Saturday, July 10, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 5

17. மேலும் சந்நியாசிகளின் இலக்கணத்தைக் கூறவந்த தொல்காப்பியர்,

"நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய
"
[தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71]

என்று சொல்லியிருப்பதிலிருந்து பூணூலையும், முக்கோலாகிற திரிதண்டத்தையும் தரித்த பெரியவர்களே அந்தக்காலத்தில் சந்நியாசிகளாகக் கருதப்பட்டனர் என விளங்குகிறது. பூணூலும், முக்கோலுமில்லாத சைவசந்நியாசிகளும், அத்வைத சந்நியாசிகளும் அக்காலத்தில் தோன்றவில்லையென்றோ, சான்றோர்களால் சந்நியாசிகளாகக் கருதப்படவில்லையென்றோ விளங்குகிறது. மற்ற சங்க இலக்கியங்களிலும் 'முக்கோற்பகவர்' என்று இவர்களை பாகவத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக எடுக்கையால் இவர்கள் பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்கள் எனத்தேறுகிறது. இவ்வண்ணமாக, சங்ககாலத்தில் விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட வைஷ்ணவ மதம் ஒன்றே வைதிகமதமாகக் கொள்ளப்பட்டிருக்கும்போது, சங்ககாலத்தமிழர்களை சைவர்கள் என்று ம.பொ.சி. எழுதியது அடியோடு பொருந்தாது என்று நடுநிலையாளர்க்கு நன்கு விளங்கும்.

18. இதற்குமேல் ம. பொ. சி. கேட்கக்கூடும். சங்ககாலத்தில் முருகபக்தர்களும், சிவபக்தர்களும் இருந்திருக்கிறார்களே; முருகனுக்கே திருமாலைக்காட்டிலும் பரிபாடலில் அதிகமான பாடல்கள் உள்ளனவே; ஆகையால் சங்ககாலத்தில் சைவர்கள் மிகுதியானவர்கள் என்று கூறித்தானே ஆகவேண்டும் என்பது அக்கேள்வி. இதற்கு பதில் பின்வருமாறு: -

19. முருகன் முதலான மற்ற தெய்வங்களுக்கு மிகுதியான பாடல்கள் இருந்தாலும் அப்பாடல்களில் பரம்பொருளுக்குரிய பெருமைகள் எதுவுமே பாடப்படவில்லை. திருமால்பற்றிய பாடல்களிலேயே பரம்பொருளுக்குரிய அத்தனை பெருமைகளும் காணக்கிடக்கின்றன. இதிலிருந்து சங்ககாலத்திலிருந்த அனைவருமே திருமாலை வேதம் புகழும் பரம்பொருளாகக் கொண்டிருந்தனர் என்றும், மோட்சத்தை விரும்பியவர்கள் அவனையே அடைந்து அதைப் பெற்றுப் போந்தனர் என்றும், மற்ற பயன்களை எளிதில் பெறவிரும்பியவர்கள் மற்ற தெய்வங்களையும் வழிபட்டனர் என்றும் விளங்குகிறது. மோட்சம் ஒன்றையே விரும்பியவர்களாகையாலே திருமாலைத் தவிர வேறு எவரையும் தொழாத முக்கோற்பகவர்களும், அவர்களது சீடர்களும் அக்காலத்தில் இருந்தார்கள் என்பதையும் மறுக்க இயலாது. இவர்கள் வைஷ்ணவர்களில் தலைசிறந்தவர்கள். சங்ககாலத்தில் இருந்த மற்றவர்கள் மற்ற பலன்களுக்காக மற்ற தெய்வங்களை அடைந்தாலும், அவர்களைப் பரம்பொருளாக நினையாமல் திருமால் ஒருவனையே பரம்பொருளாகக் கொண்டிருந்தார்களாகையாலே அவர்களும் வைஷ்ணவர்களே. இக்காலத்திலும் வைஷ்ணவர்களில் பெரும்பான்மையானவர்கள் இவ்வுலகப்பயன்களுக்காக மற்ற தெய்வங்களையும் வணங்குகின்றனர் என்பதும், மோட்சம் ஒன்றையே விரும்பும் ஒரு சில தலைசிறந்த வைஷ்ணவர்களே திருமாலைத்தவிர வேறு எந்த தெய்வங்களையும் நினையாத, மறந்தும் புறந்தொழாமாந்தர்களாக உள்ளனர் என்பதும் குறிக்கொள்ளத்தக்கது. கீதாசார்யனும் கீதையில் "வாஸுதே3வஸ்ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப4:" [கீ3தை 7 - 19] [கண்ணனே எல்லாம் என்று கூறும் மஹாத்மா எனக்கே மிகவும் கிடைத்தற்கு அரியவனாகவே உள்ளான்] என்று வருத்தப்பட்டானன்றோ.

20. சங்கநூல்களில் பரம்பொருளுக்குரிய எல்லாப்பெருமைகளும் திருமால் ஒருவனுக்கே கூறப்பட்டுள்ளது. மற்ற எந்த தெய்வத்திற்கும் கூறப்படவில்லை. திருமாலுக்குத் தாழ்வைக் கூறும் பிற்காலக் கட்டுக்கதைகளான (1) அடிமுடிதேடிய கதை, (2) கண்ணைப்பிடுங்கி அர்ச்சனை செய்தகதை, (3) சிவன் மத்ஸ்யாவதாரத்தை அழித்த கதை, (4) சிவன் கூர்மாவதாரத்தின் ஓட்டைப்பிரித்துத் தனக்கு ஆபரணமாகக்கொண்ட கதை, (5) சிவன் வராஹாவதாரத்தின் கொம்பை ஒடித்த கதை, (6) நரஸிம்மாவதாரத்தை, சிவன் சரபமாய் வந்து கிழித்த கதை, (7) திரிவிக்ரமனின் தோலை சிவன் உரித்து, சட்டையாகப் போர்த்துக்கொண்ட கதை, (8) ராமன் சிவலிங்க பூஜைசெய்த கதை முதலான சிவபுராணக் கதைகளில் ஒன்றுகூட சங்கநூல்களில் எடுக்கப்படவில்லை; முருகன், பிரமனைச்சிறையில் அடைத்து, படைப்புத் தொழிலை மேற்கொண்ட கதை, முருகனுடைய மயில் வைகுண்டத்தை அழித்த கதை, தகப்பனாகிய சிவனுக்கே பிரணவத்தின் பொருளை உபதேசித்த கதை முதலான கந்தபுராணக் கதைகள் எதுவும் முருகனைப்பற்றிய சங்கநூற் பாடல்களில் காணப்படவில்லை. இக்கதைகள் நாயன்மார்களுக்கு முற்பட்ட எந்தத்தென்மொழி வடமொழிக்கவிஞர்களாலும் பாடப்படவில்லை என்பதும், குறிப்பாக சிவபக்தனான காளிதாசனாலும் கூடத் தனது குமாரசம்பவத்தில் பாடப்படவில்லை என்பதும் குறிக்கொள்ளத்தக்கது.

21. பிற்காலத்தில் சைவர்கள் சிவனுக்கு "பிறவாயாக்கைப் பெரியோன்" என்று பெருமை சொல்லிக்கொள்ளத் தலைப்பட்டனர். சங்கநூலான பரிபாடலிலோ திருமாலே சிவனையுள்ளிட்ட எல்லா ஜீவர்களையும் படைத்தவன் என்று முழங்கப்படுகிறது. பிற்காலச் சைவர்கள் திருமால் அவதாரங்களை எடுக்கையாலே பரம்பொருளாக முடியாது என்று வாதம் செய்தனர். சங்கநூலான பரிபாடலோ "முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே" [பரிபாடல் 3 - 71,72] என்று திருமால் எடுக்கும் பலவகைப்பட்ட அவதாரங்கள் அனைத்தும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கே என்றும், அவன் தானே தன்விருப்பத்தால் பிறக்கிறானேயொழிய அவனைப் பிறப்பித்தவர்கள் எவரும் இலர் என்றும் முழங்கிற்று. பிற்காலத்தில் சிவபக்தரான நாயன்மார்கள் சிவனே பிறவாமையாகிற வீட்டைத்தரவல்லவன் என்று பாடினார்கள். சங்கநூல்கள் எதிலும் சிவன் அப்படிப் பாடப்பெறவில்லை. திருமாலைப்பற்றிய பாடல்களிலேயே,

"மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே
" [பரிபாடல் 3 - 2,3]

[மறுபிறப்பை அறுத்துவிடும் குற்றமற்ற திருவடிகளையுடைய நீலமணியைப்போன்ற திருமேனியைக்கொண்ட மாயோனே] என்றும், "நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்" [பரிபாடல் 15 - 15,16] [மணம்மிக்க துழாய் மாலையை அணிந்த திருமால் அளித்தாலல்லது எவராலும் வீட்டுலகத்திற்கு ஏறமுடியாது] என்றும் திருமாலே மோட்சமளிக்கவல்லவன் என முழங்கப்பெற்றது. இவற்றிலிருந்தும், சங்ககாலத் தமிழர் சமயத்தில் நாம் காட்டிய நூற்றுக்கணக்கான பிற சங்கநூல் மேற்கோள்களிலிருந்தும் சங்ககாலத்தில் அனைவரும் விஷ்ணுவையே பரம்பொருளாகக்கொண்ட வைஷ்ணவர்களாகவே விளங்கினர் என்றும், சிவன், சக்தி, முருகன் முதலான மற்ற எந்த தெய்வத்தையும் எவருமே பரம்பொருளாகக் கொள்ளவில்லையென்றும் கையிலங்கு நெல்லிக்கனியாகவும், வெள்ளிடை மலையாகவும் விளங்குகிறது.

22. மூன்று, நான்காவது பரிபாடல்களில் பரம்பொருளுக்கேயுரிய எல்லாப் பெருமைகளையும் அடுக்கடுக்காகத் திருமாலுக்குப் பாடிய கடுவன் இளவெயினனாரே, முருகனைப் பற்றிய ஐந்தாம் பாடலில் சிவனும், பார்வதியும் புணர்ந்ததனால் வீரியம் வெளிப்பட்டு, அதிலிருந்து பிறந்த குழந்தை முருகன் என்று மிகத்தெளிவாகப் பாடினார். இதிலிருந்து சிவனும், பார்வதியும் ஆண், பெண் சேர்க்கையினால் வீரியம் வெளிப்படும் ஜீவர்களே என்றும், அந்த வீரியத்திலிருந்து பிறந்த முருகனும் ஜீவனே என்றும் சங்ககாலச் சான்றோர்கள் கருதினார்கள் என்று விளங்குகிறது. ஆக, சங்ககாலத்தில் சிவனையோ, சக்தியையோ, முருகனையோ பரம்பொருளாகக்கொண்ட சைவம், சாக்தம், கௌமாரம் என்னும் மதங்கள் வழக்கில் இல்லையெனத் தெளிவாகத் தெரிகிறது. இதிலிருந்து "சங்ககாலத்தில் சிவனையும், திருமாலையும் மனவேறுபாடின்றித் தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது" என்று ம. பொ. சி. எழுதியது அப்பட்டமான பொய் என விளங்குகிறது.

2 comments:

நாடி நாடி நரசிங்கா! said...

மோட்சம் ஒன்றையே விரும்பும் ஒரு சில தலைசிறந்த வைஷ்ணவர்களே திருமாலைத்தவிர வேறு எந்த தெய்வங்களையும் நினையாத, மறந்தும் புறந்தொழாமாந்தர்களாக உள்ளனர் ::))


அது என்ன உயர்ந்த வைணவர்?.

பெருமாளை மட்டுமா வழிபடுகிறார்கள் ஆழ்வார்களை வழிபடவில்லையா!

வேறு எந்த தெய்வங்களையும் நினையாத:)

வேறு தெய்வம் என்று எதை சொல்கிறீர்கள் ?

வேறு தெய்வமே இல்லையே!
எல்லாமே பெருமாளே! சிவனும் சக்தியும் ஆதியும் அந்தமும் நானும் நீயும்
ஊனில் மேய ஆவி நீ; உறக்கமோடு உணர்ச்சி நீ;
ஆனில் மேய ஐந்தும் நீ; அவற்றுள் நின்ர தூய்மை நீ;
வானினோடு மண்ணும் நீ; வளங் கடற் பயனும் நீ;
யானும் நீ; அது அன்றி எம்பிரானும் நீ; இராமனே!

திருமழிசைப்பிரான்
:)

குமரன் ஐயா!
இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்

நாடி நாடி நரசிங்கா! said...
This comment has been removed by the author.