Wednesday, June 30, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 2

3. "சிவனை வழிபடுகிறவர்கள் சைவர்கள். விஷ்ணுவை வழிபடுவோர் வைணவர். சக்தியை வழிபடுவோர் சாக்தர். இந்திரனை வழிபடுவோர் ஐந்திரேயர். குமரனை வழிபடுவோர் கௌமாரமதத்தவர்" என்று இப்பகுதியிலேயே பிறிதோர் இடத்தில் எழுதுகிறார் ம.பொ.சி. இக்கூற்றுகளில் உள்ள பெரியதொரு குழப்பத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இக்கூற்றின்படி பார்த்தால் திருமாலையும், முருகனையும் பாடியிருக்கும் கடுவன் இளவெயினனார் என்னும் சங்ககாலப் புலவர் வைஷ்ணவ மதத்தையும், கௌமார மதத்தையும் சேர்ந்தவர் என்று சொல்லவேண்டிவரும். மிகப் பிற்காலத்தில் (600 - வருடங்களுக்குள்) கற்பிக்கப்பட்டதாக நமது 'சங்கரரும் வைணவமும்' என்னும் நூலில் நிலைநாட்டப்பெற்ற ஷண்மதங்களின் கடவுளர் அறுவரையும் வழிபடுகிறவர்கள் சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், ஸௌரம் எனும் ஆறுமதங்களையும் சேர்ந்தவர்கள் என்னும் விசித்திரநிலை ஏற்படும். சங்ககாலத்தில் இந்திரன் வழிபாட்டையும், வருணன் வழிபாட்டையும், முருகன் வழிபாட்டையும், 'காடுகாள்' எனப்படும் கொற்றவை (சக்தி) வழிபாட்டையும், சிவன் வழிபாட்டையும், திருமால் வழிபாட்டையும் செய்துவந்தவர்கள் ஐந்திரேயம், வாருணம், கௌமாரம், சாக்தம், சைவம், வைஷ்ணவம் என்னும் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் என்று சொல்லவேண்டிய அதிவிசித்திரநிலை ஏற்படும். இன்றுள்ள இந்துக்கள் பலர் தங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக நாகூர் முதலான இஸ்லாமியத் தலங்களுக்கும், வேளாங்கண்ணி முதலான கிறித்துவத் தலங்களுக்கும் சென்று வழிபடுகிறார்கள். அந்த இந்துக்களை அவர்கள் தழுவிநிற்கும் சைவம் அல்லது வைஷ்ணவ மதத்தோடு, இஸ்லாமிய மதத்தையும், கிறித்துவமதத்தையும் தழுவி நிற்பவர்கள் என்று சொல்லவேண்டிய வேடிக்கையான நிலை ஏற்படும்.

4. இந்த அவத்தத்தைத் தவிர்க்கவேண்டுமானால் 'மதம்' என்னும் சொல்லுக்குச் சரியான பொருளைத் தெரிந்துகொள்ளவேண்டும். சைவம், வைணவம் முதலான மதங்கள் வேதசாத்திரங்களில் காணப்படும் கடவுளர்களில் ஒருவரைப் பரம்பொருளாகவும், மற்ற கடவுளரை அவருக்கு அடங்கியவர்களாகவும் கொள்ளும் மதங்களேயாம். இம்முறையில் காணும்போது சிவனைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் சைவம் என்றும், விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் வைஷ்ணவம் என்றும், சக்தியைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் சாக்தம் என்றும் கொள்வதே தக்கது. மதம் என்பதற்கு 'கொள்கை' என்று பொருளேயொழிய வழிபாடு என்று பொருளல்ல. இந்த சரியானப் பொருளைக்கொண்டால் முற்கூறிய விசித்திரமான (வேடிக்கையான) நிலைகள் ஏற்படமாட்டா. இந்த சரியான பொருளைக் கொண்டு பார்க்கும்போது விஷ்ணு ஒருவனையே பரம்பொருளாகக் கொண்டவர்களாகவே சங்ககாலத்தில் புலவர்கள் அனைவரும் இருந்தனர் என்று வெளிப்படையாகச் சங்கநூல்களில் காணக்கிடக்கிறது. அக்காலத்தில் வைஷ்ணவமதம் ஒன்றே வைதிக மதமாகச் சான்றோர்களால் கொள்ளப்பட்டது என்னும் நிலையையே இது காட்டுகிறது. இவ்விஷயத்தை நமது சங்ககாலத் தமிழர் சம்யத்தில் 27 - பக்கங்களில் விரிவாக நிலைநாட்டியுள்ளோம்.

5. (1) உலகைப் படைத்தளித்து அழிக்கும் பெருமை. (2) எல்லாம் அறியும் பெருமை. (3) எல்லாம் வல்லவனாய் இருக்கை. (4) எங்கும் வியாபித்திருக்கை. (5) தன்னை அண்டியவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமற்செய்து வீட்டுலகத்தை அளிக்கவல்லவனாயிருக்கை. (6) நற்குணங்கள் அனைத்திற்கும் கொள்கலமாகவும், தாழ்ந்த தன்மைகள் எதுவுமே இல்லாதவனாகவும் இருக்கை. (7) எவராலும் அளவிட்டு அறியமுடியாதவனாயிருக்கை. (8) மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவனாயிருக்கை. (9) உயிர்களுக்கெல்லாம் இயற்கை உறவினனாயிருக்கை. (10) முற்கூறிய ஒன்பது பெருமைகளும் இவனுக்கே உள்ளதாக வேதத்தால் சொல்லப்படுகிறவனாயிருக்கை - என்னும் பரம்பொருளுக்கேயுள்ள பத்து தனித் தன்மைகள் திருமால் ஒருவனுக்கே பரிபாடல் முதலான சங்கநூல்களில் சங்ககாலச் சான்றோர்களால் முழங்கப்பட்டுள்ளன என்றும், சிவன், கொற்றவை, முருகன், இந்திரன், வருணன் முதலான எந்த தெய்வத்திற்கும் இத்தன்மைகள் உள்ளதாகக் கூறப்படவில்லையென்றும் முற்கூறிய நூலில் பற்பல ஆதாரங்களைக் காட்டி நிரூபித்திருக்கிறோம். ஓராதாரமும் காட்டாமல் "சங்ககாலத்தில் இந்த இருவேறு தெய்வங்களையும் மனவேறுபாடின்றி தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது" என்றும், "பரிபாடலில் வரும் திருமாலைப் பற்றிய பாடல்கள் அனைத்தும் பக்திப்பாடல்களே" என்றும் திரு. ம. பொ. சில். எழுதுவது நேர்மையாகுமா என நடுநிலைநிற்போர் சிந்திக்கட்டும்.

6. திருமாலைப் பற்றிய பரிபாடல்கள் வெறும் பக்திப்பாடல்கள் அல்ல. "அக்காலத்தில் சான்றோர்கள் அனைவரும் திருமால் ஒருவனையே முற்கூறிய பத்து பெருமைகளையுமுடைய பரம்பொருளாகக் கொண்டிருந்தார்கள்; வேறு எந்த தெய்வத்தையும் அப்படிக் கொள்ளவில்லை" என்பதை நிலைநாட்டித்தரும் 'கொள்கை விளக்கப் பாடல்'களும் ஆகும் அவை என்பதை நாம் ஏராளமான சான்றுகளைக் காட்டி நமது நூலில் நிர்ணயித்து இவர் கையிலும் கொடுத்திருக்க, அதைக் காணாததுபோல் இப்படி எழுதுவது எந்த நியாயத்தில் சேர்ந்தது என்பதை நடுநிலையாளர்கள் நிர்ணயிப்பார்களாக. அந்நூலை இவர் தவறவிட்டிருக்கலாமாகையால் இவருக்கு மறுபடியும் அந்நூலில் ஒரு பிரதி அனுப்புகிறோம். நேர்மையிருந்தால் அந்நூலை இசைவதோ அல்லது ஆதாரங்காட்டி மறுப்பதோ செய்ய வேண்டும்.

7. தமது கட்டுரைத் தொடரின் முதல்பகுதியில் தொல்காப்பியத்தில் திருமாலானவர் முல்லைநிலத்து மக்களின் தெய்வமாக வருணிக்கப்படுகிறார் என்றும், அவ்வண்ணமே முருகன் முதலான தெய்வங்கள் குறிஞ்சி முதலான நிலத்து மக்களின் தெய்வங்களாக வருணிக்கப்படுகிறார்கள் என்றும் கூறுவதன்மூலம் திருமாலை ஒரு நிலத்துக்குரியவரேயொழிய, எல்லா நிலத்துக்குமுரிய பரம்பொருளாகச் சங்ககாலத்தில் கொள்ளப்படவில்லை என்று படிப்பவர்களின் மனத்தில் குழப்பத்தை விளைக்க முயலுகின்றார் ம. பொ. சி. இக்குழப்பத்தை ஆதாரத்தோடு நீக்குகின்றோம் இனி.

Tuesday, June 29, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 1

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்

[6 - 2 - 83 இதழ் முதல் வாரந்தோறும் 'செங்கோல்' என்னும் தமது பத்திரிகையில் திரு. ம.பொ.சி. என்று புகழ்பெற்ற தமிழரசுக் கழகத் தலைவரான ம. பொ. சிவஞானகிராமணி அவர்கள் "கம்பநாடர் சைவரா? வைணவரா?" என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு ஸுதர்சனம் ஆசிரியர் (ஸுதர்சனர்) (ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், வழக்கறிஞர், 3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17) எழுதிய மறுப்புரை]

I. சங்ககாலத்தில் சமயநிலை

1. சில வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் தொல்காப்பியர் அரங்கில் நமது "சங்ககாலத் தமிழர் சமயம்" என்னும் நூலை அங்கு வந்திருந்த தமிழ் அறிஞர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இலவசமாக வழங்கினோம். அந்நூலைப் பெற்றுக் கொண்டவர்களில் திரு. ம. பொ. சியும் ஒருவர். அதைப் பெற்றுக் கொண்ட பல தமிழ் அறிஞர்கள் "எவராலும் மறுக்கவொண்ணாதபடி 'சங்ககாலத்தில் வைணவமதம் ஒன்றே வேதமதமாகக் கொள்ளப்பட்டுவந்தது' என்னும் உண்மையை நிலைநாட்டுவது இந்நூல்" என்று பாராட்டிவருகின்றனர். மாற்றுக்கருத்துடையவர் எவரும் இன்றுவரை அந்நூலை மறுக்கத் துணியவில்லை.

2. திரு. ம.பொ.சி. அவர்கள் தாம் அந்நூலைப் படித்ததாகவே காட்டிக் கொள்ளாமல் அந்நூலில் நாம் நிலைநாட்டியிருக்கும் முக்கியமான உண்மைக்கு முரணாக இக்கட்டுரைத் தொடரின் 1, 6, 9 - வது பகுதிகளில் பின்வருமாறு எழுதுகிறார்:-

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகச் சொல்லப்படும் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலேயே திருமாலானவர் முல்லை நிலத்து மக்களின் வழிபடு தெய்வமாகச் சொல்லப்படுகிறார். 'மாயோன் மேய காடுறை உலகம்' என்பது தொல்காப்பியச்சூத்திரம். தொல்காப்பியத்திற்கு முன்னும் பின்னும் தோன்றிய இலக்கியங்களிலேயும் திருமாலானவர் 'காடும் காடு சேர்ந்த நிலமும்' என்று தொல்காப்பியத்தால் வரையறுத்துச் சொல்லப்படும் முல்லை நிலத்து மக்களின் தெய்வமாக வருணிக்கப்படுகிறார். சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயும் காடும் காடு சேர்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்திலே வாழும் மக்கள் திருமாலை வழிபடுவதை இளங்கோவடிகள் 'ஆய்ச்சியர் குரவையிலே' காட்சிபடுத்துகின்றார். (ம. பொ. சி. கட்டுரை முதல் பகுதி)

இத்துடனின்றி, முல்லை நிலத்திலிருந்து வேறுபட்ட மலையும் மலை சேர்ந்த நிலமும் எனப்படும் குறிஞ்சி நிலத்திலே வாழும் மக்களும் திருமாலை வழிபட்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. ஆம்; தமிழகத்தின் வடக்கெல்லையிலுள்ள வேங்கடமலையிலே திருமால் கோயில் கொண்டிருப்பதை வைணவப் பெரியவனான மாங்காட்டு மறையவனையே கொண்டு நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார், இளங்கோவடிகள். 'கடலும் கடல் சேர்ந்த நிலமும்' எனப்படும் நெய்தல் பிரதேசத்திலும் திருமால் கோயில் கொண்டிருப்பதை வஞ்சிக் காண்டத்திலே இளங்கோ கூறுகின்றார். "வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக்கிடந்த நெறியாகில்லை" என்று வயல் வளம் படைத்த நன்செய் மண்டலமான சோழமண்டலத்தை இளங்கோ வருணிக்கிறார். 'வயலும் வயல் சார்ந்த நிலமும்' எனப்படும் சோழ மண்டலத்திலுள்ள திருவரங்கத்திலேயும் திருமால் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார் என்று வைணவ அந்தணரான மாங்காட்டு மறையவனைக் கொண்டு இளங்கோவடிகள் நமக்கு அறிவிக்கின்றார். இதனால் சங்க காலத்திலே காடும் காடு சேர்ந்த இடமுமான நெய்தல் (முல்லை) நிலத்திலே வாழும் மக்களுக்கு மட்டும் உரிய தனித்தெய்வமான திருமாலானவர் தமிழகத்தில் நால்வகை நிலங்களிலேயும் வாழும் மக்களால் வழிபடும் பொதுத்தெய்வம் ஆகியிருந்தது புலப்படுகின்றது. ஆழ்வாராதியர்கள் தோன்றி, திருமால் வழிபாட்டை ஒருசமயத்தாருக்குரிய கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதற்கு முன்பிருந்த நிலை இது. (ம.பொ.சி. கட்டுரை முதல் பகுதி)

சமஸ்கிருத மொழிப் புலவர்கள் வேத காலம் என்கிறார்களே, அதை சங்ககாலம் என்கிறார்கள், தமிழ்ப் புலவர்கள். கிருத்துவுக்கு முற்பட்ட காலம் அது. அந்தக் காலத்திலே, சிவனை வழிபட்டு வந்தனர் தமிழர். ஆனால் 'சிவமதம்' என்னும் பொருளிலே "சைவம்" என்பதாக ஒரு மதம் நடைமுறையில் இருக்கவில்லை. அதுபோல விஷ்ணு என்று வடமொழிப் புலவர்கள் சொல்லும் தெய்வத்தையும் "திருமால்" "மாயோன்" என்னும் பெயர்களிலே சங்ககாலத் தமிழர் வழிபட்டு வந்தனர். இந்த இருவேறு தெய்வங்களையும் மன வேறுபாடின்றி தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. சங்க நூல்களான தொல்காப்பியம் என்னும் இலக்கணத்திலேயும், "பத்துப்பாட்டு" "எட்டுத்தொகை" எனப்படும் இலக்கியங்களிலேயும் திருமாலின் அவதாரங்கள் சொல்லப்படுகின்றன. ஆம்; அங்கு மிங்கும் குறிப்புகளாக. திருமாலின் அவதாரக் கதைகளை முழு அளவில் கூறும் தமிழ் நூல் எதுவும் சங்ககாலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. (ம.பொ.சி. கட்டுரை 6-வது பகுதி)

பரிபாடலில் வரும் திருமாலைப் பற்றிய பாடல்கள் அனைத்துமே பக்திப் பாடல்களே என்பதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். (ம.பொ.சி. கட்டுரை 9-வது பகுதி)

இனி, இவற்றுக்கு பதிலுரைப்போம்.

Saturday, June 26, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - ஆசிரியரின் இரண்டாம்பாக முன்னுரை

நமது கம்பனின் சமயம் முதல்பாகத்தைப் பல பிரதிகள் பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினர் கழகப்புலவர்கள் அனைவருக்கும் வழங்கினர். எவரும் அதை மறுக்க முயலவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு பிள்ளை அவர்கள் சிவகதி அடைந்துவிட்டார்.

சென்ற வருடம் திரு. ம. பொ. சிவஞானகிராமணி அவர்கள் "கம்பர் சைவரே" என்று நிலைநிறுத்துவதற்காகத் தமது 'செங்கோல்' பத்திரிகையில் சில கட்டுரைகள் எழுதினார். கட்டுரைத் தொடர் முடிந்ததும் அதை நூல் வடிவிலும் வெளியிட்டார். அந்நூலை மறுக்கும் நமது "சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்" என்னும் நூல் நமது ஸுதர்சனத்தில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு நமது மணிவிழாவின் போது கம்பனின் சமயம் இரண்டாம் பாகமாக வெளியிடப் பெறுகிறது. இதை அவ்வப்போது பெற்றுவந்த திரு. ம.பொ.சி. தமது செங்கோலில் "ஆடத்தெரியாத நாட்டியக்காரி வீதி கோணல் என்றாளாம்" என்கிறகணக்கிலே, நமது நூலுக்கு மறுப்பெழுத முற்பட்டால் தாம் வைதிகச் சைவராக மாறவேண்டியிருக்குமாகையால் தாம் மறுப்பெழுதப் போவதில்லை என்று எழுதி முடித்துவிட்டார். இந்நூலுக்கு ஆணித்தரமான அணிந்துரை அளிந்த வி.பூதூர் வித்வான் கி. வேங்கடசாமி ரெட்டியார் அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது. இனியாவது மனச்சாட்சியுள்ள தமிழறிஞர் எவரும் கம்பன் பரம வைணவனே என்னும் பேருண்மையை மறுக்கத் துணியமாட்டார்கள் என நம்புகிறேன்.

உண்மையை உயிரினும் ஓம்பும்,
ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்,
3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17.
18 - 11 - 84.

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - ஆசிரியரின் முதல்பாக முகவுரை

தமிழ்ப்புலவர்களில் சிலர் பல வருடங்களாகக் கம்பனின் சமயம் வைணவமே என்னும் பேருண்மையை மறைக்க முயன்று வருகின்றனர். வெள்ளிடை மலைபோல் விளங்கும் இவ்வுண்மையை நிலை நாட்டும் நூல் ஒன்று எழுதவேண்டும் என்னும் அவா நீண்டகாலமாக எந்தையார்க்கும் அடியேனுக்கும் உண்டு. அதற்குச் சந்தர்ப்பம் ஒன்று சில வருடங்களுக்கு முன் வாய்த்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் வெளியிட்டுவரும் கம்பராமாயணப்பதிப்பினுடைய பதிப்பாசிரியர் குழுவின் தலைவராய் விளங்கும் திரு. G. சுப்பிரமணியப் பிள்ளை, M.A.B.L, அவர்கள் கழகப்பதிப்பின் திருவவதாரப்படலத்தில் பல திருத்தங்களைச் செய்து, 7 - 7 - 61 வானொலி இதழில் "கம்பராமாயணத்தில் பாடபேதங்கள்" என்னும் கட்டுரையிலும், தருமை ஆதீனத்தாரால் வெளியிடப்பட்டுவரும் "ஞானசம்பந்தம்" என்னும் பத்திரிகையின் பிலவ ஆவணி (10 - 9 - 61) இதழில் வெளிவந்த கட்டுரையிலும் கம்பனின் உண்மைச் சமயத்தைத் திரித்துக் கூறியிருந்தார்.

பிள்ளையவர்களின் கட்டுரைகளிலுள்ள கருத்துக்கள் தவறு என்று நிரூபித்து, கம்பனின் உண்மைச் சமயத்தைக் காட்டித்தரும் "கம்பனின் சமயம்" என்னும் நூல் பிலவ பங்குனி உத்தரத்தன்று (21 - 3 - 62) நம்மால் தொடங்கப்பெற்றது. நம்முடைய பத்திரிகையான "ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்" மாத இதழில் மாதந்தோறும் சிறிதுசிறிதாக வெளியிடப்பட்டுவந்தது. தொடங்கிச் சில மாதங்கள் வரை வெளிவந்தபகுதி பிள்ளையவர்களுக்கும் அனுப்பப்பட்டது. அவர்களிடமிருந்து யாதொரு பதிலுமில்லை. கழகப்பதிப்பின் ஆரணிய காண்டம் முற்பகுதி வரையிலுமே இப்போது தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறபடியால் அது வரையிலுள்ள பகுதியின் ஆராய்ச்சி இன்று (குரோதி பங்குனி உத்தரத்தன்று) முதல் பாகமாக வெளியிடப்படுகிறது. கழகப்பதிப்பின் எஞ்சிய பகுதிகள் முழுவதும் வெளிவந்த பின் இந்நூலின் பிற்பகுதிகள் வெளியிடப்படும்.

மற்ற துறைகளிற்போலே, இலக்கியத் துறையிலும், மதத்துறையிலும் இப்போது நேர்மை மிகவும் குறைந்துவிட்டது. தங்கள் கருத்தைப் பழங்காவியங்களின் மீது தமிழ்ப்புலவர்கள் ஏறிடுகிறார்கள். இதை எடுத்துக்காட்டினாலும் தவறை ஒப்புக்கொள்ள மனமிருப்பதில்லை. பத்திரிகைகளும் உண்மையை வெளிப்படுத்தும் இத்தகைய நூல்களுக்கு மதிப்புரையெழுதத் தயங்குகின்றன. இது நாட்டுக்கு நல்லதல்ல. பிள்ளையவர்கள் நம் கருத்துக்கு மாறுபடுவாரானால், தம் கருத்தை நிலைநாட்டி எழுதவேண்டும். இல்லாவிடில் முன்னம் தாம் எழுதியது தவறு என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இதுவே நேர்மையும் பெருந்தன்மையுமாகும். மௌனமாயிருப்பது புலவர்களுக்கு அழகல்ல. பத்திரிகைகளும், மற்ற தமிழ்ப்புலவர்களும் இத்தகைய நூல்களை நடுநிலைநின்று ஆராய்ந்து மதிப்புரைகளை எழுதவேண்டும். இதனால் நாடு நலம் பெறும். தங்களுக்குக் கசப்பாயிருக்கின்ற காரணத்தால் உண்மைகளை மறைக்கப்புகுவது நாட்டுக்குத் தீங்கையே விளைக்கும். தமிழ் நாட்டில் தீங்குகள் ஒடுங்கி நலங்கள் ஓங்க ஆதி பரம்பொருள் அருளுவானாக.

ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், M.A.B.L.,
'ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்' ஆசிரியர்,
3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17.
குரோதி பங்குனி உத்தரம்.

Friday, June 18, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 4

'செங்கோல்' தொடர் 15

"அரி என்னும் திருமாலே காப்பிய நாயகனாக அவருக்குத் தலைமை தருகின்ற இடங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அது போல சிவனுக்குத் தலைமை தருகின்ற இடங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை; ஆராய்ந்து தான் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது" என்கிறது செங்கோல். ஆராய்ந்துதானே இந்த முடிவுக்கு வந்திருக்கிறது செங்கோல்; இன்னம் எதற்கு ஆராயவேண்டும்?

'செங்கோல்' தொடர் 16

"வைணவ ஆசாரியர்கள்கூட தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையையே பின்பற்றித் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்துவிட்டனர். இந்த வைணவர்களிடமிருந்து கம்பர் பெரிதும் வேறுபடுகிறார் என்பதோடு தமிழைப் பொறுத்தவரையில் சைவநாயன்மார்களான நால்வரைப் பின்பற்றித் தமிழின் தனித்தன்மையைக் காத்திருக்கிறார் எனலாம்" என்கிறது செங்கோல். ஆசாரியர்கள்தானே மணிப்பிரவாளநடையையே பின்பற்றித் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்தவர்கள்! செங்கோலின் கருத்துப்படி ஆழ்வார்கள் யாரும் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்திலரே! அப்படியிருக்க ஆழ்வார்களை விடுத்து நால்வரைப் பின்பற்றி தமிழின் தனித்தன்மையைக் காத்திருக்கிறார் என்பது செங்கோலின் மனக்கோட்டை தானே!

இதே தொடரில் 'திருவேங்கட மலையைப் பெற்றதின் காரணமாகத் தொண்டைமண்டலத்திற்கு ஏற்பட்ட சிறப்பை 13 செய்யுள்களால் வருணிக்கிறார். வேங்கடமலையையும் அங்குக் கோயில்கொண்டுள்ள நாதனையும் 5 செய்யுள்களால் புகழ்ந்தேத்துகிறார்' என்கிறது நம் செங்கோல். இப்படிச் சொன்ன செங்கோலே தொடர் 10ல் 'நாடவிட்ட படலத்திலே கம்பநாடர் வேங்கடமலையை நான்கு செய்யுள்களால் வருணிக்கப் புகுந்தவர், அந்த மலையில் நின்றவண்ணம் காட்சியளிக்கும் திருமாலைக்காட்டத் தவறிவிட்டார்' என்கிறது. 'அங்குக் கோயில்கொண்டுள்ள நாதனைப் புகழ்ந்தேத்துகின்றார்' என்று இத்தொடரில் காட்டுகிறது. இதில் எது உண்மை என்பதை வாசகர்களே முடிவு செய்வார்களாக.

'செங்கோல்' தொடர் 17

தலைப்பு:- கம்பர் சைவரே.

"ஒளவைப் பிராட்டியும் ... ...சைவர் என்று தெரிகின்றது. ஆனால் அவரே 'அரனை மறவேல்' 'திருமாலுக்கடிமை செய்' என்றும் பாடித் திருமாலையும் சிவனையும் சமநிலையிற் காட்டுகிறார்" என்று தொடர்கின்றது செங்கோல். 'அரனை மறவேல்' என்பது ஆத்திசூடியில் உள்ளதா? 'அறனை மறவேல்' என அண்மையில் தவறாகச் சொல்லினர்; மேலும் கொன்றைவேந்தனில் திருநெல்வேலிப் பிரதிகளில் 'சினத்தைப் பேணில் தனத்திற்கழிவு' என்றுள்ளதை 'சிவத்தைப் பேணில் தவத்திற்கழகு' என்று மாற்றிவிட்டனர். இவ்விவரஙக்ளை எனது 'வில்லிபாரதத்தில் வினோதத்திருத்தங்கள்' என்ற கட்டுரையில் காணலாம்.

'சங்ககாலக் கவிஞர்களில் ஒருவரான கடுவன் இளவெயினனார் திருமாலையும் முருகனையும் தனித்தனிப் பாடல்களால் வழிபட்டதனைப் பார்க்கிறோம்' என்கிறது செங்கோல். திருமாலுக்குரிய மேன்மையும் முருகனுக்குரிய தன்மையும் விளங்குமாறு அவரவர்கட்குரிய தனித்தன்மையை விளக்குவதை அப்பாடல்களில் காணலாம்.

"இடைக்கால உரையாசிரியர்களிலேயும் பலர் தாங்கள் சிவபக்தராயிருந்தும் சமணபௌத்த இலக்கியங்களுக்கு உரை எழுதினர்" என்கிறது செங்கோல். பரிமேலழகரும் சிவபக்தர்தானா? என்பதைச் செங்கோலே சொல்லட்டும். மேலும் "அவர் வேத மதத்தவராதலால் அவரை வைணவராகக் கொள்ளவும் வாய்ப்புண்டு; ஆனால் அவரது நெற்றியில் நாமந்தீட்டி ஆழ்வார் பட்டியலிலே சேர்க்க சந்தர்ப்பமே இல்லை" என்கிறது செங்கோல்.

இங்கு இதை மறுப்பதற்கு முன் சில செய்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நாமம், திருமண் என்பன ஒரு பொருட்சொற்கள், ஆழ்வார்கள் பாடல்களுள் நாமம்பற்றி இல்லை. ஆதலின் நாமம் பிற்காலத்தில் தோன்றியதுதான் என்ற கருத்தினராகி நாமம் பற்றிக் கம்பர் சொன்ன பாடல்களை இடைச்செருகல் என்று கொண்டனர் சிலர்.

பெரியாழ்வார் திருமொழி 3 - 4 - 8.

1) "சிந்துரப்பொடிக்கொண்டு சென்னியப்பித்
திருநாமம் இட்டங்கொ ரிலையம்தன்னால்
அந்தர மின்றித்தன் நெறிபங்கியை
அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல்வரும் ஆயப்பிள்ளை
எதிர்நின்றங் கினவளைஇழவே லென்னச்
சந்தியில் நின்றுகண்டீர் நங்கைதன்
துகிலொடு சரிவளை கழல்கின்றதே".


'திருநாமம் இட்டங்கோ ரிலையம்தன்னால்" - நேரியதாய் நீண்டு ஒட்டின இடத்திலே பற்றும்படி இளையதாய் நிறத்திருப்பதொரு இலையாலே திருநெற்றியிலே திருநாமமாக இட்டு ஊர்த்வபுண்ட்ராகாரமாக அழுத்திவைக்குமாய்த்து - மாமுனிகள்.

'சாதிலிங்கப் பொடியைக்கொண்டு திருக்குழலிலே அலங்காரமாகச் சாத்தி (நாமமிடவேண்டிய) அந்த நெற்றியிலே (ஒட்டினாற் பிடித்துக் கொள்வதான) ஒரு தளிரான இலையால் ஊர்த்வபுண்ட்ரம் சாத்தி' வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர்.

2) திருவிருத்தம் 49ல் 'மண்நேரன்ன ஒண்ணுதலே' என்பதற்கு 'திருமண்காப்பைத் தகுதியாகத் தரித்த திருநெற்றியை உடையவள்' என்பர் வை.மு. சடகோப ராமாநுஜாசார்யர்.

இதனை அடியொற்றிக் கம்பநாடர் பால-கடிமணப்படலத்தில் (49) 'என்றும் நான்முகன்முதல் யாரும் யாவையும் - நின்ற பேரிருளினை நீக்கி நீள்நெறி சென்று மீளாக்குறி சேரச் சேர்த்திடும். தன் திருநாமத்தைத் தானும் சாத்தியே' எனக் கூறியுள்ளதை மிகைப்பாடல் ஆக்கிவிட்டனர்.

கம்பரை அடியொற்றி திரு-அருணாசலக் கவிராயர் பாடிய இராம நாடகத்திலே இவ்விடத்து,

பல்லவி

ராமசாமி கொண்டகோலம் என்னாலே சொல்லப்போமோ

அநுபல்லவி

மோமிதிலை ராசன்முன் அனேக-கோடி மன்மதனே நிகராக

சரணம்

பாதகடகம்சேர்த்தி மருங்கினிற் பசும்பொன் ஆடைபோர்த்தி மார்பின்
மீதுபொன்னூல் ஏற்றித் தன்நாமமும் விளங்கவே சாத்தி

என்று கூறுவதால் கவிராயர் 'என்றும் நான்முகன்முதல்' என்ற பாடலைக் கம்பருடைய பாடல்தான் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார். கவிராயரும் சைவர்தான். அவர் உடன்பட்ட பாடலை இந்த சைவ ஞானிகள் உடன்பட மறுப்பது வியப்புக்குரியதே.

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெள்ளிவிழா மலராக வெளியிட்ட கம்பராமாயணம் சுந்தரகாண்டம் சம்புமாலி வதைப்படலம் (832)

"ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம்
நெய்சுடர் விளக்கிற் றோன்றும் நெற்றியே நெற்றியாக"
என்றுளது.

பழைய பாடமும் இதுவே. மேற்படி பதிப்பில் இதற்கு விளக்கமாக, "திருமாலின் துவாதச நாமங்களைக் கூறியபடியே பன்னிரண்டு உறுப்புக்களில் இட்டுக்கொள்வது மரபாதலின், திருமண்காப்புக்கு நாமம் என்பது பெயராயிற்று. 'தன் திருநாமத்தைத் தானும் சாத்தியே' என்பர் முன்னும் (கடிமணப் 49). 'ஈராறு நாமம் உரைசெய்து மண்கொடிடுவார்கள் காணும் இமையோர்' என்றார் வில்லிபுத்தூரரும். நெய்யிட்டுப் பிரகாசிக்கும் தீபம்போன்றிருந்தது அனுமனது நெற்றி நாமம் என்றும் அது நெற்றிப்படையாகத் தோன்றும்படி என்றும் கூறியபடி. நெற்றி-முன்னணிப்படை" என்றுள்ளது காண்க. இதுகாறும் கூறியவாற்றால் நாமம் என்பது முன்னமேயுள்ளதுதான்; புதிதல்ல என்று உணர்க.

இதை மறுத்துச் செங்கோல் 'அவரது (கம்பரது) நெற்றியில் நாமம் தீட்டி ஆழ்வார் பட்டியலிலே சேர்க்கச் சந்தர்ப்பமே இல்லை' என்கிறது.

ஆயின் ரசிகமணி T.K.C. அவர்களைப்போலவும் செங்கோல் அரசரைப்போலவும் கம்பநாடரை மீசையுள ஆண்பிள்ளைச் சிங்கமாக ஆக்கி வீரர் பட்டியலில் சேர்ப்பதற்கு மட்டும் சந்தர்ப்பம் நிறைய இருக்கிறது போலும்! இவர்கள் தாடியும் உடையவர்களாயிருந்தால் திருவள்ளுவரைக் காட்டியிருப்பது போன்று கம்பரையும் தாடியும் மீசையும் உடையவர்களாகக் காட்டியிருக்கக்கூடும். 'கம்பராமனைக் கடவுளாகத்தான் ஏற்கவேண்டுமென்று எவரும் சொல்லவில்லை' என்கிறது செங்கோல். ஆயின், கம்பர் தம் ராமனை எப்படிக் காட்டியுள்ளார்? தெய்வமாகவும் தெய்வத்துக்கு மேலாகவும் தானே காட்டியுள்ளார்! இஃது எல்லோரும் அறிந்ததுதானே! மேலும் 'கம்பராமனை மானிட சமுதாயத்தின் வழிகாட்டியாக ஏற்றால்போதும்' என்கிறது செங்கோல். இஃது செங்கோலின் இராமபக்தி போலும்! மேலும் 'அதுவே சைவரான கம்பரின் குறிக்கோள்' என்று முடிக்கிறது செங்கோல். செங்கோல் மற்றொரு புலவரை(க் கம்பர்போன்று) நமக்கு நினைவூட்டினால் நாம் செங்கோலுக்கு நன்றி செலுத்தக் கடமைப்படுவோம்.

"சங்ககாலத்தில் மதப்பூசல் இல்லை; வேறுபாடின்றித் திருமால், சிவன், முருகன், கொற்றவை ஆகிய எல்லாத் தெய்வங்களையும் மக்கள் வணங்கிவந்தனர்; அதேபோல சைவராகிய கம்பரும் பொதுவாகத் தெய்வங்களைப் போற்றினார்; எடுத்துக்கொண்ட காப்பியத் தன்மைக்கேற்ப இராமபிரானை அதிகமாகப் பேசியிருக்கின்றார்; ஆகவே கம்பர் சமரசஞானி" என்று கற்பனை பண்ணிக்கொண்டது செங்கோல். இதனை நன்கு ஆராய்ந்து 'சங்ககாலச் சமயம் யாது' என்பதனைச் சங்கநூல்களாலே விளக்கி 'திருமாலே முத்திதரும் முதற்கடவுள்' என்பதைக்காட்டி, இச்சங்ககாலச் சமயமே தான் கம்பரின் சமயம் என்று உறுதிசெய்து, 'சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்' என்ற தலைப்பில் இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலாசிரியர் ஸ்ரீ. உ.வே. ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அட்வகேட் அவர்களைத் தமிழுலகு நன்கறியும். 'ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம்' மாத இதழ்வாயிலாக, வடமொழி தமிழ்மொழி இரண்டிலுமுள்ள பிரமாண நூல்களை உரையுடன் வெளியிட்டு வருகின்றார். வியாக்கியானங்களையும் விளக்கங்களுடன் வெளியிடுகின்றார். அன்பர்களின் உண்மையான ஐயங்களை 'கேள்விபதில்' என்ற தலைப்பில் தீர்த்துவைக்கின்றார்.

முன்னோர்கள் கருத்துக்கு மாறாகச் சொல்பவர்கள் யாராயினும் அவர்களை உடனே கண்டிக்கவும் உண்மைகலை விளக்கவும் தகுந்த வன்மையாளர். அறிஞர்கட்கும் பக்தர்கட்கும் அடங்கியிருப்பவர். சுயநலமின்றிச் சமயத்துக்குத் தொண்டாற்றும் தூய வேதியர். 'வித்யா விசாரத' 'திவ்யார்த்த ரத்னநிதி' என்று சிறப்புப் பெயர்களும் உடையவர். இப்பெரியாரை எவ்வளவு பாராட்டினும் தகும். இந்நூலைப் படிக்கும்போது இவரது பரந்த அறிவும் சிறந்த தொண்டும் நம்மால் அறியமுடிகிறது. இப்பெரியார் இதுபோன்று பல நூல்கள் எழுதிச் சமயத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்ற நம்பெருமாள் திருவருள் பாலிப்பாராக.

ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் வாழ்க!
வைணவக் கம்பன் வாழ்க!


இங்ஙன்,
அன்புள்ள,
கி. வேங்கடசாமி.

வி.பூதூர், S.A. Dt.
1 - 7 - 1984