Tuesday, June 29, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 1

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்

[6 - 2 - 83 இதழ் முதல் வாரந்தோறும் 'செங்கோல்' என்னும் தமது பத்திரிகையில் திரு. ம.பொ.சி. என்று புகழ்பெற்ற தமிழரசுக் கழகத் தலைவரான ம. பொ. சிவஞானகிராமணி அவர்கள் "கம்பநாடர் சைவரா? வைணவரா?" என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு ஸுதர்சனம் ஆசிரியர் (ஸுதர்சனர்) (ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், வழக்கறிஞர், 3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17) எழுதிய மறுப்புரை]

I. சங்ககாலத்தில் சமயநிலை

1. சில வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் தொல்காப்பியர் அரங்கில் நமது "சங்ககாலத் தமிழர் சமயம்" என்னும் நூலை அங்கு வந்திருந்த தமிழ் அறிஞர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இலவசமாக வழங்கினோம். அந்நூலைப் பெற்றுக் கொண்டவர்களில் திரு. ம. பொ. சியும் ஒருவர். அதைப் பெற்றுக் கொண்ட பல தமிழ் அறிஞர்கள் "எவராலும் மறுக்கவொண்ணாதபடி 'சங்ககாலத்தில் வைணவமதம் ஒன்றே வேதமதமாகக் கொள்ளப்பட்டுவந்தது' என்னும் உண்மையை நிலைநாட்டுவது இந்நூல்" என்று பாராட்டிவருகின்றனர். மாற்றுக்கருத்துடையவர் எவரும் இன்றுவரை அந்நூலை மறுக்கத் துணியவில்லை.

2. திரு. ம.பொ.சி. அவர்கள் தாம் அந்நூலைப் படித்ததாகவே காட்டிக் கொள்ளாமல் அந்நூலில் நாம் நிலைநாட்டியிருக்கும் முக்கியமான உண்மைக்கு முரணாக இக்கட்டுரைத் தொடரின் 1, 6, 9 - வது பகுதிகளில் பின்வருமாறு எழுதுகிறார்:-

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகச் சொல்லப்படும் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலேயே திருமாலானவர் முல்லை நிலத்து மக்களின் வழிபடு தெய்வமாகச் சொல்லப்படுகிறார். 'மாயோன் மேய காடுறை உலகம்' என்பது தொல்காப்பியச்சூத்திரம். தொல்காப்பியத்திற்கு முன்னும் பின்னும் தோன்றிய இலக்கியங்களிலேயும் திருமாலானவர் 'காடும் காடு சேர்ந்த நிலமும்' என்று தொல்காப்பியத்தால் வரையறுத்துச் சொல்லப்படும் முல்லை நிலத்து மக்களின் தெய்வமாக வருணிக்கப்படுகிறார். சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயும் காடும் காடு சேர்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்திலே வாழும் மக்கள் திருமாலை வழிபடுவதை இளங்கோவடிகள் 'ஆய்ச்சியர் குரவையிலே' காட்சிபடுத்துகின்றார். (ம. பொ. சி. கட்டுரை முதல் பகுதி)

இத்துடனின்றி, முல்லை நிலத்திலிருந்து வேறுபட்ட மலையும் மலை சேர்ந்த நிலமும் எனப்படும் குறிஞ்சி நிலத்திலே வாழும் மக்களும் திருமாலை வழிபட்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. ஆம்; தமிழகத்தின் வடக்கெல்லையிலுள்ள வேங்கடமலையிலே திருமால் கோயில் கொண்டிருப்பதை வைணவப் பெரியவனான மாங்காட்டு மறையவனையே கொண்டு நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார், இளங்கோவடிகள். 'கடலும் கடல் சேர்ந்த நிலமும்' எனப்படும் நெய்தல் பிரதேசத்திலும் திருமால் கோயில் கொண்டிருப்பதை வஞ்சிக் காண்டத்திலே இளங்கோ கூறுகின்றார். "வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக்கிடந்த நெறியாகில்லை" என்று வயல் வளம் படைத்த நன்செய் மண்டலமான சோழமண்டலத்தை இளங்கோ வருணிக்கிறார். 'வயலும் வயல் சார்ந்த நிலமும்' எனப்படும் சோழ மண்டலத்திலுள்ள திருவரங்கத்திலேயும் திருமால் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார் என்று வைணவ அந்தணரான மாங்காட்டு மறையவனைக் கொண்டு இளங்கோவடிகள் நமக்கு அறிவிக்கின்றார். இதனால் சங்க காலத்திலே காடும் காடு சேர்ந்த இடமுமான நெய்தல் (முல்லை) நிலத்திலே வாழும் மக்களுக்கு மட்டும் உரிய தனித்தெய்வமான திருமாலானவர் தமிழகத்தில் நால்வகை நிலங்களிலேயும் வாழும் மக்களால் வழிபடும் பொதுத்தெய்வம் ஆகியிருந்தது புலப்படுகின்றது. ஆழ்வாராதியர்கள் தோன்றி, திருமால் வழிபாட்டை ஒருசமயத்தாருக்குரிய கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதற்கு முன்பிருந்த நிலை இது. (ம.பொ.சி. கட்டுரை முதல் பகுதி)

சமஸ்கிருத மொழிப் புலவர்கள் வேத காலம் என்கிறார்களே, அதை சங்ககாலம் என்கிறார்கள், தமிழ்ப் புலவர்கள். கிருத்துவுக்கு முற்பட்ட காலம் அது. அந்தக் காலத்திலே, சிவனை வழிபட்டு வந்தனர் தமிழர். ஆனால் 'சிவமதம்' என்னும் பொருளிலே "சைவம்" என்பதாக ஒரு மதம் நடைமுறையில் இருக்கவில்லை. அதுபோல விஷ்ணு என்று வடமொழிப் புலவர்கள் சொல்லும் தெய்வத்தையும் "திருமால்" "மாயோன்" என்னும் பெயர்களிலே சங்ககாலத் தமிழர் வழிபட்டு வந்தனர். இந்த இருவேறு தெய்வங்களையும் மன வேறுபாடின்றி தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. சங்க நூல்களான தொல்காப்பியம் என்னும் இலக்கணத்திலேயும், "பத்துப்பாட்டு" "எட்டுத்தொகை" எனப்படும் இலக்கியங்களிலேயும் திருமாலின் அவதாரங்கள் சொல்லப்படுகின்றன. ஆம்; அங்கு மிங்கும் குறிப்புகளாக. திருமாலின் அவதாரக் கதைகளை முழு அளவில் கூறும் தமிழ் நூல் எதுவும் சங்ககாலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. (ம.பொ.சி. கட்டுரை 6-வது பகுதி)

பரிபாடலில் வரும் திருமாலைப் பற்றிய பாடல்கள் அனைத்துமே பக்திப் பாடல்களே என்பதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். (ம.பொ.சி. கட்டுரை 9-வது பகுதி)

இனி, இவற்றுக்கு பதிலுரைப்போம்.

No comments: