Friday, April 16, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 1

[வித்வான் திரு. கி. வேங்கடசாமி ரெட்டியார், வி.பூதூர், S.A.Dt]

மதிப்பிற்குரிய உயர்திரு (சைவத்திரு) ம.பொ.சி. அவர்கள் தமது 'செங்கோல்' இதழில் (மலர்.33 இதழ் - 10 முதல்) 17 தொடரில் 'கம்பநாடர் சைவரா, வைணவரா?' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். (பிறகு 'கம்பரின் சமயக்கொள்கை' எனும் நூலாகவும் இதனை வெளியிட்டுள்ளார்.) அதனுள், முதல் தொடரில் 'ஆகவே கம்பர் சைவ சமயத்தைச் சார்ந்தவராகவே இருப்பினும், வைணவர்களின் தனித்தெய்வமாகக் கருதப்படும் திருமாலின் அவதாரமான இராமனை நாயகனாகக் கொண்ட காப்பியத்தைப் படைப்பதற்கு அவருக்குத் தடை எதுவும் இருக்கவில்லை' என்று சொல்லி, 17-வது தொடர் முடிவில் 'அதுவே சைவரான கம்பரின் குறிக்கோள்' என முடிக்கின்றார். இதனால் ஐயா அவர்கள், முன்னமேயே கம்பர் சைவர் தான் என்று உறுதிகொண்டுவிட்டார் என விளங்குகிறது. இதன் காரணம் யாதோ உரைத்திலர். சைவர்கள் சமரசவாதிகள் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். இதைப்பற்றி விளக்குவதற்குமுன் இன்றியமையாத இரு நிகழ்ச்சிகளை ஈண்டுக் குறித்தல் தகும்.

(1) திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். 'நம்மாழ்வாரும் தமிழ்நாடும்' என்ற ஒரு சிறு நூலும், 'மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற ஒரு பெருநூலும், வேறு பல நூல்களும் வெளியிட்டவர். அந்நூல்கள் என்னைக் கவர்ந்தன. சுமார் 50யாண்டுகட்குமுன் யான் எழுதிய /'காந்தியடிகள் நெஞ்சு விடு தூது' என்னும் நூற்கு அணிந்துரைபெற அவரை அண்டினேன். அவ்வமயம் உடன் இருந்தவர்கள், மாவட்டக் கல்வி அதிகாரியாகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளராகவும் இருந்த திரு. S. சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், சைவசமாஜச் செயலாளர் திரு. ம. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களும் ஆவர். /'காந்தியடிகள் நெஞ்சுவிடுதூது' என்றதுமே, திரு.வி.க. அவர்கள் சினந்துரையாடினர். "அவர் மகாத்மா அல்லர்; தெரியாமையால் அவரைப் பற்றி நூல் ஒன்று எழுதிவிட்டேன்; அதற்கு இப்போது வருந்துகிறேன். தாழ்த்தப்பட்ட மக்கட்கு 'ஹரிஜன்' என்ற பெயரைப் புதிதாகச் சூட்டினாரே! அதற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று தானே பொருள். திருடர்கள் என்றும் பொருள்படுமே!" என மேலும் ஒருமை வசனத்தில் பேசினர். பின்னர், பத்திமைவடிவாய நண்பர் ஆரியூர் வ. பதுமநாபபிள்ளையவர்கள்பால் அணிந்துரைபெற்று அப்போது அந்நூலை வெளியிட்டேன். அண்மையில் அருங்கலைக்கோன் திரு ந. சுப்புரெட்டியார் அவர்கள் ஆராய்ச்சி முன்னுரையுடன் வெளியிட்டுள்ளார். 'ஹரிஜன்' என்ற சொல் வைணவமக்களையே குறிக்குமெனக் கருதித் திரு.வி.க. அவர்கள் அடிகளாரை வெறுத்தார் எனத் தெரிகிறது. இது சமரச உணர்வு போலும்!

(2) சிவம் பெருக்கும் சீலர், சிவக்கவிமணி, தமிழ்க்கடல் இராய. சொ. அவர்களையும் தமிழுலகம் நன்கறியும். நல்ல பேச்சாளர். கவிஞர். காந்தியத்தில் திளைத்தவர். கம்பரிடத்து மிக்க ஈடுபாடு உடையவர். இவர்பால் எனக்கு மதிப்புண்டு. அவர்க்கும் என்பால் அன்புண்டு. இரு சமயநூல்களிலும் பயிற்சி உள்ளவர்; எனினும் கம்பர் சைவரே என்றே கருத்துடையவர். இதனால் - 'கம்பனும் சிவனும்' என்ற தலைப்பில் சிவனைப் பற்றிக் கம்பர் காட்டிய பாடல்களைத் தொகுத்துப் பொழிப்புரையும் எழுதியுள்ளார். 395 இடங்களில் சிவனைப் பற்றி உள்ளது. கவிமொழியாக உள்ளன 168 இடங்கள் என்று காட்டியுள்ளார். அதனுள் 'மழுவாளி' என்ற சொல் இரண்டிடத்துள்ளது என்றெழுதியுள்ளார். அந்நூலை ஊன்றிப் படித்தேன். 'மழுவாளி' என்ற சொல் உள்ள ஒருபாடல் விடுபட்டிருந்தது. அப்பாடல் ஆரணியகாண்டம் - விராதன் வதைப் படலத்துள்ளதாகும்.

"மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ உனக்கென்ன குறைவுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக் கன்றளித்த
ஐயத்தாற் சிறிதையம் தவிர்ந்தாரும் உளர் ஐயா!" என்பதாகும்.

தமிழ்க்கடல் ஐயா அவர்களை நேரில் சந்தித்தபோது இதைச் சொன்னேன். 'எப்படியோ விடுபட்டது' என்றார். இப்பாடல் சிவனுக்கு ஏற்றம் தரவில்லையாதலால் விடுத்தனரோ அல்லது உண்மையிலேயே விடுபட்டதோ அவனே அறிவான். இவ்விரு நிகழ்ச்சிகளும் சமரசத்தின் தன்மையை ஓரளவு காட்டுவன அல்லவா?

நம் செங்கோல் 'பிற்காலத்து சமய ஸ்தாபனங்கள் வரையறுத்த நியதிப்படி திருமாலானவர் வைணவ சமயத்தவரின் தெய்வமாகிறார். அதனால் இராமகாதை வைணவர்களின் சொத்தாகப் பாவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்குத் தமிழ்நாடுமட்டும் விலக்கு என்று சொல்லலாம்' என்கிறது.

இவர் கருத்துப்படி திருமாலானவர் சைவர்கட்கும் சொத்தாகப் பாவிக்கப்பட்டுவந்தார் போலும்! "நெய்தல் நிலத்தில் வாழும் மக்கட்கு மட்டும் உரிய தனித்தெய்வமான திருமாலானவர் தமிழகத்தில் நால்வகை நிலங்களிலேயும் வாழும் பொதுமக்களால் வழிபடும் பொதுத் தெய்வமாக இருந்தது புலப்படுகின்றது. ஆழ்வாராதியர்கள் தோன்றித் திருமால் வழிபாட்டை ஒருசமயத்தாருக்குரிய கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவதற்கு முன்பிருந்த நிலையிது' என்கிறது செங்கோல். 'முல்லை' என்பது 'நெய்தல்' என்றிருப்பது அச்சுப்பிழை போலும். நால்வகை நிலத்து வாழும் மக்கள் திருமாலை ஒரு சமயத்தவர்க்கே விட்டுக்கொடுத்தனர் போலும்!

'இதிலிருந்து கம்பர் காலத்திற்கு முன்பு தமிழினத்தவரிடையே சைவ-வைணவ சமயங்களைப் பொறுத்தவரையில் சமரச உணர்வு கடைப்பிடிக்கப்பட்டதென்ற உண்மையை அறியமுடிகிறது. ஆகவே, கவிச்சக்ரவர்த்தி கம்பர் சைவ சமயத்தைச் சார்ந்தவராகவே இருப்பினும்...' எனத் தொடர்கின்றது.

"தமிழினத்தவரிடையே ... ... கடைப்பிடிக்கப்பட்டது" என்பதில் சைவத்தையோ வைணவத்தையோ சாராது தமிழினத்தவர்கள், தமிழினத்தவர்களாக இருந்தார்கள் என்று கொள்ளாது, 'ஆகவே கவிச்சக்ரவர்த்தி கம்பர் சைவராகவே இருப்பினும்' என்று கொண்டது எதுபற்றியோ? தமிழினத்தவர் சமரச உணர்வோடு இருந்திருக்கலாம்; ஆயின் சைவராகத்தான் இருந்தனர் என்பதற்கு மூலம் யாதோ? அறியோம்.

'செங்கோல்' தொடர் 2

'செங்கோல்' தன் கொள்கைக்கு எடுத்துக்காட்டாகத் தொடர் 2ல் ஆதிசங்கரர், இராமலிங்கர், தியாகையர் இவர்களைக் காட்டுகின்றது. இவற்றைப் பார்ப்போம் :-

(1) ஆதிசங்கரர் - 'சைவ வைணவ ஒருமைப்பாட்டுக்கு அரும் பாடுபட்ட ஆதிசங்கரர் சைவர் என்பது மறுக்கமுடியாத பேருண்மையாகும்' என்கிறது.

ஆதிசங்கரர் சைவப்பெருமக்களால் கொலைநூல் என்று ஒதுக்கப்பட்ட ஸ்ரீபகவத்கீதைக்கு முதல்முதல் உரை எழுதியுள்ளார்; அவ்வுரையில் 'வாசுதேவனே உயர்ந்த தெய்வம்' என்று பலவிடங்களில் உறுதிப்படுத்துகின்றார்; மேலும் ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாமத்திற்கும் உரை எழுதியுள்ளார்; சிவ சகஸ்ரநாமத்திற்கு உரை எழுதவில்லை; சங்கர நாராயண ஸ்ம்ருதி என்று சேர்த்துக் கையெழுத்திடாமல் தனியாக நாராயண ஸ்ம்ருதி என்றே கையெழுத்திடுகின்றார். ஆதலால் ஆதிசங்கரர் வைணவர் என்னலாமே தவிர சைவர் என்பது பொருந்தாது. பின்னால் வந்த சிலர் பலவகை நூல்களை எழுதி சங்கரர் பெயரால் பரப்பிவிட்டனர் என்பது உலகறிந்த செய்தி. இவற்றைக் கொண்டு ஆதிசங்கரர் சைவர் என்பது அடாது.

(2) இராமலிங்க சுவாமிகள்:-

'19ம் நூற்றாண்டில் தோன்றி 'எம்மதமும் சம்மதம்' என்னும் ஒருமைப்பாட்டுக் குரலை எழுப்பி இந்து சமயத்தில் புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் காணமுயன்ற இராமலிங்க சுவாமிகளும் வைணவர்களின் தனித்தெய்வமான இராமபிரான்மீது பல செய்யுள்களைப் படைத்துள்ளார்' என்கிறது செங்கோல். எம்மதமும் சம்மதம் என்னும் ஒருமைப்பாட்டுக்குரலை இராமலிங்க சுவாமிகள் எப்பொழுது எழுப்பினார் என்று குறிப்பிடவில்லை.

திருவருட்பா அண்மைப்பதிப்பு. 907 '... ... வைண(வ)நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்கு நடுங்குவ மனமே' என்று வைண(வ)ரைக் கண்டால் மனம் நடுங்குகிறது என்பதனாலும், 1960 திருவடிப்புகழ்ச்சியில்:-

'மால்விடை இவர்ந்திடு மலர்ப்பதம் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபதம் மிக்கதிரு மால்விழி இலங்கும்பதம்
மால்தேட நின்றபதம் ஓரனந்தம்கோடி மால்தலை யலங்கற்பதம்
மால்முடிப் பதம்நெடிய மாலுளப்பதம் அந்த மாலும் அறிவரிதாம்பதம்
மால்கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட அளிக்கும்பதம்' என

எத்தனை மாலை அடுக்கலாமோ அத்தனையும் அடுக்கிய அருமைப்பாட்டாலும், 824ல் திருமாலைக் 'கடல்தூங்கும் ஒரு மாடு' என வழங்கலானும் அடிக்கடி ஆங்காங்கே திருமாலைத் தாழ்த்திப் பேசுவதாலும் சுவாமிகளின் 'எம்மதமும் சம்மதம்' என்னும் ஒருமைப்பாட்டைப் புரிந்துகொள்ளலாம்! 'மேலும் வைணவர்களின் தனித்தெய்வமான இராமபிரான் மீது பல செய்யுள்களைப் படைத்துள்ளார்' என்பதும் அப்படித்தான். சுவாமிகள் பாடிய பல்லாயிரம் செய்யுள்களில் இராமபிரான்மீது பத்து செய்யுள்கள் (1939 - 1948) பாடியுள்ளார். அதுவும் அண்மைப்பதிப்பில் 'இது கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது' என்றுள்ளதால் - இச்செய்யுள்களும் பத்தியினால் பாடப்பட்டதல்ல என்று தெரிகிறது. இவற்றுக்குச் சமாதானம் உளதேல் பிறவற்றுக்கும் சமாதானம் உண்டு எனக்கொள்க.

(3) தியாகையர்:-

'தூய சைவரான அவர் கம்பநாடரையே பின்பற்றி ராமபக்தராக வாழமுடிந்திருக்கிறது' எனச் செங்கோல் செப்புகின்றது. இதையும் பார்ப்போம் :- ஸ்ரீதியாகராஜஸ்வாமி கீர்த்தனலு. (தெலுங்குப்பதிப்பு) இது வித்வான் கே.வி. ஸ்ரீநிவாச ஐயங்காரால் பரிசோதிக்கப்பட்டு எம். ஆதி அண்ட் கம்பெனியரால் சந்த்ரா முத்ராக்ஷர சாலையில் 1930ல் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாளரின் முன்னுரை (மொழிப்பெயர்ப்பு) '...... ஐயர் அவர்களின் முத்திரையோடு இப்போது வெளியிடப்பட்டுள்ள சுமார் 700 கீர்த்தனங்களுள் ஒரு நூறு கீர்த்தனைகள் அய்யர் அவர்கள் எழுதியதல்ல என்று தெரிகிறது. ' தாரகமந்த்ரோபதேசம் பெற்று 96 கோடி ராமநாம ஜபித்து ச்ரிராமனுடைய கருணைக்கிலக்காகியிருந்து அனேக கீர்த்தனங்கள் பாடி இராமனுக்கு அர்ப்பணம்செய்த ஐயரவர்கள் சிவபக்தரா? அல்லது விஷ்ணு பக்தரா? 'ஏல நீ தயராது' எனும் கீர்த்தனையிலும் மேலும் அனேக கீர்த்தனங்களிலும் 'ராஜதரநுத' 'சசிகளாதரநுத' என்று பலமுறை சொல்லியிருப்பதனால் இவர் விசிஷ்டாத்வைத மதப்ரகாரமே சிவனைப் பரமபாகவத கோஷ்டியில் சேர்த்திருக்கிறார் அன்றிச் சிவனுக்குப் பரத்வம் சொன்னாரில்லை. இப்படி அனேக காரணங்களாலே இப்போது பழக்கத்தில் இருக்கின்ற சிவகீர்த்தனங்கள் ஐயர் அவர்கள் எழுதியதல்ல; சிலர் சில கீர்த்தனங்களை ஐயர் அவர்கள் பேரால் பெய்து பாடிப் பிழைக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

இதனால் தியாகையர் பற்றியும் ஓரளவேனும் புரிகிறதல்லவா?

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

?
enna aachu kumaran anna? why this book, suddenly?

குமரன் (Kumaran) said...

Nothing suddenly Ravi. This is the next book I wanted to read after finishing 'thamiznaadum Nammaazwaarum' book. That is what I am doing now. As you know, I am typing these books while reading them. I dont know what this book has exactly but again does that matter when whatever is said in these books are the opinions of the authors and not mine?!