Sunday, March 20, 2011

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் கட்டுரை

நாராயணனே ராமன்: பரமபத நாதனாகிய நாராயணனே இராமனாக அவதரித்தான் என்ற செய்தியைக் கம்பநாடன் காவியத்தில் பல இடங்களில் பெற வைக்கின்றான். இராமனது அவதாரத்தைக் கூறும் கவிஞன்


"ஒருபகல் உலகெலாம் உதரத் துட்பொதிந்(து)
அருமறைக்கு உணர்வரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை" (பால-திருவ 2 - 10 - 3)

என்று கூறுவன். பிரளயகாலத்தில் எல்லாவுலகங்களையும் தன் திருவயிற்றில் மறைத்து வைப்பவன் நாராயணன்; உலகம் உண்ட பெருவாயன்; [திருவாய் 6 - 10 - 1] பாலனாய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலையில் அன்னவசம் செய்யும் அண்ணல் அவன் [திருவாய் 4 - 2 - 1] நான்மறைகளாலும் உணர முடியாத அவனை, அந்த அஞ்சனக் கருமுகிலை, கோசலை மகனாகப் பெற்றாள். இதனையே பிறிதோரிடத்தில்,

"எழுதரிய திருமேனிக் கருங்கடலைச்
செங்கனிவாய்க் கவுசலையென் பாள்பயந்தாள்" [பால - குலமுறை 20]

என்று மேலும் வற்புறுத்துவன். இக்குழந்தைக்கு 'இராமன்' எனப் பெயரிடப் பெற்றது என்பதைக் கூறும் கவிஞன் இதனை வலியுறுத்துகிறான்.

"கராம்மலை யத்தளர் கைக்கரி எய்த்தே
அராவணை யில்துயில் வோயென அந்நாள்
விராவி அளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே
'இராமன்' எனப்பெயர் ஈந்தனன் அன்றே" [பால - திருவ 119]

[கராம் - முதலை; கைக்கரி - யானை; அராவணை - பாம்புப் படுக்கை]

முதலை வாயில் அகப்பட்ட களிறு 'ஆதிமூலமே' எனக்கூவ, அதனை முன்வந்து அளித்த திருமாலே இராமனாகப் பிறந்தான் என்பது ஈண்டு மீண்டும் வலியுறுத்தப் பெறுவதைக் காண்க. இதே கருத்து விராதன் வாய்மொழியாகவும்,

"கடுத்துநிமிர் கராம்கவ்வக் கையெடுத்து மெய்கலங்கி
உடுத்ததிசை அனைத்தினும்சென்(று) ஒளிகொள்ள உறுதுயரால்
அடுத்தபெருந் தனிமூலத்து அரும்பரமே பரமேஎன்று
எடுத்தொருவா ரணம் அழைப்ப நீயோவந் தேன் என்றாய்" [ஆரணி, விராதன் வதை 49]

[கராம் - முதலை]

என்று வந்துள்ளது. சனகன் மாளிகையில் இராமன் திருப்பள்ளி எழுதலைக் கூறவந்த கவிஞன்,

"கொல்லாழி நீத்தங்கோர் குனிவயிரச்
சிலைதடக்கைக் கொண்ட கொண்டல்" [பால - மிதிலை 154]
[ஆழி - சக்கரப்படை]

என்று கூறுவன். 'பாற்கடலில் துயிலும் பரந்தாமனே சக்கரப்படையை நீத்துவிட்டு, கோதண்டத்தைத் திருக்கையில் கொண்ட முகில்வண்ணன்' என்று கூறுவதனால் இக்கருத்து மேலும் அரண் செய்யப்பெறுவதைக் காண்க. இன்னும்,

"பஞ்சணை பாம்பணை யாகப் பள்ளிசேர்
அஞ்சன வண்ணனே இராமன்" [ஆரணி சடாயுவுயிர் நீத்த 142]

என்று சங்கரன் கொடுத்த வாளால் இராவணனால் சிறகொடிக்கப் பெற்ற சடாயு வாக்கில் வைத்துக் கூறப்பெற்றுள்ளதை எண்ணி உணர்க. திருமாலே இராமனாக அவதரித்துள்ளான் என்பதை,

"சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் வில்கரத்து இராமன அத் திருநெடுமாலே" [கிட்கிந் - நட்புகொள் 79]

என்று அநுமன் வாக்கிலும் வந்துள்ளமை காண்க.

இறைவன் பிறப்பில்லாதவன்; ஆனால் பல பிறப்புகளையுடையவன்.

"பிறப்பில் பல்பிறவிப் பெருமான்" [திருவாய் 2 - 9 - 5]

என்பது ஆழ்வார் வாக்கு. பிறப்பில்லாதவன் என்றது ஏனையோரைப் போல் வினை காரணமாகப் பிறக்கும் தன்மையில்லாதவன் என்றவாறு. பல பிறவிகளையுடையவன் என்றது அடியார்கள் பொருட்டாகப் பல பிறப்புகளை (அவதாரங்களை0 மேற்கொள்பவன் என்றபடி. இதுவே அவதார் இரகசியம். கம்ப நாடன் இதனை நான்முகன் வாக்காக.

"தோற்றம் என்பதொன்று உனக்கில்லை" [யுத்த - மீட்சி 107]

என்று கூறுவன். இராமனது பிறப்பினைக் கூறும் பகுதியில் இதனை விளக்கமாகக் காணலாம். பிறிதோர் இடத்தில் இராமனைக் குறிப்பிடுமிடத்து.

"மெய்யே பிறந்தேயும் பிறந்தி லாதான்" [யுத்த - நாகபாசப் 222]

என்று இக்கருத்தினை மேலும் வற்புறுத்துவன்.

நாராயணனே முதற்கடவுள்: நாராயணனே உலகின் முதற்கடவுள் என்பதைக் கம்ப நாடன் தன் காவியத்தில் பல இடங்களில் வற்புறுத்துகின்றான். சீதை தூயவள் என்று அங்கியங் கடவுள் மெய்ப்பித்த பிறகு தேவர்களின் வேண்டுகோட்கிணங்க நான்முகன் இராமனது உண்மைச் சொரூபத்தை விளக்குகின்றான்.

"மறைகளின் தலைகள் மன்பெ ரும்பர மார்த்தமென்(று)
உரைக்கின்ற மாற்றம் அன்ப நின்னையல் லாம்மற்றிங்(கு)
யாரையும் அறையா" [யுத்தமீட்சி 101]

[மறைகளின் தலைகள் - உபநிடதங்கள்]

என்ற பாசுரப் பகுதியில் உபநிடதங்கள் குறிப்பிடும் 'பரம்பொருள்' திருமாலைக் குறிக்குமேயன்றித் தன்னையோ, சிவனையோ அல்லது இந்திரனையோ குறிக்கவில்லை என்று உணர்த்துவதை அறிக. அடுத்து, சிவபெருமான்,

'முன்னை ஆதியாம் மூர்த்திநீ மூவகை உலகின்
அன்னை சீதையாம் மாதுநின் மார்பின்வந் தமைந்தா:" [யுத்தமீட்சி 113]

என்பதால் திருமாலே முதற்கடவுள் என்றும், சீதையே உலக அன்னையென்றும் உறுதி செய்வன். இப்பகுதியில் வரும் பாசுரங்கள் யாவும் இக்கருத்தையே பலபடியாக வற்புறுத்துகின்றன. நிகும்பலையைக் குலைத்தபின் இலக்குவனுக்கும் இந்திரசித்துக்கும் நடந்த போரில் பின்னவன் விட்ட நான்முகன் படையை அப்படையாலேயே அழித்து அதன் வேகத்தைத் தணித்தனன். அப்போது அதனைக் கண்டு வியந்த தேவர்களிடன் சிவபெருமான் கூறிய,

"நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கெல்லாம்
வேராய்முழு முதற்காரணப் பொருளாய்" [யுத்த - நிகும்பலை 141]

என்ற வாக்கிலும் இதனைக் காணலாம். சேதுவை அமைக்க வருணனை வழி வேண்டியபோது, வருணன் வரத் தாமதித்ததனால், இராமன் சினங்கொள்கின்றான். இதனைக் கவிஞன்,

"உற்றொடு தனியே தானே தன்கணே
உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கான்" [யுத்த வருணனை வழி 63]

என்று குறிப்பிடும் இடத்தில் 'இராமனே பரம்பொருள்' என்று தற்கூற்றாகக் கூறுவதைக் காண்க. அடுத்து வருணன் வாயில் வைத்து, "நவையறும் உலகிற் கெல்லாம் நாயக நீயே" [யுத்த வருணனை வழி 67]

என்றும்,

"எள்ளலா காதமூலத்(து) யாதுக்கும்
முதலாய் உள்ள வள்ளலே" [யுத்த வருணனை வழி 71]

என்றும் பின்னும் வற்புறுத்துவன். அங்கதனுக்கு அறவுரை கூறும் வாலியின் கூற்றாக வந்துள்ள,

"மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக்
கால்தரை தோய நின்று கட்புலக் குற்றதம்மா" [கிட்கிந் - வாலிவதை 148]

என்ற பாடற் பகுதியும்,

"மும்மையாம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
தூதாய்ச் செம்மையால் உயிர்தந் தாய்க்கு" [சுந்தர - உருக்காட்டு 71]

என்று சீதை அநுமனைக் குறிப்பிடும் பாடற் பகுதியும் திருமாலே முழு முதற்கடவுள் என்பதனைப் பின்னும் அரண் செய்கின்றன. இதனையே,

"மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்" [சுந்தர - பிணிவீட்டு 80]

என்று அநுமன் வாய்மொழியாகவும்,

"மூவர்க்கும் தலைவ ரான மூர்த்தியார் அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடங் காட்டி" [யுத்த - கும்பகருணன் வதை 150]

என்று கும்பகருணன் வாய்மொழியாகவும் கவிஞன் பேசுவன். ஞான ஒளி தட்டுப்பட்ட கவந்தனும்,

"மூலமே இல்லா முதல்வனே நீஎடுத்த
கோலமே யார்க்கும் தெரிவரிய கொள்கைத்தால்
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக்கிடந்த
பாலனோ? ஆதிப் பரமனோ? பகராயே" [ஆரணி - கவந்த 44]

என்று இராமன் முதற் பொருள் என்று கூறுவதைக் காண்க. மேலும், விராதன் வாய்மொழியாக,

"மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ? உனக்கென்ன குறையுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்றளித்த
ஐயத்தால் சிறிதுஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா" [ஆரணி - விராதன் வதை 59]

[மெய் - நீயே பரதத்துவம் என்னும் உண்மை; மழுவாளி - பரமசிவன்; ஐயம் - பிச்சை, சந்தேகம்.]

என்று பின்னும் கூறுவன். இக்கருத்து நம்மாழ்வாரின்

"பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே; கபாலநல் மோக்கத்துக் கண்டுகொண்மின்" [திருவாய் 4 - 10 - 4]

என்ற பாசுரப் பகுதியின் கருத்துடன் இயைந்திருத்தல் கண்டு மகிழத்தக்கது. மேலும், கம்பநாடன் திருமால் அன்னமாய் இருந்து அருமறைகள் உரைத்ததைக் குறிப்பிடும் ஆழ்வார்களின் பாசுரங்களை [பெரியதிரு 11 - 4 - 8] நினைந்து,

"அன்னமாய் அருமறைகள் அறைந்தாய்நீ அவையுன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ?" [ஆரணி-விராதன் வதை 60]

என்று விராதன் வாய்மொழியாகப் பேசுவன். இதில் நாராயணனே ஊழிக்குப் பிறகும் நிலைபெற்று நிற்பவன் என்ற கருத்து வற்புறுத்தப் பெற்றுள்ளமை காண்க. மேகநாதன் ஏவிய நான்முகன் கணையால் இலக்குவன் அறிவொடுங்கி அயர்ந்தபோது தம்பி இறந்தான் என்று புலம்புகின்றான் இராமன். பின் அறிவு சோர்ந்து துயருறுகின்றான். அப்போது வந்த தேவர்கள், "முன்பு பின்பு நடு இல்லாய்!" [யுத்த - பிரமாத்திரப் 227] என்று விளித்துப் பேசுவதிலும் இதைக் காணலாம். நிகும்பலையைக் குலைக்கும்போது மேகநாதன் தன்னை இகழ்ந்து பேசியபோது, மறுமாற்றம் உரைக்கும் வீடணனின் பேச்சில்,

"மூவகை உலகம் ஏத்தும் முதல்வன்;
எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன்" [யுத்த நிகும்பலை யாகப் 175]

என்று குறிப்பிடும் பகுதியிலும் இக்கருத்து மிளிர்வதைக் காணலாம். கவிஞனே பிறிதோர் இடத்தில்,

"மூவ ராய்முத லாகி மூலம தாகி ஞாலமும் ஆகியத்
தேவ தேவர் பிடித்த போர்வில் ஒடிந்த சேவகர்" [அயோத். கைகேசி சூழ்வினை 62]

[தேவ தேவர் - சிவன்; சேவகர் - இராமன்]

என்று இக்கருத்தை மேலும் வற்புறுத்துவன். இராமன் கோலம் புனைதலைக் கூறும் இடத்தில் இராமனைக் கவிஞன்,

"முப்பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை" [பால. கடிமணப் 69]

என்று குறிப்பிடுவன். முடிசூடப் போகும் இராமனின் திருமேனியைக் (திவ்வியமங்கள விக்கிரகத்தைக்) கண்டு ஊரார் வாய்மொழியாக,

"காலம் ஆகணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம்முனிவன் என்பார்" [அயோத். கைகேயி சூழ்வினை 91]

என்றும் அவனது 'ஆதி அம் சோதி உருவைச்' சுட்டிக் காட்டுவன்.

Saturday, March 5, 2011

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: III கம்பனின் சமயம்

25. திரு. ம. பொ. சியின் கட்டுரையின் முக்கிய நோக்கம் "கம்பன் சமரச சைவனே" என நிரூபிப்பதேயாகும். இனி ம.பொ.சி. இவ்விஷயத்தை நிலைநிறுத்தக் கூறும் வாதங்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

26. கம்பராமாயணத்தைப் பரப்பிவந்தவர்களும், அதற்கு நாத்திகர்களால் எதிர்ப்பு வந்தபோது அதை எதிர்த்துக் காத்தவர்களும் சைவர்களேயாகையால், கம்பன் சைவனாகவே இருக்கவேண்டும் என்பது ம.பொ.சியின் வாதங்களில் ஒன்று. "விஷ்ணு கோயில்களில் வழிபடுபவர்கள் சைவர்களே மிகுதியாயிருப்பதால், அவ்வாலயங்களிலிருப்பவன் சிவனே" என்னும் வாதம் போன்றது இது. உலகக் காப்பியங்களில் இராமனையொத்த கதாநாயகன் எவரும் எங்குமில்லையாகையால், எல்லா மதத்தவர்களும் இராமனிடம் ஈடுபடுகிறார்கள். "யாமறிந்த புலவரிலே
கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை" என்று பாரதி பாடியதுபோல் கம்பன் மஹாகவிகளில் தலைசிறந்தவனாகையால் அவனிடமும், அவனது பெருங்காவியத்திலும் எல்லா மதத்தவர்களும் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் சைவர்கள் மிகுதியாகையால், கம்பனிடம் ஈடுபட்டுக் கம்பராமாயணத்தில் போதுபோக்குகிறவர்களிலும் சைவர்கள் மிகுதியாகவுள்ளனர். ச்ரி. உ.வே. வை.மு. கோபால கிருஷ்ணமாசாரியர் கம்பராமாயணத்திற்கு எழுதிய உரையே அனைவராலும் உச்சிமேல்வைத்து மெச்சப்படுகின்றது என்பதையும், வைணவர்களிலும் பல புலவர்பெருமக்கள் கம்பராமாயணத்தில் ஈடுபட்டனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. ம.பொ.சி. தம் வாதத்தை வள்ளுவர் இளங்கோ விஷயத்திலும் செய்யலாம். சிலம்புச்செல்வரெனப் புகழ்பெற்ற ம.பொ.சிவஞானகிராமணியாரைப் போன்ற (சமரச) சைவர்களே சிலப்பதிகாரத்தில் ஈடுபடுவதால், இளங்கோவடிகள் சைவரே என ம.பொ.சி. கூறுவாரோ? "அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்று அகாரத்தால் சொல்லப்படும் பகவானே ஜகத்காரணன் என்று திருக்குறள் கடவுள்வாழ்த்தின் முதற்பாடலிலும், "ஈரடியால் உலகளந்தவன்" என்று பொருட்பாலிலும், "தாமரைக்கண்ணானின் உலகே வீட்டுலகம்" எனக் காமத்துப்பாலிலும் திருமால் ஒருவனே பரம்பொருள் என உணர்த்தியிருப்பவரும், திருமாலின் தேவியான திருமகளைச் சிறப்பித்துப் பாடியிருப்பவரும், சிவனையோ, முருகனையோ, காளியையோ எங்கும் தொடாதவருமான வள்ளுவரைச் சைவர்களே மிகுதியாக ஆதரித்து நாயனாராக்கிவிட்டதால் திருவள்ளுவர் சைவரே என ம.பொ.சி. கூறமுற்படுவாரா? முற்பட்டாலும் நடுநிலைநிற்கும் நல்லோர்கள் இவற்றை ஏற்பரோ?

27. "நாடவிட்ட படலத்தில் திருவரங்கத்தையும், திருவேங்கடத்தையும் பாடிய கம்பன் அவற்றில் திருமால் கோயில் இருப்பதாகப் பாடாமையால் கம்பன் வைணவனல்லன்" என்று வாதம் செய்கிறார் ம.பொ.சி.; ராமாயணத்தை ஆழ்ந்து படிக்காததால் விளைந்தது இவ்வாதம். ச்ரிராமபட்டாபிஷேகத்திற்குப் பின்பே, ச்ரிராமபிரானிடமிருந்து விபீஷணனால் பெறப்பெற்ற ச்ரிரங்கநாதன் இரண்டாற்றுகிடையிலான திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பெற்றான் என்பது வரலாறு. "அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்" என்னும் பாடலில் இவ்வரலாற்றைக் கம்பனும் உணர்த்தியிருக்கிறான். அக்காலத்தில் ச்ரிரங்கநாதன் இங்கு எழுந்தருளாமலிருக்க, அவனைப்பற்றி பட்டாபிஷேகத்திற்குமுன் கம்பன் பாடுவானா? பாடியிருந்தால் (திரு. ம.பொ.சியைப்போல்) அசட்டுப்பட்டம் கட்டிக்கொண்டிருப்பானே! திருவேங்கடத்திலும் ச்ரிராமாவதாரகாலத்திற்குப் பிறகு பிருகு மஹரிஷியின் காலத்தில் எம்பெருமான் எழுந்தருளினான் என்பது ச்ரிவேங்கடாசல வரலாறு. ஆகையால், திருவேங்கடத்திலும் நாடவிட்ட படலத்தில் திருமால் எழுந்தருளியிருந்ததாகக் கம்பன் பாடவில்லை. இவ்வரலாற்று உண்மைகளை உணராமல், இவ்வாதங்களைக் கொண்டு திரு. ம.பொ.சி. கம்பனை சைவனாக்கமுயல்வது விதண்டாவாதமல்லாது வேறில்லை. ம.பொ.சியின் மற்ற வாதங்களும் நிலைநிற்க மாட்டாதவையே என நிரூபிப்போம் இனி.

28. சிலம்புச்செல்வரான ம.பொ.சி. சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து கற்றவர். தம் வாழ்நாள் முழுவதும் அதிலேயே செலவழித்தவர். அதனாலேயே அவர் கம்பராமாயணம் முதலான மற்ற தமிழ் நூல்களில் ஆழ்ந்த புலமை இல்லாதவரானாரென்பது, அவருடைய கட்டுரையிலிருந்தே விளங்குகிறது. சங்கநூல்களில் அவரது புலமை மேம்போக்கானதே என்பதை இந்நூலின் தொடக்கத்திலே விரிவாக நிரூபித்தோம். கம்பனின் சமயத்தைப்பற்றிய இக்கட்டுரைத் தொடரில் கம்பன் மும்மூர்த்திகளுக்குள்ளே திருமாலையே முதல்வனாகக் காட்டும் - நூற்றுக்கணக்கான பாடல்களைத் தொடாமலே விட்டுள்ளார். கம்பராமாயணத்தின் தொடக்கத்தில் உள்ள "உலகம் யாவையும்" என்னும் கடவுள் வாழ்த்துப்பாடலை எடுத்துக்கொண்டு 'இதில் திருமாலுக்கே உரிய அடையாளங்கள் எதையும் கம்பன் காட்டவில்லை" என்று கூறும் ம.பொ.சி. அதை ஒட்டியுள்ள இரண்டு பாடல்களில், உலகனைத்தையும் ஆக்கி அளித்து அழிப்பவனாக முதற்பாடலில் தம்மால் கூறப்பெற்ற முழுமுதல்வன் திருமாலே என்பதைத் தெளிவாகக் காட்டியிருப்பதைத் தொடாமலே சென்று விடுகிறார். இப்பாடல்களின் பொருளையே இவர் அறியவில்லையோ என்று நாம் ஐயுறுமாறு, 'முதல்பாடல் சிவனைப்பற்றியதே' என்று ம.பொ.சி. ஆதாரமில்லாமல் சாதிக்கிறார். இவ்விருபாடல்களை அடுத்த பாராவில் விரிவாக விளக்குவோம். 'இரணியன் வதைப்படலம் கம்பன் செய்ததல்ல' 'திருவேங்கடமலையில் உள்ள திருமாலைப் பாடாததேன்' முதலான தலைப்புக்களில் பல பக்கங்களை வீணாக்கியிருக்கும் ம.பொ.சி. திருமாலை மும்மூர்த்திகளுக்குள் முதல்வன் என்று கம்பன் கூறும் நூற்றுக்கணக்கான பாடல்களைக் கண்டு கொள்ளாமலே செல்கின்றார். இரணியன் வதைப்படலத்தில் "சாணிலும் உளன்" என்னும் பாடலை மேற்கோளாகக் காட்டும் போது அதிலுள்ள உயிரான தொடரான 'நீ சொன்ன சொல்லிலும் உளன்' என்னும் பகுதியை 'நான் சொன்ன சொல்லிலும் உளன்' என்று எடுக்கிறார். இப்பாடலில், " 'இறைவனான திருமால் இல்லை' என்று நீ சொன்ன சொல்லிலும் அத்திருமால் இருக்கிறான்" என்னும் பொருள் உடைய 'நீ சொன்ன சொல்லிலும் உளன்' என்னும் தொடரிலேயே பெருஞ்சுவை உள்ளது. 'நான் சொன்ன சொல்லிலும் உளன்' என்று ம.பொ.சி. இதை மாற்றுவது சுவைக்கேடாகவே உள்ளது. இவற்றிலிருந்து கம்பராமாயணத்தை ம.பொ.சி. ஆழ்ந்து கற்காமல் இக்கட்டுரைத் தொடரை எழுத முற்பட்டுவிட்டார் என விளங்குகிறது. காமகோடிப் பெரியபீடாதிபதியை 'நடமாடும் தெய்வம்' என்று புகழ்ந்து எழுதி, அவரது ஆராய்ச்சி இல்லாத கட்டுரைகளிலிருந்து மேற்கோள் காட்டுவதிலிருந்தும் - அவரிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு வைணவத்தை இழுவுபடுத்துவதற்காகவே அக்னிஹோத்ரம் ராமானுஜதாத்தாசாரியர் எழுதிய 'வரலாற்றில் பிறந்த வைணவம்' என்னும் நூலிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டுவதிலிருந்தும், ஆத்திகவேடம் பூண்ட நாத்திகரான அவரை 'பரம பாகவதர்' 'பரம வைஷ்ணவர்' என்று புகழ்வதிலிருந்தும் - திரு. ம.பொ.சி. வைணவத்திற்குத் தீங்கு இழைப்பதையே தமது வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்ட காமகோடிப் பெரியவரின் தூண்டுதலினாலேயே அவசரக்கோலமாக இக்கட்டுரைத் தொடரை எழுதியிருக்கிறார் என்று தெளிவாக விளங்குகிறது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே - 'விஷ்ணுவுக்குத் தமோகுணமுண்டு' என்று பேசி, அதைப் பத்திரிகைகள் அனைத்திலும் வெளியிடச் செய்து, தமது விஷ்ணுத்வேஷத்தைப் பறைசாற்றிக்கொண்டவர் காமகோடிப் பெரியவர். அவரது அக்கூற்றை 'ஸாத்விக விஜய ஸர்வஸ்வம்' என்னும் எமது நூலில் விரிவாக மறுத்திருக்கிறோம். அதை ம.பொ.சிக்கும் அனுப்பியிருக்கிறோம். அதை இன்றளவும் பீடாதிபதியாலும், அவரது சீடர்களாலும் மறுக்க இயலவில்லை. அதனால் கடுங்கோபங்கொண்ட பீடாதிபதி தமது கட்டுரைகளிலும், காமரசக் கதைகளை வெளியிட்டு மக்களைக்கெடுக்கும் 'கல்கி' 'விகடன்' 'இதயம்' முதலான பத்திரிகைகளில் தமது சீடர்களைக்கொண்டு எழுதுவிக்கும் தலபுராணக் கட்டுரைகளிலும், இலக்கியக் கட்டுரைகளிலும் ஏராளமான இடங்களில் விஷ்ணுவை இழித்துரைத்தும், உரைப்பித்தும், வைஷ்ணவத்தைத் திரித்துரைத்தும், உரைப்பித்தும், பொய்களைப் பரவச்செய்துவருகிறார். இப்பொய்கள் அனைத்தையும் இதுகாறும் ஏழு சதகங்கள் (700 கேள்வி பதில்கள்) வெளிவந்துள்ள நமது ஸுதர்சனர் பதில்களில் நடுநிலையாளர்கள் தலைகுலுக்கி வரவேற்கும்படி மறுத்து, உண்மையை நிலைநாட்டியிருக்கிறோம். 'காமகோடிப் பெரியவர் மிகக்கொடிய விஷ்ணு த்வேஷி' என்பதை ஜீரணித்துக்கொள்வதற்கு ம.பொ.சியின் மனம் இடம் கொடுக்குமானால், இந்த ஸுதர்சனர் பதில்களையும் அவருக்கு அனுப்பச் சித்தமாயிருக்கிறோம். காமகோடிப் பெரியவரின் கைக்கூலியான தாத்தாசாரியர் இயற்றிய 'வரலாற்றில் பிறந்த வைணவம்' என்னும் நூலிலுள்ள வாதங்களை வைணவ உலகத்திலுள்ள சான்றோர்கள் அனைவரும் கண்டித்துச் சிதறவடித்திருக்கும் கட்டுரைகளைத் தாங்கிய 'அக்னிஹோத்ரியும் வைணவமும்' எனும் நம் வெளியீட்டையும் ம.பொ.சிக்கு அனுப்பியிருக்கிறோம். இந்நூல்களைக் கொண்டு காமகோடிப் பெரியவருடையவும், அவரது கைக்கூலியுடையவும் கட்டுரைகள் நிலைநிற்கமாட்டாத புன்சொற்களே என்பதை ம.பொ.சி. எளிதில் உணரலாம். இதை உணரும் நடுநிலைமை அவருக்கு ஏற்படவேண்டும் என்று நாம் பரம்பொருளைப் பிரார்த்திக்கிறோம். இப்படிக் கம்பராமாயணத்தில் ஆராய்ச்சியில்லாமல், காமகோடிப் பெரியவரின் தூண்டுதலினால் கட்டுரைத் தொடரை எழுத முற்பட்ட ம.பொ.சி. காமகோடிப் பெரியவரைப் பின்சென்று ஒளவையார் இயற்றிய ஆத்தி சூடியில் 'அரனைமறவேல்' என்றுள்ளதாக எழுதியதின் மூலம் தாம் ஆத்தி சூடியைக்கூட ஆழ்ந்து கற்கவில்லை என்று புலப்படுத்திக் கொள்கிறார் அந்தோ! இப்போதாவது ஆத்திசூடியை எடுத்துப் பார்த்தாரானால், இடையின 'ர'கரத்திற்கும், 'ல'கரத்திற்கும், 'வ'கரத்திற்கும், 'ழ'கரத்திற்கும், 'ள'கரத்திற்கும் உரிய நீதி மொழிகளுக்குப் பிறகு வரும் 'அறனை மறவேல்' என்னும் நீதி மொழியை 'அரனை மறவேல்' என்று காமகோடி பீடாதிபதி மாற்றியது தமிழறிவின்மையால் ஆயது என்பதை உணர்ந்து, காமகோடிப் பீடாதிபதியைப் போல் இன்னமும் பிடிவாதம் பிடிக்காமல் நேர்மையுடன் தவறை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த நேர்மை அவருக்கு ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் ஆத்திசூடியைக் கூட ம.பொ.சி. ஆழ்ந்து கற்கவில்லை என்னும் உண்மை வெள்ளிடைமலையாக விளங்கும். காமகோடிப் பெரியவரைப் பின்சென்று ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு அவப்பொருளுரைக்குமிடங்களும் இத்தகையவையே என்பது நமது நூல்களைப் படித்தவர்களுக்கு நன்கு விளங்கும். "சிறியார் சிவப்பட்டார்" [நான் - திருவ 6] என்னும் பாசுரத்தை "செத்தார் சிவப்பட்டார்" என ம.பொ.சி. மேற்கோள் காட்டுகிறார். இது திவ்யப்ரபந்தத்திலும் இவர் நுனிப்புல் மேய்ந்தவரே எனக் காட்டித் தருகிறது. ஆக, சிலம்புச் செல்வரான ம.பொ.சிக்கு மற்ற தமிழ் நூல்களில், குறிப்பாகக் கம்பராமாயணத்தில், ஆழ்ந்த புலமை இல்லாமையாலேயே இக்கட்டுரைத் தொடர் எழுந்துள்ளது என்று நடுநிலையாளர்க்கு நன்கு விளங்கும். இந்நூலின் எஞ்சிய பகுதிகளில் நடுநிலையாளர் அனைவரும் ஏற்கும்படி இதை நிலைநாட்டுவோம்.

29. "உலகம் யாவையும்" என்னும் முதல்பாடலில் "யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத்ப்ரயந்த்யபி, ஸம்விசந்தி தத்3 விஜிஜ்ஞாஸஸ்வ தத்3 ப்3ரஹ்மேதி" [எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் (ஸ்ருஷ்டிகாலத்தில்) தோன்றுகின்றனவோ, எதனால் தோன்றியவை உயிர் வாழ்கின்றனவோ, (ப்ரளய காலத்தில்) எதனிடம் சென்றடைகின்றனவோ அதை ப்ரஹ்மமென்றறிவாயாக] என்னும் உபநிஷத்தைப் பின்பற்றி ஜகத் காரணப்பொருளை சரணம் பற்றினான். இந்த ஜகத்காரணப்பொருள் எது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக,
"சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை
எற்(கு) உணர்த்தரிது எண்ணிய மூன்றனுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடலாடுதல் நன்றரோ"
[புல்லறிவாளர்களால் அறியமுடியாத பரம்பொருள் நிலையை என்னால் உரைக்க இயலாது; ஸத்வம், ரஜஸ், தமம் என்று மூன்றாக எண்ணப்படும் குணங்களுள் முதலாவதான ஸத்வகுணத்தை உடைய திருமாலே (முறையே) ரஜோகுணத்தையும், தமோகுணத்தையும் உடைய பிரமனையும், சிவனையுங்காட்டிலும் முதல்வர். அவரது கல்யாணகுணக்கடலில் குடைந்தாடுவதே நன்று ] என்னும் பாடலை அமைத்திருக்கிறான் கல்வியிற்பெரிய கம்பன். ஸத்வகுணத்தையுடையவர் திருமாலே என்பதும், பிரமன் ரஜோகுணத்தையுடையவன் என்பதும், சிவன் தமோகுணத்தையுடையவன் என்பதும் ஸகல சாஸ்திரங்களிலும் பிரசித்தம். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் காமகோடிப் பீடாதிபதி "திருமாலுக்கும் தமோகுணம் உண்டு" என்று ஆதாரமில்லாமல் கூறியபோது, ஸாத்விக விஜய ஸர்வஸ்வத்தில் பீடாதிபதி வாய்திறக்கமுடியாதபடி நூற்றுக்கணக்கான வேத சாத்திர ஆதாரங்களைக்காட்டி "திருமால் ஒருவரே சுத்த சத்துவகுணமுடையவர்" என நிலைநாட்டியிருக்கிறோம். இன்றளவும் பீடாதிபதியால் இதை மறுக்க இயலவில்லை. ம.பொ.சி. இவ்விஷயம் ஏதுமறியாமல் "கம்பன் சைவனே" என எழுதுவது நடுநிலையாளர்களால் விலவறச் சிரிக்கத்தக்கது. கம்பன் இத்துடன் நில்லாமல், அடுத்த பாடலில் "ஆதி அந்தம் அரி என யாவையும் ஓதினார் அலகில்லன உள்ளன வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் பாதமல்லது பற்றிலர் பற்றிலார்" [முதலிலும் முடிவிலும் "ஹரி: ஓம்" என்று ஓதும் அளவற்ற வேதங்களை ஓதிய பற்றற்றவர்கள் உண்மை நெறியாகவும், அடையத்தக்கவனாகவுமுள்ள அந்த ஹரியின் பாதங்களைத் தவிர வேறு எதையும் பற்றமாட்டார்கள்] என்று இந்த முழுமுதல்வன் ஹரியே என நிலைநாட்டினார். வேதங்களைத் தொடங்கும்போதும், முடிக்கும்போதும் வைதிகர்கள் "ஹரி: ஓம்" என்று ஓதுகிறார்களேயொழிய "ஹர: ஓம்" என்று ஓதுவதில்லை. முதற்பாடலில் 'அன்னவர்க்கே' என்னும் ஏகாரத்தாலும், இரண்டாம் பாடலில் 'முற்குணத்தவரே முதலோர்' என்னும் ஏகாரத்தாலும், மூன்றாம் பாடலில் 'பாதமல்லது பற்றிலர்' என்னும் எதிர்மறையாலும் திருமால் ஒருவனைத் தவிர மற்றை இரு மூர்த்திகளையும் ஞானிகள் பற்றமாட்டார்கள். தானும் பற்றவில்லை எனக் கம்பன் தெளிவாகக் காட்டுகிறான். அவன் குறிப்பிடும் பரம்பொருள் திருமாலே எனத் தெளிவாக எடுத்துக்காட்டும் இரு பாடல்களைத் தொடாமலே, 'முதற்பாடலில் கம்பன் சிவனையே கருதுகிறான்' என ம.பொ.சி. எழுதுவது அவருக்கு மனச்சாட்சி உண்டா என நம்மை ஐயமுறவைக்கிறது. நேர்மையிருந்தால் செங்கோலில் நமது இந்த பதில்களைச் சுருக்கமாகவாவது எடுத்து ம.பொ.சி. பதிலுரைக்கட்டும்.

30. பல வருடங்களுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பில் G. சுப்பிரமணியப்பிள்ளை என்பவர் திருவவதாரப்படலத்தில் பல பாடல்களை மாற்றிக் கம்பன் வைணவனல்லன் எனக் காட்ட முற்பட்டபோது, நாம் உடனே "கம்பனின் சமயம்" எனும் தலைப்பில் மறுப்பு வெளியிட்டோம். பல்கலைக் கழகத்தார் அதில் பல பிரதிகளை வாங்கிக் கம்பராமாயணப் புலவர்களிடம் அளித்தனர். எவராலும் இன்றளவும் அந்நூலுக்கு மறுப்பு எழுத இயலவில்லை. அந்நூலின் இரண்டாம் பாகமாக ம.பொ.சிக்கு மறுப்பான இந்நூலை எழுதுகிறோம். இதற்கு ம.பொ.சி. ஏதேனும் பதில் எழுதுகிறாரா என்று பார்த்துக்கொண்டு, எழுதினால் அதை மூன்றாம் பாகத்தில் விமர்சிப்போம். எழுதினாலும், எழுதாவிட்டாலும், "கம்பன் வைணவனே" என்பதைக் கம்பராமாயணத்திலிருந்து நூற்றுக்கணக்கான பாடல்களைக் காட்டி இனி எவரும் வாய்திறக்கமுடியாதபடி நிரூபிப்போம்.

31. கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமையில்லாமல் ஒரு சில பாடல்களையே மேற்கோளாகக் காட்டி, கம்பன் சைவனே என அடம்பிடிக்கும் ம.பொ.சியைப் போலல்லாமல், கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமை உள்ளவரும், பிறப்பால் சைவரும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற தமிழ்த்துறைத் தலைவருமான டாக்டர் ந.சுப்புரெட்டியார் அவர்கள் தமது "அறிவியல் தமிழ்" என்னும் நூலில் "கம்பன் கண்ட மெய்ப்பொருள்" என்னும் தலைப்பில் கம்பராமாயணப் பாடல்களில் பலவற்றை மேற்கோளாகக் காட்டி 'கம்பன் வைணவனே' என நிறுவியிருப்பதை இனி விரிவாகக் காட்டுகிறோம். இதைப் பார்த்தபின்பாவது ம.பொ.சியின் கண் திறக்கும் என நம்புகிறோம்.