Wednesday, April 21, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 2

'செங்கோல்' தொடர் 3

"பிணக்கு இல்லாத சங்ககால நிலையை ஒட்டி இறைவனைப் பெயர் குறிப்பிடாது 'உலகம் யாவையும்' என்ற பாட்டில் கம்பர் 'தலைவர்' என்ற சொல்லால் கூறினார்" என்கிறார். சிவபெருமான் ஐந்தொழில் செய்பவன் என்பது சைவர் கொள்கை; அதற்கு மாறாக 'முத்தொழில் செய்யும் அலகிலாவிளையாட்டுடையான் திருமால்' என்பது வைணவர் கொள்கை. இத்திருமாலைத் 'தலைவர்' என்பது பொருத்தம் தானே. முதற்பாட்டில் 'தலைவர்' என்றும், அடுத்தபாட்டில் 'எண்ணிய மூன்றனுள் முற்குணத்தவரே முதலோர்' எனச் சத்துவகுணமாகிய முற்குணத்தையுடைய திருமாலே முதல் என்றும், அதற்கும் அடுத்தபாட்டில் அத்திருமாலாகிய அரியையே 'ஆதியந்தம் அரி எனயாவையும் - ஓதினார் அலகில்லன உள்ளன வேதம் என்பன' என்று வேதத்தின் முதலிலும் முடிவிலும் 'அரி ஓம்' என ஓதினர் என்றும், அடுத்துவரும் அயோத்தியாகாண்டம் முதலில் கடவுள் வாழ்த்தில் வெளிப்படையாக அந்த முதலே இராமன் என்பதனை,

"வான்நின்றிழிந்து வரமிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளனென்ப;
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை யிழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்திமையோர் இடுக்கண்காத்த கழல்வேந்தே"


என்றும் காட்டுகின்றார். இந்தமுறை - திருவாய்மொழியில் முதற்பத்து முதல் திருவாய்மொழியில் திருமால் பெயரைக் குறிப்பிடாது, 2ம் திருவாய்மொழி 10ம் பாசுரத்தில் 'வண்புகழ் நாரணன்' என்று காட்டுவதை அடியொற்றியுள்ளது.

'செங்கோல்' தொடர் 4

'அவர் சமய வைதிகர் அல்லர் என்பது தேற்றம்' என்கிறது. ஆனால் சைவர் என்றுமட்டும் சொல்வது பொருந்துமா?

'செங்கோல்' தொடர் 5

'கம்பரும், இராமன் திருமாலின் அவதாரம் என்பதனை வலியுறுத்துமிடங்களிலே தூய வைணவராகவே மாறிவிடுகிறார் என்பதில் சிறிதும் ஐயமில்லை' என்கிறது. (சிறிது பெருமூச்சுவிடலாம்). ஆனால் மற்ற இடங்களிலே இயல்பான சைவராகவே இருக்கிறார்போலும்!

'செங்கோல்' தொடர் 6

'இந்த இரு வேறு தெய்வங்களையும் மனவேறுபாடின்றித் தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது' என்கிறார். 'ஆயின், தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்றால் கம்பரைத் தமிழர் என்று சொல்லாது சைவர் என்பது பொருந்தாதல்லவா?' அங்கும் இங்கும் குறிப்புகளாகத் திருமாலின் அவதாரக் கதைகளை முழு அளவில் கூறும் தமிழ்நூல் எதுவும் சங்க காலத்தில் இல்லை' என்கிறார். சிவபெருமான் வரலாறுகளை முழுதும் கூறும் தமிழ்நூல்களேனும் சங்ககாலத்தில் உளதோ? என்பதனை ஐயா அவர்களே சொல்லுதல் வேண்டும்.

'தமிழர் எல்லோருமே வழிபட்டுவந்த சிவன், திருமால், கொற்றவை, முருகன் ஆகிய தெய்வங்களோடு பல்லவர் காலத்திலே ஆறாவது தெய்வமாகிய கணபதியும் தமிழகத்துக்கு வந்தார்' என்பதில் ஐந்தாவது தெய்வம் யாதோ? அறியோம். 'இந்திரனை வழிபடுவோர் ஐந்திரேயர் என்றும் உறுதியாகிவிட்ட ஷண்மதம் தோன்றுகிறது. ஆதிசங்கரர் தோற்றுவித்த சூழ்நிலை இது' என்கிறது. ஆதிசங்கரர் தோற்றுவித்த ஷண்மதம் இதுதானா? என்பதனை ஐயாவே தான் விளக்கவேண்டும்.

'செங்கோல்' தொடர் 7

'சடகோபரந்தாதி படைக்குமளவுக்கு அந்த ஆசார்யரிடம் பக்தி இருந்திருக்குமானால் தமது காப்பியத்திலே அவரைப் புகுத்தியிருக்கக் கம்பரால் முடிந்திருக்கும்; தமக்கு உணவளித்துக் காத்த சடையப்ப வள்ளலைப் புகுத்தவில்லையா?' என்கிறது செங்கோல். சேக்கிழார் - தமது தொண்டர்புராணத்திலே மணிவாசகரைக் குறிப்பிடாமையால், மணிவாசகர்க்கு முன்பு சேக்கிழார் இருந்தாரா? மணிவாசகரிடத்தில் சேக்கிழார்க்குப் பத்திமை இல்லையா? என்பதற்குச் சமாதானம் கண்டால் இதற்கும் சமாதானம் காணலாம். 'திருத்தொண்டத் தொகையிற்கூறிய அடியார்களை மட்டும் பெரியபுராணத்திலே சேக்கிழார் கூறினார்; அதனால் அதில் இல்லாத மணிவாசகப் பெருமானை அவர் கூறவில்லை' என்னலாம். ஆயின் கீழேயுள்ளதனை நோக்கத்தகும்:- அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா மலராக வெளிவந்த கம்பராமாயணம் சுந்தரகாண்டத்து முன்னுரையில் 'பழம்பெருங்காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றிற்காணப்படும் பதிகம் (நுவல்பொருட்சுருக்கம்) இராமாவதார நூலிற்காணப்படவில்லை; எனினும் இராமாவதார நூலாசிரியராகிய கம்பர், ஆழ்வார்களுள் இராமபிரான்பால் பெரிதும் ஈடுபாடுடையவரான குலசேகரர் அருளிய பெருமாள்திருமொழியுள் 'அங்கண் நெடு மதிள்புடைசூழ்' என்று தொடங்கும் பத்தாந்திருமொழியைக் கொண்டு அதன் விரியாகத் தம் இராமாவதார நூலை இயற்றியருளினார் என்று கருதலாகும். சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகையின் விரியாய் இயற்றியருளியதும் இங்கு நோக்கத்தகும். இம்முறையில் இராமபக்தராகவே மாறிய கம்பர் எந்த ஆழ்வாரையும் சொல்வதற்கில்லை; இராமவதாரம் அரங்கேற்றும்போதுதான் 'நஞ்சடகோபனைப் பாடினையோ என்று நம் பெருமாள் - விஞ்சிய ஆதரத்தாற்கேட்பக் கம்பன் விரித்துரைத்த - செஞ்சொல் அந்தாதி' என்றதனால் இராமாவதார நூலிற்சொல்லாத குறைதீரச் சடகோபரை நூறுபாடல்களால் போற்றியுள்ளார் என்பது எல்லோரும் அறிந்தது தானே! இராமாவதாரத்தில் சடகோபரைப் பற்றியோ பிற ஆழ்வார்களைப் பற்றியோ சொல்லாமை குறையாகாது. பாயிரத்துள் 'தருகை நீண்ட தயரதன்' என்று தொடங்கும் பாடலைச் சேர்த்துள்ளமை உணர்க. இஃது இடைச்செருகல் எனின் சிவனைப்பற்றிக் கூறுபவையும் இடைச்செருகலாக இருக்கலாமே!

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா மலரில் மேற்படி சுந்தரகாண்ட முன்னுரையில், இவர் இயற்றிய பிறநூல்களுள் சடகோபரந்தாதியும் ஏரெழுபதும் சிறப்புடையவை என்பதும் காண்க.

'செங்கோல்' தொடர் 8

செங்கோலார் "இரணியன் நாத்திகன்; இராவணன் சிவபக்தன்; மைந்தனுடைய வெட்டுண்ட கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்துக்கொண்டு பிள்ளைப்பருவத்தில் அவன் தன்னைத் தழுவியதை நினைத்து, ஆற்றாமை கொள்கிறான்; அப்படிப்பட்டவனையா தன் பிள்ளையையே கொலைபுரிய முயன்ற இரணியனோடு ஒப்பிடுவது" என்கிறார்.

இரணியன் நாத்திகன் என்பது எப்படிப் பொருந்தும்? தவம் செய்து இறைவனிடத்தில் வரம்பெற்றவனை நாத்திகன் என்னலாமா? வரம்பெற்றபின் இறைவனைக் காட்டிலும் யானே பெரியவன் என்று ஆணவம் கொள்கிறான்; அக்கருத்துக்கு மாறுபட்டவன் பிள்ளையாயினும் விரோதிதானே? சீதையை விட்டுவிடு என்ற இந்திரசித்தை இராவணன் வெறுக்கவில்லையா? பக்தியில் மிக்கவர்களாயிருந்தும் ஆணவத்தில் இரணியனும் இராவணனும் ஒரு தன்மையரே. தாயுமானாரும், ஆணவத்தினுமிக்க ஆங்காரத்தை வருணிக்கும்போது, 'ஆங்காரமான குலவேட' என்ற பாட்டில் 'ஈங்கார் எனக்குநிகர் என்ன ப்ரதாபித்திராவணாகாரமாகி' என்று குறித்தல் நோக்கத்தகும். முருகன் அவதாரத்தை வான்மீகி குறிப்பிட்டிருக்கவும் கம்பர் அதை நீக்கியது சரசத்துக்குப் போலும்!

'செங்கோல்' தொடர் 9

"இரணியன் வதைப்படலத்திலே பல செய்யுள்கள் கம்பநாடரின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன; சொல்லுக்குச் சொல் சுவையூட்டுவனவாக இருக்கின்றன; தூணைப் பிளந்துகொண்டு திருமால் நரசிம்மாவதாரம் எடுக்கும் இடத்திலே அண்டமே கிடுகிடுப்பது போன்ற ஒரு அச்சம் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது" என்கிறார் செங்கோலார். பல செய்யுள்கள் கம்பநாடரின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன என்றால் சில செய்யுள்கள் தானே இடைச்செருகல் என்று தோன்றுகிறது? எனவே ஐயா அவர்கள் கருத்துப்படி 'இரணியன் வதைப்படலம்' கம்பர் செய்ததுதான் எனத் தோன்றுகிறது. அங்ஙனம் இருக்க 'இரணியன் வதைப்படலம் முழுவதும் கம்பர் இயற்றியது தான் என்று ஏற்றுக்கொள்வோமானால் 'உலகமகாகவிஞர்கள் மண்டலத்திலிருந்து கம்பரைக் கொஞ்சம் தாழ்த்திவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது' என்று கூறுவது பொருந்துமா? ஆய்ந்து பார்க்க.

No comments: