Friday, August 7, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 8

8. ஒன்றுண்டு ஒண்சுவை தருவது - ஒண்மையொடு கூடிய இனிமையைத் தருவது ஒன்று உள்ளது எ-று.

ஒண்மை - 'ஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்று கொலோ' என்ற திருவாய்மொழியிற் கூறியருளியபடி, ஜ்யோதிர்மயமான முக்தஸ்வரூபத் தன்மை. ஒண்மை தருவது கூறியதனால் இவ்விருக்ஷம் ஜ்யோதிர்விருக்ஷம் என்பது உய்த்துணரலாகும். சுவை - பரமஸாம்யமான நிரதிசயாநந்த ஸுகம். ஈண்டே தருவது கூறியதனால் இச்சுவை பரமஸாம்யமாதல் நன்கு துணியப்படும். 'தம்மையே யொக்க வருள்செய்வர்' எனவும் 'நிரஞ்சன: பரமம் ஸாம்யம் உபைதி' எனவும் 'போகமாத்ர ஸாம்யலிங்காச்ச' எனவும் 'பரஞ்ஜ்யோதிருபஸம்பத்ய' எனவும் வருமிடங்கள் நோக்கிக் கண்டு கொள்க. இதனால் இது மோக்ஷமாகிய பேரின்பமென்று குறித்தார்.

8. மற்றது - இதனின் வேறாகியது.

9 - 11. கல்லின் எழுந்து கடலினழுந்தி அறுகாற்குறவன் நீரற விளைக்கும் செறிபொழிற் குப்பை தரு கட்பு - இதன்கண், அறுகாற்குறவன் - அறுகாற்கு உறவன் என்றவாறு. அறுகால் - ஆறு வாய்க்கால்; ஆறு வழி எனினுமமையும். இவை ஆறிந்திரியங்களென்றவாறு. ஆறிந்திரியங்கள் - மெய் வாய் கண் மூக்குச் செவி மனம் என இவை; 'இந்திரியாணி ஷட்' (பொறிகள் ஆறு) என்பது வடநூல் வழக்கு. கீதாசாரியனும் 'மநஷ் ஷஷ்டாநீந்த்ரியாணி' என அருளிச்செய்தான். ஆறிந்திரியங்கட்கும் உறவு பூண்டவன் பெத்தாத்மா எனவறிக. இவன் உடம்பைவிட்டுப் புறப்படும்பொழுதும் இவ்வாறிந்திரியங்களையும் விடாது உடன் கொண்டு சேறலான் இவற்றிற்குச் சிறப்பாக உறவுபூண்டவன் என்று பெயர்பெற்றான். இவ்வுண்மையை,

பொறியீச் சுரனா முயிரெவ் வுடலிற்
புகுவானெதினின் றுபுறப் படுவான்
எறிகால் தொடுமவ் விடனின் றுமணத்
தினையீர்ப் பதுபோ லிவனீர்த் தெழுமே (கீதை - ௧௫ - ௮)

என வருங் கீதைப்பாடலா லறியலாகும். ஜனன மரணங்களிற் சீவன் இந்திரியங்களுடன் வருவது போவதாயிருக்கு மென்பது ப்ருஹ்மஸூத்ரபாஷ்யத்து, இரண்டாம் அத்யாயம் நான்காம் பாதத்திலும், மூன்றாம் அத்யாயம் முதற்பாதத்திலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது. இந்திரியங்களை வேதம் 'தசமே புருஷேப்ராணா: ஆத்மைகாதச' 'சீவனிடத்தில் இந்திரியங்கள் பத்து, மனம் பதினொன்றாகும்' என்றதினால் இந்திரியங்களை ப்ராணபதத்தால் கூறுதல் நோக்கி அதன் மொழிபெயர்ப்பாகிய 'கால்' என்பதனாற் பாடியருளினாரெனினும் ஸமஞ்ஜஸமே யாகும். பதினோரிந்திரியங் கூறியிருப்ப ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றது, கருமேந்திரியமைந்தும் சரீரத்துடன் உண்டாய் அதனோடு இறுதியில் நசித்துவிடுமென்று வ்யாஸ பகவான் ப்ருஹ்மஸூத்ரத்தில் அருளிச்செய்தது பற்றியென்று துணியப்படும். இதனை 'ஹஸ்தாதயஸ்து ஸ்திதேதோ நைவம்' என்பதற்கு ச்ரி பாஷ்யகாரர் உரைத்தருளியவாற்றானுணர்க. இதனால் இவ்வைந்தையுங் கொள்ளாது ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றார் என்க.

கல்லின் எழுந்து கடலின் அழுந்தி நீரற என்பது, மலையிடை நின்றும், கடலிடை மூழ்கியும் பசையற உணக்குதலான் எ - று.

இவற்றால் இந்திரியங்கட்கு உறவு பூன்ட பெத்தாத்மா ஐச்வர்யகாமனாய் அஃதெய்தற்கு உபாயமாகத் தீர்த்தம் படிந்தும், மலையிடைத் தனி நின்றும், நெருப்பிடை நின்று பசையறவுணக்கியும் தவஞ்செய்தல் முதலிய கர்மங்களைக் குறித்தாராவர். இதனை

'பொருப்பிடையே நின்றும் புனற்குளித்து மைந்து
நெருப்பிடையே நிற்கவுநீர் வேண்டா' (மூன்றாந்திருவந்தாதி - ௭௬)

என வரும் பாசுரங்கொண்டுணர்க. எழுதல் - இராது நிற்றலாதலானும், கல் - பொருப்பாதலானும் 'பொருப்பிடையே நின்றும்' என்பதனையே 'கல்லின் எழுந்து' என்பதனாற் கூறினார். 'கல்லுங் கனைகடலும் வைகுந்த வானாடும்' (பெரிய திருவந்தாதி 68) என்புழிக் கல் என்பது பொருப்பாதல் காண்க. 'வடபெருங்கல்' எனப் புறப்பாட்டினும் இமயமலையைக் கூறுதல் காணலாம். புனற்குளித்து மென்பதனையே 'கடலினழுந்தி' என்று கூறிக்காட்டினார். தீர்த்தங்களிற் றலை சிறந்ததாகலின் கடலைக் கூறினார். 'நீண்ட தோள் மால் கிடந்த நீளகடனீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும்' (மூன்றாந்திரு. 69) என்றபாசுரத்தால் இதன் உயர்த்தி நன்குணரலாகும். அழுந்தல் - மூழ்குதல். நீரற என்பது பசையற உணக்குதலாதலான் நெருப்பிடை நிற்றல் கூறினார். பரமைகாந்திகள் வேண்டாவென்று தள்ளியவற்றை இப்பெத்தாத்மா ஐச்வர்யகாமனாய்ச் செய்தொழுகுமாறு கூறப்பட்டது. 'நீரற' என்பது பசையறவுணக்குதலைக் குறிப்பதாதல் 'முழூஉவள்ளுர முணக்குமள்ள' (புறம் 219) என்று கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானை நல்லிசைப்புலவர் பாடியதனான் நன்கறியலாகும். ஐச்வர்யகாமன் பல்வகைக் கர்மங்களையே தலையாகக் கொண்டு காயம்வாட்டுதலை

'படிமன்னு பல்கலன் பற்றோடறுத் தைம்புலன் வென்று
செடிமன்னு காயஞ்செற்றார்களு மாங்கவனை யில்லார்
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியு மீள்வர்கள்'

என வருந் திருவாய்மொழியானுணர்க. (4, 1, 9)

விளைக்கும் செறி பொழிற் குப்பை தருகட்பு - (அறுகாற்கு உறவன்) இவ்வாறு எழுந்து அழுந்தி நீர் அறுதலான் அவற்றின் பயனாக விளைக்கின்ற செறிந்த கற்பகச் சோலை உதிர்த்த குப்பைகள் தரும் வஞ்சம் எ-று. பொழில் என்றது, கற்பக முதலிய ஐந்தருக்களுள்ள சோலையாதலான். இதனைக் கற்பகச்சோலை என்பது தலைமையான வண்மைபற்றி. ஈண்டுக் கூறிய இந்திரச் செல்வம்,

'இன்றளிர்க் கற்பக நறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை'

என்பதும், அதுவும் அவ்வைந்தருச்சோலை யுதிர்த்ததென்பதும், நல்லறிவாளர் கண்டுகைவிட்ட மயல் (துரால்) என்பதும் தோன்றச் செறிபொழிற் குப்பை என்றார். 'குப்பை கிளர்ந்தன்ன செல்வத்தை' என்பது இவர் திருவாக்கு. இது, நல்கிய இறைவனை ஆங்கு மறப்பித்தலானும் புண்ணிய கர்மம் நசித்து மண்ணிடைத் தோன்றியவிடத்தும் அச்செல்வத்திற்கே வாசனையால் முயலச்செய்தலானும், 'குப்பை தருகட்பு' என்றார். கட்பு - களவு, வஞ்சம் எ - று. 'செல்வம் வந்துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணார்' என்ப. (பாரதம்)

'வியன் மூவுலகு பெறினும் போய்த் தானேதானேயானாலும்' (திருவாய்மொழி 8 - 10 - 2) என்று ஐச்வர்ய கைவல்யங்களைக் கூறியவிடத்து ஐச்வர்யார்த்தி மூவுலகும் அருமையிற் பெறுதல் கூறியதேனும் ஈண்டுத் தலைமைபற்றி இந்திரச் செல்வமே கருதினாரெனக் கொள்க.

1 comment:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நன்றி குமரன்!

இது நிறைந்தவுடன், அண்டகோள மெய்ப்பொருளைக் கூடலில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சுருக்கி வரைக! :)