Friday, September 11, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 13

15. எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் - எழுவரும் மூவருமாகிய பதின்மர் ப்ரஜைகளைப் பெற்றனள் என்று வியப்புச் சுவைபட உரைத்தார். தசப்பிரமாக்களைப் புத்திரராக அடைந்தாள் என்பதைக் குறித்ததாம். காமாநுபவபோக ஸூசகமான முலையில்லாளாகியும், காமாநுபோகந் துய்த்தற்குரிய ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவவிசேட மில்லாதவனைக் கலந்து - வேதம் ஒவ்வொரு சுமங்கலையும் அடைய வேண்டி ஆசீர்வதித்த - பத்துமக்களையும் பயந்தனள்; இது வியப்பாகும் என்பதாம்.வேதம் பத்து மக்கள் பெறுபடி வாழ்த்தியது 'தசாஸ்யாம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி' என்னும் வாக்யத்தாலறிந்தது; 'பதின்மர்மக்களைப் பெற்று பதியைப் பதினோரா மகவாகச் செய்க' என்பது இதன் பொருள்.

இவள், பிரமாவின் சக்தியாய் அவன் உள்ளத்தமர்ந்து அவன் மானஸபுத்ரர்களான பிரமர்பதின்மரை உண்டாக்கியபடியால் இங்ஙனங் கூறினார். பிரமதேவனுடைய புத்ரர்கள் பதின்மர் என்பதும், அவர் இவரிவர் என்பதும் ச்ரிமத் பாகவதம் 3 - ஆம் ஸ்கந்தம் (12 - 22) 'மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்த்யர், புலஹர், க்ரது, ப்ருகு, வஸிஷ்டர், தக்ஷர், பத்தாமவராகிய நாரதர்' என்பதனால் அறிக. இவருள் ப்ருகு, மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது என்னும் இவர் ஸப்த ப்ரஹ்மாக்கள் என்று ச்ரி பாகவதத்தில் (11 - 14 - 4) ஒரு தொகையாக வழங்கப்படுதலான் எழுவர் மூவர் என்று பிரித்துரைத்தார். பத்தினை மூன்றும் ஏழுமாக எண்ணிக் கோடலும் பண்டை வழக்கேயாகும். 'முடிப்போது மூன்றேழென் றெண்ணினான்' (மூன்றாந் திருவந். 77) என்று பெரியார் பணித்தலானறிக.

பிரமசக்தியாய்ப் பிரமனினைவி லமர்ந்து இப்பதின்மரையுந் தோற்றுவித்தலாற் பயந்தனள் என்றார். 'திதியின் சிறுவர்' என்புழிப் போலச் சிறுவர் என்பது மக்களுக்காயிற்று.

உலகத்தை அபிவிர்த்தி செய்யவும், உயிர்கட்கு ஞானோதயஞ் செய்யவும், ஆசாரத்தை அநுஷ்டிப்பித்துத் திருத்தவும் இவரைப் பயந்தனள் என்று கருதிக் கூறினார். 'மலர்மிசை முதல்வனு மற்றவனிடைத்தோன்றி, யுலகிருளகற்றிய பதின்மரும்' எனப் பரிபாடலின் வருவது கொண்டு இதன் உண்மையுணர்க. 'சிந்தாதேவி' (சிலப்பதிகாரம்) என்பதும் புலமாமகள் என்பதும் (சிந்தாமணி) இவள் பெயராதலால், பிரமன் நினைவிலமர்தல் அறிக. இப்பதின்மரும் பிரமன் நினைவிற்றோன்றியோர் என்பது 'விதியின் மக்களும்' (பரிபாடல், ௩) என்புழி 'ஆதிப்பிரமற்கு நினைவிற்றோன்றிய பிரமர் பதின்மருள்' எனப் பரிமேலழகர் உரைத்ததனான் உணரலாம்.

இனி இரட்டுறமொழிதலான், ஸரஸ்வதியாகிய வித்யா லக்ஷ்மி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் என்று கொண்டு, மூன்றும் ஏழுமாய் அக்ஷரவொலிவடிவாய் நுண்ணியவாய் திருமந்திரம்பத்தெழுத்துக்களையும் உலகுய்ய உதவினள் எனினும் நன்கு பொருந்தும்.

அகார உகார மகாரமாகப் பிரிப்புண்பதுபற்றி ப்ரணவத்தை 'த்ர்யக்ஷரீ' 'த்ரிவ்ருத்' என வழங்குதலான் அஃது மூன்றாதல் தெள்ளிது. எஞ்சிய 'நமோ நாராயணாய' என்பது ஏழாதல் கண்டுகொள்க. அச்க்ஷரங்கள் தேவதைகளின் வடிவாதலும் உயர்த்தியும் நோக்கி உயர்திணையாற் கூறினார். 'இசைத்தலுமுரிய வேறிடத்தான' (தொல்காப்பியம்) என்பது, இலக்கணம்.

இங்ஙனம் மறைத்துக் கூறியது, மறையிற் றலைசிறத்தல் பற்றியும் இதன் கௌரவம் பற்றியும் எனக் குறிக்கொள்க. இதன் அநுக்ரக விசேடம் ப்ரஹ்லாதாழ்வான் முதலியோரிடம் நன்கு காணலாம். அக்ஷரங்கள் தெய்வவடிவே என்பதும் அவ்வவ் வக்ஷரங்கட்கு அதிதெய்வம் இவையென்பதும் அக்நிபுராணம் கூறிற்று. தமிழிலும் பாட்டியலிற் காணலாம். மந்த்ரகாரிணி ஸரஸ்வதி என்பதுபர்றி இவ்வாறு கூறப்பட்டது.

No comments: