Saturday, August 29, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 12

13. அவன் மகள் முலையிலி = அப்பிரமனுக்கு மகளாய்த் தோன்றிய ஸரஸ்வதி ஸ்தனமில்லையாயினாள் எ - று.

பிரமன் தவத்தால் அவன் திருமேனியிற் றோன்றினாள் என்றும், இவள் அவனுக்கு மகளேயாகவும் இவளெழிலான் மனங்கவரப்பட்டுக் காமித்தானென்றும், அது கண்டு பிரமபுத்திரராகிய மகருஷிகள் பிரமனை வெறுத்தனரென்றும் மத்ஸ்யபுராணமும் ஸ்ரீபாகவதமும் நன்குவிளக்குதலான், , இவள் பிரமனுக்கு மகளேயாதல் தெள்ளிது. தமிழில் மகள் என்பது மனைவிக்கும் பெயராதலின், பின் அவன் இவளை மனைவியாக விழைந்ததற்கும் பொருந்தவே 'அவன் மகள்' என்று ஈண்டுக் கூறப்பட்டது என்பது பொருந்தும்.

இவளை முலையிலியென்றது, இயலும் இசையுமல்லது வேறு ஸ்தனமில்லாமையா லென உய்த்துணரலாகும். 'ஸங்கீதமபி ஸாஹித்யம் ஸரஸ்வத்யா: குசத்வயம்' என வரும் வடமொழிவழக்கானுணர்க. ஸரஸ்வதி ஞானசக்தி என்பது நூல்களின் றுணிபு. 'ஞானமுதல்வி' என்பர். ஞானங் காமத்தைத் தொலைக்குமே யல்லது அதனை யுண்டாக்கமாட்டாது. 'கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ' என்று கம்பநாடர் பாடுதலானும் இஃதுணரலாகும். இங்ஙனங் காமஞ் செய்யாது ஞானமே செய்தலான் இவளை முதிர்ந்த மூதாட்டியாகவே வருணிப்பர். முலையின்மை காமமின்மைக்கு அடையாளமெனினும் பொருந்தும். 'முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற்றற்று' (திருக்குறள், 402) என்பதனான் இதனை யுய்த்துணர்க. முலையென்றது 'காமாநுபோகத்தை' என்று தக்கயாகப்பரணி உரைகாரர் வெளியிடுவதுங் காண்க. இவளையே பெரியபிராட்டியார் அமிசமான ஆத்மவித்யாரூபிணியாகக் கொண்டு உபாஸிக்குமிடத்து வ்ருத்தையாக வழங்குவது 'ஸாயம் ஸரஸ்வதீம் ச்யாமாம்; நமாமி விஷ்ணுதைவத்யாம் வ்ருத்தாம் கருடவாஹநாம்' என வருந் தியானத்தால் உலகம் அறிந்தது.

'நூல்வலையிற் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்' (நான்முகன்றிரு. 40) என்பதனாற் பெரியபிராட்டி வித்யாரூபிணியாதல் தெளியலாம். வாராமுலைமாதர் பேதையர் என்றும், வருமுலை மாதர் யுவதிகள் என்றும் வந்தமுலைமாதர் பேரிளம்பெண்டிர் என்றும், வந்து முலையில்லையாயினார் வ்ருத்தையள் என்றும் தெரிந்துகொள்க.
ஈட்டினரும் பதத்திற் சீயர் 'யௌவன சூசகமான முலையானவை' என உரைத்ததனாலும் இதனுண்மை யறியலாகும். (திருவாய்மொழி 4 - 6 - 10). பெரிய பிராட்டியார் ஆத்மவித்யாரூபிணியாதல் விஷ்ணு புராண ஸ்ரீஸ்துதியிற் கண்டது.

இவ்வாறு தலைவனுந் தலைவியும் முறையே தலையிலியும் முலையிலியுமாதலே யன்றி இத்தலைவி -

14. தானும் ஈனாள் ஈனவும் படாஅள் என்றது இவள் தானும் ஒரு ப்ரஜையைத் தன்னினின்று ப்ரஸவிக்கமாட்டாள், ஒருவராற் ப்ரஸவிக்கப்படவுமாட்டாள் எ - று.

ஈனாள்...படாஅள் என ஈண்டுக்கூறியதன் காரணம் நுணுகி நோக்கிற் புலனாம். எவ்விதத்தினும் எவரானும் தவறாதவன் என்றுணர்க. (மஹாபாரதம், சாந்தி 353). இவள் வாக்தேவியாய்ச் சப்தமே வடிவாயுள்ளவளாதலின் உலகிற் பெண்டிர்போலக் கருவுயிர்த்தலில்லை எ - று. இவள் வடிவான சப்தம் பரப்ருஹ்மத்துக்கு ச்வாஸமாய் நித்யமான வேதவாக்யமாதலான், ஈனவும் படாஅள் என்றாரென்ன. ஈனப்பட்டால் நித்யமாதல் கெடும்; 'ஏதத் நிச்வஸிதம்' என்பது ப்ருஹதாரண்யக சுருதி. இவ்வாறே ஸுபாலசுருதியுங் கூறிற்று. இங்ஙனம் உள்ளவளாகியும் -

Friday, August 28, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 11

13. அவனே தலையிலி என்பது உலகு விளைப்பவனாகிய அப்பெரியோனே தன் தலையிழந்தவனாயினான் எ - று.

நாடன் என்பதன்பின் அவனேயென அடுத்து வேண்டாத சுட்டுச்சொல் வந்தது, முன்னே எல்லாருடைய தலைகளையும் தன் தலைகளையும் படைக்கும் அவனே பின்னே தலையில்லையாயினான் என்று குறிக்கொள்ளுதற்கென அறியலாம். சிந்தாமணிப் பதிகத்தில் (4) 'தேவிபோகி...சுடுகாடவள் சேர்ந்தவாறும்' என்புழி 'தேவியவள்' என வந்தது, முன்னே இன்னமிழ்தாயினவள் பின்னே இங்ஙனஞ் சுடுகாடுபுக்காள் என உணர்த்தற்கு என்பதுபோல இதனையுங்கொள்க.

பிரமன் பலதலை படைத்துக்கொண்ட செய்த மத்ஸ்ய புராணம் ௩-ஆம் அத்யாயத்திற் (30 - 41) கண்டது. ஆண்டு இவன் தன்னுடம்பிற் றோன்றிய ஸரஸ்வதியைக் கண்டு காமித்தான் என்றும், இவனைக்கண்டு ஒவ்வோர் திசையிலும் அவள் ஒதுங்கினாள் என்றும், ஒதுங்கியதிசையெல்லாம் இருந்தபடியே தலையைப் படைத்துக்கொண்டு நோக்கினானென்றும், அதுகண்டுஸரஸ்வதி வானம் புகலாயினள் என்றும், அவள் வான்புகுதலைக் காண உச்சியில் ஐந்தாந்தலை படைத்து நோக்கினான் என்றும், இவ்வாறு ஐந்தலையன் ஆயினானென்றும், ஐந்தாந்தலையைச் சடைகளான் மறைத்திருந்தானென்றும் கூறுதல் காணலாம். இவன் ஐந்தலை வரலாறு இப்புராணங் கூறுதல் கொண்டு, இவன் முதற்கண்ணே நான்கு மில்லனாயிருந்தானென்று உய்த்துணரலாகும்.

'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும்' (குறள், 1101) ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவம் இல்லான் என்றது, இவன் காமபோகந்துய்த்தற்கேற்ற உறுப்பே இல்லையாயினான் என்பது கருதிற்று. 'ஐம்புலனு மொண்டொடிகண்ணே யுள' என்பது திருக்குறள். பின் பிரமசிரசு கிள்ளப்பட்டுச் சிவபிரான் கையது ஆயிற்று எனப் பன்னூலினுங் கேட்கப்படுதலான், தலையிலி என்றார். 'கபாலநன் மோக்கத்துக் கண்டு கொண்மின்' (திருவாய்மொழி. 4 - 10 - 4) என்புழி, நம்பிள்ளையாசிரியர் 'ஒருவன் தலைகெட்டு நின்றான்' என்று உரைத்ததனாலும் 'தலையிலி'யாதலுணர்க; 'வாணன் கையிழந்து நின்றான்' என்பதுபோல இதனையும் கொள்க.

இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க. ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினானென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம் - 'அநிருத்தாத் ததா ப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ:' எனவரும் வாக்யத்தால் அறியப்படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும்.

'தேவுமெப் பொருளும் படைக்கப்
பூவினான்முகனைப் படைத்த தேவன்' (திருவாய், 2,2,4)

என்பதனால் இப்படைப்பின் மூலம் ஸர்வேச்வரனிடத்திலே நிலைபெறுவது என்க.

Thursday, August 27, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 10

12. ஆமா விளைக்கும் நாடன் என்பது, இங்ஙனம் ஆமாறு நாடு விளைப்பவன் எ - று. ஆம் ஆறு என்பது ஆமா என வந்தது செய்யுள் விகாரம். 'தேறுமா செய்யா அசுரர்களை' (பெரிய திருவந்தாதி, ௩௩) என இவ்வாழ்வாரே வழங்குதல் கண்டு கொள்க; 'ஆமாறொன்றறியேன்' (திருவாய், 4, 9, 2) என்பது இவர் வழக்கேயாம். இங்ஙனம் ஆகும் ப்ரகாரத்திலே (ஆம் ஆற்றிலே) விளக்கும் நாடன் என்க. ஜகத் சிருஷ்டி செய்பவன் எ - று. விளைக்கும் நாடன் என்பதனை நாடுவிளைப்பவன் என்று கொள்க; 'செய்த வேள்வியர்' (திருவாய் 5,7,6) என்பதனை வேள்வி செய்தவர் என்று கொள்வது போல. இவ்வழக்கு வடநூலிலே மிகவும் பயில்வதொன்று; பெருந்தமிழ்நூல்களிலும் ஆங்காங்குக் காணலாம்.

நாடு விளைப்பவன் - உலகு படைப்பவனாகிய பிரமன். நாடு உலகிற்காதல் 'நாட்டைப் படையென் றயன்முதலாத் தந்த' என்னும் நாச்சியார் திருமொழியால் (14,9) அறிந்துகொள்க. இறைவன் ஆணையாற் பிரமன் நாடு விளைப்பது இம்மூன்று பெரும்பலன்களுள் ஒன்றேனும், உயிர்கட்கு ஆமாறன்றி வேறில்லை யென்பது கருத்தாகும். ஸ்ரீமத் பாகவதத்தில் (11 - 3 - 7) 'ஆதிமூர்த்தி ஜீவனுக்கு உயர்ந்த ஸித்தி உண்டாம்பொருட்டுப் பூதங்களாற் பிராணிகளைப் படைத்தான்' என வருதலானும் உணர்க.

'உய்யவுலகு படைத்து' எனப் பெரியாழ்வார் திருமொழியிலும் (1, 6, 1)

'படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள்
பணிந்தேத்த வல்லார் துயராயவெல்லாந்
துடைத்திட் டவரைத் தனக்காக்கவென்னத் தெளியா'

எனப் பெரியதிருமொழியிலும் (10, 6, 7) வருதல் கொண்டு இவ்வுண்மை அறிக. உயிர்கட்கு அநுகூலிக்கவே உலகு விளைப்பதல்லது ப்ரதிகூலிக்கவில்லையென்பது கருத்து. இங்ஙனம் மாக்கதிக்கணாமாறு நாடு விளைப்பவனாகவும் 'என்னொருவர் தீக்கதிக்கட் செல்லுந்திறன்' எனப் பெரியோரிரங்குதலான் இஃதெளிதிலறியலாம். தீக்கதி புகுவது உயிர்கள் தம் தீயவினையால் என்றறிக.

'நாவாயி லுண்டே நமோநார ணாவென்று
ஓவா துரைக்கு முரையுண்டே - மூவாத
மாக்கதிக்கட் செல்லும் வகையுண்டே யென்னொருவர்
தீக்கதிக்கட் செல்லுந் திறன்' (முதற்றிருவந்தாதி, 95)

என்னும் பாசுர நோக்கிக் கொள்க. வாய் படைக்கப்பட்டுள்ளது; அதன்கண்ணே நாப் படைக்கப்பட்டுள்ளது; நாரணா என்றுரைக்கும் உரை நித்யமாகவுள்ளது. இந்நாவையும் இத்திவ்ய நாமாவையுஞ் சேர்த்தால் 'மாக்கதிக்கட் செல்லவகையுண்டே' என்றோதியவாறாம். ஈச்வரன் உடம்பைப் படைப்பது பந்தம் ஒழிதற்கேயன்றி வேறொன்றற்கில்லை யென்பது.

'ஆப்பங்கொழியவும் பல்லுயிர்க்கும் - ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்'
(நான்முகன் றிருவந்தாதி, 93)

என்பதனாலறியலாம். இத்துணையுங் கூறியவாற்றால் படைப்பவன் உலகு விளைப்பது, உயிர்கள், முற்கூறிய மூன்று கதிகளிலும் ஆமாறல்லது நரகிற்போமாறில்லையென்று துணிந்து கொள்க.

Monday, August 17, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 9

இனி, இதற்கே வேறோருரை கூறுதும். அறுகாற்கு உறவன் என்புழி அறுமீனாய்க் கால்வடிவாகவுள்ள உரோகிணிக்கு உறவுபூண்ட சந்த்ரன் எ-று. உரோகிணி ஆறாய்ச் சகடம் எனப்பெறுதலும் சந்த்ரனுக்கு அதிகப்பிரியையாதலும் நூல்களிற் காணலாகும். இஃது அறுமீன் எனவும் பெயர் பெறுமென்பது 'அறுமீனினைவனள்' என வரும் அகநானூற்றின் குறிப்பில் 'அறுமீன் - உரோகிணி' எனக் கூறியதனானறிக. கால் - உருளை. 'சகடக்கால்' (நாலடி) எனவும் 'கால்பார்கோத்து ஞாலத்தியங்கும்' (புறம். 185) எனவும் வருவன காண்க. வ்ருஷப வீடு சந்த்ரனுக்கு உச்சஸ்தானமாதலின் ஆண்டுள்ள உரோகிணியின்பால் அவன் மிகவும் உறவுள்ளவனாயினன் என்பர். ரோஹிணீசன் ரோஹிணீ நாயகன் என்பன சந்திரன் பெயர்களாகும்.

இவன் நீரறஎன்றது, இவன் உடலமிழ்தத்தைத் தேவர் பருகலான் இவன் அமிழ்தம் அற என்றவாறாம். இவ்விதம் சந்த்ரன் அமிர்தமயமாய்க் குளிர்ந்த ஜலபரமாணுக்களாலே சுக்ல பக்ஷத்தில் தேவர்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் பிதுர்க்களையும் திருப்தி செய்கின்றான் என்று புராண ரத்னம் கூறுதலை நோக்குக (விஷ்ணுபுராணம் 2 - 12). இத் தேவர் வளர்ச்சிக்கு ஒருவன் உடல் தேயவேண்டுவதென்று குறித்தவாறாம்.

இனிக் கல்லினெழுந்து கடலின் அழுந்தி என்பதனைக் கடலினழுந்திக் கல்லினெழுந்து என மாறிக் கூட்டுக. சிந்தாமணிப் பதிகத்திற் 'குணமாலையை வைதுமாறி' என்பதனை 'மாறி வைது' என மாறிக் கூட்டியதுபோல ஈண்டுங் கொள்ளற்பாலது; இவ்வளர்ச்சியும் நிலைபேறுடையதில்லையென்று இதிகாசங் காட்டியது இஃதென்க. இவ்விந்திரச் செல்வம் துர்வாஸ முனிவர் சாபத்தாற் கடலினழுந்தி மந்தரமென்னுங் கல்லானெழுந்து சந்த்ரன் நீரற விளைக்கும் செறிபொழிற்குப்பை என்றவாறாம். சந்த்ரன் விளைக்கும் பொழில் என்க. சந்த்ரன் தன் அமிழ்தம் அறா நிற்கவும், விளைக்கின்ற கற்பகச்சோலை எ-று. ஓஷதீசன் சந்த்ரனாதலான் அவன் விளைக்கும் பொழில் என்றார். இச் செல்வம் சந்த்ரன் விளைப்பதென்றாலும் இழுக்காது; என்னையெனிற் கூறுவேம். வீடு புகுதற்குரியது அர்ச்சிராதிகதியென்றும் சுவர்க்கம் புகுதற்குரியது தூமாதிகதி என்றும் வேதம் கூறும். இவ்விருகதிகளுள் ஐச்வர்யார்த்திகள் புகும் தூமாதிகதி, முதலிற் சந்த்ரனிடம் புக்கு அப்பாற் சுவர்க்கம் போகும் முறைமைத் தாதலின் 'சாந்த்ரமஸம்' என்று வழங்கப்படும். இச்செல்வம் திங்களாகிய உண்டியால் அமைவதனாலும் இதனுண்மை யுணர்க. பரிபாடலில், 'நிறைமதி யுண்டி யமரர்க்கு' எனவும், 'அமரருண்டி மதி' எனவும், 'மதியுண் அரமகள்' எனவும் வருவனவற்றால் தேவர்க்குத் திங்களுணவாதல் காணலாம். இச் செல்வம் குப்பையாதலும் கட்பு ஆதலும் இவ்வுரைக்கும் ஒக்கும்.

11 - 12. ஒன்று வித்து அறு கோட்டு - பிறிதொன்று வித்து அற்ற குற்றமுடைத்தென்றவாறு.

இது கைவல்யார்த்தியின் பலனாதல் காட்டுவாராய் வித்தற்ற தோஷமுடைத்தென்று கூறினார். கோள் - குற்றம். தாளையுடையது தாட்டு என வருவதுபோல இதனையுங் கொள்க. வித்து என்பது பெரிய மரத்தையுந் தன்னுட் சூக்குமமாய் அமர்த்திக்கொண்டு, வாய்த்தவிடத்து அம்மரமாய்ப் பரிணமிப்பதற்குக் காரணமாய தொன்று. இதனை 'நீல நிறத்து நெடுந்தகை வந்தோர், ஆலமர் வித்தினருங்க் குறளானான்' எனக் கம்பநாடர் கூறுதலானறியலாம். ஈண்டுத் தன்னிலையறியாத் தொன்மிகுபெருமரம் இக்கனியினுள்ளே சூக்குமமாகவும் இல்லாமையால், எப்பொருட்கும் வித்தாய தனிமுதல் இல்லாமல், கேவலந் தன்னைத்தானே அனுபவிப்பதாகலின், தெய்வமில்லாமையைக் குற்றமாகக் கொண்டு கூறினார். 'தானோருருவே தனிவித்தாய்' (1, 5, 4) என்னுந் திருவாய்மொழியிலே இறைவனே வித்தாகக் கூறப்படுதல் காணலாம்.

'பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து பின்னும்
இறக்கவு மின்புடைத்தா மேலும் - மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லா லெண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்' (பெரிதிருவந். 80)

என்பதனாற் கைவல்ய சுகத்தின் சிறப்பெல்லாம் விசதமாக எடுத்தோதி, அதன்கட் பரதெய்வத்தை யேத்தாத மறப்பே பூர்ணமென்றும் அஃது ஏதமே என்றும் தேற்றமாக உரைத்தருளியதுகொண்டு இங்கும் குற்றமுடைத்தென்று தெளிவித்தார். ஏதம், குற்றம், கோள் என்பன ஒரு பொருளன. ஏதம் - துன்பம் எனினுமமையும்.

'நிற்கின்ற தெல்லா நெடுமாலென் றோராதார்
கற்கின்ற தெல்லாங் கடை' (இரண்டாந்திரு. 54)

ஆதலான், இவர்க்குக் கைவல்யசுகம் கடையாயிற்று. இந்திரச் செல்வம் பெற்றவன் தன் புண்ணியம் நசித்துப் பின் மண்ணிற் பிறத்தலான் ஒருகால் தெய்வத்தை நினைந்து வீடெய்த அவகாசமுண்டு. இக்கைவல்யசுகத்திற் பட்டானுக்கு மீண்டும் பிறத்தலின்மையால், தெய்வ நினைப்பிற்கே அவகாசமில்லை யென்று கொண்டு கடையாக்கினார். 'அமரர் கழல்தொழுது நாளும் இடைநின்ற வின்பத்த ராவர்' (இரண்டாந் திருவந்தாதி, ௧௧) என்பதனால் தேவர்க்குக் கடவுள் கழறொழுதலுண்மையும் அவர் இடைநின்ற இன்பத்தராதலும் உணர்ந்துகொள்க. இதற்கு வேறுகூறலு முண்டு.

இனிக் கைவல்யத்தைத் தோடற்ற நெல்வித்திற்கு (௧, ௨௨) விஷ்ணுபுராணத்தில் உவமித்தலான், அதனையே ஈண்டுத் தழீஇயினாரெனக் கொண்டு 'வித்தறு தோட்டு' எனப்பாடம் ஓதி, ஒன்று அறுதோட்டு வித்து என்றாலும் நன்கு பொருந்தும். 'நாற்கூற்றே மருந்து' (திருக்குறள். ௬௫0) என்புழிப்போலத் தோட்டது என்பது தோட்டு என விகாரமாயிற்றெனினும் இழுக்காது.

Friday, August 7, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 8

8. ஒன்றுண்டு ஒண்சுவை தருவது - ஒண்மையொடு கூடிய இனிமையைத் தருவது ஒன்று உள்ளது எ-று.

ஒண்மை - 'ஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்று கொலோ' என்ற திருவாய்மொழியிற் கூறியருளியபடி, ஜ்யோதிர்மயமான முக்தஸ்வரூபத் தன்மை. ஒண்மை தருவது கூறியதனால் இவ்விருக்ஷம் ஜ்யோதிர்விருக்ஷம் என்பது உய்த்துணரலாகும். சுவை - பரமஸாம்யமான நிரதிசயாநந்த ஸுகம். ஈண்டே தருவது கூறியதனால் இச்சுவை பரமஸாம்யமாதல் நன்கு துணியப்படும். 'தம்மையே யொக்க வருள்செய்வர்' எனவும் 'நிரஞ்சன: பரமம் ஸாம்யம் உபைதி' எனவும் 'போகமாத்ர ஸாம்யலிங்காச்ச' எனவும் 'பரஞ்ஜ்யோதிருபஸம்பத்ய' எனவும் வருமிடங்கள் நோக்கிக் கண்டு கொள்க. இதனால் இது மோக்ஷமாகிய பேரின்பமென்று குறித்தார்.

8. மற்றது - இதனின் வேறாகியது.

9 - 11. கல்லின் எழுந்து கடலினழுந்தி அறுகாற்குறவன் நீரற விளைக்கும் செறிபொழிற் குப்பை தரு கட்பு - இதன்கண், அறுகாற்குறவன் - அறுகாற்கு உறவன் என்றவாறு. அறுகால் - ஆறு வாய்க்கால்; ஆறு வழி எனினுமமையும். இவை ஆறிந்திரியங்களென்றவாறு. ஆறிந்திரியங்கள் - மெய் வாய் கண் மூக்குச் செவி மனம் என இவை; 'இந்திரியாணி ஷட்' (பொறிகள் ஆறு) என்பது வடநூல் வழக்கு. கீதாசாரியனும் 'மநஷ் ஷஷ்டாநீந்த்ரியாணி' என அருளிச்செய்தான். ஆறிந்திரியங்கட்கும் உறவு பூண்டவன் பெத்தாத்மா எனவறிக. இவன் உடம்பைவிட்டுப் புறப்படும்பொழுதும் இவ்வாறிந்திரியங்களையும் விடாது உடன் கொண்டு சேறலான் இவற்றிற்குச் சிறப்பாக உறவுபூண்டவன் என்று பெயர்பெற்றான். இவ்வுண்மையை,

பொறியீச் சுரனா முயிரெவ் வுடலிற்
புகுவானெதினின் றுபுறப் படுவான்
எறிகால் தொடுமவ் விடனின் றுமணத்
தினையீர்ப் பதுபோ லிவனீர்த் தெழுமே (கீதை - ௧௫ - ௮)

என வருங் கீதைப்பாடலா லறியலாகும். ஜனன மரணங்களிற் சீவன் இந்திரியங்களுடன் வருவது போவதாயிருக்கு மென்பது ப்ருஹ்மஸூத்ரபாஷ்யத்து, இரண்டாம் அத்யாயம் நான்காம் பாதத்திலும், மூன்றாம் அத்யாயம் முதற்பாதத்திலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது. இந்திரியங்களை வேதம் 'தசமே புருஷேப்ராணா: ஆத்மைகாதச' 'சீவனிடத்தில் இந்திரியங்கள் பத்து, மனம் பதினொன்றாகும்' என்றதினால் இந்திரியங்களை ப்ராணபதத்தால் கூறுதல் நோக்கி அதன் மொழிபெயர்ப்பாகிய 'கால்' என்பதனாற் பாடியருளினாரெனினும் ஸமஞ்ஜஸமே யாகும். பதினோரிந்திரியங் கூறியிருப்ப ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றது, கருமேந்திரியமைந்தும் சரீரத்துடன் உண்டாய் அதனோடு இறுதியில் நசித்துவிடுமென்று வ்யாஸ பகவான் ப்ருஹ்மஸூத்ரத்தில் அருளிச்செய்தது பற்றியென்று துணியப்படும். இதனை 'ஹஸ்தாதயஸ்து ஸ்திதேதோ நைவம்' என்பதற்கு ச்ரி பாஷ்யகாரர் உரைத்தருளியவாற்றானுணர்க. இதனால் இவ்வைந்தையுங் கொள்ளாது ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றார் என்க.

கல்லின் எழுந்து கடலின் அழுந்தி நீரற என்பது, மலையிடை நின்றும், கடலிடை மூழ்கியும் பசையற உணக்குதலான் எ - று.

இவற்றால் இந்திரியங்கட்கு உறவு பூன்ட பெத்தாத்மா ஐச்வர்யகாமனாய் அஃதெய்தற்கு உபாயமாகத் தீர்த்தம் படிந்தும், மலையிடைத் தனி நின்றும், நெருப்பிடை நின்று பசையறவுணக்கியும் தவஞ்செய்தல் முதலிய கர்மங்களைக் குறித்தாராவர். இதனை

'பொருப்பிடையே நின்றும் புனற்குளித்து மைந்து
நெருப்பிடையே நிற்கவுநீர் வேண்டா' (மூன்றாந்திருவந்தாதி - ௭௬)

என வரும் பாசுரங்கொண்டுணர்க. எழுதல் - இராது நிற்றலாதலானும், கல் - பொருப்பாதலானும் 'பொருப்பிடையே நின்றும்' என்பதனையே 'கல்லின் எழுந்து' என்பதனாற் கூறினார். 'கல்லுங் கனைகடலும் வைகுந்த வானாடும்' (பெரிய திருவந்தாதி 68) என்புழிக் கல் என்பது பொருப்பாதல் காண்க. 'வடபெருங்கல்' எனப் புறப்பாட்டினும் இமயமலையைக் கூறுதல் காணலாம். புனற்குளித்து மென்பதனையே 'கடலினழுந்தி' என்று கூறிக்காட்டினார். தீர்த்தங்களிற் றலை சிறந்ததாகலின் கடலைக் கூறினார். 'நீண்ட தோள் மால் கிடந்த நீளகடனீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும்' (மூன்றாந்திரு. 69) என்றபாசுரத்தால் இதன் உயர்த்தி நன்குணரலாகும். அழுந்தல் - மூழ்குதல். நீரற என்பது பசையற உணக்குதலாதலான் நெருப்பிடை நிற்றல் கூறினார். பரமைகாந்திகள் வேண்டாவென்று தள்ளியவற்றை இப்பெத்தாத்மா ஐச்வர்யகாமனாய்ச் செய்தொழுகுமாறு கூறப்பட்டது. 'நீரற' என்பது பசையறவுணக்குதலைக் குறிப்பதாதல் 'முழூஉவள்ளுர முணக்குமள்ள' (புறம் 219) என்று கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானை நல்லிசைப்புலவர் பாடியதனான் நன்கறியலாகும். ஐச்வர்யகாமன் பல்வகைக் கர்மங்களையே தலையாகக் கொண்டு காயம்வாட்டுதலை

'படிமன்னு பல்கலன் பற்றோடறுத் தைம்புலன் வென்று
செடிமன்னு காயஞ்செற்றார்களு மாங்கவனை யில்லார்
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியு மீள்வர்கள்'

என வருந் திருவாய்மொழியானுணர்க. (4, 1, 9)

விளைக்கும் செறி பொழிற் குப்பை தருகட்பு - (அறுகாற்கு உறவன்) இவ்வாறு எழுந்து அழுந்தி நீர் அறுதலான் அவற்றின் பயனாக விளைக்கின்ற செறிந்த கற்பகச் சோலை உதிர்த்த குப்பைகள் தரும் வஞ்சம் எ-று. பொழில் என்றது, கற்பக முதலிய ஐந்தருக்களுள்ள சோலையாதலான். இதனைக் கற்பகச்சோலை என்பது தலைமையான வண்மைபற்றி. ஈண்டுக் கூறிய இந்திரச் செல்வம்,

'இன்றளிர்க் கற்பக நறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை'

என்பதும், அதுவும் அவ்வைந்தருச்சோலை யுதிர்த்ததென்பதும், நல்லறிவாளர் கண்டுகைவிட்ட மயல் (துரால்) என்பதும் தோன்றச் செறிபொழிற் குப்பை என்றார். 'குப்பை கிளர்ந்தன்ன செல்வத்தை' என்பது இவர் திருவாக்கு. இது, நல்கிய இறைவனை ஆங்கு மறப்பித்தலானும் புண்ணிய கர்மம் நசித்து மண்ணிடைத் தோன்றியவிடத்தும் அச்செல்வத்திற்கே வாசனையால் முயலச்செய்தலானும், 'குப்பை தருகட்பு' என்றார். கட்பு - களவு, வஞ்சம் எ - று. 'செல்வம் வந்துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணார்' என்ப. (பாரதம்)

'வியன் மூவுலகு பெறினும் போய்த் தானேதானேயானாலும்' (திருவாய்மொழி 8 - 10 - 2) என்று ஐச்வர்ய கைவல்யங்களைக் கூறியவிடத்து ஐச்வர்யார்த்தி மூவுலகும் அருமையிற் பெறுதல் கூறியதேனும் ஈண்டுத் தலைமைபற்றி இந்திரச் செல்வமே கருதினாரெனக் கொள்க.