Friday, August 28, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 11

13. அவனே தலையிலி என்பது உலகு விளைப்பவனாகிய அப்பெரியோனே தன் தலையிழந்தவனாயினான் எ - று.

நாடன் என்பதன்பின் அவனேயென அடுத்து வேண்டாத சுட்டுச்சொல் வந்தது, முன்னே எல்லாருடைய தலைகளையும் தன் தலைகளையும் படைக்கும் அவனே பின்னே தலையில்லையாயினான் என்று குறிக்கொள்ளுதற்கென அறியலாம். சிந்தாமணிப் பதிகத்தில் (4) 'தேவிபோகி...சுடுகாடவள் சேர்ந்தவாறும்' என்புழி 'தேவியவள்' என வந்தது, முன்னே இன்னமிழ்தாயினவள் பின்னே இங்ஙனஞ் சுடுகாடுபுக்காள் என உணர்த்தற்கு என்பதுபோல இதனையுங்கொள்க.

பிரமன் பலதலை படைத்துக்கொண்ட செய்த மத்ஸ்ய புராணம் ௩-ஆம் அத்யாயத்திற் (30 - 41) கண்டது. ஆண்டு இவன் தன்னுடம்பிற் றோன்றிய ஸரஸ்வதியைக் கண்டு காமித்தான் என்றும், இவனைக்கண்டு ஒவ்வோர் திசையிலும் அவள் ஒதுங்கினாள் என்றும், ஒதுங்கியதிசையெல்லாம் இருந்தபடியே தலையைப் படைத்துக்கொண்டு நோக்கினானென்றும், அதுகண்டுஸரஸ்வதி வானம் புகலாயினள் என்றும், அவள் வான்புகுதலைக் காண உச்சியில் ஐந்தாந்தலை படைத்து நோக்கினான் என்றும், இவ்வாறு ஐந்தலையன் ஆயினானென்றும், ஐந்தாந்தலையைச் சடைகளான் மறைத்திருந்தானென்றும் கூறுதல் காணலாம். இவன் ஐந்தலை வரலாறு இப்புராணங் கூறுதல் கொண்டு, இவன் முதற்கண்ணே நான்கு மில்லனாயிருந்தானென்று உய்த்துணரலாகும்.

'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும்' (குறள், 1101) ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவம் இல்லான் என்றது, இவன் காமபோகந்துய்த்தற்கேற்ற உறுப்பே இல்லையாயினான் என்பது கருதிற்று. 'ஐம்புலனு மொண்டொடிகண்ணே யுள' என்பது திருக்குறள். பின் பிரமசிரசு கிள்ளப்பட்டுச் சிவபிரான் கையது ஆயிற்று எனப் பன்னூலினுங் கேட்கப்படுதலான், தலையிலி என்றார். 'கபாலநன் மோக்கத்துக் கண்டு கொண்மின்' (திருவாய்மொழி. 4 - 10 - 4) என்புழி, நம்பிள்ளையாசிரியர் 'ஒருவன் தலைகெட்டு நின்றான்' என்று உரைத்ததனாலும் 'தலையிலி'யாதலுணர்க; 'வாணன் கையிழந்து நின்றான்' என்பதுபோல இதனையும் கொள்க.

இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க. ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினானென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம் - 'அநிருத்தாத் ததா ப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ:' எனவரும் வாக்யத்தால் அறியப்படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும்.

'தேவுமெப் பொருளும் படைக்கப்
பூவினான்முகனைப் படைத்த தேவன்' (திருவாய், 2,2,4)

என்பதனால் இப்படைப்பின் மூலம் ஸர்வேச்வரனிடத்திலே நிலைபெறுவது என்க.

No comments: