Saturday, May 16, 2009

எம்பெருமானாருடைய திவ்விய சரிதம் - 2

அக்காலத்தில் வீரராஜேந்திரன் என்பானுடைய மகளைப் பிடித்திருந்த பிரஹ்மரக்ஷஸ்ஸை யாதவப்பிரகாசரால் ஓட்டமுடியாமலிருந்ததையும், அவருடைய சிஷ்யரான இராமானுஜருடைய திருவடி ஸ்பரிசத்தால் பிரஹ்மரக்ஷஸ் விலகிவிட்டதையுங் கண்டு எல்லாரும் ஆச்சரியமுற்றனர்.

ஸ்ரீரங்கத்திலிருந்த ஸ்ரீ ஆளவந்தார் நம் இராமானுஜரின் வித்வத் திறமையைக் கேள்விப்பட்டு காஞ்சீபுரம் அருளாளனைச் சேவிக்க வந்த போது, யாதவப்பிரகாசர் சிஷ்யகோஷ்டியில் தேஜஸ்ஸோடு விளங்கும் இராமானுசரைத் தூரத்திலிருந்து பார்த்து மகிழ்வெய்தி, 'இவர் நம் தர்சநத்திற்கு 'ஆமுதல்வர்' ஆகக்கடவர்' என்று கடாக்ஷித்தார். அப்பொழுது அவரோடு நேர்கொண்டு சம்பாஷிக்க நேராமையால் ஸ்ரீரங்கம் திரும்பிச் சென்றார். ஆளவந்தார் ஸ்ரீரங்கம் சென்றபிறகும் இராமானுசருடைய ரூபமும் குணங்களும் அவர் மனத்தைவிட்டு அகலவில்லை. இத்தகைய தன்மைவாய்ந்த அவர்தாம் இத்தரிசனத்தை வளரச்செய்வதற்குத் தகுதிவாய்ந்தவராவரென்று சிந்தை கொண்டவராய்த் தம் எண்ணத்தைத் தலைக்கட்டி வைக்கவேண்டுமென்று அருளாளனைப் பிரார்த்தித்து வந்தார். பின், இராமானுசர் யாதவப்பிரகாசரை விட்டு நீங்கித் திருக்கச்சி நம்பியினிடம் சேர்ந்த தன்மையினை ஆளவந்தார் கேள்விப்பட்டு மிக்க சந்தோஷமடைந்து பெரிய நம்பியைக் கொண்டு இராமானுசரை வரவழைக்கலானார். இவர்கள் இருவரும் திருக்கச்சியில் உள்ளபோதே ஆளவந்தார் நோய் கொண்டிருந்தமையால் இவர்கள் ஸ்ரீரங்கம் சேர்வதற்கு சற்றுமுன்னதாக திருநாட்டிற்கு எழுந்தருளினதால், அவர் சரமதேஹத்தையாவது ஸேவிக்கலாமென்று ஸம்ஸ்காரம் செய்வதற்குமுன் அவர் தேகத்தை பாதாதிகேசம் கவனித்து வருங்கால், அவர் வலது கையில் மூன்று விரல்கள் மடங்கியிருக்கக்கண்டு அங்குள்ளவர்களை, 'இவர் விரல்கள் இப்படித்தானிருந்தனவா' என்று வினவ, அவர்கள் அப்போது தான் அப்படி இருப்பதாகத் தெரிவித்தார்கள். இவர் ஜீவியகாலத்தில் ஏதாவது குறைப்பட்டிருந்தாரா என்று கேட்க, அவர்கள் வ்யாஸ, பராசரர்களுடைய கிரந்தங்களுக்கு வியாக்யானமில்லாததும், நாலாயிரதிவ்யப் பிரபந்தத்திற்கு வியாக்யானமில்லாததும், பிரஹமசூத்திரத்திற்கு பாஷ்யம் செய்ய ஏற்ற துணையில்லையே என்றும் சொல்லிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்கள். ஆளவந்தார் மனோரதத்தைத் தாம் பூர்த்தி செய்வதாக வாக்களித்ததின் மேல் விரல்கள் நிமிர்ந்தன. இவ்வற்புதத்தைப் பார்த்து யாவரும் வியந்தனர். இச்சம்பவம் 1042 கி.பி.யில் நடந்தது.

ஆளவந்தாருடன் தாம் மனோரதித்தபடியே அர்த்த விசேடங்களையெல்லாம் கேட்பதற்கு அழகியமணவாளன் திருவுள்ளம் கொள்ளவில்லையே யென்ற கிலேசத்தினால் மணவாளனையும் சேவிக்காமல் பெருமாள்கோவிலுக்குத் திரும்பிச்சென்றார்.

No comments: