Thursday, August 27, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 10

12. ஆமா விளைக்கும் நாடன் என்பது, இங்ஙனம் ஆமாறு நாடு விளைப்பவன் எ - று. ஆம் ஆறு என்பது ஆமா என வந்தது செய்யுள் விகாரம். 'தேறுமா செய்யா அசுரர்களை' (பெரிய திருவந்தாதி, ௩௩) என இவ்வாழ்வாரே வழங்குதல் கண்டு கொள்க; 'ஆமாறொன்றறியேன்' (திருவாய், 4, 9, 2) என்பது இவர் வழக்கேயாம். இங்ஙனம் ஆகும் ப்ரகாரத்திலே (ஆம் ஆற்றிலே) விளக்கும் நாடன் என்க. ஜகத் சிருஷ்டி செய்பவன் எ - று. விளைக்கும் நாடன் என்பதனை நாடுவிளைப்பவன் என்று கொள்க; 'செய்த வேள்வியர்' (திருவாய் 5,7,6) என்பதனை வேள்வி செய்தவர் என்று கொள்வது போல. இவ்வழக்கு வடநூலிலே மிகவும் பயில்வதொன்று; பெருந்தமிழ்நூல்களிலும் ஆங்காங்குக் காணலாம்.

நாடு விளைப்பவன் - உலகு படைப்பவனாகிய பிரமன். நாடு உலகிற்காதல் 'நாட்டைப் படையென் றயன்முதலாத் தந்த' என்னும் நாச்சியார் திருமொழியால் (14,9) அறிந்துகொள்க. இறைவன் ஆணையாற் பிரமன் நாடு விளைப்பது இம்மூன்று பெரும்பலன்களுள் ஒன்றேனும், உயிர்கட்கு ஆமாறன்றி வேறில்லை யென்பது கருத்தாகும். ஸ்ரீமத் பாகவதத்தில் (11 - 3 - 7) 'ஆதிமூர்த்தி ஜீவனுக்கு உயர்ந்த ஸித்தி உண்டாம்பொருட்டுப் பூதங்களாற் பிராணிகளைப் படைத்தான்' என வருதலானும் உணர்க.

'உய்யவுலகு படைத்து' எனப் பெரியாழ்வார் திருமொழியிலும் (1, 6, 1)

'படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள்
பணிந்தேத்த வல்லார் துயராயவெல்லாந்
துடைத்திட் டவரைத் தனக்காக்கவென்னத் தெளியா'

எனப் பெரியதிருமொழியிலும் (10, 6, 7) வருதல் கொண்டு இவ்வுண்மை அறிக. உயிர்கட்கு அநுகூலிக்கவே உலகு விளைப்பதல்லது ப்ரதிகூலிக்கவில்லையென்பது கருத்து. இங்ஙனம் மாக்கதிக்கணாமாறு நாடு விளைப்பவனாகவும் 'என்னொருவர் தீக்கதிக்கட் செல்லுந்திறன்' எனப் பெரியோரிரங்குதலான் இஃதெளிதிலறியலாம். தீக்கதி புகுவது உயிர்கள் தம் தீயவினையால் என்றறிக.

'நாவாயி லுண்டே நமோநார ணாவென்று
ஓவா துரைக்கு முரையுண்டே - மூவாத
மாக்கதிக்கட் செல்லும் வகையுண்டே யென்னொருவர்
தீக்கதிக்கட் செல்லுந் திறன்' (முதற்றிருவந்தாதி, 95)

என்னும் பாசுர நோக்கிக் கொள்க. வாய் படைக்கப்பட்டுள்ளது; அதன்கண்ணே நாப் படைக்கப்பட்டுள்ளது; நாரணா என்றுரைக்கும் உரை நித்யமாகவுள்ளது. இந்நாவையும் இத்திவ்ய நாமாவையுஞ் சேர்த்தால் 'மாக்கதிக்கட் செல்லவகையுண்டே' என்றோதியவாறாம். ஈச்வரன் உடம்பைப் படைப்பது பந்தம் ஒழிதற்கேயன்றி வேறொன்றற்கில்லை யென்பது.

'ஆப்பங்கொழியவும் பல்லுயிர்க்கும் - ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்'
(நான்முகன் றிருவந்தாதி, 93)

என்பதனாலறியலாம். இத்துணையுங் கூறியவாற்றால் படைப்பவன் உலகு விளைப்பது, உயிர்கள், முற்கூறிய மூன்று கதிகளிலும் ஆமாறல்லது நரகிற்போமாறில்லையென்று துணிந்து கொள்க.

No comments: