]

முதலை வாயில் அகப்பட்ட களிறு 'ஆதிமூலமே' எனக்கூவ, அதனை முன்வந்து அளித்த திருமாலே இராமனாகப் பிறந்தான் என்பது ஈண்டு மீண்டும் வலியுறுத்தப் பெறுவதைக் காண்க. இதே கருத்து விராதன் வாய்மொழியாகவும்,

"கடுத்துநிமிர் கராம்கவ்வக் கையெடுத்து மெய்கலங்கி
உடுத்ததிசை அனைத்தினும்சென்(று) ஒளிகொள்ள உறுதுயரால்
அடுத்தபெருந் தனிமூலத்து அரும்பரமே பரமேஎன்று
எடுத்தொருவா ரணம் அழைப்ப நீயோவந் தேன் என்றாய்" [ஆரணி, விராதன் வதை 49]

[கராம் - முதலை]

என்று வந்துள்ளது. சனகன் மாளிகையில் இராமன் திருப்பள்ளி எழுதலைக் கூறவந்த கவிஞன்,

"கொல்லாழி நீத்தங்கோர் குனிவயிரச்
சிலைதடக்கைக் கொண்ட கொண்டல்" [பால - மிதிலை 154]
[ஆழி - சக்கரப்படை]

என்று கூறுவன். 'பாற்கடலில் துயிலும் பரந்தாமனே சக்கரப்படையை நீத்துவிட்டு, கோதண்டத்தைத் திருக்கையில் கொண்ட முகில்வண்ணன்' என்று கூறுவதனால் இக்கருத்து மேலும் அரண் செய்யப்பெறுவதைக் காண்க. இன்னும்,

"பஞ்சணை பாம்பணை யாகப் பள்ளிசேர்
அஞ்சன வண்ணனே இராமன்" [ஆரணி சடாயுவுயிர் நீத்த 142]

என்று சங்கரன் கொடுத்த வாளால் இராவணனால் சிறகொடிக்கப் பெற்ற சடாயு வாக்கில் வைத்துக் கூறப்பெற்றுள்ளதை எண்ணி உணர்க. திருமாலே இராமனாக அவதரித்துள்ளான் என்பதை,

"சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் வில்கரத்து இராமன அத் திருநெடுமாலே" [கிட்கிந் - நட்புகொள் 79]

என்று அநுமன் வாக்கிலும் வந்துள்ளமை காண்க.

இறைவன் பிறப்பில்லாதவன்; ஆனால் பல பிறப்புகளையுடையவன்.

"பிறப்பில் பல்பிறவிப் பெருமான்" [திருவாய் 2 - 9 - 5]

என்பது ஆழ்வார் வாக்கு. பிறப்பில்லாதவன் என்றது ஏனையோரைப் போல் வினை காரணமாகப் பிறக்கும் தன்மையில்லாதவன் என்றவாறு. பல பிறவிகளையுடையவன் என்றது அடியார்கள் பொருட்டாகப் பல பிறப்புகளை (அவதாரங்களை0 மேற்கொள்பவன் என்றபடி. இதுவே அவதார் இரகசியம். கம்ப நாடன் இதனை நான்முகன் வாக்காக.

"தோற்றம் என்பதொன்று உனக்கில்லை" [யுத்த - மீட்சி 107]

என்று கூறுவன். இராமனது பிறப்பினைக் கூறும் பகுதியில் இதனை விளக்கமாகக் காணலாம். பிறிதோர் இடத்தில் இராமனைக் குறிப்பிடுமிடத்து.

"மெய்யே பிறந்தேயும் பிறந்தி லாதான்" [யுத்த - நாகபாசப் 222]

என்று இக்கருத்தினை மேலும் வற்புறுத்துவன்.

நாராயணனே முதற்கடவுள்: நாராயணனே உலகின் முதற்கடவுள் என்பதைக் கம்ப நாடன் தன் காவியத்தில் பல இடங்களில் வற்புறுத்துகின்றான். சீதை தூயவள் என்று அங்கியங் கடவுள் மெய்ப்பித்த பிறகு தேவர்களின் வேண்டுகோட்கிணங்க நான்முகன் இராமனது உண்மைச் சொரூபத்தை விளக்குகின்றான்.

"மறைகளின் தலைகள் மன்பெ ரும்பர மார்த்தமென்(று)
உரைக்கின்ற மாற்றம் அன்ப நின்னையல் லாம்மற்றிங்(கு)
யாரையும் அறையா" [யுத்தமீட்சி 101]

[மறைகளின் தலைகள் - உபநிடதங்கள்]

என்ற பாசுரப் பகுதியில் உபநிடதங்கள் குறிப்பிடும் 'பரம்பொருள்' திருமாலைக் குறிக்குமேயன்றித் தன்னையோ, சிவனையோ அல்லது இந்திரனையோ குறிக்கவில்லை என்று உணர்த்துவதை அறிக. அடுத்து, சிவபெருமான்,

'முன்னை ஆதியாம் மூர்த்திநீ மூவகை உலகின்
அன்னை சீதையாம் மாதுநின் மார்பின்வந் தமைந்தா:" [யுத்தமீட்சி 113]

என்பதால் திருமாலே முதற்கடவுள் என்றும், சீதையே உலக அன்னையென்றும் உறுதி செய்வன். இப்பகுதியில் வரும் பாசுரங்கள் யாவும் இக்கருத்தையே பலபடியாக வற்புறுத்துகின்றன. நிகும்பலையைக் குலைத்தபின் இலக்குவனுக்கும் இந்திரசித்துக்கும் நடந்த போரில் பின்னவன் விட்ட நான்முகன் படையை அப்படையாலேயே அழித்து அதன் வேகத்தைத் தணித்தனன். அப்போது அதனைக் கண்டு வியந்த தேவர்களிடன் சிவபெருமான் கூறிய,

"நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கெல்லாம்
வேராய்முழு முதற்காரணப் பொருளாய்" [யுத்த - நிகும்பலை 141]

என்ற வாக்கிலும் இதனைக் காணலாம். சேதுவை அமைக்க வருணனை வழி வேண்டியபோது, வருணன் வரத் தாமதித்ததனால், இராமன் சினங்கொள்கின்றான். இதனைக் கவிஞன்,

"உற்றொடு தனியே தானே தன்கணே
உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கான்" [யுத்த வருணனை வழி 63]

என்று குறிப்பிடும் இடத்தில் 'இராமனே பரம்பொருள்' என்று தற்கூற்றாகக் கூறுவதைக் காண்க. அடுத்து வருணன் வாயில் வைத்து, "நவையறும் உலகிற் கெல்லாம் நாயக நீயே" [யுத்த வருணனை வழி 67]

என்றும்,

"எள்ளலா காதமூலத்(து) யாதுக்கும்
முதலாய் உள்ள வள்ளலே" [யுத்த வருணனை வழி 71]

என்றும் பின்னும் வற்புறுத்துவன். அங்கதனுக்கு அறவுரை கூறும் வாலியின் கூற்றாக வந்துள்ள,

"மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக்
கால்தரை தோய நின்று கட்புலக் குற்றதம்மா" [கிட்கிந் - வாலிவதை 148]

என்ற பாடற் பகுதியும்,

"மும்மையாம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
தூதாய்ச் செம்மையால் உயிர்தந் தாய்க்கு" [சுந்தர - உருக்காட்டு 71]

என்று சீதை அநுமனைக் குறிப்பிடும் பாடற் பகுதியும் திருமாலே முழு முதற்கடவுள் என்பதனைப் பின்னும் அரண் செய்கின்றன. இதனையே,

"மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்" [சுந்தர - பிணிவீட்டு 80]

என்று அநுமன் வாய்மொழியாகவும்,

"மூவர்க்கும் தலைவ ரான மூர்த்தியார் அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடங் காட்டி" [யுத்த - கும்பகருணன் வதை 150]

என்று கும்பகருணன் வாய்மொழியாகவும் கவிஞன் பேசுவன். ஞான ஒளி தட்டுப்பட்ட கவந்தனும்,

"மூலமே இல்லா முதல்வனே நீஎடுத்த
கோலமே யார்க்கும் தெரிவரிய கொள்கைத்தால்
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக்கிடந்த
பாலனோ? ஆதிப் பரமனோ? பகராயே" [ஆரணி - கவந்த 44]

என்று இராமன் முதற் பொருள் என்று கூறுவதைக் காண்க. மேலும், விராதன் வாய்மொழியாக,

"மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ? உனக்கென்ன குறையுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்றளித்த
ஐயத்தால் சிறிதுஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா" [ஆரணி - விராதன் வதை 59]

[மெய் - நீயே பரதத்துவம் என்னும் உண்மை; மழுவாளி - பரமசிவன்; ஐயம் - பிச்சை, சந்தேகம்.]

என்று பின்னும் கூறுவன். இக்கருத்து நம்மாழ்வாரின்

"பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே; கபாலநல் மோக்கத்துக் கண்டுகொண்மின்" [திருவாய் 4 - 10 - 4]

என்ற பாசுரப் பகுதியின் கருத்துடன் இயைந்திருத்தல் கண்டு மகிழத்தக்கது. மேலும், கம்பநாடன் திருமால் அன்னமாய் இருந்து அருமறைகள் உரைத்ததைக் குறிப்பிடும் ஆழ்வார்களின் பாசுரங்களை [பெரியதிரு 11 - 4 - 8] நினைந்து,

"அன்னமாய் அருமறைகள் அறைந்தாய்நீ அவையுன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ?" [ஆரணி-விராதன் வதை 60]

என்று விராதன் வாய்மொழியாகப் பேசுவன். இதில் நாராயணனே ஊழிக்குப் பிறகும் நிலைபெற்று நிற்பவன் என்ற கருத்து வற்புறுத்தப் பெற்றுள்ளமை காண்க. மேகநாதன் ஏவிய நான்முகன் கணையால் இலக்குவன் அறிவொடுங்கி அயர்ந்தபோது தம்பி இறந்தான் என்று புலம்புகின்றான் இராமன். பின் அறிவு சோர்ந்து துயருறுகின்றான். அப்போது வந்த தேவர்கள், "முன்பு பின்பு நடு இல்லாய்!" [யுத்த - பிரமாத்திரப் 227] என்று விளித்துப் பேசுவதிலும் இதைக் காணலாம். நிகும்பலையைக் குலைக்கும்போது மேகநாதன் தன்னை இகழ்ந்து பேசியபோது, மறுமாற்றம் உரைக்கும் வீடணனின் பேச்சில்,

"மூவகை உலகம் ஏத்தும் முதல்வன்;
எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன்" [யுத்த நிகும்பலை யாகப் 175]

என்று குறிப்பிடும் பகுதியிலும் இக்கருத்து மிளிர்வதைக் காணலாம். கவிஞனே பிறிதோர் இடத்தில்,

"மூவ ராய்முத லாகி மூலம தாகி ஞாலமும் ஆகியத்
தேவ தேவர் பிடித்த போர்வில் ஒடிந்த சேவகர்" [அயோத். கைகேசி சூழ்வினை 62]

[தேவ தேவர் - சிவன்; சேவகர் - இராமன்]

என்று இக்கருத்தை மேலும் வற்புறுத்துவன். இராமன் கோலம் புனைதலைக் கூறும் இடத்தில் இராமனைக் கவிஞன்,

"முப்பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை" [பால. கடிமணப் 69]

என்று குறிப்பிடுவன். முடிசூடப் போகும் இராமனின் திருமேனியைக் (திவ்வியமங்கள விக்கிரகத்தைக்) கண்டு ஊரார் வாய்மொழியாக,

"காலம் ஆகணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம்முனிவன் என்பார்" [அயோத். கைகேயி சூழ்வினை 91]

என்றும் அவனது 'ஆதி அம் சோதி உருவைச்' சுட்டிக் காட்டுவன்.

Saturday, March 5, 2011

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: III கம்பனின் சமயம்

25. திரு. ம. பொ. சியின் கட்டுரையின் முக்கிய நோக்கம் "கம்பன் சமரச சைவனே" என நிரூபிப்பதேயாகும். இனி ம.பொ.சி. இவ்விஷயத்தை நிலைநிறுத்தக் கூறும் வாதங்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

26. கம்பராமாயணத்தைப் பரப்பிவந்தவர்களும், அதற்கு நாத்திகர்களால் எதிர்ப்பு வந்தபோது அதை எதிர்த்துக் காத்தவர்களும் சைவர்களேயாகையால், கம்பன் சைவனாகவே இருக்கவேண்டும் என்பது ம.பொ.சியின் வாதங்களில் ஒன்று. "விஷ்ணு கோயில்களில் வழிபடுபவர்கள் சைவர்களே மிகுதியாயிருப்பதால், அவ்வாலயங்களிலிருப்பவன் சிவனே" என்னும் வாதம் போன்றது இது. உலகக் காப்பியங்களில் இராமனையொத்த கதாநாயகன் எவரும் எங்குமில்லையாகையால், எல்லா மதத்தவர்களும் இராமனிடம் ஈடுபடுகிறார்கள். "யாமறிந்த புலவரிலே
கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை" என்று பாரதி பாடியதுபோல் கம்பன் மஹாகவிகளில் தலைசிறந்தவனாகையால் அவனிடமும், அவனது பெருங்காவியத்திலும் எல்லா மதத்தவர்களும் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் சைவர்கள் மிகுதியாகையால், கம்பனிடம் ஈடுபட்டுக் கம்பராமாயணத்தில் போதுபோக்குகிறவர்களிலும் சைவர்கள் மிகுதியாகவுள்ளனர். ச்ரி. உ.வே. வை.மு. கோபால கிருஷ்ணமாசாரியர் கம்பராமாயணத்திற்கு எழுதிய உரையே அனைவராலும் உச்சிமேல்வைத்து மெச்சப்படுகின்றது என்பதையும், வைணவர்களிலும் பல புலவர்பெருமக்கள் கம்பராமாயணத்தில் ஈடுபட்டனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. ம.பொ.சி. தம் வாதத்தை வள்ளுவர் இளங்கோ விஷயத்திலும் செய்யலாம். சிலம்புச்செல்வரெனப் புகழ்பெற்ற ம.பொ.சிவஞானகிராமணியாரைப் போன்ற (சமரச) சைவர்களே சிலப்பதிகாரத்தில் ஈடுபடுவதால், இளங்கோவடிகள் சைவரே என ம.பொ.சி. கூறுவாரோ? "அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்று அகாரத்தால் சொல்லப்படும் பகவானே ஜகத்காரணன் என்று திருக்குறள் கடவுள்வாழ்த்தின் முதற்பாடலிலும், "ஈரடியால் உலகளந்தவன்" என்று பொருட்பாலிலும், "தாமரைக்கண்ணானின் உலகே வீட்டுலகம்" எனக் காமத்துப்பாலிலும் திருமால் ஒருவனே பரம்பொருள் என உணர்த்தியிருப்பவரும், திருமாலின் தேவியான திருமகளைச் சிறப்பித்துப் பாடியிருப்பவரும், சிவனையோ, முருகனையோ, காளியையோ எங்கும் தொடாதவருமான வள்ளுவரைச் சைவர்களே மிகுதியாக ஆதரித்து நாயனாராக்கிவிட்டதால் திருவள்ளுவர் சைவரே என ம.பொ.சி. கூறமுற்படுவாரா? முற்பட்டாலும் நடுநிலைநிற்கும் நல்லோர்கள் இவற்றை ஏற்பரோ?

27. "நாடவிட்ட படலத்தில் திருவரங்கத்தையும், திருவேங்கடத்தையும் பாடிய கம்பன் அவற்றில் திருமால் கோயில் இருப்பதாகப் பாடாமையால் கம்பன் வைணவனல்லன்" என்று வாதம் செய்கிறார் ம.பொ.சி.; ராமாயணத்தை ஆழ்ந்து படிக்காததால் விளைந்தது இவ்வாதம். ச்ரிராமபட்டாபிஷேகத்திற்குப் பின்பே, ச்ரிராமபிரானிடமிருந்து விபீஷணனால் பெறப்பெற்ற ச்ரிரங்கநாதன் இரண்டாற்றுகிடையிலான திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பெற்றான் என்பது வரலாறு. "அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்" என்னும் பாடலில் இவ்வரலாற்றைக் கம்பனும் உணர்த்தியிருக்கிறான். அக்காலத்தில் ச்ரிரங்கநாதன் இங்கு எழுந்தருளாமலிருக்க, அவனைப்பற்றி பட்டாபிஷேகத்திற்குமுன் கம்பன் பாடுவானா? பாடியிருந்தால் (திரு. ம.பொ.சியைப்போல்) அசட்டுப்பட்டம் கட்டிக்கொண்டிருப்பானே! திருவேங்கடத்திலும் ச்ரிராமாவதாரகாலத்திற்குப் பிறகு பிருகு மஹரிஷியின் காலத்தில் எம்பெருமான் எழுந்தருளினான் என்பது ச்ரிவேங்கடாசல வரலாறு. ஆகையால், திருவேங்கடத்திலும் நாடவிட்ட படலத்தில் திருமால் எழுந்தருளியிருந்ததாகக் கம்பன் பாடவில்லை. இவ்வரலாற்று உண்மைகளை உணராமல், இவ்வாதங்களைக் கொண்டு திரு. ம.பொ.சி. கம்பனை சைவனாக்கமுயல்வது விதண்டாவாதமல்லாது வேறில்லை. ம.பொ.சியின் மற்ற வாதங்களும் நிலைநிற்க மாட்டாதவையே என நிரூபிப்போம் இனி.

28. சிலம்புச்செல்வரான ம.பொ.சி. சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து கற்றவர். தம் வாழ்நாள் முழுவதும் அதிலேயே செலவழித்தவர். அதனாலேயே அவர் கம்பராமாயணம் முதலான மற்ற தமிழ் நூல்களில் ஆழ்ந்த புலமை இல்லாதவரானாரென்பது, அவருடைய கட்டுரையிலிருந்தே விளங்குகிறது. சங்கநூல்களில் அவரது புலமை மேம்போக்கானதே என்பதை இந்நூலின் தொடக்கத்திலே விரிவாக நிரூபித்தோம். கம்பனின் சமயத்தைப்பற்றிய இக்கட்டுரைத் தொடரில் கம்பன் மும்மூர்த்திகளுக்குள்ளே திருமாலையே முதல்வனாகக் காட்டும் - நூற்றுக்கணக்கான பாடல்களைத் தொடாமலே விட்டுள்ளார். கம்பராமாயணத்தின் தொடக்கத்தில் உள்ள "உலகம் யாவையும்" என்னும் கடவுள் வாழ்த்துப்பாடலை எடுத்துக்கொண்டு 'இதில் திருமாலுக்கே உரிய அடையாளங்கள் எதையும் கம்பன் காட்டவில்லை" என்று கூறும் ம.பொ.சி. அதை ஒட்டியுள்ள இரண்டு பாடல்களில், உலகனைத்தையும் ஆக்கி அளித்து அழிப்பவனாக முதற்பாடலில் தம்மால் கூறப்பெற்ற முழுமுதல்வன் திருமாலே என்பதைத் தெளிவாகக் காட்டியிருப்பதைத் தொடாமலே சென்று விடுகிறார். இப்பாடல்களின் பொருளையே இவர் அறியவில்லையோ என்று நாம் ஐயுறுமாறு, 'முதல்பாடல் சிவனைப்பற்றியதே' என்று ம.பொ.சி. ஆதாரமில்லாமல் சாதிக்கிறார். இவ்விருபாடல்களை அடுத்த பாராவில் விரிவாக விளக்குவோம். 'இரணியன் வதைப்படலம் கம்பன் செய்ததல்ல' 'திருவேங்கடமலையில் உள்ள திருமாலைப் பாடாததேன்' முதலான தலைப்புக்களில் பல பக்கங்களை வீணாக்கியிருக்கும் ம.பொ.சி. திருமாலை மும்மூர்த்திகளுக்குள் முதல்வன் என்று கம்பன் கூறும் நூற்றுக்கணக்கான பாடல்களைக் கண்டு கொள்ளாமலே செல்கின்றார். இரணியன் வதைப்படலத்தில் "சாணிலும் உளன்" என்னும் பாடலை மேற்கோளாகக் காட்டும் போது அதிலுள்ள உயிரான தொடரான 'நீ சொன்ன சொல்லிலும் உளன்' என்னும் பகுதியை 'நான் சொன்ன சொல்லிலும் உளன்' என்று எடுக்கிறார். இப்பாடலில், " 'இறைவனான திருமால் இல்லை' என்று நீ சொன்ன சொல்லிலும் அத்திருமால் இருக்கிறான்" என்னும் பொருள் உடைய 'நீ சொன்ன சொல்லிலும் உளன்' என்னும் தொடரிலேயே பெருஞ்சுவை உள்ளது. 'நான் சொன்ன சொல்லிலும் உளன்' என்று ம.பொ.சி. இதை மாற்றுவது சுவைக்கேடாகவே உள்ளது. இவற்றிலிருந்து கம்பராமாயணத்தை ம.பொ.சி. ஆழ்ந்து கற்காமல் இக்கட்டுரைத் தொடரை எழுத முற்பட்டுவிட்டார் என விளங்குகிறது. காமகோடிப் பெரியபீடாதிபதியை 'நடமாடும் தெய்வம்' என்று புகழ்ந்து எழுதி, அவரது ஆராய்ச்சி இல்லாத கட்டுரைகளிலிருந்து மேற்கோள் காட்டுவதிலிருந்தும் - அவரிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு வைணவத்தை இழுவுபடுத்துவதற்காகவே அக்னிஹோத்ரம் ராமானுஜதாத்தாசாரியர் எழுதிய 'வரலாற்றில் பிறந்த வைணவம்' என்னும் நூலிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டுவதிலிருந்தும், ஆத்திகவேடம் பூண்ட நாத்திகரான அவரை 'பரம பாகவதர்' 'பரம வைஷ்ணவர்' என்று புகழ்வதிலிருந்தும் - திரு. ம.பொ.சி. வைணவத்திற்குத் தீங்கு இழைப்பதையே தமது வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்ட காமகோடிப் பெரியவரின் தூண்டுதலினாலேயே அவசரக்கோலமாக இக்கட்டுரைத் தொடரை எழுதியிருக்கிறார் என்று தெளிவாக விளங்குகிறது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே - 'விஷ்ணுவுக்குத் தமோகுணமுண்டு' என்று பேசி, அதைப் பத்திரிகைகள் அனைத்திலும் வெளியிடச் செய்து, தமது விஷ்ணுத்வேஷத்தைப் பறைசாற்றிக்கொண்டவர் காமகோடிப் பெரியவர். அவரது அக்கூற்றை 'ஸாத்விக விஜய ஸர்வஸ்வம்' என்னும் எமது நூலில் விரிவாக மறுத்திருக்கிறோம். அதை ம.பொ.சிக்கும் அனுப்பியிருக்கிறோம். அதை இன்றளவும் பீடாதிபதியாலும், அவரது சீடர்களாலும் மறுக்க இயலவில்லை. அதனால் கடுங்கோபங்கொண்ட பீடாதிபதி தமது கட்டுரைகளிலும், காமரசக் கதைகளை வெளியிட்டு மக்களைக்கெடுக்கும் 'கல்கி' 'விகடன்' 'இதயம்' முதலான பத்திரிகைகளில் தமது சீடர்களைக்கொண்டு எழுதுவிக்கும் தலபுராணக் கட்டுரைகளிலும், இலக்கியக் கட்டுரைகளிலும் ஏராளமான இடங்களில் விஷ்ணுவை இழித்துரைத்தும், உரைப்பித்தும், வைஷ்ணவத்தைத் திரித்துரைத்தும், உரைப்பித்தும், பொய்களைப் பரவச்செய்துவருகிறார். இப்பொய்கள் அனைத்தையும் இதுகாறும் ஏழு சதகங்கள் (700 கேள்வி பதில்கள்) வெளிவந்துள்ள நமது ஸுதர்சனர் பதில்களில் நடுநிலையாளர்கள் தலைகுலுக்கி வரவேற்கும்படி மறுத்து, உண்மையை நிலைநாட்டியிருக்கிறோம். 'காமகோடிப் பெரியவர் மிகக்கொடிய விஷ்ணு த்வேஷி' என்பதை ஜீரணித்துக்கொள்வதற்கு ம.பொ.சியின் மனம் இடம் கொடுக்குமானால், இந்த ஸுதர்சனர் பதில்களையும் அவருக்கு அனுப்பச் சித்தமாயிருக்கிறோம். காமகோடிப் பெரியவரின் கைக்கூலியான தாத்தாசாரியர் இயற்றிய 'வரலாற்றில் பிறந்த வைணவம்' என்னும் நூலிலுள்ள வாதங்களை வைணவ உலகத்திலுள்ள சான்றோர்கள் அனைவரும் கண்டித்துச் சிதறவடித்திருக்கும் கட்டுரைகளைத் தாங்கிய 'அக்னிஹோத்ரியும் வைணவமும்' எனும் நம் வெளியீட்டையும் ம.பொ.சிக்கு அனுப்பியிருக்கிறோம். இந்நூல்களைக் கொண்டு காமகோடிப் பெரியவருடையவும், அவரது கைக்கூலியுடையவும் கட்டுரைகள் நிலைநிற்கமாட்டாத புன்சொற்களே என்பதை ம.பொ.சி. எளிதில் உணரலாம். இதை உணரும் நடுநிலைமை அவருக்கு ஏற்படவேண்டும் என்று நாம் பரம்பொருளைப் பிரார்த்திக்கிறோம். இப்படிக் கம்பராமாயணத்தில் ஆராய்ச்சியில்லாமல், காமகோடிப் பெரியவரின் தூண்டுதலினால் கட்டுரைத் தொடரை எழுத முற்பட்ட ம.பொ.சி. காமகோடிப் பெரியவரைப் பின்சென்று ஒளவையார் இயற்றிய ஆத்தி சூடியில் 'அரனைமறவேல்' என்றுள்ளதாக எழுதியதின் மூலம் தாம் ஆத்தி சூடியைக்கூட ஆழ்ந்து கற்கவில்லை என்று புலப்படுத்திக் கொள்கிறார் அந்தோ! இப்போதாவது ஆத்திசூடியை எடுத்துப் பார்த்தாரானால், இடையின 'ர'கரத்திற்கும், 'ல'கரத்திற்கும், 'வ'கரத்திற்கும், 'ழ'கரத்திற்கும், 'ள'கரத்திற்கும் உரிய நீதி மொழிகளுக்குப் பிறகு வரும் 'அறனை மறவேல்' என்னும் நீதி மொழியை 'அரனை மறவேல்' என்று காமகோடி பீடாதிபதி மாற்றியது தமிழறிவின்மையால் ஆயது என்பதை உணர்ந்து, காமகோடிப் பீடாதிபதியைப் போல் இன்னமும் பிடிவாதம் பிடிக்காமல் நேர்மையுடன் தவறை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த நேர்மை அவருக்கு ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் ஆத்திசூடியைக் கூட ம.பொ.சி. ஆழ்ந்து கற்கவில்லை என்னும் உண்மை வெள்ளிடைமலையாக விளங்கும். காமகோடிப் பெரியவரைப் பின்சென்று ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு அவப்பொருளுரைக்குமிடங்களும் இத்தகையவையே என்பது நமது நூல்களைப் படித்தவர்களுக்கு நன்கு விளங்கும். "சிறியார் சிவப்பட்டார்" [நான் - திருவ 6] என்னும் பாசுரத்தை "செத்தார் சிவப்பட்டார்" என ம.பொ.சி. மேற்கோள் காட்டுகிறார். இது திவ்யப்ரபந்தத்திலும் இவர் நுனிப்புல் மேய்ந்தவரே எனக் காட்டித் தருகிறது. ஆக, சிலம்புச் செல்வரான ம.பொ.சிக்கு மற்ற தமிழ் நூல்களில், குறிப்பாகக் கம்பராமாயணத்தில், ஆழ்ந்த புலமை இல்லாமையாலேயே இக்கட்டுரைத் தொடர் எழுந்துள்ளது என்று நடுநிலையாளர்க்கு நன்கு விளங்கும். இந்நூலின் எஞ்சிய பகுதிகளில் நடுநிலையாளர் அனைவரும் ஏற்கும்படி இதை நிலைநாட்டுவோம்.

29. "உலகம் யாவையும்" என்னும் முதல்பாடலில் "யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத்ப்ரயந்த்யபி, ஸம்விசந்தி தத்3 விஜிஜ்ஞாஸஸ்வ தத்3 ப்3ரஹ்மேதி" [எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் (ஸ்ருஷ்டிகாலத்தில்) தோன்றுகின்றனவோ, எதனால் தோன்றியவை உயிர் வாழ்கின்றனவோ, (ப்ரளய காலத்தில்) எதனிடம் சென்றடைகின்றனவோ அதை ப்ரஹ்மமென்றறிவாயாக] என்னும் உபநிஷத்தைப் பின்பற்றி ஜகத் காரணப்பொருளை சரணம் பற்றினான். இந்த ஜகத்காரணப்பொருள் எது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக,
"சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை
எற்(கு) உணர்த்தரிது எண்ணிய மூன்றனுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடலாடுதல் நன்றரோ"
[புல்லறிவாளர்களால் அறியமுடியாத பரம்பொருள் நிலையை என்னால் உரைக்க இயலாது; ஸத்வம், ரஜஸ், தமம் என்று மூன்றாக எண்ணப்படும் குணங்களுள் முதலாவதான ஸத்வகுணத்தை உடைய திருமாலே (முறையே) ரஜோகுணத்தையும், தமோகுணத்தையும் உடைய பிரமனையும், சிவனையுங்காட்டிலும் முதல்வர். அவரது கல்யாணகுணக்கடலில் குடைந்தாடுவதே நன்று ] என்னும் பாடலை அமைத்திருக்கிறான் கல்வியிற்பெரிய கம்பன். ஸத்வகுணத்தையுடையவர் திருமாலே என்பதும், பிரமன் ரஜோகுணத்தையுடையவன் என்பதும், சிவன் தமோகுணத்தையுடையவன் என்பதும் ஸகல சாஸ்திரங்களிலும் பிரசித்தம். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் காமகோடிப் பீடாதிபதி "திருமாலுக்கும் தமோகுணம் உண்டு" என்று ஆதாரமில்லாமல் கூறியபோது, ஸாத்விக விஜய ஸர்வஸ்வத்தில் பீடாதிபதி வாய்திறக்கமுடியாதபடி நூற்றுக்கணக்கான வேத சாத்திர ஆதாரங்களைக்காட்டி "திருமால் ஒருவரே சுத்த சத்துவகுணமுடையவர்" என நிலைநாட்டியிருக்கிறோம். இன்றளவும் பீடாதிபதியால் இதை மறுக்க இயலவில்லை. ம.பொ.சி. இவ்விஷயம் ஏதுமறியாமல் "கம்பன் சைவனே" என எழுதுவது நடுநிலையாளர்களால் விலவறச் சிரிக்கத்தக்கது. கம்பன் இத்துடன் நில்லாமல், அடுத்த பாடலில் "ஆதி அந்தம் அரி என யாவையும் ஓதினார் அலகில்லன உள்ளன வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் பாதமல்லது பற்றிலர் பற்றிலார்" [முதலிலும் முடிவிலும் "ஹரி: ஓம்" என்று ஓதும் அளவற்ற வேதங்களை ஓதிய பற்றற்றவர்கள் உண்மை நெறியாகவும், அடையத்தக்கவனாகவுமுள்ள அந்த ஹரியின் பாதங்களைத் தவிர வேறு எதையும் பற்றமாட்டார்கள்] என்று இந்த முழுமுதல்வன் ஹரியே என நிலைநாட்டினார். வேதங்களைத் தொடங்கும்போதும், முடிக்கும்போதும் வைதிகர்கள் "ஹரி: ஓம்" என்று ஓதுகிறார்களேயொழிய "ஹர: ஓம்" என்று ஓதுவதில்லை. முதற்பாடலில் 'அன்னவர்க்கே' என்னும் ஏகாரத்தாலும், இரண்டாம் பாடலில் 'முற்குணத்தவரே முதலோர்' என்னும் ஏகாரத்தாலும், மூன்றாம் பாடலில் 'பாதமல்லது பற்றிலர்' என்னும் எதிர்மறையாலும் திருமால் ஒருவனைத் தவிர மற்றை இரு மூர்த்திகளையும் ஞானிகள் பற்றமாட்டார்கள். தானும் பற்றவில்லை எனக் கம்பன் தெளிவாகக் காட்டுகிறான். அவன் குறிப்பிடும் பரம்பொருள் திருமாலே எனத் தெளிவாக எடுத்துக்காட்டும் இரு பாடல்களைத் தொடாமலே, 'முதற்பாடலில் கம்பன் சிவனையே கருதுகிறான்' என ம.பொ.சி. எழுதுவது அவருக்கு மனச்சாட்சி உண்டா என நம்மை ஐயமுறவைக்கிறது. நேர்மையிருந்தால் செங்கோலில் நமது இந்த பதில்களைச் சுருக்கமாகவாவது எடுத்து ம.பொ.சி. பதிலுரைக்கட்டும்.

30. பல வருடங்களுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பில் G. சுப்பிரமணியப்பிள்ளை என்பவர் திருவவதாரப்படலத்தில் பல பாடல்களை மாற்றிக் கம்பன் வைணவனல்லன் எனக் காட்ட முற்பட்டபோது, நாம் உடனே "கம்பனின் சமயம்" எனும் தலைப்பில் மறுப்பு வெளியிட்டோம். பல்கலைக் கழகத்தார் அதில் பல பிரதிகளை வாங்கிக் கம்பராமாயணப் புலவர்களிடம் அளித்தனர். எவராலும் இன்றளவும் அந்நூலுக்கு மறுப்பு எழுத இயலவில்லை. அந்நூலின் இரண்டாம் பாகமாக ம.பொ.சிக்கு மறுப்பான இந்நூலை எழுதுகிறோம். இதற்கு ம.பொ.சி. ஏதேனும் பதில் எழுதுகிறாரா என்று பார்த்துக்கொண்டு, எழுதினால் அதை மூன்றாம் பாகத்தில் விமர்சிப்போம். எழுதினாலும், எழுதாவிட்டாலும், "கம்பன் வைணவனே" என்பதைக் கம்பராமாயணத்திலிருந்து நூற்றுக்கணக்கான பாடல்களைக் காட்டி இனி எவரும் வாய்திறக்கமுடியாதபடி நிரூபிப்போம்.

31. கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமையில்லாமல் ஒரு சில பாடல்களையே மேற்கோளாகக் காட்டி, கம்பன் சைவனே என அடம்பிடிக்கும் ம.பொ.சியைப் போலல்லாமல், கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமை உள்ளவரும், பிறப்பால் சைவரும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற தமிழ்த்துறைத் தலைவருமான டாக்டர் ந.சுப்புரெட்டியார் அவர்கள் தமது "அறிவியல் தமிழ்" என்னும் நூலில் "கம்பன் கண்ட மெய்ப்பொருள்" என்னும் தலைப்பில் கம்பராமாயணப் பாடல்களில் பலவற்றை மேற்கோளாகக் காட்டி 'கம்பன் வைணவனே' என நிறுவியிருப்பதை இனி விரிவாகக் காட்டுகிறோம். இதைப் பார்த்தபின்பாவது ம.பொ.சியின் கண் திறக்கும் என நம்புகிறோம்.

Friday, October 1, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்திற்குப்பின் சமயநிலை - 1

23. சங்ககாலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட சிலப்பதிகார காலத்தில் சிவனை 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்று பெருமைபேசும் சைவர்கள் தோன்றிவிட்டனர். சங்ககாலத்தில் தலையெடுத்திராத சமண பௌத்த மதங்களும் தலையெடுக்கத் துவங்கிவிட்டன. சிலப்பதிகார காலத்தையொட்டி அவதரித்த முதலாழ்வார்களின் திருவந்தாதிகளிலும், திருமழிசையாழ்வாரின் இருநூல்களிலும் சைவம், சமணம், பௌத்தம் என்னும் இம்மதங்கள் வேதத்துக்குப் புறம்பானவை என்று கண்டிக்கப்படுகின்றன. திருமாலுக்குத் தாழ்வையும், சிவனுக்குப் பெருமையையும் கூறி, சைவர்கள் சிவபரத்துவவாதம் செய்ததால், ஆழ்வார்கள் சிவனுடைய தாழ்வைக் காட்டி, வேதத்தில் நிலைநிறுத்தப்பட்ட திருமாலின் பரத்துவத்தை நிலைநாட்டவேண்டியதாயிற்று. சங்கத் தமிழர் சமயமும், பரமவைதிக சமயமுமான வைணவத்திற்குப் போட்டியாக சைவம் எழுந்ததாலேயே சைவத்தை ஆழ்வார்கள் கண்டித்தனர். வேதசாத்திரங்களில் காணப்படும் சிவனுடைய தாழ்வுகளை எடுத்துக் கூறினர். இதனால் கடுங்கோபம் கொண்ட பிற்கால நாயன்மார்கள் திருமாலைத் தாழ்த்தும் முற்கூறிய கட்டுக்கதைகளையெல்லாம் தங்கள் நூல்களில் பெய்து, அதனால் சிவனுக்குப் பரத்துவம் தேறிவிடுமென்று மனப்பால் குடித்தனர். ஆயினும் இந்த நாயன்மார்களுக்கும் முற்பட்ட ஆதிசங்கரரும், பிற்பட்ட வைதிக மதாசார்யர்களும் திருமாலையே வேதங்கண்ட முழு முதல்வனாகத் தங்கள் பாஷ்யங்களிலும், க்ரந்தங்களிலும் பொறித்து வைத்தனர். மத்வருடைய காலமான 12ஆம் நூற்றாண்டுவரை இந்நிலையே நீடித்து வந்தது. அதற்குப் பிறகே சைவர்களின் சித்தாந்த சாத்திரங்களும், ச்ரிகண்ட பாஷ்யமும் எழுதப்பட்டு, சிவனுக்குப் பரத்துவம் கூறுகின்றவர்கள் பெருகத் தொடங்கினர். இக்காலத்திலும் சக்திக்குப் பரத்துவம் கூறும் சாக்தம், முருகனுக்குப் பரத்துவம் கூறும் கௌமாரம், சங்ககாலத்தில் எங்குமே காணப்படாத கணபதிக்குப் பரத்துவம் கூறும் காணாபத்யம், 'பீ4ஷோதே3தி ஸூர்ய:' [பரம்பொருளிடம் பயத்தாலே சூரியன் உதிக்கிறான்] என்று உபநிஷத்துக்களில் கூறப்பட்ட சூரியனுக்குப் பர்த்துவம்கூறும் ஸௌரம் என்னும் மதங்கள் எழும்பவேயில்லை. இந்த தெய்வங்களுக்குப் பரத்துவம்கூறும் நூல் எதுவும் 13ஆம் நூற்றாண்டுவரை காணப்படவில்லை. இந்த தெய்வங்களுக்குப் பரத்துவம்கூறும் சில துதிநூல்களை 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே ஆதிசங்கரர் பெயரில் எழுந்த மடங்களில் உள்ள சங்கராசாரியர்கள் எழுதி, அதை ஆதிசங்கரர் எழுதியதாக ஒரு மயக்கத்தை ஏற்படுத்தினர். இத்துதிநூல்களிலிருந்து ஒரு துணுக்கைக்கூட 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட எவரும் எடுக்கவில்லையென்பது இவ்வுண்மையை வெளிப்படையாகக் காட்டுகிறது.

24. இப்படி 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட 'ஆதிசங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தார்' என்னும் கற்பனையைப் பற்றிக் கொண்டு ம.பொ.சி. தமது கட்டுரைகளில் எழுதுவது - அவர் சங்கரபாஷ்யங்களையும், மற்றுமுள்ள வடமொழி நூல்களையும் அறிவதற்குறுப்பான வடமொழி அறிவு இல்லாதவர் என்பதையும், அதனால் இவ்விஷயத்தை ஆராய்ச்சி செய்யத் தகுதியற்றவர் என்பதையும், சமீபகாலத்தில் சில பொய்யர்கள்கூறும் வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைபோல் கூறுகின்றவர் என்பதையும் காட்டித்தருகின்றது. 'ஆதிசங்கரர் ஷண்மதஸ்தாபகர்' என்பது முழுப்பொய் என்னும் விஷயத்தை எதிரிகளும் மறுக்கவொண்ணாதபடி நாம் நிலைநாட்டியிருக்கும் 'சங்கரரும் வைணவமும்' என்னும் நூலை நாம் ம.பொ.சிக்கு அனுப்பியிருக்கிறோம். முடியுமானால் வடமொழி வல்லுநர்களைத் துணைகொண்டு நாம் அந்நூலில் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க ம.பொ.சி. முற்படுவாராக.

Saturday, July 10, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 5

17. மேலும் சந்நியாசிகளின் இலக்கணத்தைக் கூறவந்த தொல்காப்பியர்,

"நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய
"
[தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71]

என்று சொல்லியிருப்பதிலிருந்து பூணூலையும், முக்கோலாகிற திரிதண்டத்தையும் தரித்த பெரியவர்களே அந்தக்காலத்தில் சந்நியாசிகளாகக் கருதப்பட்டனர் என விளங்குகிறது. பூணூலும், முக்கோலுமில்லாத சைவசந்நியாசிகளும், அத்வைத சந்நியாசிகளும் அக்காலத்தில் தோன்றவில்லையென்றோ, சான்றோர்களால் சந்நியாசிகளாகக் கருதப்படவில்லையென்றோ விளங்குகிறது. மற்ற சங்க இலக்கியங்களிலும் 'முக்கோற்பகவர்' என்று இவர்களை பாகவத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக எடுக்கையால் இவர்கள் பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்கள் எனத்தேறுகிறது. இவ்வண்ணமாக, சங்ககாலத்தில் விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட வைஷ்ணவ மதம் ஒன்றே வைதிகமதமாகக் கொள்ளப்பட்டிருக்கும்போது, சங்ககாலத்தமிழர்களை சைவர்கள் என்று ம.பொ.சி. எழுதியது அடியோடு பொருந்தாது என்று நடுநிலையாளர்க்கு நன்கு விளங்கும்.

18. இதற்குமேல் ம. பொ. சி. கேட்கக்கூடும். சங்ககாலத்தில் முருகபக்தர்களும், சிவபக்தர்களும் இருந்திருக்கிறார்களே; முருகனுக்கே திருமாலைக்காட்டிலும் பரிபாடலில் அதிகமான பாடல்கள் உள்ளனவே; ஆகையால் சங்ககாலத்தில் சைவர்கள் மிகுதியானவர்கள் என்று கூறித்தானே ஆகவேண்டும் என்பது அக்கேள்வி. இதற்கு பதில் பின்வருமாறு: -

19. முருகன் முதலான மற்ற தெய்வங்களுக்கு மிகுதியான பாடல்கள் இருந்தாலும் அப்பாடல்களில் பரம்பொருளுக்குரிய பெருமைகள் எதுவுமே பாடப்படவில்லை. திருமால்பற்றிய பாடல்களிலேயே பரம்பொருளுக்குரிய அத்தனை பெருமைகளும் காணக்கிடக்கின்றன. இதிலிருந்து சங்ககாலத்திலிருந்த அனைவருமே திருமாலை வேதம் புகழும் பரம்பொருளாகக் கொண்டிருந்தனர் என்றும், மோட்சத்தை விரும்பியவர்கள் அவனையே அடைந்து அதைப் பெற்றுப் போந்தனர் என்றும், மற்ற பயன்களை எளிதில் பெறவிரும்பியவர்கள் மற்ற தெய்வங்களையும் வழிபட்டனர் என்றும் விளங்குகிறது. மோட்சம் ஒன்றையே விரும்பியவர்களாகையாலே திருமாலைத் தவிர வேறு எவரையும் தொழாத முக்கோற்பகவர்களும், அவர்களது சீடர்களும் அக்காலத்தில் இருந்தார்கள் என்பதையும் மறுக்க இயலாது. இவர்கள் வைஷ்ணவர்களில் தலைசிறந்தவர்கள். சங்ககாலத்தில் இருந்த மற்றவர்கள் மற்ற பலன்களுக்காக மற்ற தெய்வங்களை அடைந்தாலும், அவர்களைப் பரம்பொருளாக நினையாமல் திருமால் ஒருவனையே பரம்பொருளாகக் கொண்டிருந்தார்களாகையாலே அவர்களும் வைஷ்ணவர்களே. இக்காலத்திலும் வைஷ்ணவர்களில் பெரும்பான்மையானவர்கள் இவ்வுலகப்பயன்களுக்காக மற்ற தெய்வங்களையும் வணங்குகின்றனர் என்பதும், மோட்சம் ஒன்றையே விரும்பும் ஒரு சில தலைசிறந்த வைஷ்ணவர்களே திருமாலைத்தவிர வேறு எந்த தெய்வங்களையும் நினையாத, மறந்தும் புறந்தொழாமாந்தர்களாக உள்ளனர் என்பதும் குறிக்கொள்ளத்தக்கது. கீதாசார்யனும் கீதையில் "வாஸுதே3வஸ்ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப4:" [கீ3தை 7 - 19] [கண்ணனே எல்லாம் என்று கூறும் மஹாத்மா எனக்கே மிகவும் கிடைத்தற்கு அரியவனாகவே உள்ளான்] என்று வருத்தப்பட்டானன்றோ.

20. சங்கநூல்களில் பரம்பொருளுக்குரிய எல்லாப்பெருமைகளும் திருமால் ஒருவனுக்கே கூறப்பட்டுள்ளது. மற்ற எந்த தெய்வத்திற்கும் கூறப்படவில்லை. திருமாலுக்குத் தாழ்வைக் கூறும் பிற்காலக் கட்டுக்கதைகளான (1) அடிமுடிதேடிய கதை, (2) கண்ணைப்பிடுங்கி அர்ச்சனை செய்தகதை, (3) சிவன் மத்ஸ்யாவதாரத்தை அழித்த கதை, (4) சிவன் கூர்மாவதாரத்தின் ஓட்டைப்பிரித்துத் தனக்கு ஆபரணமாகக்கொண்ட கதை, (5) சிவன் வராஹாவதாரத்தின் கொம்பை ஒடித்த கதை, (6) நரஸிம்மாவதாரத்தை, சிவன் சரபமாய் வந்து கிழித்த கதை, (7) திரிவிக்ரமனின் தோலை சிவன் உரித்து, சட்டையாகப் போர்த்துக்கொண்ட கதை, (8) ராமன் சிவலிங்க பூஜைசெய்த கதை முதலான சிவபுராணக் கதைகளில் ஒன்றுகூட சங்கநூல்களில் எடுக்கப்படவில்லை; முருகன், பிரமனைச்சிறையில் அடைத்து, படைப்புத் தொழிலை மேற்கொண்ட கதை, முருகனுடைய மயில் வைகுண்டத்தை அழித்த கதை, தகப்பனாகிய சிவனுக்கே பிரணவத்தின் பொருளை உபதேசித்த கதை முதலான கந்தபுராணக் கதைகள் எதுவும் முருகனைப்பற்றிய சங்கநூற் பாடல்களில் காணப்படவில்லை. இக்கதைகள் நாயன்மார்களுக்கு முற்பட்ட எந்தத்தென்மொழி வடமொழிக்கவிஞர்களாலும் பாடப்படவில்லை என்பதும், குறிப்பாக சிவபக்தனான காளிதாசனாலும் கூடத் தனது குமாரசம்பவத்தில் பாடப்படவில்லை என்பதும் குறிக்கொள்ளத்தக்கது.

21. பிற்காலத்தில் சைவர்கள் சிவனுக்கு "பிறவாயாக்கைப் பெரியோன்" என்று பெருமை சொல்லிக்கொள்ளத் தலைப்பட்டனர். சங்கநூலான பரிபாடலிலோ திருமாலே சிவனையுள்ளிட்ட எல்லா ஜீவர்களையும் படைத்தவன் என்று முழங்கப்படுகிறது. பிற்காலச் சைவர்கள் திருமால் அவதாரங்களை எடுக்கையாலே பரம்பொருளாக முடியாது என்று வாதம் செய்தனர். சங்கநூலான பரிபாடலோ "முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே" [பரிபாடல் 3 - 71,72] என்று திருமால் எடுக்கும் பலவகைப்பட்ட அவதாரங்கள் அனைத்தும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கே என்றும், அவன் தானே தன்விருப்பத்தால் பிறக்கிறானேயொழிய அவனைப் பிறப்பித்தவர்கள் எவரும் இலர் என்றும் முழங்கிற்று. பிற்காலத்தில் சிவபக்தரான நாயன்மார்கள் சிவனே பிறவாமையாகிற வீட்டைத்தரவல்லவன் என்று பாடினார்கள். சங்கநூல்கள் எதிலும் சிவன் அப்படிப் பாடப்பெறவில்லை. திருமாலைப்பற்றிய பாடல்களிலேயே,

"மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே
" [பரிபாடல் 3 - 2,3]

[மறுபிறப்பை அறுத்துவிடும் குற்றமற்ற திருவடிகளையுடைய நீலமணியைப்போன்ற திருமேனியைக்கொண்ட மாயோனே] என்றும், "நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்" [பரிபாடல் 15 - 15,16] [மணம்மிக்க துழாய் மாலையை அணிந்த திருமால் அளித்தாலல்லது எவராலும் வீட்டுலகத்திற்கு ஏறமுடியாது] என்றும் திருமாலே மோட்சமளிக்கவல்லவன் என முழங்கப்பெற்றது. இவற்றிலிருந்தும், சங்ககாலத் தமிழர் சமயத்தில் நாம் காட்டிய நூற்றுக்கணக்கான பிற சங்கநூல் மேற்கோள்களிலிருந்தும் சங்ககாலத்தில் அனைவரும் விஷ்ணுவையே பரம்பொருளாகக்கொண்ட வைஷ்ணவர்களாகவே விளங்கினர் என்றும், சிவன், சக்தி, முருகன் முதலான மற்ற எந்த தெய்வத்தையும் எவருமே பரம்பொருளாகக் கொள்ளவில்லையென்றும் கையிலங்கு நெல்லிக்கனியாகவும், வெள்ளிடை மலையாகவும் விளங்குகிறது.

22. மூன்று, நான்காவது பரிபாடல்களில் பரம்பொருளுக்கேயுரிய எல்லாப் பெருமைகளையும் அடுக்கடுக்காகத் திருமாலுக்குப் பாடிய கடுவன் இளவெயினனாரே, முருகனைப் பற்றிய ஐந்தாம் பாடலில் சிவனும், பார்வதியும் புணர்ந்ததனால் வீரியம் வெளிப்பட்டு, அதிலிருந்து பிறந்த குழந்தை முருகன் என்று மிகத்தெளிவாகப் பாடினார். இதிலிருந்து சிவனும், பார்வதியும் ஆண், பெண் சேர்க்கையினால் வீரியம் வெளிப்படும் ஜீவர்களே என்றும், அந்த வீரியத்திலிருந்து பிறந்த முருகனும் ஜீவனே என்றும் சங்ககாலச் சான்றோர்கள் கருதினார்கள் என்று விளங்குகிறது. ஆக, சங்ககாலத்தில் சிவனையோ, சக்தியையோ, முருகனையோ பரம்பொருளாகக்கொண்ட சைவம், சாக்தம், கௌமாரம் என்னும் மதங்கள் வழக்கில் இல்லையெனத் தெளிவாகத் தெரிகிறது. இதிலிருந்து "சங்ககாலத்தில் சிவனையும், திருமாலையும் மனவேறுபாடின்றித் தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது" என்று ம. பொ. சி. எழுதியது அப்பட்டமான பொய் என விளங்குகிறது.

Friday, July 9, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 4

13. இவ்வண்ணமாக, சங்ககாலத்திலேயே குறிஞ்சிநிலத்திலும், மருதநிலத்திலும் பல திருமால் கோயில்கள் இருந்ததாகச் சங்ககாலச் சான்றோர்கள் கூறுகையால் ம.பொ.சி.யின் வாதம் தவறானது என விளங்குகிறது. மேலும் 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' என்னும் தொல்காப்பிய அடியின்படி மருதநிலத்தில் இந்திரனுக்கு கோயில் இருந்ததாக சங்கநூல்களில் எங்கும் காணப்படவில்லை. 'வருணன் மேய பெருமணல் உலகமும்' என்னும் தொல்காப்பிய அடியின்படி வருணனுக்கு நெய்தல் நிலத்தில் கோயில் இருந்ததாக எங்கும் சங்கநூல்களில் காணப்பட்டவில்லை. 'சீரலைவாய்' என்னும் திருச்செந்தூராகிற நெய்தல் நிலத்தில் முருகனுக்கே கோவிலிருந்ததாகச் சங்கநூலில் காணப்படுகிறது. ஆகையால் 'மாயோன் மேய காடு உறை உலகமும்' என்று தொடங்கும் தொல்காப்பியப்பாடலுக்கு ம.பொ.சி. கூறும்பொருள் அடியோடு பொருந்தாது எனத் தெரிகிறது. இதன் சரியான பொருளை இனிக் காண்போம்.

14. இங்கு 'மாயோன்' என்றது திருமாலின் அவதாரமான கண்ணனை. 'மேய' என்றதற்கு 'ரட்சகனாகப் பொருந்திய' என்று பொருள். கண்ணன் காடுவாழ் சாதியாகப் பிறந்து, ஆயர்களைத் தன் உயிருக்கும் மேலாக ரட்சித்தவன். அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனைக் காடும் காடு சார்ந்த நிலமுமான முல்லைநிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். முருகன் மலைப்பாங்கான நிலத்தில் வாழ்ந்த வேடர்களின் செல்வியான வள்ளியை மணந்து அந்நிலத்திலே பல வீரவிளையாட்டுக்களைப் புரிந்தவன். அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனை மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்கு ரட்சகனாகக் கொண்டார்கள். இந்திரன் மழை பொழிவிக்கும் தெய்வம். வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதநிலம் மழையின்றேல் அழிந்துவிடும். அதனால் தமிழகச் சான்றோர்கள் அவனை மருதநிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். வருணன் கடலுக்கு அதிதேவதை. அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனைக் கடலும் கடல்சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். இப்பொருளில் எவராலும் எக்குற்றமும் கூற முடியாது.

15. இதில் பாடியிருக்கும் முறையிலும் ஒரு பொருத்தம் காண்கிறது. சங்ககாலத்தில் பரம்பொருளாகவும், ஸர்வரட்சகனாகவும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட மாயோனை முதலில் வைத்தார் தொல்காப்பியர். வீரம் முதலான நற்குணங்களில் மாயோன் ஒருவனுக்கே அடுத்தபடி உள்ளவனாய், சிறு குழந்தையாயிருக்கும் போதே இந்திரனையும் வெற்றிகொண்டவனான முருகனை இரண்டாம் படியில் வைத்தார். அடுத்து இந்திரனை மூன்றாம்படியில் வைத்தார். இந்திரனுக்கு அடங்கியவனான வருணனை நான்காம்படியில் வைத்தார். ரட்சகர்களல்லாத உருத்திரன், யமன் முதலானோர்க்கு நிலமே ஒதுக்கப்படவில்லை. ஆக, இப்பொருளே மிகப்பொருத்தமான பொருள் என விளங்குகிறது.

16. இப்படிக் கொள்ளாமல் திருமால் சங்ககாலத்தில் முல்லை நிலத்தில் மட்டும் கோயில் அமைத்து வழிபடப்பெற்றான் என்று ம.பொ.சி. கூறும் பொருளைக் கொண்டால் முற்கூறிய பல குற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும், "மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின் வயின் பரந்தலைய உரைத்தேம். மாயா வாய்மொழி உரை தர" [பரிபாடல் 3 - 9,10,11] [மாயோனே! எல்லா உலகங்களும், உலகினில் உள்ள ஜீவர்கள் அனைவரும் உன்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அழியாத வேதம் சொல்ல நாங்கள் உரைத்தோம்.] "நின் சேவடி தொழாரும் உளரோ" [பரிபாடல் 3 - 19] என்று சங்ககாலச் சான்றோர்கள் பாடியிருக்கும்போது திருமாலை முல்லைநிலத்திற்கு மாத்திரம் உரியவன் என்றோ, அந்நிலத்தினரால் மாத்திரம் தொழப்படுபவன் என்றோ எவர் கூறமுடியும்? ஆகையால் பரிபாடல் முதலானவற்றில் திருமால் ஒருவனே வேதத்தால் பரம்பொருளாக முழங்கப்படுபவன் என்று கூறியதை இத்தொல்காப்பியப்பாடல் வலியுறுத்துகின்றதேயொழிய, அதற்கு முரணாகப் பேசவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

Friday, July 2, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 3

8. தொல்காப்பியத்தில் முதலாவதான அகத்திணை இயலில் ஐந்தாவது பாடலாக உள்ளது பின்வருமாறு:-

"மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதல், நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"

இப்பாடலுக்கு ம.பொ.சி. கூறும் பொருள் தவறானது. ஏனெனில்: (சங்ககாலத்திலேயே) முல்லைநிலத்தில் மாத்திரமல்லாமல் மற்ற நிலங்களிலும் திருமால் கோவில்கள் இருந்தன என்பதைக் காண்கிறோம்.

9. கல்லாடனார் என்னும் புலவர் இயற்றிய அகநானூற்றின் ஒன்பதாவது பாடலில், வேங்கடமலையைக் கடந்துசென்று பொருளீட்டி வினைமுடித்து மீண்டதலைமகன், தேர்ப்பாகனுக்குக் கூறியதாக உள்ள பாடலில்,

"அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல்பாணி
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழியப் போகி"

என்றவிடத்தில் 'நெடுமால் வரைய - குன்று ஒழியப் போகி' என்னும் தொடரால் நெடுமாலாகிற திருமால் எழுந்தருளியிருக்கும் வேங்கடக் குன்றையும் கடந்து தான் சென்றதாகக் குறிப்பிட்டான். தலைவன் வேங்கடமலைக்கும் அதைக்கடந்து அப்பாலும் சென்று பொருளீட்டி வருவது என்னும் மரபு அகநானூற்றின் பல பாடல்களில் காணப்படுவதால் இங்கு வேங்கடமலையைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தம். அகநானூற்றில் அறுபத்தோராம் பாடலில் 'விழவுமலி வேங்கடம்' என்று வருவதும் இதை வலியுறுத்துகிறது. எப்படியும் 'நெடுமால் வரைய - குன்று ஒழியப்போகி' என்னும் தொடர் சங்க காலத்திலேயே திருமால் மலையாகிற குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியிருந்ததைக் காட்டுகிறது.

10. அகநானூறு நூற்றிமுப்பத்தேழாம் பாடலில் உறையூர் முதுகூத்தனார் என்னும் புலவர்

"வென்று எறிமுரசின் விறல் போர்ச் சோழர்
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இரு கரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண்பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே"

என்னும் பாடற்பகுதியில், 'தலைமகன் பிரியப்போகிறான்' என நினைத்து வேறுபட்ட தலைமகளின் நிலையைக் கூறும்போது, "திருவரங்கத்தில் பங்குனி உத்தரத் திருநாளின் போது, மக்கள் மிகுதியாகத் திரண்டு காவிரியின் இருகரைகளிலும் உள்ள சோலைகளில் தங்கியிருந்தபோது பொலிவுடையதாகத் தோன்றிய அச்சோலைகள், அவ்விழாவின் முடிவில் அனைவரும் அரங்கத்தைவிட்டுப் போனபின் பொலிவிழந்து தோன்றுவதுபோல், தலைமகன் பிரிவை எண்ணிய தலைமகளின் நெற்றியும் பொலிவிழந்து தோன்றுகிறது" என்கிறார். இன்றும் திருவரங்கத்தில் பங்குனி பிரம்மோத்ஸவம் நடைபெறுவது அனைவரும் அறிந்தது. அந்த உத்ஸவம் சங்க காலத்திலேயே நடந்துவந்தது என்று இப்பாடலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. திருமாலைப் பற்றிய நான்காவது பரிபாடலில், "நல்யாற்று நடுவும் கால்வழக்கு அறுநிலை குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்' (67 - 69) என்னும் பகுதி நல்யாற்று நடுவாகிற திருவரங்கமும், காலவழக்கை அறுத்து முக்தி அளிக்கும் குன்றமாகிற வேங்கடமும் திருமால் வெவ்வேறு பெயர்களுடன் எழுந்தருளியிருக்கும் இடங்கள் என்று பாடியிருப்பதிலிருந்து முற்கூறிய அகநானூற்றுப் பாடல்களில் வேங்கடத்திலும், திருவரங்கத்திலுமிருந்தது திருமால் கோவில்களே என்று தெளிவாகிறது. இதிலிருந்து சங்ககாலத்திலேயே மருதநிலத்திலும் திருமால் கோவில் கொண்டிருந்தான் என விளங்குகிறது. சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகளால் இவ்விஷயம் விரித்துரைக்கப்பட்டது. பதினைந்தாவது பரிபாடலில் திருமாலிருங்குன்றமாகிய குறிஞ்சிநிலத்திலும் திருமால் எழுந்தருளியிருந்தது விரிவாக வருணிக்கப்படுகிறது. பரிபாடல் திரட்டின் முதல்பாடலில் கூடல்மாநகரில் இருந்தையூர் என்னும் பகுதியில் திருமால் கோயில்கொண்டிருந்தது சிறப்பாக வருணிக்கப்படுகிறது. இதிலிருந்து மருதநிலத்திலும் சங்ககாலத்தில் திருமால்கோயில் உண்டென்று தெரிகிறது.

11. பதிற்றுப்பத்து என்னும் சேரவேந்தர்களைப் பற்றிய சங்க நூலில் நான்காம்பத்தின் தொடக்கத்தில்,

"வண்டு ஊது பொலிதார், திரு ஞெமர் அகலத்து
கண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்
அலங்கல், செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர
மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு"

[திருஞெமர் அகலம் - ஸ்ரீதேவி வாழும் மார்பு. திகிரி - சக்கரம். துழாஅய் அலங்கல் செல்வன் - துழாய் மாலையணிந்த உயபவிபூதி செல்வத்தையுடைய திருமால். கோடு - திருவிதாங்கோடு என்று வழங்கப்படும் திருவனந்தபுரம். ]

என்னும் பாடற்பகுதியில் குறிஞ்சிநிலமான திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலைப் பாடியிருப்பதிலிருந்து சங்ககாலத்தில் குறிஞ்சி நிலத்திலும் திருமால் கோயில்கொண்டிருந்தார் எனத் தெரிகிறது.

12. பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில்,

"நீடுகுலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்,
குறுங்கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடி ... ...
அருந்திறற் கடவுள் வாழ்த்தி"

என்னும் பகுதியில் மலையில் யானை படுத்திருப்பது போலே காஞ்சியில் (திருவெஃகாவில்) பாம்பணைப்பள்ளியில் திருமால் கிடக்குமழகு பாடப்படுகிறது. இதிலிருந்தும் சங்ககாலத்தில் மருதநிலத்தில் திருமால் கோயில்கொண்டு எழுந்தருளியிருந்தது காட்டப்படுகிறது.

Wednesday, June 30, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 2

3. "சிவனை வழிபடுகிறவர்கள் சைவர்கள். விஷ்ணுவை வழிபடுவோர் வைணவர். சக்தியை வழிபடுவோர் சாக்தர். இந்திரனை வழிபடுவோர் ஐந்திரேயர். குமரனை வழிபடுவோர் கௌமாரமதத்தவர்" என்று இப்பகுதியிலேயே பிறிதோர் இடத்தில் எழுதுகிறார் ம.பொ.சி. இக்கூற்றுகளில் உள்ள பெரியதொரு குழப்பத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இக்கூற்றின்படி பார்த்தால் திருமாலையும், முருகனையும் பாடியிருக்கும் கடுவன் இளவெயினனார் என்னும் சங்ககாலப் புலவர் வைஷ்ணவ மதத்தையும், கௌமார மதத்தையும் சேர்ந்தவர் என்று சொல்லவேண்டிவரும். மிகப் பிற்காலத்தில் (600 - வருடங்களுக்குள்) கற்பிக்கப்பட்டதாக நமது 'சங்கரரும் வைணவமும்' என்னும் நூலில் நிலைநாட்டப்பெற்ற ஷண்மதங்களின் கடவுளர் அறுவரையும் வழிபடுகிறவர்கள் சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், ஸௌரம் எனும் ஆறுமதங்களையும் சேர்ந்தவர்கள் என்னும் விசித்திரநிலை ஏற்படும். சங்ககாலத்தில் இந்திரன் வழிபாட்டையும், வருணன் வழிபாட்டையும், முருகன் வழிபாட்டையும், 'காடுகாள்' எனப்படும் கொற்றவை (சக்தி) வழிபாட்டையும், சிவன் வழிபாட்டையும், திருமால் வழிபாட்டையும் செய்துவந்தவர்கள் ஐந்திரேயம், வாருணம், கௌமாரம், சாக்தம், சைவம், வைஷ்ணவம் என்னும் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் என்று சொல்லவேண்டிய அதிவிசித்திரநிலை ஏற்படும். இன்றுள்ள இந்துக்கள் பலர் தங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக நாகூர் முதலான இஸ்லாமியத் தலங்களுக்கும், வேளாங்கண்ணி முதலான கிறித்துவத் தலங்களுக்கும் சென்று வழிபடுகிறார்கள். அந்த இந்துக்களை அவர்கள் தழுவிநிற்கும் சைவம் அல்லது வைஷ்ணவ மதத்தோடு, இஸ்லாமிய மதத்தையும், கிறித்துவமதத்தையும் தழுவி நிற்பவர்கள் என்று சொல்லவேண்டிய வேடிக்கையான நிலை ஏற்படும்.

4. இந்த அவத்தத்தைத் தவிர்க்கவேண்டுமானால் 'மதம்' என்னும் சொல்லுக்குச் சரியான பொருளைத் தெரிந்துகொள்ளவேண்டும். சைவம், வைணவம் முதலான மதங்கள் வேதசாத்திரங்களில் காணப்படும் கடவுளர்களில் ஒருவரைப் பரம்பொருளாகவும், மற்ற கடவுளரை அவருக்கு அடங்கியவர்களாகவும் கொள்ளும் மதங்களேயாம். இம்முறையில் காணும்போது சிவனைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் சைவம் என்றும், விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் வைஷ்ணவம் என்றும், சக்தியைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் சாக்தம் என்றும் கொள்வதே தக்கது. மதம் என்பதற்கு 'கொள்கை' என்று பொருளேயொழிய வழிபாடு என்று பொருளல்ல. இந்த சரியானப் பொருளைக்கொண்டால் முற்கூறிய விசித்திரமான (வேடிக்கையான) நிலைகள் ஏற்படமாட்டா. இந்த சரியான பொருளைக் கொண்டு பார்க்கும்போது விஷ்ணு ஒருவனையே பரம்பொருளாகக் கொண்டவர்களாகவே சங்ககாலத்தில் புலவர்கள் அனைவரும் இருந்தனர் என்று வெளிப்படையாகச் சங்கநூல்களில் காணக்கிடக்கிறது. அக்காலத்தில் வைஷ்ணவமதம் ஒன்றே வைதிக மதமாகச் சான்றோர்களால் கொள்ளப்பட்டது என்னும் நிலையையே இது காட்டுகிறது. இவ்விஷயத்தை நமது சங்ககாலத் தமிழர் சம்யத்தில் 27 - பக்கங்களில் விரிவாக நிலைநாட்டியுள்ளோம்.

5. (1) உலகைப் படைத்தளித்து அழிக்கும் பெருமை. (2) எல்லாம் அறியும் பெருமை. (3) எல்லாம் வல்லவனாய் இருக்கை. (4) எங்கும் வியாபித்திருக்கை. (5) தன்னை அண்டியவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமற்செய்து வீட்டுலகத்தை அளிக்கவல்லவனாயிருக்கை. (6) நற்குணங்கள் அனைத்திற்கும் கொள்கலமாகவும், தாழ்ந்த தன்மைகள் எதுவுமே இல்லாதவனாகவும் இருக்கை. (7) எவராலும் அளவிட்டு அறியமுடியாதவனாயிருக்கை. (8) மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவனாயிருக்கை. (9) உயிர்களுக்கெல்லாம் இயற்கை உறவினனாயிருக்கை. (10) முற்கூறிய ஒன்பது பெருமைகளும் இவனுக்கே உள்ளதாக வேதத்தால் சொல்லப்படுகிறவனாயிருக்கை - என்னும் பரம்பொருளுக்கேயுள்ள பத்து தனித் தன்மைகள் திருமால் ஒருவனுக்கே பரிபாடல் முதலான சங்கநூல்களில் சங்ககாலச் சான்றோர்களால் முழங்கப்பட்டுள்ளன என்றும், சிவன், கொற்றவை, முருகன், இந்திரன், வருணன் முதலான எந்த தெய்வத்திற்கும் இத்தன்மைகள் உள்ளதாகக் கூறப்படவில்லையென்றும் முற்கூறிய நூலில் பற்பல ஆதாரங்களைக் காட்டி நிரூபித்திருக்கிறோம். ஓராதாரமும் காட்டாமல் "சங்ககாலத்தில் இந்த இருவேறு தெய்வங்களையும் மனவேறுபாடின்றி தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது" என்றும், "பரிபாடலில் வரும் திருமாலைப் பற்றிய பாடல்கள் அனைத்தும் பக்திப்பாடல்களே" என்றும் திரு. ம. பொ. சில். எழுதுவது நேர்மையாகுமா என நடுநிலைநிற்போர் சிந்திக்கட்டும்.

6. திருமாலைப் பற்றிய பரிபாடல்கள் வெறும் பக்திப்பாடல்கள் அல்ல. "அக்காலத்தில் சான்றோர்கள் அனைவரும் திருமால் ஒருவனையே முற்கூறிய பத்து பெருமைகளையுமுடைய பரம்பொருளாகக் கொண்டிருந்தார்கள்; வேறு எந்த தெய்வத்தையும் அப்படிக் கொள்ளவில்லை" என்பதை நிலைநாட்டித்தரும் 'கொள்கை விளக்கப் பாடல்'களும் ஆகும் அவை என்பதை நாம் ஏராளமான சான்றுகளைக் காட்டி நமது நூலில் நிர்ணயித்து இவர் கையிலும் கொடுத்திருக்க, அதைக் காணாததுபோல் இப்படி எழுதுவது எந்த நியாயத்தில் சேர்ந்தது என்பதை நடுநிலையாளர்கள் நிர்ணயிப்பார்களாக. அந்நூலை இவர் தவறவிட்டிருக்கலாமாகையால் இவருக்கு மறுபடியும் அந்நூலில் ஒரு பிரதி அனுப்புகிறோம். நேர்மையிருந்தால் அந்நூலை இசைவதோ அல்லது ஆதாரங்காட்டி மறுப்பதோ செய்ய வேண்டும்.

7. தமது கட்டுரைத் தொடரின் முதல்பகுதியில் தொல்காப்பியத்தில் திருமாலானவர் முல்லைநிலத்து மக்களின் தெய்வமாக வருணிக்கப்படுகிறார் என்றும், அவ்வண்ணமே முருகன் முதலான தெய்வங்கள் குறிஞ்சி முதலான நிலத்து மக்களின் தெய்வங்களாக வருணிக்கப்படுகிறார்கள் என்றும் கூறுவதன்மூலம் திருமாலை ஒரு நிலத்துக்குரியவரேயொழிய, எல்லா நிலத்துக்குமுரிய பரம்பொருளாகச் சங்ககாலத்தில் கொள்ளப்படவில்லை என்று படிப்பவர்களின் மனத்தில் குழப்பத்தை விளைக்க முயலுகின்றார் ம. பொ. சி. இக்குழப்பத்தை ஆதாரத்தோடு நீக்குகின்றோம் இனி.