Wednesday, April 21, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 2

'செங்கோல்' தொடர் 3

"பிணக்கு இல்லாத சங்ககால நிலையை ஒட்டி இறைவனைப் பெயர் குறிப்பிடாது 'உலகம் யாவையும்' என்ற பாட்டில் கம்பர் 'தலைவர்' என்ற சொல்லால் கூறினார்" என்கிறார். சிவபெருமான் ஐந்தொழில் செய்பவன் என்பது சைவர் கொள்கை; அதற்கு மாறாக 'முத்தொழில் செய்யும் அலகிலாவிளையாட்டுடையான் திருமால்' என்பது வைணவர் கொள்கை. இத்திருமாலைத் 'தலைவர்' என்பது பொருத்தம் தானே. முதற்பாட்டில் 'தலைவர்' என்றும், அடுத்தபாட்டில் 'எண்ணிய மூன்றனுள் முற்குணத்தவரே முதலோர்' எனச் சத்துவகுணமாகிய முற்குணத்தையுடைய திருமாலே முதல் என்றும், அதற்கும் அடுத்தபாட்டில் அத்திருமாலாகிய அரியையே 'ஆதியந்தம் அரி எனயாவையும் - ஓதினார் அலகில்லன உள்ளன வேதம் என்பன' என்று வேதத்தின் முதலிலும் முடிவிலும் 'அரி ஓம்' என ஓதினர் என்றும், அடுத்துவரும் அயோத்தியாகாண்டம் முதலில் கடவுள் வாழ்த்தில் வெளிப்படையாக அந்த முதலே இராமன் என்பதனை,

"வான்நின்றிழிந்து வரமிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளனென்ப;
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை யிழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்திமையோர் இடுக்கண்காத்த கழல்வேந்தே"


என்றும் காட்டுகின்றார். இந்தமுறை - திருவாய்மொழியில் முதற்பத்து முதல் திருவாய்மொழியில் திருமால் பெயரைக் குறிப்பிடாது, 2ம் திருவாய்மொழி 10ம் பாசுரத்தில் 'வண்புகழ் நாரணன்' என்று காட்டுவதை அடியொற்றியுள்ளது.

'செங்கோல்' தொடர் 4

'அவர் சமய வைதிகர் அல்லர் என்பது தேற்றம்' என்கிறது. ஆனால் சைவர் என்றுமட்டும் சொல்வது பொருந்துமா?

'செங்கோல்' தொடர் 5

'கம்பரும், இராமன் திருமாலின் அவதாரம் என்பதனை வலியுறுத்துமிடங்களிலே தூய வைணவராகவே மாறிவிடுகிறார் என்பதில் சிறிதும் ஐயமில்லை' என்கிறது. (சிறிது பெருமூச்சுவிடலாம்). ஆனால் மற்ற இடங்களிலே இயல்பான சைவராகவே இருக்கிறார்போலும்!

'செங்கோல்' தொடர் 6

'இந்த இரு வேறு தெய்வங்களையும் மனவேறுபாடின்றித் தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது' என்கிறார். 'ஆயின், தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்றால் கம்பரைத் தமிழர் என்று சொல்லாது சைவர் என்பது பொருந்தாதல்லவா?' அங்கும் இங்கும் குறிப்புகளாகத் திருமாலின் அவதாரக் கதைகளை முழு அளவில் கூறும் தமிழ்நூல் எதுவும் சங்க காலத்தில் இல்லை' என்கிறார். சிவபெருமான் வரலாறுகளை முழுதும் கூறும் தமிழ்நூல்களேனும் சங்ககாலத்தில் உளதோ? என்பதனை ஐயா அவர்களே சொல்லுதல் வேண்டும்.

'தமிழர் எல்லோருமே வழிபட்டுவந்த சிவன், திருமால், கொற்றவை, முருகன் ஆகிய தெய்வங்களோடு பல்லவர் காலத்திலே ஆறாவது தெய்வமாகிய கணபதியும் தமிழகத்துக்கு வந்தார்' என்பதில் ஐந்தாவது தெய்வம் யாதோ? அறியோம். 'இந்திரனை வழிபடுவோர் ஐந்திரேயர் என்றும் உறுதியாகிவிட்ட ஷண்மதம் தோன்றுகிறது. ஆதிசங்கரர் தோற்றுவித்த சூழ்நிலை இது' என்கிறது. ஆதிசங்கரர் தோற்றுவித்த ஷண்மதம் இதுதானா? என்பதனை ஐயாவே தான் விளக்கவேண்டும்.

'செங்கோல்' தொடர் 7

'சடகோபரந்தாதி படைக்குமளவுக்கு அந்த ஆசார்யரிடம் பக்தி இருந்திருக்குமானால் தமது காப்பியத்திலே அவரைப் புகுத்தியிருக்கக் கம்பரால் முடிந்திருக்கும்; தமக்கு உணவளித்துக் காத்த சடையப்ப வள்ளலைப் புகுத்தவில்லையா?' என்கிறது செங்கோல். சேக்கிழார் - தமது தொண்டர்புராணத்திலே மணிவாசகரைக் குறிப்பிடாமையால், மணிவாசகர்க்கு முன்பு சேக்கிழார் இருந்தாரா? மணிவாசகரிடத்தில் சேக்கிழார்க்குப் பத்திமை இல்லையா? என்பதற்குச் சமாதானம் கண்டால் இதற்கும் சமாதானம் காணலாம். 'திருத்தொண்டத் தொகையிற்கூறிய அடியார்களை மட்டும் பெரியபுராணத்திலே சேக்கிழார் கூறினார்; அதனால் அதில் இல்லாத மணிவாசகப் பெருமானை அவர் கூறவில்லை' என்னலாம். ஆயின் கீழேயுள்ளதனை நோக்கத்தகும்:- அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா மலராக வெளிவந்த கம்பராமாயணம் சுந்தரகாண்டத்து முன்னுரையில் 'பழம்பெருங்காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றிற்காணப்படும் பதிகம் (நுவல்பொருட்சுருக்கம்) இராமாவதார நூலிற்காணப்படவில்லை; எனினும் இராமாவதார நூலாசிரியராகிய கம்பர், ஆழ்வார்களுள் இராமபிரான்பால் பெரிதும் ஈடுபாடுடையவரான குலசேகரர் அருளிய பெருமாள்திருமொழியுள் 'அங்கண் நெடு மதிள்புடைசூழ்' என்று தொடங்கும் பத்தாந்திருமொழியைக் கொண்டு அதன் விரியாகத் தம் இராமாவதார நூலை இயற்றியருளினார் என்று கருதலாகும். சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகையின் விரியாய் இயற்றியருளியதும் இங்கு நோக்கத்தகும். இம்முறையில் இராமபக்தராகவே மாறிய கம்பர் எந்த ஆழ்வாரையும் சொல்வதற்கில்லை; இராமவதாரம் அரங்கேற்றும்போதுதான் 'நஞ்சடகோபனைப் பாடினையோ என்று நம் பெருமாள் - விஞ்சிய ஆதரத்தாற்கேட்பக் கம்பன் விரித்துரைத்த - செஞ்சொல் அந்தாதி' என்றதனால் இராமாவதார நூலிற்சொல்லாத குறைதீரச் சடகோபரை நூறுபாடல்களால் போற்றியுள்ளார் என்பது எல்லோரும் அறிந்தது தானே! இராமாவதாரத்தில் சடகோபரைப் பற்றியோ பிற ஆழ்வார்களைப் பற்றியோ சொல்லாமை குறையாகாது. பாயிரத்துள் 'தருகை நீண்ட தயரதன்' என்று தொடங்கும் பாடலைச் சேர்த்துள்ளமை உணர்க. இஃது இடைச்செருகல் எனின் சிவனைப்பற்றிக் கூறுபவையும் இடைச்செருகலாக இருக்கலாமே!

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா மலரில் மேற்படி சுந்தரகாண்ட முன்னுரையில், இவர் இயற்றிய பிறநூல்களுள் சடகோபரந்தாதியும் ஏரெழுபதும் சிறப்புடையவை என்பதும் காண்க.

'செங்கோல்' தொடர் 8

செங்கோலார் "இரணியன் நாத்திகன்; இராவணன் சிவபக்தன்; மைந்தனுடைய வெட்டுண்ட கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்துக்கொண்டு பிள்ளைப்பருவத்தில் அவன் தன்னைத் தழுவியதை நினைத்து, ஆற்றாமை கொள்கிறான்; அப்படிப்பட்டவனையா தன் பிள்ளையையே கொலைபுரிய முயன்ற இரணியனோடு ஒப்பிடுவது" என்கிறார்.

இரணியன் நாத்திகன் என்பது எப்படிப் பொருந்தும்? தவம் செய்து இறைவனிடத்தில் வரம்பெற்றவனை நாத்திகன் என்னலாமா? வரம்பெற்றபின் இறைவனைக் காட்டிலும் யானே பெரியவன் என்று ஆணவம் கொள்கிறான்; அக்கருத்துக்கு மாறுபட்டவன் பிள்ளையாயினும் விரோதிதானே? சீதையை விட்டுவிடு என்ற இந்திரசித்தை இராவணன் வெறுக்கவில்லையா? பக்தியில் மிக்கவர்களாயிருந்தும் ஆணவத்தில் இரணியனும் இராவணனும் ஒரு தன்மையரே. தாயுமானாரும், ஆணவத்தினுமிக்க ஆங்காரத்தை வருணிக்கும்போது, 'ஆங்காரமான குலவேட' என்ற பாட்டில் 'ஈங்கார் எனக்குநிகர் என்ன ப்ரதாபித்திராவணாகாரமாகி' என்று குறித்தல் நோக்கத்தகும். முருகன் அவதாரத்தை வான்மீகி குறிப்பிட்டிருக்கவும் கம்பர் அதை நீக்கியது சரசத்துக்குப் போலும்!

'செங்கோல்' தொடர் 9

"இரணியன் வதைப்படலத்திலே பல செய்யுள்கள் கம்பநாடரின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன; சொல்லுக்குச் சொல் சுவையூட்டுவனவாக இருக்கின்றன; தூணைப் பிளந்துகொண்டு திருமால் நரசிம்மாவதாரம் எடுக்கும் இடத்திலே அண்டமே கிடுகிடுப்பது போன்ற ஒரு அச்சம் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது" என்கிறார் செங்கோலார். பல செய்யுள்கள் கம்பநாடரின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன என்றால் சில செய்யுள்கள் தானே இடைச்செருகல் என்று தோன்றுகிறது? எனவே ஐயா அவர்கள் கருத்துப்படி 'இரணியன் வதைப்படலம்' கம்பர் செய்ததுதான் எனத் தோன்றுகிறது. அங்ஙனம் இருக்க 'இரணியன் வதைப்படலம் முழுவதும் கம்பர் இயற்றியது தான் என்று ஏற்றுக்கொள்வோமானால் 'உலகமகாகவிஞர்கள் மண்டலத்திலிருந்து கம்பரைக் கொஞ்சம் தாழ்த்திவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது' என்று கூறுவது பொருந்துமா? ஆய்ந்து பார்க்க.

Friday, April 16, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 1

[வித்வான் திரு. கி. வேங்கடசாமி ரெட்டியார், வி.பூதூர், S.A.Dt]

மதிப்பிற்குரிய உயர்திரு (சைவத்திரு) ம.பொ.சி. அவர்கள் தமது 'செங்கோல்' இதழில் (மலர்.33 இதழ் - 10 முதல்) 17 தொடரில் 'கம்பநாடர் சைவரா, வைணவரா?' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். (பிறகு 'கம்பரின் சமயக்கொள்கை' எனும் நூலாகவும் இதனை வெளியிட்டுள்ளார்.) அதனுள், முதல் தொடரில் 'ஆகவே கம்பர் சைவ சமயத்தைச் சார்ந்தவராகவே இருப்பினும், வைணவர்களின் தனித்தெய்வமாகக் கருதப்படும் திருமாலின் அவதாரமான இராமனை நாயகனாகக் கொண்ட காப்பியத்தைப் படைப்பதற்கு அவருக்குத் தடை எதுவும் இருக்கவில்லை' என்று சொல்லி, 17-வது தொடர் முடிவில் 'அதுவே சைவரான கம்பரின் குறிக்கோள்' என முடிக்கின்றார். இதனால் ஐயா அவர்கள், முன்னமேயே கம்பர் சைவர் தான் என்று உறுதிகொண்டுவிட்டார் என விளங்குகிறது. இதன் காரணம் யாதோ உரைத்திலர். சைவர்கள் சமரசவாதிகள் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். இதைப்பற்றி விளக்குவதற்குமுன் இன்றியமையாத இரு நிகழ்ச்சிகளை ஈண்டுக் குறித்தல் தகும்.

(1) திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். 'நம்மாழ்வாரும் தமிழ்நாடும்' என்ற ஒரு சிறு நூலும், 'மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற ஒரு பெருநூலும், வேறு பல நூல்களும் வெளியிட்டவர். அந்நூல்கள் என்னைக் கவர்ந்தன. சுமார் 50யாண்டுகட்குமுன் யான் எழுதிய /'காந்தியடிகள் நெஞ்சு விடு தூது' என்னும் நூற்கு அணிந்துரைபெற அவரை அண்டினேன். அவ்வமயம் உடன் இருந்தவர்கள், மாவட்டக் கல்வி அதிகாரியாகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளராகவும் இருந்த திரு. S. சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், சைவசமாஜச் செயலாளர் திரு. ம. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களும் ஆவர். /'காந்தியடிகள் நெஞ்சுவிடுதூது' என்றதுமே, திரு.வி.க. அவர்கள் சினந்துரையாடினர். "அவர் மகாத்மா அல்லர்; தெரியாமையால் அவரைப் பற்றி நூல் ஒன்று எழுதிவிட்டேன்; அதற்கு இப்போது வருந்துகிறேன். தாழ்த்தப்பட்ட மக்கட்கு 'ஹரிஜன்' என்ற பெயரைப் புதிதாகச் சூட்டினாரே! அதற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று தானே பொருள். திருடர்கள் என்றும் பொருள்படுமே!" என மேலும் ஒருமை வசனத்தில் பேசினர். பின்னர், பத்திமைவடிவாய நண்பர் ஆரியூர் வ. பதுமநாபபிள்ளையவர்கள்பால் அணிந்துரைபெற்று அப்போது அந்நூலை வெளியிட்டேன். அண்மையில் அருங்கலைக்கோன் திரு ந. சுப்புரெட்டியார் அவர்கள் ஆராய்ச்சி முன்னுரையுடன் வெளியிட்டுள்ளார். 'ஹரிஜன்' என்ற சொல் வைணவமக்களையே குறிக்குமெனக் கருதித் திரு.வி.க. அவர்கள் அடிகளாரை வெறுத்தார் எனத் தெரிகிறது. இது சமரச உணர்வு போலும்!

(2) சிவம் பெருக்கும் சீலர், சிவக்கவிமணி, தமிழ்க்கடல் இராய. சொ. அவர்களையும் தமிழுலகம் நன்கறியும். நல்ல பேச்சாளர். கவிஞர். காந்தியத்தில் திளைத்தவர். கம்பரிடத்து மிக்க ஈடுபாடு உடையவர். இவர்பால் எனக்கு மதிப்புண்டு. அவர்க்கும் என்பால் அன்புண்டு. இரு சமயநூல்களிலும் பயிற்சி உள்ளவர்; எனினும் கம்பர் சைவரே என்றே கருத்துடையவர். இதனால் - 'கம்பனும் சிவனும்' என்ற தலைப்பில் சிவனைப் பற்றிக் கம்பர் காட்டிய பாடல்களைத் தொகுத்துப் பொழிப்புரையும் எழுதியுள்ளார். 395 இடங்களில் சிவனைப் பற்றி உள்ளது. கவிமொழியாக உள்ளன 168 இடங்கள் என்று காட்டியுள்ளார். அதனுள் 'மழுவாளி' என்ற சொல் இரண்டிடத்துள்ளது என்றெழுதியுள்ளார். அந்நூலை ஊன்றிப் படித்தேன். 'மழுவாளி' என்ற சொல் உள்ள ஒருபாடல் விடுபட்டிருந்தது. அப்பாடல் ஆரணியகாண்டம் - விராதன் வதைப் படலத்துள்ளதாகும்.

"மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ உனக்கென்ன குறைவுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக் கன்றளித்த
ஐயத்தாற் சிறிதையம் தவிர்ந்தாரும் உளர் ஐயா!" என்பதாகும்.

தமிழ்க்கடல் ஐயா அவர்களை நேரில் சந்தித்தபோது இதைச் சொன்னேன். 'எப்படியோ விடுபட்டது' என்றார். இப்பாடல் சிவனுக்கு ஏற்றம் தரவில்லையாதலால் விடுத்தனரோ அல்லது உண்மையிலேயே விடுபட்டதோ அவனே அறிவான். இவ்விரு நிகழ்ச்சிகளும் சமரசத்தின் தன்மையை ஓரளவு காட்டுவன அல்லவா?

நம் செங்கோல் 'பிற்காலத்து சமய ஸ்தாபனங்கள் வரையறுத்த நியதிப்படி திருமாலானவர் வைணவ சமயத்தவரின் தெய்வமாகிறார். அதனால் இராமகாதை வைணவர்களின் சொத்தாகப் பாவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்குத் தமிழ்நாடுமட்டும் விலக்கு என்று சொல்லலாம்' என்கிறது.

இவர் கருத்துப்படி திருமாலானவர் சைவர்கட்கும் சொத்தாகப் பாவிக்கப்பட்டுவந்தார் போலும்! "நெய்தல் நிலத்தில் வாழும் மக்கட்கு மட்டும் உரிய தனித்தெய்வமான திருமாலானவர் தமிழகத்தில் நால்வகை நிலங்களிலேயும் வாழும் பொதுமக்களால் வழிபடும் பொதுத் தெய்வமாக இருந்தது புலப்படுகின்றது. ஆழ்வாராதியர்கள் தோன்றித் திருமால் வழிபாட்டை ஒருசமயத்தாருக்குரிய கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவதற்கு முன்பிருந்த நிலையிது' என்கிறது செங்கோல். 'முல்லை' என்பது 'நெய்தல்' என்றிருப்பது அச்சுப்பிழை போலும். நால்வகை நிலத்து வாழும் மக்கள் திருமாலை ஒரு சமயத்தவர்க்கே விட்டுக்கொடுத்தனர் போலும்!

'இதிலிருந்து கம்பர் காலத்திற்கு முன்பு தமிழினத்தவரிடையே சைவ-வைணவ சமயங்களைப் பொறுத்தவரையில் சமரச உணர்வு கடைப்பிடிக்கப்பட்டதென்ற உண்மையை அறியமுடிகிறது. ஆகவே, கவிச்சக்ரவர்த்தி கம்பர் சைவ சமயத்தைச் சார்ந்தவராகவே இருப்பினும்...' எனத் தொடர்கின்றது.

"தமிழினத்தவரிடையே ... ... கடைப்பிடிக்கப்பட்டது" என்பதில் சைவத்தையோ வைணவத்தையோ சாராது தமிழினத்தவர்கள், தமிழினத்தவர்களாக இருந்தார்கள் என்று கொள்ளாது, 'ஆகவே கவிச்சக்ரவர்த்தி கம்பர் சைவராகவே இருப்பினும்' என்று கொண்டது எதுபற்றியோ? தமிழினத்தவர் சமரச உணர்வோடு இருந்திருக்கலாம்; ஆயின் சைவராகத்தான் இருந்தனர் என்பதற்கு மூலம் யாதோ? அறியோம்.

'செங்கோல்' தொடர் 2

'செங்கோல்' தன் கொள்கைக்கு எடுத்துக்காட்டாகத் தொடர் 2ல் ஆதிசங்கரர், இராமலிங்கர், தியாகையர் இவர்களைக் காட்டுகின்றது. இவற்றைப் பார்ப்போம் :-

(1) ஆதிசங்கரர் - 'சைவ வைணவ ஒருமைப்பாட்டுக்கு அரும் பாடுபட்ட ஆதிசங்கரர் சைவர் என்பது மறுக்கமுடியாத பேருண்மையாகும்' என்கிறது.

ஆதிசங்கரர் சைவப்பெருமக்களால் கொலைநூல் என்று ஒதுக்கப்பட்ட ஸ்ரீபகவத்கீதைக்கு முதல்முதல் உரை எழுதியுள்ளார்; அவ்வுரையில் 'வாசுதேவனே உயர்ந்த தெய்வம்' என்று பலவிடங்களில் உறுதிப்படுத்துகின்றார்; மேலும் ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாமத்திற்கும் உரை எழுதியுள்ளார்; சிவ சகஸ்ரநாமத்திற்கு உரை எழுதவில்லை; சங்கர நாராயண ஸ்ம்ருதி என்று சேர்த்துக் கையெழுத்திடாமல் தனியாக நாராயண ஸ்ம்ருதி என்றே கையெழுத்திடுகின்றார். ஆதலால் ஆதிசங்கரர் வைணவர் என்னலாமே தவிர சைவர் என்பது பொருந்தாது. பின்னால் வந்த சிலர் பலவகை நூல்களை எழுதி சங்கரர் பெயரால் பரப்பிவிட்டனர் என்பது உலகறிந்த செய்தி. இவற்றைக் கொண்டு ஆதிசங்கரர் சைவர் என்பது அடாது.

(2) இராமலிங்க சுவாமிகள்:-

'19ம் நூற்றாண்டில் தோன்றி 'எம்மதமும் சம்மதம்' என்னும் ஒருமைப்பாட்டுக் குரலை எழுப்பி இந்து சமயத்தில் புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் காணமுயன்ற இராமலிங்க சுவாமிகளும் வைணவர்களின் தனித்தெய்வமான இராமபிரான்மீது பல செய்யுள்களைப் படைத்துள்ளார்' என்கிறது செங்கோல். எம்மதமும் சம்மதம் என்னும் ஒருமைப்பாட்டுக்குரலை இராமலிங்க சுவாமிகள் எப்பொழுது எழுப்பினார் என்று குறிப்பிடவில்லை.

திருவருட்பா அண்மைப்பதிப்பு. 907 '... ... வைண(வ)நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்கு நடுங்குவ மனமே' என்று வைண(வ)ரைக் கண்டால் மனம் நடுங்குகிறது என்பதனாலும், 1960 திருவடிப்புகழ்ச்சியில்:-

'மால்விடை இவர்ந்திடு மலர்ப்பதம் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபதம் மிக்கதிரு மால்விழி இலங்கும்பதம்
மால்தேட நின்றபதம் ஓரனந்தம்கோடி மால்தலை யலங்கற்பதம்
மால்முடிப் பதம்நெடிய மாலுளப்பதம் அந்த மாலும் அறிவரிதாம்பதம்
மால்கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட அளிக்கும்பதம்' என

எத்தனை மாலை அடுக்கலாமோ அத்தனையும் அடுக்கிய அருமைப்பாட்டாலும், 824ல் திருமாலைக் 'கடல்தூங்கும் ஒரு மாடு' என வழங்கலானும் அடிக்கடி ஆங்காங்கே திருமாலைத் தாழ்த்திப் பேசுவதாலும் சுவாமிகளின் 'எம்மதமும் சம்மதம்' என்னும் ஒருமைப்பாட்டைப் புரிந்துகொள்ளலாம்! 'மேலும் வைணவர்களின் தனித்தெய்வமான இராமபிரான் மீது பல செய்யுள்களைப் படைத்துள்ளார்' என்பதும் அப்படித்தான். சுவாமிகள் பாடிய பல்லாயிரம் செய்யுள்களில் இராமபிரான்மீது பத்து செய்யுள்கள் (1939 - 1948) பாடியுள்ளார். அதுவும் அண்மைப்பதிப்பில் 'இது கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது' என்றுள்ளதால் - இச்செய்யுள்களும் பத்தியினால் பாடப்பட்டதல்ல என்று தெரிகிறது. இவற்றுக்குச் சமாதானம் உளதேல் பிறவற்றுக்கும் சமாதானம் உண்டு எனக்கொள்க.

(3) தியாகையர்:-

'தூய சைவரான அவர் கம்பநாடரையே பின்பற்றி ராமபக்தராக வாழமுடிந்திருக்கிறது' எனச் செங்கோல் செப்புகின்றது. இதையும் பார்ப்போம் :- ஸ்ரீதியாகராஜஸ்வாமி கீர்த்தனலு. (தெலுங்குப்பதிப்பு) இது வித்வான் கே.வி. ஸ்ரீநிவாச ஐயங்காரால் பரிசோதிக்கப்பட்டு எம். ஆதி அண்ட் கம்பெனியரால் சந்த்ரா முத்ராக்ஷர சாலையில் 1930ல் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாளரின் முன்னுரை (மொழிப்பெயர்ப்பு) '...... ஐயர் அவர்களின் முத்திரையோடு இப்போது வெளியிடப்பட்டுள்ள சுமார் 700 கீர்த்தனங்களுள் ஒரு நூறு கீர்த்தனைகள் அய்யர் அவர்கள் எழுதியதல்ல என்று தெரிகிறது. ' தாரகமந்த்ரோபதேசம் பெற்று 96 கோடி ராமநாம ஜபித்து ச்ரிராமனுடைய கருணைக்கிலக்காகியிருந்து அனேக கீர்த்தனங்கள் பாடி இராமனுக்கு அர்ப்பணம்செய்த ஐயரவர்கள் சிவபக்தரா? அல்லது விஷ்ணு பக்தரா? 'ஏல நீ தயராது' எனும் கீர்த்தனையிலும் மேலும் அனேக கீர்த்தனங்களிலும் 'ராஜதரநுத' 'சசிகளாதரநுத' என்று பலமுறை சொல்லியிருப்பதனால் இவர் விசிஷ்டாத்வைத மதப்ரகாரமே சிவனைப் பரமபாகவத கோஷ்டியில் சேர்த்திருக்கிறார் அன்றிச் சிவனுக்குப் பரத்வம் சொன்னாரில்லை. இப்படி அனேக காரணங்களாலே இப்போது பழக்கத்தில் இருக்கின்ற சிவகீர்த்தனங்கள் ஐயர் அவர்கள் எழுதியதல்ல; சிலர் சில கீர்த்தனங்களை ஐயர் அவர்கள் பேரால் பெய்து பாடிப் பிழைக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

இதனால் தியாகையர் பற்றியும் ஓரளவேனும் புரிகிறதல்லவா?

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - முதல் பக்கம்

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்

('கம்பனின் சமயம்' இரண்டாம் பாகம்)
["கம்பரின் சமயக்கொள்கை" என்னும் தலைப்பில் திரு. ம.பொ.சி. அவர்கள் எழுதிய நூலுக்கு ஸுதர்சனரின் மறுப்புரை]


ஆசிரியர்:-

ஸ்ரீ S. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், M.A.B.L.,
(ஸுதர்சனர்)

'ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்' ஆசிரியர்,
3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 620 017.

------------------------
ஸுதர்சனர் மணிவிழா வெளியீடாக
பாரதீய பூர்வசிக ஸ்ரீவைஷ்ணவ சபையின்
11-வது மகாநாட்டில் வெளியிடப் பெற்றது.
18 - 11 - 1984
-----------------------

ஸ்ரீ. ரா. ஸ்ரீ. கி. ஸ்ரீநிவாஸய்யங்கார் குடும்ப
தர்ம சொத்துக்களின் ஆதரவில் வெளியிடப்படுகிறது.
டிரஸ்டிகள்:-
S. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்,M.A.B.L., அட்வகேட்.
S. ராம அய்யங்கார், B.Sc.B.L., அட்வகேட்.
---------------------------------
விலை ரூ. 8-00 தபால் 1-00
ஸ்ரீநிவாஸம் பிரஸ், 8, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17.

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 12. இறுவாய்

நம்மாழ்வார் நந்தமிழ் நாட்டில் தோன்றினார்; தோன்றிப் பிறவியாலாய பயனைப் பெற்றார்; அவர், எல்லாவற்றிற்கும் வித்து இறை ஒன்றே என்னும் உண்மை கண்டார்; அவ்விறை எங்கும் இருத்தலை உணர்ந்தார்; எங்குமுள்ள அவ்விறையை அட்ட மூர்த்தமாகவும், இயற்கை வடிவாகவும், இயற்கைப்படமாகவும் கொண்டு வழிபட்டார்; இறை மூவர் முதல் என்பதையும் இறையை உணர்தற்குச் சமரச ஞானம் இன்றியமையாதது என்பதையும் தெளிந்தார். தாம் உணர்ந்து தெளிந்ததைப் பாட்டாக உலகுக்கு உதவினார். ஆழ்வார் பெற்ற பேறு மற்றவர்க்கும் பாட்டாகத் துணை செய்கிறது. இப்பேறுபெற்ற ஒருவரை ஈன்ற நாடு நந்தமிழ்நாடு. நம்மாழ்வார் அறிவால் - அன்பால் - வழிபாட்டால் - சமரசத்தால் - பாட்டால் - தமிழ்நாடு வளர்ந்தது. அந்நாடு இப்பொழுது எவ்வாறிருக்கிறது?

தமிழ்நாடே! ஆழ்வார் காலத்தில் நீ எந்நிலையில் இருந்தாய்? இப்பொழுது எந்நிலையில் இருக்கிறாய்? உனது அறிவும் அன்பும் பாட்டும் எங்கே சென்றன? உனக்கு எத்துணையோ இடுக்கண்கள் நேர்ந்தன. அவைகளையெல்லாம் ஒடுக்கி உன் நிலை குலையாதவாறு காத்துக் கொண்டாய். இப்பொழுது நேர்ந்துவரும் இடுக்கண்களால் உன் நிலை குலையுமோ என்ற அச்சம் அடிக்கடி நிகழ்கிறது. உன் வழக்க ஒழுக்கங்கள் நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன. தமிழ் நூலாராய்ச்சி குன்றி வருகிறது. உன் வயிற்றில் பாவலர் தோன்றுவதைக் காணோம். நம்மாழ்வார் போன்ற பெரியார் பலர் உன் பால் உதிக்குமாறு ஆண்டவன் அருள் செய்வானாக.

தமிழ் மக்களே! நீங்கள் வாழும் நாட்டு நிலையைக் கருதுங்கள்; நம்மாழ்வாரும், அவர் போன்ற மற்றப் பெரியோரும் ஓதிய நூல்களை - பாக்களை - உண்மை நெறியை - நீங்கள் கைவிட்டமையே உங்கள் சிறுமைக்குக் காரணம்; நம்மாழ்வார் காலத்துக் கல்வி பெற முயலுங்கள்; நம்மாழ்வார் கொண்ட அறிவும் - அன்பும் - சமரசமும் - செறிந்த கடவுள் நெறி நிற்க முயலுங்கள்; சமயச்சண்டை செய்யாதேயுங்கள்; தெய்வ நிந்தனை புரியாதேயுங்கள்! சாதிப்பற்றைக் களையுங்கள்; நம்மாழ்வார் பெயரால் அறச்சாலை அமையுங்கள்; எல்லாரும் நம்மாழ்வாராக உழையுங்கள்; பரோபகார சிந்தையை வளருங்கள்; முழு உரிமைக்காகப் பாடுபடுங்கள். இவ்வொன்றால் உங்கள் நாடு பண்டை நிலை எய்தும், அஞ்சாதேயுங்கள்; எழுங்கள்; எழுங்கள்; எழுந்து ஆழ்வார் திருவாக்கை நோக்குங்கள்; அத்திருவாக்கின்படி நடக்க முயலுங்கள்.

***

இத்துடன் இந்நூல் நிறைவு பெற்றது!

Friday, April 9, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 11. பாட்டு

இறை உண்மையை - இறை நிலையை - இறை நேயத்தை - இறை வழிபாட்டை - இன்ன பிறவற்றை நம்மாழ்வார் எதன் வாயிலாக உலகுக்கு உணர்த்தினார்? பாட்டின் வாயிலாக என்பது சொல்லாமலே விளங்கும். ஆழ்வார் தமிழ்நாட்டைப் பாட்டால் ஓம்பினார் என்று சிறப்பாகச் சொல்லலாம். ஆழ்வாரது பாட்டியல் முன்னருஞ் சிலவிடங்களில் எடுத்துக் காட்டப்பட்டது.

பாட்டு எது? உலகம் பாட்டு; உயிர்கள் பாட்டு; இறையும் பாட்டு; இம்மூன்றையும் ஒன்றுபடுத்தியிருப்பதும் பாட்டு; எல்லாம் பாட்டு. என்றும் மகிழ்ச்சியில் மூழ்கி இருப்பவர்க்கு பாட்டு நுட்பம் இனிது விளங்கும்.

பண்டை மூதறிஞர் தங்கருத்துகளைப் பெரிதும் பாட்டாக வெளியிட்டுச் சென்றனர். இதற்குக் காரணம் என்னை? காரணங்கள் பலபடக் கூறப்படுகின்றன. அப் பல சரக்கை ஈண்டுப் பரப்ப வேண்டுவதில்லை. தலையாய காரணம் ஒன்று கூறலாம். அது, பண்டை நாளில் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தமை என்க. இயற்கை வாழ்வில் கவலை முதலியன தோன்றுவதில்லை. அவ்வாழ்வு என்றும் மகிழ்ச்சியையே ஊட்டிக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி நெஞ்சில் பாட்டுத் ததும்பி வழிவது இயல்பு.

இயற்கையைத் துருவி ஆராய்ந்தால் எங்கும் ஒலிமயமாயிருத்தல் புலனாகும். அவ்வொலியைக் கொண்டு எவ்வளவோ புதுமைகள் இந்நாளில் காணப்படுகின்றன. நெடுந்தூரத்தில் ஒருவரோடொருவர் கம்பி வாயிலாகப் பேசிக் கொள்வதை அறியாதார் இல்லை. புலன்களும் கரணங்களும் காமகுரோதங்கட்கு இரையாகாமல், இயற்கையில் ஒன்றப் பெற்று, அமைதியில் நிலைத்திருப்பவர்க்குக் கருவி முதலிய துணைகள் வேண்டுவதில்லை. இவ்வமைதி நிலை எய்தப் பெறுவோர் அமல யோகிகள் எனப்படுவர். மலயோகிகள் வேறு; அமல யோகிகள் வேறு. தொலைவில் பேசப்படுவது அமல யோகிகட்கு எளிதில் கேட்கும். அச் சக்தி அவர்கட்கு இயற்கையில் அமைகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள இயற்கை ஒலியுடன் உறவு கொண்டவர்க்குத் தூரம் என்பது குறிக்கிடுவதில்லை.

இயற்கை ஒலியில் ஆழ்வோர் இசையில் திளைப்பர். அவ்விசையின்பத்தின் மாண்பை என்னென்று சொல்வது! அதைச் சொல்வதற்குஞ் சொல் உண்டோ? அது சொல்லாகிய கட்டுக்கடங்காதது! அதன் மாண்பு என்னே, என்னே! வண்டின் மூரலிலும், சங்கின் முழக்கிலும், கிளியின் மழலையிலும், குயிலின் குரலிலும் இயற்கை இசைப்பாட்டு எழுகிறது - வானுற ஓங்கிய மூங்கில்களிலும், பழுத்துச் சாய்ந்த செஞ்சாலிக் கதிர்களிலும், கடலின் அலைகளிலும், இயற்கை இசைப்பாட்டெழுகிறது. இவ்விசைப்பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டுப் பயிற்சி பெறுவோர்க்குக் காடு மலை வயல் கடல் முதலியன பாட்டாகத் தோன்றும். காடு மலை முதலியன பாட்டாகப் பொலிவதைக் குயில் அறியும்; மயில் அறியும்; 'எல்லாம் இறை மயம்' என்னும் உண்மை கண்ட அறிவு முதிர்ந்த அன்பர் அறிவர். காடு முதலியவற்றைப் பாட்டாகப் பார்ப்போர்க்கு எல்லாம் பாட்டாகவே தோன்றும்; இயற்கை முழுவதும் பாட்டாகவே தோன்றும். எல்லாவற்றையும் பாட்டாக உணரும் நெஞ்சமன்றோ நெஞ்சம்! அந் நெஞ்சிலன்றோ பாட்டுத் தெய்வம் நடம் புரியும்!

இயற்கை, பாட்டாயின், அதன் உயிராகிய இறையும் பாட்டே. இயற்கை இறை, பாட்டு மயமாயிருக்கிறது என்று சொல்லலாம். பாட்டாக உள்ள ஒன்றைப் பாட்டால் உணர்வது எளிது. உயிர்கள், பாட்டு ஆக முயலல் வேண்டும். உயிர்களின் இயல் பாட்டே. ஆனால் அவைகள் செயற்கையில் படியப் படியப் பாட்டியலை இழக்கின்றன. அவைகள், இயற்கை வாழ்வில் தலைப்படப் படத் தங்களுக்குரிய பாட்டியலைப் பெறும். உயிர்கள் நலத்துக்கு இயற்கையோடியைந்த இனிய வாழ்வு தேவை.

ஆழ்வார் இயற்கை இறையையும் தம்மையும் பாட்டாகக் கண்டு தமிழ் பாடிய தமிழ்ச் செல்வர். அவர் தம் பாடலைத் தமிழ்க் கருவூலம் என்று கூறலாம். ஆழ்வார் திருமாலைப் பாட்டிசைக் கலையாகக் கண்டு பாடியதை,

மெல்லிய லாக்கை ... ...
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன்...

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே ... ...

தாமரைக் கண்ணனை... ...
.... ... நாவலர்
பாமருவி நிற்கத் தந்த பான்மையேய்... ...

செவிகளா லாரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் டேனுறைப்பத் துற்று...

சூழ்கண்டாய்... ... ...
யாழின் இசையே அமுதே

விண்ணுளாய்... ... ...
பண்ணுளாய் கவிதன்னுளாய் ... ...

இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.

செஞ்சொற் கவிகாள் உயிர்காத்தாட் செய்ம்மின்
திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து...

நண்ணா வசுரர்...
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி
தென்னா வென்னும் என்னம் மான்...

கண்ணுள் நின்றகாலன் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண்பொருள் ஏழிசையின் சுவைதானே...

என வரூஉம் அவர்தம் திருவாய்மொழிகளாற் காண்க.

ஆழ்வார் பாடி ஆடுதலை விரும்பி நின்றதை,

மதுசூதனனை யன்றி மற்றிலேனென்
றெத்தாலும் கருமமின்றி
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட
நின்றூழி யூழிதொறும்
விதிசூழல் புக்கெனைத்தோர் பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தாலெனக்கே லம்மான்
திரிவிக்கிரமனையே.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்...

என வரூஉம் திருவாக்குகளால் உணர்க.

நம்மாழ்வார் எல்லாவற்றையும் பாட்டாகக் கண்டு, தாமும் பாட்டாகிப் பாட்டாயுருகித் தமிழ் பாடினார். அவரை அவர்தம் பாக்களில் பார்க்கலாம். அவர், அவர்தம் பாட்டாக நமக்குக் காட்சி யளிக்கிறார்; அவரைப் பார்ப்போம்:

செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந்தா
லொப்பச் சேயரிக்கண்
அழுநீர் துளும்ப வலமரு
கின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்
ணாட்டவர் மூதுவாரம்
தொழுநீ ரிணையடிக்கே அன்பு
சூட்டிய சூழ்குழற்கே.

முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே.

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே வல்வினையேன் ஆவிகாப் பாரினியே.

பொன்னுல காளீரோ புவன
முழு தாளீரோ
நன்னிலப் புள்ளினங்காள் வினை
யாட்டியேன் நானிரந்தேன்
முன்னுல கங்களெல்லாம் படைத்த
முகில்வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கென்
னிலைமை யுரைத்தே.

கங்குலும் பகலும் கண்துயி லறியாள்
கண்ணநீர் கைகளா லிறைக்கும்
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்
தாமரைக் கண்ணென்றே தளரும்
எங்ஙனே தரிக்கேனுன்னைவிட் டென்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்
இவள் திறத் தென்செய்கின்றாயே.

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
நிகழ்வதோநீ இன்னேயானால்
சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென்
றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்தபால் நெய்யே நெய்யின் இன் சுவையே
கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே
பின்னைதோள் மணந்தபேராயா!

வந்து தோன்றாய் அன்றேலுன்
வையம் தாய மலரடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணிகொள்ளாய்
செந்தண் கமலக் கண்கைகால்
சிவந்த வாய் ஓர் கருநாயிறு
அந்தமில்லாக் கதிர்பரப்பி
அலர்ந்ததொக்கும் அம்மானே.

மல்லிகை கமழ்தென்ற லீருமாலோ
வண்குறிஞ்சி இசை தவருமாலோ
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ
செக்கர்நன் மேகங்கள் சிதைக்குமாலோ
அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான்
ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிட மறிகிலம் தமிய மாலோ.

உகக்குநல் லவரொடு முழுதந் துன்றன்
திருவுள்ள மிடர்கெடுந் தோறும் நாங்கள்
வியக்கவின் புறுதுமெம் பெண்மை யாற்றோம்
எம்பெரு மான்பசு மேய்க்கப் போகேல்
மிகப்பல அசுரர்கள் வேண்டுருவங் கொண்டு நின்
றுழிதரு வர்கஞ்சனேவ
அகப்படி லவரொடும் நின்னோ டாங்கே
அவத்தங்கள் விளையுமென் சொற்கொ ளந்தோ.

ஆழ்வார் பாக்களை ஆழ்வாரே என்று வாழ்விற் கொண்டு போற்றி உய்வோமாக.