Friday, September 25, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 3. எங்கும்

3. எங்கும்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து உண்டு. அவ்வவ் வித்து அததற்கு உரியதாய்த் துணை நின்று, அதனை அதனை ஓம்பி வருகின்றது. அவ் வித்து ஒவ்வொன்றும் தொடர்பில்லாமல் இருக்கிறது. கடவுள் என்னும் வித்தோ அத்தகையதன்று. அஃது எல்லா வித்துக்களுக்கும் வித்தாயிருப்பது. எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எங்கே இருக்கும்? அதற்கெனத் தனித்த ஓரிடம் உண்டோ?

எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எல்லாவற்றிலும் இருத்தல் வேண்டும். அஃது இல்லாத இடம் எங்கே இருக்கும்? என்னை? எல்லாம் அதனால் இயங்க வேண்டுமாதலால், அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்கும் இயல்பினதாய் இருத்தல் நியதி. ஆகவே, அதற்கு உரிய இடம் இங்கு அங்கு என்று குறிப்பிடுதற்கு இல்லை. அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிற்பதும், எங்கெங்கே பார்த்தாலும் அங்கங்கே நிற்பதும் அதன் இயல் என்க.

நம்மாழ்வார் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்ந்தார்; அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்றலைத் தெளிந்தார்; அத் தெளிவை உலகுக்கு அறிவுறுத்தினார்.

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞானவெள் ளச்சுடர் மூர்த்தி...

அமைவுடை அறநெறி ... ... ... ...
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.

என்னுள் கலந்தவன் ... ... ... ...
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள்
தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே.

எப்பொருளுந் தானாய்...
வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் எண்டிசையும் தவிராது
நின்றான் தன்னை...

எங்குவந் துறுகோ என்னையாள் வானே
ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேனும்
அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலன் இறந்ததும் நீயே.

பூவைகள் போல்.................
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் ..........

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
யாய் உல கங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனியநல்
வான் சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களு மாகிப் பலபல
மாய மயக்குக்களால்
இன்புறும் இவ்விளையாட்டையானைப்
பெற்றேதும் அல்லலிலனே.

யானுநீ தானே யாவதோ மெய்யே
அருநர கவையும் நீ ஆனால்
வானுயர் இன்பம் எய்திலென் மற்றை
நரகமே எய்திலென் எனிலும்
யானுநீ தானாய்த் தெளிதொறும்
நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்
அருளுநின் தாள்களை எனக்கே

என வரூஉம் ஆழ்வார் மொழிகளை உற்று நோக்குக.

சுவர்க்க நரகத்திலும் பரம்பொருள் இருக்கிறது என்று ஆழ்வார் விளக்கியுள்ளார், இவ்வாறு இறையின் சர்வ வியாபகத்தை வேறு எவரே விளக்கினர்! எங்கு முள்ள பரம்பொருளைத் தெளிந்தவர்க்குத் தனிப்பட்ட சுவர்க்கம் ஏது? தனிப்பட்ட நரகம் ஏது? அவர்க்கு எல்லாம் ஆண்டவன் இடம்; எல்லாம் இன்ப உலகம்.

'பரம்பொருள் எங்கும் உள்ளது' என்னும் உண்மையை ஆன்றோர் பல துறைகளிலும் உலகுக்கு விளக்கிப் போந்தனர். அந் நுட்பம் பலப்பல கதைகள் வாயிலாகவும் விளக்கப்பட்டது. அக் கதைகளுள் சிறந்த ஒன்று பிரகலாதனைப் பற்றியது. பிரகலாதன் கதையால் விளங்குவது என்னை? பரம்பொருள் எங்கும் உள்ளது என்பது அக் கதையால் விளங்குவது. இதனை ஆழ்வார் பலவிடங்களில் விளம்புகிறார். ஈண்டைக்கு ஒரு திருப்பாட்டுச் சாலும்.

எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே.

'பரம்பொருள் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பின் இருக்க. அதனால் உலகுக்கு என்ன பயன்? அதனை ஏன் வலியுறுத்தவேண்டும்' என்று சிலர் கருதலாம். இது சிந்திக்கத்தக்கதே. சிந்திக்கச் சிந்திக்கப் பல நுட்பங்கள் விளங்கும். அவைகளில் ஒன்றை மட்டும் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடுவது நலம்.

வாழ்வு இருவிதம். ஒன்று நல்வாழ்வு; மற்றொன்று அஃது அல்லாதது. நல்வாழ்வு எது? மற்றைய வாழ்வு எது? அமைதியுற்ற வாழ்வு நல்வாழ்வு என்றும் அமைதியற்ற வாழ்வு நல்வாழ்வு அல்லாதது என்றும் சுருங்கச் சொல்லலாம். வாழ்வில் பல நலங்கள் பொருந்தியிருப்பினும், அதன்மாட்டு அமைதி ஒன்றில்லையேல், அது நல்வாழ்வாகாது. நல்வாழ்வுக்கு அறிகுறி அமைதியேயாகும்.

அமைதி வாழ்வுக்கு சகோதர நேயம் இன்றியமையாதது. சகோதர நேயம் எப்படி உண்டாகும்? சகோதர நேயம் என்னும் பெயரால் உலகில் எத்துணையோ அமைப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றால் சகோதர நேயம் வளர்கிறதா? அமைதி வாழ்வு நிலைக்கிறதா? இல்லையே.

தற்கால உலகை நோக்கினால் உண்மை விளங்கும். தற்கால உலகை நோக்குவோம். அஃது எக்காட்சி வழங்குகிறது? பொய், பொறாமை, கொலை, கொள்ளை, போர் முதலியவற்றையல்லவோ அது வழங்குகிறது? இதற்குக் காரணம் என்னை? அமைதிக்குரிய சகோதர நேயம் பெருகிப் பரவாமையேயாகும்.

அமைதிக்கெனச் சட்டங்கள் செய்யப்படுகின்றன; ஆயுதங்கள் தாங்கப்படுகின்றன; வேறுபல கட்டுகளும் வகுக்கப்படுகின்றன. இவற்றால் அமைதி நிலவுகிறதா? அச்சத்தால் ஒருபோதும் உண்மை அமைதி நிலவாது. சகோதர நேயம் ஒன்றே உண்மை அமைதியை நிலைபெறுத்தவல்லது.

சகோதர நேயம் என்பது தன்னுயிரைப் போல மன்னுயிரைக் கருதும் அன்பேயாகும். அன்பை - நாடு, மொழி, நிறம், இனம், மதம், இன்னபிற கூட்டுதல் அரிது. ஏன்? நாடு, மொழி முதலியன எல்லைக்கு உட்பட்டன. எல்லைக்குட்பட்ட கண்டப்பொருள் கட்டற்ற பரந்த அன்பை எங்ஙனங் கூட்டும்? அவைகளால் ஒவ்வோர் அளவில் கட்டுப்பட்ட அன்பு கூடலாம், கட்டுப்பட்ட அன்பால் அமைதி நிலை பெறாது. ஒருவேளை அதனால் கலாம் விளையினும் விளையும்.

பரந்த அன்புக்கு, எல்லையற்ற - கட்டற்ற - ஒன்றன் தொடர்பு தேவை. எல்லையற்ற - கட்டற்ற - ஒன்று எங்குமுள்ள இறையன்றிப் பிறிதில்லை. இறையுடன் தொடர்பு கொள்ளக் கொள்ள, அத் தொடர்பு, தன்னுயிரிலும் மற்ற உயிர்களிலும் உள்ளது ஒன்றே என்னும் உணர்வே நல்கும். எல்லையற்று - கட்டற்று - எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அகண்டத்தில் அன்பு கொண்டவரிடம், தம்முயிரைப்போல் மற்ற உயிர்களைக் கருதும் சகோதர நேயம் தானே பிறக்கும்.

பராபரம் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து நிற்றலால், அதற்கும் உயிர்களெல்லாம் உறுப்புக்களாகின்றன; ஓருறுப்புக்குத் துன்பம் நேரின், அத் துன்பம் மற்ற உறுப்புக்கட்கும் நேர்தல் இயல்பு. தன் உறுப்புக்களில் எதற்காவது கேடு சூழ அறிவுடைய எவனாதல் நினைப்பனோ? எவனும் நினையான். எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்கொண்ட ஒருவன் பிறருக்குத் தீங்கு செய்தல் தனக்கே தீங்கு செய்தல் ஆதலை நன்கு உணர்வன். ஆகவே, எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்பு கொள்வதால், சகோதர நேயம் பிறக்கும் என்பது தெளியற்பாலது. அதனால் உண்மை அமைதி நிலவும்.

'சகோதர நேயத்தால் உலகில் அமைதி நிலைபெறுதல் வேண்டும்' என்னும் பெருங்கருணையால், ஆன்றோர், பராபரம் எங்குமுள்ள உண்மையைப் பலபடியாக உலகுக்கு உணர்த்தினர். இப் பேருணர்வு பெருகுதற்குரிய அரசியல், கல்வி, தொழில் முதலியன உலகுக்குத் தேவை.

ஆழ்வார் எங்குமுள்ள பரம்பொருளை உணர்ந்து, அதனுடன் ஒன்றித் தாம் அற்று, அதுவாய் நின்றார். அவர் தம்மையும் பிறவற்றையும் அதுவாக் கண்டார். இந்நிலை பெற்ற ஒருவர் எவ்வுயிரைத் தமக்கு வேறாகக் கருதுவர்? அங்ஙனங் கருதற்கு இடம் ஏது? இப் பெருநிலை பெறுவோரே சகோதர நேயம் என்னும் ஜீவகாருண்யச் செல்வராவர்.

யானே என்னை ... ... ...
யானே நீஎன் னுடைமையும் நீயே...

என்னை முற்றும் உயிருண்டு என்மாய
ஆக்கை இதனுள் புகுந்து
என்னை முற்றும் தானேயாய்
நின்ற மாய அம்மான் ... ...

இன்றென்னைப் பொருளாக்கித்
தன்னைஎன் னுள்வைத்தான்... ...

மாயம் செய்யேல் ... ...
நேசம்செய்து உன்னோடு என்னை
உயிர்வே றின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் ... ...

ஊனில் வாழ் உயிரே... ...
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
கலந்தொழிந்தோம்... ...

எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே
எனதாவி ஆவியும்நீ பொழிலேழும் உண்ட எந்தாய்
எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே.

பற்ப நாபன்... ... ...
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம்...

உணர்வி லும்பர் ... ... ... யானும் தானா யொழிந்தேனே.

என்னுடைக் கோவலனே...
உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக்கண்டு...
என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை...

தாள்களை எனக்கே...
தோள்களை யாரத் தழுவிஎன்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ... ...

ஆறெனக்கு... ... ... எனதாவியும் உனதே...
ஏகமூர்த்தி... ... ... உன்
ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.

மாயனென்... ... ...
காயமும் சீவனுந் தானே...

'எல்லாங் கடவுள்' என்று ஆழ்வார் மனமார வாயாரப் பாடியுள்ளார். அந் நிலையைப் பலப்பல விதமாக அவர் பாடிப்பாடி மகிழ்கிறார். அவ்வாறு பாடுவதில் அவர்க்குச் சலிப்புத் தோன்றுவதில்லை. ஓரிடத்தில் அவர் - உண்ணும் பொருள் - தின்னும் பொருள் - முதலியனவும் கடவுள் என்று அருளியுள்ளார்.

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்
றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே
கண்கள்நீர் மல்கி

என்று ஆழ்வார் கடவுள் உறவு காட்டுதல் காண்க. உண்ணுஞ்சோறும் பருகும் நீரும் கடவுளாம்! மயிர் சிலிர்க்கிறது. எம் பெருமக்கள் நிலை என்னே! என்னே! அந்நிலையை எண்ணி எண்ணி அழுகிறேன். 'உண்ணும்' 'பருகும்' என்னுஞ் சொற்கள் என் ஊனை - என் உயிரை - நெகிழச் செய்கின்றன. ஆழ்வார் கடவுளாகக் கொள்ளாத பொருளும் உண்டோ? அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள்.

எல்லாங் கடவுள் மயமாக உள்ள உண்மைக் காட்சி எப்பொழுது புலனாகும்? இதற்குரிய வழிகள் பல உண்டு. அவைகளுள் ஈண்டு குறிக்கத் தக்கது ஒன்று. அது, புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு ஒழிதல் வேண்டும் என்பது. புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு உள்ள மட்டும் யாண்டுங்கடவுள் உண்மையைக் காண்டல் அரிது. கடவுள் உண்மையை யாண்டுங் காணாத வரை, உயிர்கள் ஐம்புல வேடருகு இரையாகிச் சகோதர நேயத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அகக்கண் திறக்கப்பெறின், ஐம்புலன்கள் நல்வழியில் நின்று, சகோதர நேய ஊற்றைத் திறக்கும். அகவிளக்கத்தால் 'அகமே புறம்' என்னும் உண்மை விளங்கும்.

புறம் அகம் என்னும் வேற்றுமை உணர்வு கெடப் பெற்ற மெய்யறிஞர்க்கு எல்லாம் கடவுள் மயமாகப் புலப்படுதல் இயல்பு. அவ்வறிஞர்க்கு இன்பமுமிலை - துன்பமுமில்லை. சுவர்க்கமுமில்லை - நரகமுமில்லை; செல்வமுமில்லை - வறுமையுமில்லை. அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள். இந் நிலையை ஆழ்வார் பெற்றமையால், அவர் எவ்வுயிரிலும் இறையைக் காணும் ஜீவகாருண்யச் செல்வரானார்.

அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும் - என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.

மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில னெனனுயிர் மிகுநரை இலனே.

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்
யான் எனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை
நாடோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்
அல்ல புறத்தினுள்ளும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய்
நின்னை அறிந்தறிந்தே.

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்
... ... ...

இத்திருமொழிகளின் நுட்பத்தை உன்னுக.

அமைதி வாழ்வுக்குரிய சகோதர நேயத்துக்குத் தமிழ் நாட்டில் நம்மாழ்வார் எவ் விதை விதைத்தார்? 'பரம்பொருள் எங்கும் உள்ளது' என்னும் விதையை ஆழ்வார் விதைத்தார். அவ் விதையினின்றும் எழுந்து வளர்ந்து ஓங்கி அன்பு மரம் நிற்கிறது. அதன் தண்ணிழலில் அமர்ந்து இன்பத்தை நுகர வேண்டுவது மக்கள் கடமை.

***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...

Wednesday, September 23, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 2. கடவுள் - வித்து

2. கடவுள் - வித்து

கடவுளைப்பற்றி உலகில் எழுந்துள்ள கொள்கைகள் பலப்பல. அவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாயிருப்பது ஒன்றே. அவ்வொன்றை மக்கள் தங்கள் பன்மையுணர்வால் பலவாறு ஏற்றுப் போற்றி வாழ்கிறார்கள். பன்மை என்பது ஒருமையினின்றும் பிறப்பது. ஒருமை இன்றேல் பன்மை இல்லை. பன்மைக்கு வித்து ஒருமை.

உலகம் அவன் என்றும், அவள் என்றும், அஃது என்றும் சுட்டி உணரப்படுவது. சுட்டுப் பொருளின் இயல் மாறுதல் உறுவது. மாறுதலின்றி என்றும் ஒரு பெற்றியதாய் இருப்பது அதன் இயல் அன்று.

உலகை உற்று நோக்குவோம். உலகிலுள்ள ஒவ்வொன்றும் மாறுதலுறுவதா யிருப்பதைக் காண்கிறோம். எல்லாம் மாறுதலுறுவனவாயின், அவற்றின் மாறுதல் நிகழ்ச்சிக்கு ஒரு நிலைக்களன் வேண்டுமன்றோ? நிலைக்களன் ஒன்றில்லையேல், எதுவும் ஒழுங்கு முறையில் இயங்கி மாறுதலுறாது. ஆகவே, ஒரு நிலைக்களன் இன்றியமையாததாகிறது.

அந் நிலைக்களன், தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததாய், என்றும் ஒரு பெற்றியதாய், எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் - தாரகமாய் - இருத்தல் வேண்டும். இல்லையேல் அது நிலைக்களன் ஆகாது.

தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் உடையதை என்னென்று கூறுவது? தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததை என்னென்று கூறுவது? முன்னையதை சடம் அல்லது மாயை என்றும், பின்னையதைச் சித் (அறிவு) அல்லது கடவுள் என்றும் முன்னோர் கூறிப் போந்தனர்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து இருக்கிறது. அதுபோல எல்லாவற்றிற்கும் ஒரு வித்து இருத்தல் வேண்டும்; வேண்டுவது இயல்பு. அவ் வித்து, எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும். அது மாறுதல் உடையதாயின், அதற்கொரு வித்துத் தேவையாகும். ஆதலால், எல்லாவற்றிற்கும் வித்தாயிருப்பது எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும் என்பது உணரற்பாலது.

மாறுதல் உடையது சடம் என்றும், மாறுதல் இல்லாதது சித் என்றும் மேலே சொல்லப்பட்டன. மாறுதலுடைய சடத்துக்கு, மாறுதல் இல்லாத சித் வித்தாயிருத்தல் இயல்பு. சடவுலகமெல்லாம் தோன்றி நின்று ஒடுங்குதற்கு வித்தாயிருப்பது சித் என்று தெளிக. அச் சித் என்னும் வித்தினின்றும் எல்லாம் தோன்றும்; அதனிடை எல்லாம் நிற்கும்; அதனுள் எல்லாம் ஒடுங்கும்.

எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்தற்கு மக்கள் முயலுதல் வேண்டும். அம் முயற்சிக்கென்று மக்கள் பிறவியும், வாழ்வும், பிறவும் இயற்கையில் அமைந்திருக்கின்றன. அவ்வியற்கை அமைப்பு வழிநின்று மக்கள் ஒழுகினால், அவ்வொழுக்கம் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்த்தும். ஆனால் அவ்வழி நில்லாது, எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை மட்டும் எளிதில் உணர்தல் அருமை. அருமை என்று அஞ்ச வேண்டுவதில்லை. அருமையை எளிமையாக்க இயற்கை அன்னை முனைந்து நிற்கிறாள். அவள் வழி நிற்க மக்கள் முயல்வார்களாக.

தமிழ் நாட்டிற்றோன்றிய நம்மாழ்வார், உலகு உய்யத் தோன்றிய குருமூர்த்திகளுள் ஒருவர். அவர் இயல்பால் மெய்யுணர்வு பெற்று, எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள வித்தினை உணர்ந்தார்; உணர்ந்தவாறு அதை உலகுக்கு உணர்த்தினார். இது பற்றி அவர் பொழிந்த அமுத மொழிகள் பல. அவற்றுள் சில வருமாறு:

ஊழிதோ றூழி... ... ...
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி......

- திருவாசிரியம் – 4

தானே தனித்தோன்றல் தன்னொப்பொன் றில்லதான்
தானே பிறர்கட்கும் தனித்தோன்றல் - தானே......

வைப்பாம் ... ...
எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து
அப்பாலவன்...

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்...

ஒக்கலை வைத்து ... ...
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்...

ஓவாத் துயர்ப்பிறவி ... ...
மூவாத் தனிமுதலாய் ...

சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன் ...

எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை ஆழ்வார் உணர்ந்து, அவ்வுணர்வால் தமிழ் நாட்டை ஓம்பினார். அவ்வாழ்வார் நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? அஃது, ஆழ்வார் உணர்ந்து உணர்த்திய வித்தின் மீது கருத்துச் செலுத்துகிறதா? இல்லை. அது போலிகள் மீது கருத்திருத்தித் தன் வாழ்வைக் குலைத்து வருகிறது. இந்நாளில் ஆழ்வார் அமிழ்தைப் பருகத் தமிழ்நாடு வேட்கை கொண்டு எழுவதாக.

***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...

Sunday, September 20, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1. தோற்றுவாய்

1. தோற்றுவாய்

தமிழ் நாடு எது? 'வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து' என்று ஆசிரியர் பனம்பாரனார் எல்லையிட்டுக் கூறிய நிலப்பரப்பா? அன்று. ஆசிரியர் பனம்பாரனார் நிலப்பரப்பை மட்டும் 'தமிழ் கூறு நல்லுலகத்து' என்று கூறினாரில்லை. அவர் அந்நிலப் பரப்பில் வாழும் மக்கள் வழக்க ஒழுக்கங்கள் முதலியவற்றை உளப்படுத்தியே 'தமிழ்கூறு நல்லுலகத்து' என்றார். எனவே, தமிழ் நாடென்பது, தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் வெறும் நிலப்பரப்பு மாத்திரமன்று. அம் மக்களின் நடை உடைகள், வழக்க ஒழுக்கங்கள், கல்வித் துறைகள், தொழில் முறைகள், அரசியல் நெறிகள், இன்னோரன்ன பல சேர்ந்த ஒன்றே தமிழ் நாடென்பது. நாடு என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. புராண நூல்கள் நாட்டுப்படலம் நவிலுமிடத்து, வெறும் நிலப்பரப்பை மட்டும் நவிலாது, மக்கள் வழக்க ஒழுக்கங்கள், தொழின் முறைகள் முதலியவற்றைக் கிளந்து நவில்வது கருதற்பாலது. ஒவ்வொரு நாட்டவர்க்குச் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருப்பது போலத் தமிழ் மக்கட்குஞ் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருக்கின்றன. அவைகளைகக் கொண்ட ஒன்றே தமிழ் நாடாகும்.

தமிழ் நாட்டைக் கோலிய அறிஞர் பலர்; அன்பர் பலர்; மறவர் பலர்; மன்னர் பலர்; பாவலர் பலர்; தொழிலாளர் பலர். இவர்களால் கட்டப்பெற்ற தமிழ்நாட்டைப் பின்னர் அழகு செய்தார் இரு கூட்டத்தார். அவருள் ஒரு கூட்டத்தார் நாயன்மார் எனப்படுவர்; மற்றொரு கூட்டத்தார் ஆழ்வார் எனப்படுவர். முன்னவர் கடவுளைச் சிவமாகப் போற்றியவர்; பின்னவர் ஆண்டவனைத் திருமாலாகத் தொழுதவர். 'ஆழ்வார்' என்ற சொல்லுக்கு ஆண்டவன் அருள் வெள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பவர் என்பது பொருள்.

ஆழ்வார் பன்னிருவர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தமிழ் நாட்டிலே, பொருநை (தாமிரபரணி) வளஞ் செய்யுந் திருநெல்வேலியிலே, திருக்குருகூரிலே, வேளாள மரபிலே தோன்றினவர். திருக்குருகூர் என்னும் பதி ஆழ்வார் திருநகரி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. நம்மாழ்வார்க்குச் சடகோபர், காரிமாறன், பராங்குசர் முதலிய பெயர்களுமுண்டு. அவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன.

நம்மாழ்வார் காலத்தைப் பலர் பலவாறு பகர்கிறார். கலியுகம் பிறந்த நாற்பத்து மூன்றாம் நாள் நம்மாழ்வார் அவதரித்தார் என்று சம்பிரதாய நூல்கள் நுவல்கின்றன. இதைச் சரித்திர ஆராய்ச்சியாளர் ஏற்பதில்லை. ஆராய்ச்சியாளரும் நம்மாழ்வார் காலத்தைப் பற்றி இன்னும் ஒரு தலையான முடிவிற்கு வந்தாரில்லை. சரித்திரத்தார் இதுகாறுஞ் செய்துள்ள ஆராய்ச்சிகளை நோக்குழி, ஆழ்வார், நான்காம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தினர் என்பது பெறப்படுகிறது.

ஆழ்வாருள் குருகூர்ப்பெரியார் நம்மாழ்வார் என்னுந் திருப்பெயர் பெற்றிருக்கிறார். அவர் திருவாக்கினின்றும் ஒழுகிய தமிழ் அமிழ்தும், அதன் கருத்துச் சுவையும் அவர்க்கு அத் திருநாமத்தை நல்கின எனலாம். அறிவிற் சிறந்த எவரும் - அன்பிற் சிறந்த எவரும் - ஆழ்வாரை 'நம் அறிஞர்', 'நம் அன்பர்' என்று போற்றுவர். அச்சான்றோர் திருவாக்கை ஓதும்பேறு பெறுங் கிறுஸ்துவர், மகமதியர், பௌத்தர், சமணர், சைவர், வைணவர் முதலிய எல்லாச்சமயத்தவரும், அவரை, 'நம் சமயத்தவர்', 'நம் சமயத்தவர்' என்று கொள்வர். பாவலர் சடகோபர் திருவாக்கை நோக்குவாராயின், அவரை 'நம் பாவலர்' என்று பாடுவர். தத்துவ ஆராய்ச்சியினர், அவரை 'நம் தத்துவ மூர்த்தி' என்று தழுவுவர். காய்தல் உவத்தல் அகற்றி, உண்மை ஆராயப்புகும் எவரும், மாறனாரை 'நம்மவர்' என்று வழிபடுவர். உலகத்துள்ள அனைவரும் 'நம்மவர்' என்று ஆழ்வாரைப் போற்றும் பொருட்டு, எம்பெருமான் 'நம்மாழ்வார்' என்று அவரை ஆட்கொண்டார் போலும்! நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ, ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தார்க்கோ மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டார்க்கும், எல்லாச் சமயத்தார்க்கும், எல்லா இனத்தார்க்கும் உரியவர்.

எல்லாரும் 'நம் ஆழ்வார்' என்று போற்றும் ஒரு பெரியாரை அளித்த தமிழ் நாட்டை மனத்தால் நினைக்கிறேன்; வாயால் வழுத்துகிறேன்; கையால் தொழுகிறேன். தமிழ் நாடளித்த பெருவாழ்வை, 'என் ஆழ்வார்' என்று வணங்கி, என்னளவில் இன்புறாது, உலகவரையும் உளப்படுத்தி, அவரோடு 'நம் ஆழ்வார்' என்று வணங்குகிறேன்.

நம்மாழ்வார் தமிழ் நாட்டை ஓம்பக்கொண்ட முறைகள் பெரிதும் போற்றத்தக்கன. நம்மாழ்வார் போன்றோர் கொண்ட முறைகளின் திறத்தால் இன்னும் தமிழ் நாடு அழிவுறாமலிருக்கிறது. உலகத்தில் எத்துணையோ நாடுகள் தோன்றி நின்று அழிந்தன. இந்நாளில் மிகச் செல்வாக்குப் பெற்றுள்ள சில நாடுகளும் அழிவுறுங் குறிகள் தோன்றிவருகின்றன. அறிவால் - அன்பால் - இறையருள் நாடிக் கோலப்படும் நாடுகள் வீழ்ந்துபடல் அரிது. விலங்கியல்பால் - மூர்க்கத்தால் - வாணிபத்தால் - அரசியலால் - கட்டப்படும் நாடுகள் எளிதில் வீழ்ந்துபடும். நமது தமிழ்நாடு எத்துணையோ இடர்களுக்கு உட்பட்டும் இன்னும் வீழ்ந்துபடாமல் நிலவி வருகிறது. இதற்குக் காரணமென்னை? காரணம், தமிழ்மக்கள் அன்புக் கால் கொண்டு, அறிவுச் சுவரெழுப்பி, இன்பத்தமிழ் நிலையங் கோலினமையாகும். அந் நிலையத்தில் அருள்மனங்கமழ்ந்த வண்ணமிருக்கிறது. இவற்றால் தமிழ்நாடு கட்டப்பட்டமையால், அஃது இன்னுங் குலையாமல் நிலவா நிற்கிறது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழ்நாட்டை ஓம்பினவருள் ஒருவர் நம் ஆழ்வார்.

நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையை ஆராய்ந்தால், அதனிடை அவர் கொண்ட முறைகள் புலப்படும். அவர் தமிழ்நாட்டை இறையுணர்வால், அன்பால், இன்பால், பொதுமையால், அழகுப் பாக்களால், இன்ன பிறவற்றால் ஓம்பினர். இனி அம் முறைகள் மீது கருத்துச் செலுத்துவோம்.

***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...

Saturday, September 19, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - முன்னுரை

தமிழ்நாடும் நம்மாழ்வாரும்


ஆக்கியோர்:
திருவாளர் - திரு. வி. கலியாணசுந்தரனார்


பாரி நிலையம்
184.பிராட்வே.சென்னை.600108

***

முதற்பதிப்பு: 1923
நான்காம் பதிப்பு: 1949
ஐந்தாம் பதிப்பு: 1969
ஆறாம் பதிப்பு: 1993




விலை: ரூ. 12 - 00



அச்சிட்டோர்:
ச்ரி வெங்கடேஸ்வரா அச்சகம்
7/40, கிழக்குச் செட்டித் தெரு,
பரங்கிமலை, சென்னை - 16.


***

முன்னுரை

தமிழ்நாடென்பது ஒரு தனி நாடு. அந் நாட்டுக்கெனத் தனிமொழி, தனி வழக்க ஒழுக்கங்கள் முதலியன உண்டு. பிற நிலங்கள் நாடாதற்கு முன்னரே, தமிழ்நாடு தன் முயற்சியால் தனக்கெனச் சிறப்பாக இலக்கிய இலக்கணம், மருத்துவம், சோதிடம், வேதம் முதலியன வகுத்துக் கொண்டது. ஈண்டுத் தமிழ்நாட்டுக்கு வேதம் - மறை சிறப்பாக இருந்தது என்பது கருதற்பாற்று.

அப் பண்டை மறை இறந்துபட்டதென்று தமிழ் மக்கள் கூறுப. இக் கூற்றை வலியுறுத்தப் பழந்தமிழ்நூற்சான்றுகளும் உள்ளன. இந்நாளில் தமிழ் மக்கள், நால்வர் அருளிய தேவார திருவாசகங்களையும், ஆழ்வார் பன்னிருவர் அருளிய நாலாயிரப் பிரபந்தத்தையும் தங்கள் வேதங்களென்று போற்றுதல் எவரும் அறிந்ததொன்றே.

அடியேன் அரசியல் தொண்டில் இறங்குவதற்கு முன்னர்த் தமிழ் வேதங்களில் ஏதாவதொன்றை நாடோறும் ஓதுவது வழக்கம்; ஓதும் வேளையில் ஆராய்ச்சிக்குரிய பாக்களின் பாங்கர் குறிப்புக்கள் இடுவதுண்டு. அக் குறிப்புக்களைத் திரட்டிப் பின்னர் ஆராய்ச்சி முறையாகச் சில நூல்கள் இயற்ற வேண்டுமென்பது எனது நோக்கம். அரசியல் தொண்டில் யான் இறங்காதிருப்பின், எனது நோக்கம் ஒருவாறு நிறைவேறியிருக்கும்.

1921-ம் வருடச் 'சுதேசமித்திரன்' அநுபந்தத்தில் 'நாயன்மார்' என்னும் சிறு கட்டுரை ஒன்று எழுதினேன்; அதன்கண் அடுத்த ஆண்டு - அதாவது 1922-ம் ஆண்டு - ஆழ்வாரைப் பற்றி எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். போதிய ஓய்வின்மையால் நம்மாழ்வார் ஒருவரைப் பற்றி மாத்திரம் எழுதலாமென்று பின்னர் எண்ணினேன். ஒருவரைப் பற்றிச் செவ்வனே எழுதவும் போதிய ஓய்வு நேராமையானும், ஒரு வருட அநுபந்தம் விரிவுக்கு இடந்தாராதாகலானும் நம்மாழ்வாரைப் பற்றி யான் எடுத்து வைத்த குறிப்புக்கள் சிறு கட்டுரையில் அடங்காவெனத் தோன்றினமையானும், கால நிலையை உற்று நோக்கித் 'தமிழ் நாடும் நம்மாழ்வாரும்' என்னும் இக் கட்டுரையை வரையலானேன்.

இதற்கு முன் 'தேசபக்தன்', 'சுதேசமித்திரன்' என்னும் பத்திரிகைகளின் வருட அநுபந்தங்களில், யான் எழுதிய 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்', 'என் கடன் பணி செய்துகிடப்பதே', 'நாயன்மார்' என்னும் கட்டுரைகள், நூல் வடிவாக வெளிப்போந்து தமிழ் நாட்டில் உலவுவதைக் கண்ட 'சாதுரத்ந சத்குரு' புத்தக சாலையார், அவைகளைப் போல இக்கட்டுரையும் நூல் வடிவாய் உலவ வேண்டுதென்று விரும்பிக் கேட்டனர். அவர் விரும்பியவாறே 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் இக் கட்டுரைய நூல் வடிவாக்கினேன்; முதற் பதிப்பு 'மித்திரன்' அநுபந்தத்தில் உள்ளவாறே வெளியிடப்பட்டது.

இரண்டாம் பதிப்பு 1934-ம் ஆண்டில் வெளி வந்தது. அப் பதிப்பில் சில புதுப் பொருள் சேர்க்கப்பட்டன; பொருள்கள் முறைப்படுத்தப்பட்டன; தமிழ் நாடு எது என்பதும், நம்மாழ்வார் அந் நாட்டை எவ்வாறு வளர்த்தார் என்பதும் சுருங்கச் சொல்லப்பட்டன; இறை வித்து என்பது இறைநிலை, அட்ட மூர்த்த விளக்கம், இயற்கை இறை, இயற்கை உருவம், அவதார நுட்பம், மும்மூர்த்திகளின் நிலை, வழிபாடு, சமரசம், பாட்டியல் முதலியன விளக்கப்பட்டன. இவை யாவும் ஆழ்வார் திருவாக்கை அடிப்படையாகக் கொண்டே நிறுவப்பட்டன.

இந் நான்காம் பதிப்பில் புதுப்பொருள் சில சேர்க்க எண்ணியிருந்தேன். அவ்வெண்ணம் கண் படலத்தால் தகையப்பெற்றது. என் செய்வேன்! எல்லாம் ஆண்டவன் அருள்.

தமிழ் நலம் கருதுவோர்க்கு இந்நூல் தீஞ்சுவை பயக்குமென்பதில் ஐயமில்லை. தமிழர் இந் நூலை ஆதரிப்பாராக.

சென்னை
30 - 11- 1949 திருவாரூர் வி. கலியாணசுந்தரன்

***

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாய்இமை யோர்தலைவா
மெய்ந்நின்று கேட்டரு ளாய்அடியேன் செய்யும் விண்ணப்பமே.

- நம்மாழ்வார்.

Sunday, September 13, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 14

16. அவள் இவள் உவள் என அறிதல் - இவ்வாறு இருடிகளையும் திருமந்த்ரத்தையும் உலகுய்யப் பயந்த அத்தகையள் ஸரஸ்வதியென இலக்குமியென ஒருபடியாகத் துணிதல் எ-று. உவள் - உகாரார்த்தமா யுள்ளவள்; இலக்குமி என்பது திருமந்த்ரார்த்தத்தால் ஸம்ப்ரதாயஸ்தர் பலரும் நன்கறிவர். அவள் ஒழிந்த இவள் ஸரஸ்வதி என்பது தெள்ளிது. இது பிரமன் மகளாதலானும் நன்கறிந்ததாம். உபகாரஸ்ம்ருதி செய்ய வேண்டுதலின் அறிதல் இன்றியமையாதென்று கருதிக் கூறினார். பத்தெழுத்தினையும் உலகில் வெளியிட்ட இருடியர் இப்பதின்மர் எனக் கருதினாரோ என ஊகிக்கவும் இடனுண்டு. இருடி, மந்த்ரம், தெய்வம் மூன்றும் ஸர்வதா உபாதேயமாகக் கடவன வென்பது நம் பெரியோர் திருவாக்காதலான், அவற்றையே இவரும் ஞாபிக்கின்றார் எனக் கொள்ளலுமாம்.

17. துவளறு காட்சிப் புலவரது கடனே - துவட்சியற்ற அறிவினாற் புலவரென்று பெயர்சிறந்தாரது கடப்பாடேயாம் எ - று.

புலவரது கடன் என்றது, மஹாபாரதத்தில் 'வித்வத் ஸம்ரக்ஷணம்' என ஓர் பகுதியுண்டு - அதன்கண், வித்வான் அஷ்டாக்ஷர ஜபபாராயணனாக இருத்தல் கூறப்பட்டுள்ளது. அவ்வுண்மையை அச்சங்கப்புலவர்க்கு அறிவுறுத்துவாராய்க் கடன் என்றுரைத்தருளினாரென்க. துவளல் - வாடுதல். துவளறு காட்சி - யதாவஸ்திதஞானம். அஃதாவது பொருளியல்புள்ளவா றுணரும் நுண்ணறிவு. புலவர் என்புழிப் புலம் அறிவாதலிற் காட்சிப் புலவர் என்பதற்கு இவ்வாறு கூறப்பட்டது. அன்றியும் இச்சங்கப்புலவர் ஸரஸ்வதி அம்சமென்ப வாதலான் அவள் பயந்த இருடியரையும், இலக்குமியின் வடிவாகிய அவளே பயந்த திருமந்த்ரத்தையும், அது கூறும் வாசுதேவ தருவையுமல்லது தஞ்சம் வேறில்லையென்றும் உய்த்துணர வைத்தவாறாம்.

'பரமாத்ம சக்தி பலபல படியாகக் கேட்கப்படுவது' என்பது வேதமாதலின், அவள் இலக்குமியாகவும் ஸரஸ்வதியாகவும் நூல்கள் கூறுமென் றுணர்க. நாமங்கையே, நாவினுணின்று மலரு ஞானக் கலைகளுக்கெல்லாம் ஆலியும் ஆக்கையும் இறைவன் றானே (திருவாய் 1, 9, 8) என்று ஞாபித்து, அவ்விறைவனையும் அவள் பரிகரத்தையும் பாடுக என்று அருள் செய்தாள் எனக் கருதி உபகாரஸ்ம்ருதி பண்ணிய பெரியாரும் நம் ஆழ்வார்களி லுண்டு.

'நாம்பெற்ற நன்மையு நாமங்கை நந்நெஞ்சத்
தோம்பி யிருந்தெம்மை யோதுவித்து - வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்
றருணீர்மை தந்த வருள்'

என பூதத்தார் அருளிச்செயலானறிக. ஸரஸ்வதியே வேத மந்த்ரகாரிணியென்று தக்கயாகப்பரணி உரையாசிரியர் உரைப்பர் (தாழிசை, 593). இவற்றாற் பயந்தவள் இவள் என அறிதல் கடனென்றார்.

இனி நாமங்கையும் அறிந்தோதற்கரிய பொலிவுடையன் இறைவனென்று பாடியருளிய பெரியாரு முண்டு. இதனை 'நாமங்கை தானு நலம்புகழ வல்லளே, பூமங்கை கேள்வன் பொலிவு' (மூன்றாந் திருவந்தாதி, 57) என்பதனால் அறியலாம். தான் நன்கறியாததொன்றை உலகிற்கோதவல்லவள் இவளில்லை யன்றே? ஆதலால் வித்யாலக்ஷ்மியாகிய பூமங்கை தான் தன்கேள்வன்படி உணரவல்லள்; உவள்தான் நம்வினை தீர்த்து அவனை உணர்த்தவல்லள்; ஆதலான் 'உவளென அறிதல் கடன்' என்றார். இவ்விருவரும் பரமாத்ம சக்தி பேதமாதலின் எங்ஙனம் அறியினும் பயனுண்டென்பது கருத்து.

இனி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் எவள் அவள் பிரமற்கு மகளென மனையாட்டியென அறிதல் புலவர் கடன் என்றாரென்றலும் ஒன்று.

பராசக்தியியல்பு பலபடியாதல் பிறர்க்கு மொக்கும். இதனை 'அவளத்தனா மகனாந் தில்லையான்' எனத் திருக்கோவையினும் 'அனகநாடற் கெம்மன்னை, மனைவி தாய் தங்கை மகள்' எனச் சிதம்பரச் செய்யுட்கோவையினுங் கூறுதலானுணர்க. ஸரஸ்வதி பரமாத்மசக்தி யென்பதும் அவள் பிரமனுக்குப் புத்திரியாயினாள் என்பதும் தொன்னூற் துணிபு. இவ்வாறே மஹாபாரதம் சாந்திபர்வம் மோக்ஷதர்மத்தில் 'பிரமாவின் புத்திரியாகிய என்னுடைய ஸரஸ்வதீதேவியானவள் தவறாதவள், சத்தியமுள்ளவள்' எனப் பகவான் அருளிச்செய்தலானும் உண்மையறிக. இனி,

'கண்ணன் கழலிணை, நண்ணு மனமுடையீர்
எண்ணுந் திருநாமந், திண்ண நாரணமே' (10,5,1)

என்னுந் திருவாய்மொழி எழுதிய திரு ஏட்டினைச் சங்கப்பலகையின்மேல் வைக்க அப்பலகை அத்திருவேட்டளவிற் சுருங்கிப் பிறர் இதனோடொக்கவிருக்க இடந்தாராது இதன் தெய்வச்சிறப்புணர்த்தியது என்று குருபரம்பரையிற் கேட்கப்படுதலான், அதற்கியைய, அப்புலவர் ஆராய்ந்து துணிய எழுதியருளிய இத்திருப்பாட்டும் அத்திருநாம மந்த்ரத்தையும் அதைப் பயந்த பராசக்தியையும் அதற்குரிய பரதெய்வத்தையும் தலைமையாகக் கொண்ட தென்று உய்த்துணர்ந்து கொள்க.

பரமகாருணிகரான நம்மாழ்வார் தாம் பெற்ற பேறு எல்லாப் புலவர்க்குமாமாறு, ஸகல சாஸ்த்ரார்த்தங்களும் ஆடிநிழலினடங்கவைத்து மெய்ப்பொருள் தேற்றிய வித்தகத் தனிப்பாட்டு இஃதாகும். இங்ஙனம் வடநூற்பொருளையே யுடைய தமிழ்ப்பாட்டாதலின் இதனை 'ஆரியத் தமிழ்' என்று கூடலழகர்புராணமுடையார் கூறினாரென்க. வேதப்பொருளேயுடைய தமிழை 'வேதத் தமிழ்' என்பதுபோல இதனையுங் கொள்க.

'ஈயா டுவதோ கருடற் கெதிரே
யிரவிக் கெதிர்மின் மினியா டுவதோ
நாயா டுவதோ வுறுமிப் புலிமுன்
நரிகே சரிமுன் னடையா டுவதோ
பேயா டுவதோ வெழிலூர் வசிமுன்
பெருமா னடிசேர் வகுளா பரணன்
ஓரா யிரமா மறையின் றமிழின்
ஒருசொற் பொருமோ வுலகிற் கவியே'

என்பது சங்கத்தார் இவ்வரிய பாசுரத்தை வியந்து ஆழ்வார் திவ்யபிரபந்தத்தைப் புகழ்ந்துபாடிய பாட்டாகும்.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

Friday, September 11, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 13

15. எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் - எழுவரும் மூவருமாகிய பதின்மர் ப்ரஜைகளைப் பெற்றனள் என்று வியப்புச் சுவைபட உரைத்தார். தசப்பிரமாக்களைப் புத்திரராக அடைந்தாள் என்பதைக் குறித்ததாம். காமாநுபவபோக ஸூசகமான முலையில்லாளாகியும், காமாநுபோகந் துய்த்தற்குரிய ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவவிசேட மில்லாதவனைக் கலந்து - வேதம் ஒவ்வொரு சுமங்கலையும் அடைய வேண்டி ஆசீர்வதித்த - பத்துமக்களையும் பயந்தனள்; இது வியப்பாகும் என்பதாம்.வேதம் பத்து மக்கள் பெறுபடி வாழ்த்தியது 'தசாஸ்யாம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி' என்னும் வாக்யத்தாலறிந்தது; 'பதின்மர்மக்களைப் பெற்று பதியைப் பதினோரா மகவாகச் செய்க' என்பது இதன் பொருள்.

இவள், பிரமாவின் சக்தியாய் அவன் உள்ளத்தமர்ந்து அவன் மானஸபுத்ரர்களான பிரமர்பதின்மரை உண்டாக்கியபடியால் இங்ஙனங் கூறினார். பிரமதேவனுடைய புத்ரர்கள் பதின்மர் என்பதும், அவர் இவரிவர் என்பதும் ச்ரிமத் பாகவதம் 3 - ஆம் ஸ்கந்தம் (12 - 22) 'மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்த்யர், புலஹர், க்ரது, ப்ருகு, வஸிஷ்டர், தக்ஷர், பத்தாமவராகிய நாரதர்' என்பதனால் அறிக. இவருள் ப்ருகு, மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது என்னும் இவர் ஸப்த ப்ரஹ்மாக்கள் என்று ச்ரி பாகவதத்தில் (11 - 14 - 4) ஒரு தொகையாக வழங்கப்படுதலான் எழுவர் மூவர் என்று பிரித்துரைத்தார். பத்தினை மூன்றும் ஏழுமாக எண்ணிக் கோடலும் பண்டை வழக்கேயாகும். 'முடிப்போது மூன்றேழென் றெண்ணினான்' (மூன்றாந் திருவந். 77) என்று பெரியார் பணித்தலானறிக.

பிரமசக்தியாய்ப் பிரமனினைவி லமர்ந்து இப்பதின்மரையுந் தோற்றுவித்தலாற் பயந்தனள் என்றார். 'திதியின் சிறுவர்' என்புழிப் போலச் சிறுவர் என்பது மக்களுக்காயிற்று.

உலகத்தை அபிவிர்த்தி செய்யவும், உயிர்கட்கு ஞானோதயஞ் செய்யவும், ஆசாரத்தை அநுஷ்டிப்பித்துத் திருத்தவும் இவரைப் பயந்தனள் என்று கருதிக் கூறினார். 'மலர்மிசை முதல்வனு மற்றவனிடைத்தோன்றி, யுலகிருளகற்றிய பதின்மரும்' எனப் பரிபாடலின் வருவது கொண்டு இதன் உண்மையுணர்க. 'சிந்தாதேவி' (சிலப்பதிகாரம்) என்பதும் புலமாமகள் என்பதும் (சிந்தாமணி) இவள் பெயராதலால், பிரமன் நினைவிலமர்தல் அறிக. இப்பதின்மரும் பிரமன் நினைவிற்றோன்றியோர் என்பது 'விதியின் மக்களும்' (பரிபாடல், ௩) என்புழி 'ஆதிப்பிரமற்கு நினைவிற்றோன்றிய பிரமர் பதின்மருள்' எனப் பரிமேலழகர் உரைத்ததனான் உணரலாம்.

இனி இரட்டுறமொழிதலான், ஸரஸ்வதியாகிய வித்யா லக்ஷ்மி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் என்று கொண்டு, மூன்றும் ஏழுமாய் அக்ஷரவொலிவடிவாய் நுண்ணியவாய் திருமந்திரம்பத்தெழுத்துக்களையும் உலகுய்ய உதவினள் எனினும் நன்கு பொருந்தும்.

அகார உகார மகாரமாகப் பிரிப்புண்பதுபற்றி ப்ரணவத்தை 'த்ர்யக்ஷரீ' 'த்ரிவ்ருத்' என வழங்குதலான் அஃது மூன்றாதல் தெள்ளிது. எஞ்சிய 'நமோ நாராயணாய' என்பது ஏழாதல் கண்டுகொள்க. அச்க்ஷரங்கள் தேவதைகளின் வடிவாதலும் உயர்த்தியும் நோக்கி உயர்திணையாற் கூறினார். 'இசைத்தலுமுரிய வேறிடத்தான' (தொல்காப்பியம்) என்பது, இலக்கணம்.

இங்ஙனம் மறைத்துக் கூறியது, மறையிற் றலைசிறத்தல் பற்றியும் இதன் கௌரவம் பற்றியும் எனக் குறிக்கொள்க. இதன் அநுக்ரக விசேடம் ப்ரஹ்லாதாழ்வான் முதலியோரிடம் நன்கு காணலாம். அக்ஷரங்கள் தெய்வவடிவே என்பதும் அவ்வவ் வக்ஷரங்கட்கு அதிதெய்வம் இவையென்பதும் அக்நிபுராணம் கூறிற்று. தமிழிலும் பாட்டியலிற் காணலாம். மந்த்ரகாரிணி ஸரஸ்வதி என்பதுபர்றி இவ்வாறு கூறப்பட்டது.