Thursday, June 25, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 6

6. தொன்மிகு பெருமரம் என்பது அநாதியே மிகுத்த பெரிய பரப்ருஹ்மமாகிய வ்ருக்ஷம் எ-று.

காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவாலும் பரிச்சேதிக்கப்படுவதொன்றன்றே ஒருவர் அறிவிற்கு விஷயமாவது? இஃது அம்மூன்று பரிச்சேதமும் கடந்துள்ளதென்று இவ்விசேடண்ங்களாற் கொள்ளவைத்தவாறாம். தொன்மரம் என்றதனால் காலவளவையைக் கடந்ததென்றும், மிகுமரம் என்றதனால் தேசவளவையைக் கடந்ததென்றும், பெருமரம் என்றதனால் வஸ்து அளவையைக் கடந்ததென்றும் தெளிவித்தது கண்டுகொள்க. 'ப்ருஹத் ரூப:' என்னுந் திருநாமம் பற்றிப் பெருமை வஸ்துபரிச்சேதங் கடந்ததுக்கு ஆயிற்று. 'இனைத்தென வெண்வரம்பறியா யாக்கையை' என்பது பரிபாடல். இதற்குப் பரிமேலழகர் 'இனைத்தென எண்ணும் எண்ணிற்கு எல்லை யறியப்படாத வடிவினை யுடையை' என்றுரைத்தலானறிக. இக்காலத்ததென்றும், இவ்விடத்ததென்றும், இப்படித்தென்றும் அறியலாகாததென்று குறித்ததெனக் கொள்க.

மரம் என்பது உவமையாற் போந்த பெயர்; தன்னடி நீழலிற் புக்கார் பயன்றுய்த்து வாழ நிற்கும் மரம் போலுதலான் இறைவனை மரமாக்கினார். 'அருஞ்சுரத்து மரம் போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு' என்பர் நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி, 3). 'வாஸுதேவதரு' என்ப. வ்ருக்ஷ: என்பது, இறைவன் ஆயிரநாமத்துளொன்றாதல் காண்க. ச்ரி பராசரபட்டர் 'உயிர்கட்கு ஜீவனமாகி அவ்வுயிர்கள் தனக்கிழைக்கும் அபராதங்களைப் பொறுத்து நிற்றலான் மரம்' என்று பெயராயிற்றென்றார். மூன்றுலகிற்கும் நிழல் செய்தலான் இறைவன் 'பூர்புவஸ்வஸ்தரு:' என்று பெயர் சிறப்பன் என்பதும் அவ்வாயிர நாமத்தே கண்டது. ப்ரமாணங்களிற் றலைசிறந்த வேதம் 'வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவிதிஷ்டத்யேக:' என்று முழங்கிற்று. ஒருவன் மரம் போல அசையாது திவ்யலோகத்திலுள்ளானென்பது இதன் பொருள். வால்மீகி பகவானும் தாரை கூற்றால் 'நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூநாம்' (ஸாதுக்களுக்குப் புகலிடமான மரம்) என்று பெருமாளைக் கூறினான். 'ப்ரஹ்மதரு' என்று ப்ரஹ்லாதாழ்வான் கூற்றில் வைத்துப் பராசர பகவான் வெளியிட்டு அதனினின்று முக்தியென்னும் பழம் விழுவதென்னுங் கருத்தால் 'முக்தி பல ப்ரபாத:' என விளக்கியருளியதையும் ஈண்டைக்கு நோக்குக. இவ்வாழ்வார் திருப்பாட்டிற்கு இப்பராசரர் கருத்தே உடன்பாடாகும்.

இம்முன்னோர் மொழி பொருளைப் போற்றியே இவ்வாழ்வார் 'மரம்' என்றாரென்க. 'என்னை ஆக்கிக் கொண்டெனக்கே தன்னைத் தந்த கற்பகம்' என்பதும் மரங்களினுயர்ந்ததாகக் கூறியதாகும்.

அன்றியும் ஈண்டு ச்வேதத்வீபத்து அநிருத்த மூர்த்தியை 'மரம்' என்றது, அம்மூர்த்தி பச்செனத் தழைத்த திருவடிவுடையனாதல் பற்றியென்று கொள்ளத்தகும். பரிபாடலின் கண் அநிருத்தமூர்த்தியைப் 'பைங்கண் மாஅல்' என்றதனையும் அதற்குப் பரிமேலழகர் 'பசிய உடம்பினையுடைய அநிருத்தனே' 1 என உரை கூறியதனையும் நோக்கித் தெளிக. பிற்காலத்தவரும் இக்கருத்தே தழுவி 'அத்தியின் மத்தியிலே ... நித்திரைகொள்ளுந் தமாலத்துருவன்' (அழகர் கலம்பகக் காப்பு) எனப்ப் பாடியதனையுங் காண்க. மஹாபாரதம் சாந்திபர்வத்தில் நாரதமஹருஷி ச்வேதத்வீபஞ் சென்று இம்மூர்த்தியை ஸ்துதித்த ஸ்தோத்திரத்தில் 'வநஸ்பதயே நம: (வனங்கட்குப் பதியாகிய பெருமரத்திற்கு நமஸ்காரம்) என வருதலும் ஈண்டு நினைக்கத்தகும்.

'மனிசரு மற்று முற்றுமாய்' என்னுந் திருவாய்மொழி யீட்டில் 'தடங்கடற் சேர்ந்த பிரானை' என்புழி நம்பிள்ளை ஆசிரியர் - 'திருப்பாற்கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதார 2 கந்தமிறே (அவதாரங் கிளைத்தற்குரிய கிழங்கு); வெள்ளத்தரவிற் றுயிலமர்ந்த வித்திறே' என்று அருளிச்செய்ததனையும் ஈண்டைக் கேற்ப நோக்கிக் கொள்க. ப்ரச்நோபநிஷத்தில் 'ஒரு விருக்ஷத்திற் பல பறவைகளுந் தங்கியிருத்தல்போல உலகெல்லாம் பரமாத்மாவினிடத்துத் தங்கியிருப்பன' என்பதனால் இஃது உவமையாற் போந்த பெயரென்பது அறியப்படும். விஷ்ணுபுராணத்தும், மகாவிஷ்ணு விருக்ஷம் என்றும், ச்ரிதேவி அதன்கட் படர்ந்த கொடி என்றும் பராசரபகவான் அருளிச் செய்தான் (1, 8). மரம் தன் பழத்தைத் தானுண்ணாது தன்னையடைந்த உயிர் உண்ணநிற்றல்போல இறைவனுண்மை உணர்ந்துகொள்க. 'பெருமரம்' என்புழிப் பெருமை தான் பெரியதாயிருப்பதனாலும், தன்னையடைந்ததைப் பெரிதாக்குதலாலும் உள்ளது என்பர். இதனை விஷ்ணுபுராணத்தில் ப்ருஹ்மசப்தத்திற்கு ச்ரி பராசர பகவான் 'பெரிதாதலானும் பெரிதாக்குதலானும் ப்ருஹ்மம் என்று அறியப்படுவது' என்று கூறியதனாலும் உணரலாம். வெண்மணற் பரப்பில் வேரும் வித்துமின்றி ஆரணுவாகிப் பிண்டம் பூத்த தன்னிலையறியாத் தொன்மிகு பெருமரம் என்க.

--

1. ஈண்டே 'பொன்கட்பச்சை' என்புழிச் 'சிவந்த உடம்பினையுடைய காமனே' எனவுரைத்துப் 'பச்சையென்பது ப்ரத்யும்நனென்னும் வடமொழித் திரிபு' என விளக்கியதனையும் நோக்கிக் கொள்க.

2. கந்தம் - கிழங்கு. அவதார கந்தம் - அவதார மூலம். கந்தம் மூலம் கிழங்கு மூன்று மொருபொருளன.

2 comments:

R.DEVARAJAN said...

ப்ரமாணங்கள் மாலவனை ஒரு மரமாக்கி
விட்டன. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்
தன் பங்குக்கு அவனை ‘ஔதும்பரம்’ என்றும்,‘அச்வத்தம்’ என்றும் சொல்கிறது.
ஔதும்பரம் - அத்தி மரம்
அச்வத்தம் - அரச மரம்

தேவ்

குமரன் (Kumaran) said...

உண்மை தான் தேவ் ஐயா. முதன்முதலில் இந்த உரையைப் படித்த போது எனக்கும் அப்படித் தான் தோன்றியது. நன்றி.