Saturday, August 29, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 12

13. அவன் மகள் முலையிலி = அப்பிரமனுக்கு மகளாய்த் தோன்றிய ஸரஸ்வதி ஸ்தனமில்லையாயினாள் எ - று.

பிரமன் தவத்தால் அவன் திருமேனியிற் றோன்றினாள் என்றும், இவள் அவனுக்கு மகளேயாகவும் இவளெழிலான் மனங்கவரப்பட்டுக் காமித்தானென்றும், அது கண்டு பிரமபுத்திரராகிய மகருஷிகள் பிரமனை வெறுத்தனரென்றும் மத்ஸ்யபுராணமும் ஸ்ரீபாகவதமும் நன்குவிளக்குதலான், , இவள் பிரமனுக்கு மகளேயாதல் தெள்ளிது. தமிழில் மகள் என்பது மனைவிக்கும் பெயராதலின், பின் அவன் இவளை மனைவியாக விழைந்ததற்கும் பொருந்தவே 'அவன் மகள்' என்று ஈண்டுக் கூறப்பட்டது என்பது பொருந்தும்.

இவளை முலையிலியென்றது, இயலும் இசையுமல்லது வேறு ஸ்தனமில்லாமையா லென உய்த்துணரலாகும். 'ஸங்கீதமபி ஸாஹித்யம் ஸரஸ்வத்யா: குசத்வயம்' என வரும் வடமொழிவழக்கானுணர்க. ஸரஸ்வதி ஞானசக்தி என்பது நூல்களின் றுணிபு. 'ஞானமுதல்வி' என்பர். ஞானங் காமத்தைத் தொலைக்குமே யல்லது அதனை யுண்டாக்கமாட்டாது. 'கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ' என்று கம்பநாடர் பாடுதலானும் இஃதுணரலாகும். இங்ஙனங் காமஞ் செய்யாது ஞானமே செய்தலான் இவளை முதிர்ந்த மூதாட்டியாகவே வருணிப்பர். முலையின்மை காமமின்மைக்கு அடையாளமெனினும் பொருந்தும். 'முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற்றற்று' (திருக்குறள், 402) என்பதனான் இதனை யுய்த்துணர்க. முலையென்றது 'காமாநுபோகத்தை' என்று தக்கயாகப்பரணி உரைகாரர் வெளியிடுவதுங் காண்க. இவளையே பெரியபிராட்டியார் அமிசமான ஆத்மவித்யாரூபிணியாகக் கொண்டு உபாஸிக்குமிடத்து வ்ருத்தையாக வழங்குவது 'ஸாயம் ஸரஸ்வதீம் ச்யாமாம்; நமாமி விஷ்ணுதைவத்யாம் வ்ருத்தாம் கருடவாஹநாம்' என வருந் தியானத்தால் உலகம் அறிந்தது.

'நூல்வலையிற் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்' (நான்முகன்றிரு. 40) என்பதனாற் பெரியபிராட்டி வித்யாரூபிணியாதல் தெளியலாம். வாராமுலைமாதர் பேதையர் என்றும், வருமுலை மாதர் யுவதிகள் என்றும் வந்தமுலைமாதர் பேரிளம்பெண்டிர் என்றும், வந்து முலையில்லையாயினார் வ்ருத்தையள் என்றும் தெரிந்துகொள்க.
ஈட்டினரும் பதத்திற் சீயர் 'யௌவன சூசகமான முலையானவை' என உரைத்ததனாலும் இதனுண்மை யறியலாகும். (திருவாய்மொழி 4 - 6 - 10). பெரிய பிராட்டியார் ஆத்மவித்யாரூபிணியாதல் விஷ்ணு புராண ஸ்ரீஸ்துதியிற் கண்டது.

இவ்வாறு தலைவனுந் தலைவியும் முறையே தலையிலியும் முலையிலியுமாதலே யன்றி இத்தலைவி -

14. தானும் ஈனாள் ஈனவும் படாஅள் என்றது இவள் தானும் ஒரு ப்ரஜையைத் தன்னினின்று ப்ரஸவிக்கமாட்டாள், ஒருவராற் ப்ரஸவிக்கப்படவுமாட்டாள் எ - று.

ஈனாள்...படாஅள் என ஈண்டுக்கூறியதன் காரணம் நுணுகி நோக்கிற் புலனாம். எவ்விதத்தினும் எவரானும் தவறாதவன் என்றுணர்க. (மஹாபாரதம், சாந்தி 353). இவள் வாக்தேவியாய்ச் சப்தமே வடிவாயுள்ளவளாதலின் உலகிற் பெண்டிர்போலக் கருவுயிர்த்தலில்லை எ - று. இவள் வடிவான சப்தம் பரப்ருஹ்மத்துக்கு ச்வாஸமாய் நித்யமான வேதவாக்யமாதலான், ஈனவும் படாஅள் என்றாரென்ன. ஈனப்பட்டால் நித்யமாதல் கெடும்; 'ஏதத் நிச்வஸிதம்' என்பது ப்ருஹதாரண்யக சுருதி. இவ்வாறே ஸுபாலசுருதியுங் கூறிற்று. இங்ஙனம் உள்ளவளாகியும் -

No comments: