Saturday, June 27, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 7

7. மூவழி முப்பழம் முறைமுறை தருதலின்: மூவழி - ஐச்வர்யகதி, ஆத்மகதி, பரமாத்மகதி என்ற மூன்று நெறியில்: அசித்து சித்து பரதெய்வம் என்ற மூன்றேயுண்மையால் அவற்றை யடையும் நெறிகளும் மூன்றேயாயின. ஐச்வர்யம் - இனிய தேஹவிசேஷமும் அஃது அநுபவித்தற்கினிய தாரக போஷக போக்யங்களும் ஆக அசித்துப் பரிணமிப்பதேயாகும்; இவை இந்திரச் செல்வம் முதலியன என்க. ஆத்மகதி என்பது கைவல்யமார்க்கம்; கேவலம் ஆத்மாவை அநுபவித்தற்குரிய வழி எ-று. பரமாத்மகதி - நிரதிசயாநந்தமான மோக்ஷ மார்க்கம். இந்நெறிகளிற் செல்லும் அதிகாரியும் மூவகையினர் என்பர். ஆர்த்தனும் அர்த்தார்த்தியும் என் இருவகைப்படும் ஐச்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும், மோக்ஷார்த்தியுமென மூவகைப்படுதல் ச்ரிகீதை ஏழாம் அத்யாயத்திற் கண்டது. இம்மூன்றதிகாரிகட்கும் ஈச்வரனைப் பக்திபூர்வகமாக அடைதல் வேண்டப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு மரத்திலுண்டாகும் பல்வகைக் கனிகளை அடைய விரும்பின பலரும் அம்மரத்தை ஆச்ரயிப்பது இன்றியமையாததோ, அங்ஙனமே இம்மூன்றதிகாரிகளும் தாம்தாம் அடைய விரும்பிய பலன்களை எய்தற்குப் பலப்ரதாதாவாகிய ஈச்வரனை அடைதல் இன்றியமையாததாகுமென்றுணர்க. அவர் கருதிய பலன்கள் வேறேனும், இம்மூவரும் ஆச்ரயிக்கவேண்டிய இடம் ஒன்றேயாதல் நன்கு துணிக. இதனாலன்றே, ஆளவந்தாரென்னும் பெரியார் 'பக்தியோகமே இம்மூன்று பலன்களுக்கும் காரணம்' என்று கீதார்த்தஸங்க்ரஹத்தில் (௨௭) விசதமாக அருளிச்செய்தார். இதனை, 'பக்தியோகஸ்ததர்த்தீசேத்' என்பது முதலாக வருமிடங்களிற் கண்டுகொள்க. ச்ரி கீதாபாஷ்யத்திலும் ச்ரி பாஷ்யகாரர் 'தேஷாம் ஜ்ஞாநீ' என்கின்ற ச்லோக விளக்கத்தில் 'ஞானிக்கு என்னொருவனிடத்திற் பக்தி, மற்றை இருவர்க்குமோவெனின் தங்களிஷ்ட பலத்திலும், அவற்றிற்கு ஸாதனமாகையாலே என்னிடத்திலும் பக்தி' என்று பக்தியையே இம்மூன்றற்கும் ஏதுவாக்கி அது வித்யாஸ பலன்றருவது இவ்விதமென்றுங் கூறியருளினார்.

மஹாபாரத்தத்திலும் 'சதுர்விதா மமஜநா பக்தா:' என்று, ச்ரிகீதையிற் சொல்லியபடியே, ஐச்வர்யார்த்தியை ஆர்த்தன், அர்த்தார்த்தி என இருவகைப்படுத்து மற்றை யிருவரொடுங் கூட்டி, நால்வரும் என் பக்தர்கள் எனக்கூறியுள்ளதும் காண்க. இவற்றாற் கர்மத்தையே முக்யமாகக் கொண்டு அதனடியாகப் பிறந்த ஞானந் துணையாக ஐச்வர்யங்களை விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்திமார்க்கம் ஐச்வர்ய கதி என்றும், ஞானத்தையே முக்யமாகக் கொண்டு கர்மந்துணையாக ஆத்மாவை அடைய விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்தி மார்க்கம் கைவல்யகதி என்றும், கர்மஞானங்கள் துனையாக ஈச்வரனையே யடையவிரும்பி அதனையே உபாஸிக்கும் ஏகபக்திமார்க்கம் பரமாத்மகதி அல்லது மோக்ஷகதி என்றும் நன்கு துணிந்துகொள்க. 'நோற்ற நோன்பிலேன்' என்னுந் திருவாய்மொழி யீட்டில் நம் பிள்ளை யாசிரியர் 'ஞான கர்மங்களிரண்டுங் கூடினாற் பக்தி கூடியல்லது நில்லாது' என்று உரைத்ததனையும் தெளிய நோக்கிக் கொள்க. இதனாலன்றே ஆளவந்தார் கீதார்த்த ஸங்க்ரகத்தில்,
'மற்றுமோர் தெய்வம் வழிபடா வேகாந்தம்
சொற்றவதி காரிகட்குச் சூழ்பொதுவாம்' (மொழிபெயர்ப்பு)
என்று திருவுளம் பற்றினார்.

முப்பழம் - ஐச்வர்ய சுகம், கைவல்ய சுகம், மோக்ஷ சுகம் என்ற் மூன்று கனிகளை எ-று. இம்மூவகையை 'ப்ருஹ்மணோஹி ப்ரதிஷ்டாஹம்' என்னுங் கீதையின் பாஷ்யத்திற் காண்க.
'இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற்
கெவ்வேதுவின் யான்றங்கிட னவ்வேதுவி னழியா
அறனால்விளை தற்கும்மொரு முடிபேதுணி புடையா
ரடையின்ப மதற்குந்நிலை யிடனாகுவ லம்மா'
என்பது கீதைப்பாடல். முறைமுறை - அவரவர் அர்த்தித்த கிரமங்களில் எ-று. அதிகாரியும் பலராய் அவர் விருப்பமும் பலவாதலின் முறைமுறை என்று அடுக்கினார்.
'மறைமுறையால் வானாடர் கூடி - முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தா லொவ்வாதே' (பெரியதிருவந்தாதி - 61)
என்பது போலக் கொள்க. முறை என்று நூற்குப் பெயராதலான் முறை முறை என்பது நூன்முறையென்றால், அவனிட்ட வழக்கு சாஸ்த்ரம் என்பதாகாது சாஸ்த்ரமிட்ட வழக்கிலே அவன் தருவதாய் இறைவனுக்குத் தலைமை கூறாது சாஸ்த்ரத்திற்கே அவனினுமிகுத்துத் தலைமை கூறுவதாக முடியும். அன்றியும் சாஸ்த்ரம், பரதெய்வத்திற்கும் அதன் செயற்கும் ஞாபகவேதுவல்லது காரகவேது ஆகாமையு முணர்க 1. சாஸ்த்ரத்திற்கும் பரதெய்வம் எட்டாதது என்று கூறுதலானும் பரம்பொருளின் தலைமை யுணரப்படும்.

தருதலின் = தருதலான் எ-று. தருதற்கண் எனினும் அமையும். தருதலான் ஒன்றுண்டு ஒண்சுவை தருவது என இயையும். ஈதலின், கொடுத்தலின் என்று உயர்த்தியும் தாழ்ச்சியும் தோன்றக்கூறாது 'தருதலின்' என ஒத்தோன் கூற்றாற் கூறியது, இறைவன் தன்னடைந்தார்க்குத் தன்னையே ஒக்க அருள் செய்தல் குறித்த தென்றுணர்க. 'வீடும்பெறுத்தித் தன்மூவுலகுக்குந்தரு மொருநாயகமே' (திருவாய்மொழி ௩ - ௧0 - ௧௧) என வரும் ஆழ்வார் திவ்யஸூக்திகளால் இதனுண்மை யுணர்க. ஒருநாயகம் ஈச்வரனுடையதாதல் தெள்ளிது. தன்னொக்க அருளலால் அஃது இவனுக்காயிற்றென்று உணர்க. தன் மூவுலகு என்றதனால் ஐச்வர்யம் ஈச்வரனதாதல் தெளியலாம். ஐச்வர்யம் என்ற சொல்லே இவ்வுண்மையை விளக்கும்.

--

1. 'வாய்மொழியோடை மலர்ந்த தாமரைப்பூ' என வரும் பரிபாடலிற் பரிமேலழகர் 'தாமரைப்பூ படைப்பிற்கு முதலாகவந்து மலரும் என்பதற்கு வேதம் ஞாபகவேதுவாதலின்' எனவுரைத்தது காண்க.

Thursday, June 25, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 6

6. தொன்மிகு பெருமரம் என்பது அநாதியே மிகுத்த பெரிய பரப்ருஹ்மமாகிய வ்ருக்ஷம் எ-று.

காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவாலும் பரிச்சேதிக்கப்படுவதொன்றன்றே ஒருவர் அறிவிற்கு விஷயமாவது? இஃது அம்மூன்று பரிச்சேதமும் கடந்துள்ளதென்று இவ்விசேடண்ங்களாற் கொள்ளவைத்தவாறாம். தொன்மரம் என்றதனால் காலவளவையைக் கடந்ததென்றும், மிகுமரம் என்றதனால் தேசவளவையைக் கடந்ததென்றும், பெருமரம் என்றதனால் வஸ்து அளவையைக் கடந்ததென்றும் தெளிவித்தது கண்டுகொள்க. 'ப்ருஹத் ரூப:' என்னுந் திருநாமம் பற்றிப் பெருமை வஸ்துபரிச்சேதங் கடந்ததுக்கு ஆயிற்று. 'இனைத்தென வெண்வரம்பறியா யாக்கையை' என்பது பரிபாடல். இதற்குப் பரிமேலழகர் 'இனைத்தென எண்ணும் எண்ணிற்கு எல்லை யறியப்படாத வடிவினை யுடையை' என்றுரைத்தலானறிக. இக்காலத்ததென்றும், இவ்விடத்ததென்றும், இப்படித்தென்றும் அறியலாகாததென்று குறித்ததெனக் கொள்க.

மரம் என்பது உவமையாற் போந்த பெயர்; தன்னடி நீழலிற் புக்கார் பயன்றுய்த்து வாழ நிற்கும் மரம் போலுதலான் இறைவனை மரமாக்கினார். 'அருஞ்சுரத்து மரம் போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு' என்பர் நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி, 3). 'வாஸுதேவதரு' என்ப. வ்ருக்ஷ: என்பது, இறைவன் ஆயிரநாமத்துளொன்றாதல் காண்க. ச்ரி பராசரபட்டர் 'உயிர்கட்கு ஜீவனமாகி அவ்வுயிர்கள் தனக்கிழைக்கும் அபராதங்களைப் பொறுத்து நிற்றலான் மரம்' என்று பெயராயிற்றென்றார். மூன்றுலகிற்கும் நிழல் செய்தலான் இறைவன் 'பூர்புவஸ்வஸ்தரு:' என்று பெயர் சிறப்பன் என்பதும் அவ்வாயிர நாமத்தே கண்டது. ப்ரமாணங்களிற் றலைசிறந்த வேதம் 'வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவிதிஷ்டத்யேக:' என்று முழங்கிற்று. ஒருவன் மரம் போல அசையாது திவ்யலோகத்திலுள்ளானென்பது இதன் பொருள். வால்மீகி பகவானும் தாரை கூற்றால் 'நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூநாம்' (ஸாதுக்களுக்குப் புகலிடமான மரம்) என்று பெருமாளைக் கூறினான். 'ப்ரஹ்மதரு' என்று ப்ரஹ்லாதாழ்வான் கூற்றில் வைத்துப் பராசர பகவான் வெளியிட்டு அதனினின்று முக்தியென்னும் பழம் விழுவதென்னுங் கருத்தால் 'முக்தி பல ப்ரபாத:' என விளக்கியருளியதையும் ஈண்டைக்கு நோக்குக. இவ்வாழ்வார் திருப்பாட்டிற்கு இப்பராசரர் கருத்தே உடன்பாடாகும்.

இம்முன்னோர் மொழி பொருளைப் போற்றியே இவ்வாழ்வார் 'மரம்' என்றாரென்க. 'என்னை ஆக்கிக் கொண்டெனக்கே தன்னைத் தந்த கற்பகம்' என்பதும் மரங்களினுயர்ந்ததாகக் கூறியதாகும்.

அன்றியும் ஈண்டு ச்வேதத்வீபத்து அநிருத்த மூர்த்தியை 'மரம்' என்றது, அம்மூர்த்தி பச்செனத் தழைத்த திருவடிவுடையனாதல் பற்றியென்று கொள்ளத்தகும். பரிபாடலின் கண் அநிருத்தமூர்த்தியைப் 'பைங்கண் மாஅல்' என்றதனையும் அதற்குப் பரிமேலழகர் 'பசிய உடம்பினையுடைய அநிருத்தனே' 1 என உரை கூறியதனையும் நோக்கித் தெளிக. பிற்காலத்தவரும் இக்கருத்தே தழுவி 'அத்தியின் மத்தியிலே ... நித்திரைகொள்ளுந் தமாலத்துருவன்' (அழகர் கலம்பகக் காப்பு) எனப்ப் பாடியதனையுங் காண்க. மஹாபாரதம் சாந்திபர்வத்தில் நாரதமஹருஷி ச்வேதத்வீபஞ் சென்று இம்மூர்த்தியை ஸ்துதித்த ஸ்தோத்திரத்தில் 'வநஸ்பதயே நம: (வனங்கட்குப் பதியாகிய பெருமரத்திற்கு நமஸ்காரம்) என வருதலும் ஈண்டு நினைக்கத்தகும்.

'மனிசரு மற்று முற்றுமாய்' என்னுந் திருவாய்மொழி யீட்டில் 'தடங்கடற் சேர்ந்த பிரானை' என்புழி நம்பிள்ளை ஆசிரியர் - 'திருப்பாற்கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதார 2 கந்தமிறே (அவதாரங் கிளைத்தற்குரிய கிழங்கு); வெள்ளத்தரவிற் றுயிலமர்ந்த வித்திறே' என்று அருளிச்செய்ததனையும் ஈண்டைக் கேற்ப நோக்கிக் கொள்க. ப்ரச்நோபநிஷத்தில் 'ஒரு விருக்ஷத்திற் பல பறவைகளுந் தங்கியிருத்தல்போல உலகெல்லாம் பரமாத்மாவினிடத்துத் தங்கியிருப்பன' என்பதனால் இஃது உவமையாற் போந்த பெயரென்பது அறியப்படும். விஷ்ணுபுராணத்தும், மகாவிஷ்ணு விருக்ஷம் என்றும், ச்ரிதேவி அதன்கட் படர்ந்த கொடி என்றும் பராசரபகவான் அருளிச் செய்தான் (1, 8). மரம் தன் பழத்தைத் தானுண்ணாது தன்னையடைந்த உயிர் உண்ணநிற்றல்போல இறைவனுண்மை உணர்ந்துகொள்க. 'பெருமரம்' என்புழிப் பெருமை தான் பெரியதாயிருப்பதனாலும், தன்னையடைந்ததைப் பெரிதாக்குதலாலும் உள்ளது என்பர். இதனை விஷ்ணுபுராணத்தில் ப்ருஹ்மசப்தத்திற்கு ச்ரி பராசர பகவான் 'பெரிதாதலானும் பெரிதாக்குதலானும் ப்ருஹ்மம் என்று அறியப்படுவது' என்று கூறியதனாலும் உணரலாம். வெண்மணற் பரப்பில் வேரும் வித்துமின்றி ஆரணுவாகிப் பிண்டம் பூத்த தன்னிலையறியாத் தொன்மிகு பெருமரம் என்க.

--

1. ஈண்டே 'பொன்கட்பச்சை' என்புழிச் 'சிவந்த உடம்பினையுடைய காமனே' எனவுரைத்துப் 'பச்சையென்பது ப்ரத்யும்நனென்னும் வடமொழித் திரிபு' என விளக்கியதனையும் நோக்கிக் கொள்க.

2. கந்தம் - கிழங்கு. அவதார கந்தம் - அவதார மூலம். கந்தம் மூலம் கிழங்கு மூன்று மொருபொருளன.

Saturday, June 13, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 5

5 - 6 தானே தன்னிலையறியா - ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தானேயும் தன் ஸ்வபாவமகிமை அறியலாகாத எ-று.

தன்நிலை - தன் தெய்வநிலை: 'தன் தெய்வநிலை' என்பது திருவாய்மொழி (3, 10, 6); அஃது அநந்த கல்யாண குணமுடைமை. அஃது அவனால் இவ்வளவென்றறியப்படுமாயின் அநந்தம் என்று முழங்கிய சாஸ்த்ரங்கள் வீணாகுமென்க. ஒருவன் தன்கண் அச்சமும் தன் வலியில் ஐயமும் உள்ள போதன்றே தன்னை அளந்தறியப்புகுவான்? அவ்விரண்டுமில்லாமையால் தன்னிலையை அளந்தறிதலே யில்லாமை அறிக. அசித்தினும், பெத்தர் முக்தர் நித்யர் எனப்பட்ட ஆத்மாக்களினும் வேறாய்ப் பிரிப்புண்டு அவற்றிற்கு ஈசனான தானே அறியலாகாத என்றவாறாம். அறியா மரம் என இயையும். 'தனக்குந்தன் றன்மை யறிவரியானைத் தடங்கடற் பள்ளியம்மானை' எனத் திருவாய்மொழியில் (8, 4, 6) வருவதான் இதனுண்மை யுணர்க. ஆண்டு, ஈட்டில் நம் பிள்ளையாசிரியர், இத்திருப்பாட்டின் கருத்தொடு பொருந்தவே 'ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தன்னாலுந் தன்னைப் பரிச்சேதிக்கப் போகாது ச்வேத த்வீபவாசிகள் ஆச்ரயிக்கைக்கு .... திருப்பாற் கடலிலே கண்வளர்ந்தருளினவனை' என வ்யாக்யானமிட்டது காண்க.

இனி யஜுர்வேத காடகத்தில் 'த்வமேவத்வாம் வேத்த யோஸி ஸோஸி (நீ யாராயுள்ளனை அவனாயுள்ளனை யென்று நின்னை நீயே யறிகிற்வை) எனவும், ச்ரிகீதையில் (10 - 15) 'நீ நின்னை ஸ்வயமாகவே நின்னறிவால் அறிகின்றனை' எனவும், பரிபாடலில் (3) 'நின்னைப் புரைநினைப்பினீயல துணர்தியோ' - நின்னை உயர்வுகூறக் கருதின் அது நீயே யுணரினல்லது பிறரானுணரப்படுதியோ (பரிமேலழகருரை) - எனவும் வருதலான் ஈண்டுத் தானே தன்னிலையறியா என்பது தன்னியல்பு தானே யறிந்து எனக்கருதினாரெனினு மிழுக்காது. இதற்கு அறியா மிகு மரம் என இயைக்க. இவ்வாறு பிறர் அறியாமைக்குக் காரணமிவையென, தொன்மிகுபெருமரம் என்று இப் பரப்ருஹ்ம வ்ருக்ஷத்தை விசேடிக்குமாற்றால் விளக்குகின்றார்.

Friday, June 5, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 4

4. நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பில் என்றது முத்துக்களை யொத்த வெண்மையான ஒளியையுடைய பரந்த மணற்பிரதேசத்தில் எ-று.

வெண்மையும், ஒண்மையும், குளிர்த்தியும், உயர்த்தியும், தூய்மையும், அருமையும் முதலிய சிறப்பால் நித்திலத்தன்ன என்றார். வெண்மணற் பரப்பு என்றது ச்வேதத்வீபம் எ-று. இது, திருப்பாற்கடலின் வடகரையிலுள்ள மஹா பரிசுத்தஸ்தலவிசேஷம். திருப்பாற்கடல் கொழித்த நித்திலத்திற்கும் இப்பரப்பில் வெண்மணற்கும் வேற்றுமை காண அரியதாய் ஒரே சுவேதமயமா யுண்மையால் இவ்வாறு கூறப்பட்டது. இதனைப் பாரதம் சாந்திபருவம் (343) 'பாற்கடலின் வடபாகத்திற் பேரொளி நிறைந்த ச்வேதத்வீபம் இருப்பது; அங்குள்ள மக்கள் சந்திரனையொத்த காந்தியினர்; நாராயண பராயணர்; அவ்வன்பர் புருஷோத்தமனை ஏகாந்த பாவனையாலடைந்தவர்; பொறிகளால் வேறொன்றும் நுகராதவரும், உண்ணாதவரும், அசைவற்றவரும், நறுமணங்கமழ்பவரும், ஏகாந்திகளு மாவர்', என வருவனவற்றா லறிக. இந்த த்வீபத்திற்கு நாரதமஹருஷியானவர் தெய்வகிருபையாற் சென்று ஈங்குள்ள அநிருத்தமூர்த்தியைப் பலபடியாக ஸ்துதித்ததும் பரமைகாந்திகளைத் தரிசித்து ஆச்சரியமடைந்ததும் பிறவும் அப்பருவத்தே கண்டு கொள்க. இதனை வைகுண்டமாகவும் உபசரித்து வழங்குவர். ச்வேத த்வீபம் = வைகுண்டம் என்று ச்ரிபாகவதத்தில் ச்ரிதர ஸ்வாமிகள் வ்யாக்யானமிட்டார்.

இனி ஸஹஸ்ரநாம த்யான சுலோகத்தில் 'க்ஷீரோதந்வத்ப்ரதேசே' என்பதில் திருப்பாற்கடல் வடகரையில் மணி விளக்கெடுக்கும் மணற்பரப்பில் நித்திலமாலையணிந்த அணையில் இம்மூர்த்தி எழுந்தருளி இருப்பது கூறுதலான், அதற்கியைய நித்திலப் பரப்பில் எனவும் அன்ன வெண்மணற் பரப்பில் எனவும் கூறினு மமையும். அன்ன வெண்மணல் - அத்தகைய வெண்மணல்.

***

5. வேரும் வித்தும் இன்றி = தான் நிலைபெறுதற்குக் காரணமான மூலமும், தானுண்டாதற்குக் காரணமான பீஜமும் தானேயன்றி வேறில்லாமல் எ-று.

வினைகளையே வேராகவும், அவ்யத்தத்தை வித்தாகவும், பிறவிகளைக் கிளைகளாகவும் கொண்ட ஸம்ஸார வ்ருக்ஷத்தின் (ச்ரிகீதை; விஷ்ணு புராணம் ௭ - ஆம் அத்யாயம்) இது வேறாய பரப்ருஹ்மவ்ருக்ஷம் என்பது தோன்ற வேரும் வித்தும் இன்றி என்றார். எல்லாப் பொருட்குந் தானே வேரும் வித்துமாகு மென்றவாறு. இத்தன்மையை,

'வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற
கார்முகில் போல்வண்ணன்' (திருவாய்மொழி, 2,8,10)

என்று பணித்தலானறிக. ச்ரி கீதையிலும் 'பீஜம்மாம் ஸர்வ பூதாநாம்' (எல்லாப் பிராணிகட்கும் வித்தாகிய என்னை) என்பதனால் எல்லா பிராணிகட்குந்தானே வித்தாயிருத்தலைப் பகவான் வெளியிட்டருளினான். 'எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்' 'தானோருருவே தனிவித்தாய்' (திருவாய்மொழி, 1 - 5 - 2, 4) என்று பணித்தல் காண்க. ச்ரி விஷ்ணுபுராணத்தில் ஸம்ஸார வ்ருக்ஷத்திற்கு அவ்யக்தத்தை வித்தென்று கொண்டு, வித்துண்டாதற்கு ஆகாயம் காலம் முதலிய காரணமாதல் போல, அஃதுண்டாதற்கு ச்ரி ஹரிபகவான் காரணன் என்பர் (ஏழாம் அத்யாயம் பார்க்க). இதனால் அவ்யக்தத்தின் பரிணாமத்திற்கு இறைவன் காரணனாதல் அறியலாம்.