Thursday, May 28, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 3

ஈருயிர் மருங்கின் ஆருயிர் தொகுத்து என்புழி, ஈருயிர் மருங்கின் என்பது இருவகைப்பட்ட உயிர்களின் பக்கத்தில் எ-று.

மோக்ஷாநந்தத்திற்கு உபகாரமாகிய தெய்வ ஸம்பத்தையுடைய உயிர் என்றும், ஸம்ஸார பந்தத்திற்கு உபகாரமாகிய ஆஸுர ஸம்பத்தையுடைய உயிரென்றும் வகுக்கப்பட்ட இருவகை உயிர்களின் பக்கலில் என்று கொள்க. ச்ரிகீதை பதினாறாம் அத்யாயத்தில் 'இவ்வுலகிற் பிராணிகளின் ஸ்ருஷ்டி, தேவர்களின் ஸ்வபாவ முள்ளதென்றும், அஸுரர்களின் ஸ்வபாவமுள்ளதென்றும் இருவகைப்படும்' என்று பகவான் அருளிச்செய்ததை ஈண்டைக்கு நோக்கிக் கொள்க. இனி ஈருயிரென்றது ச்ரிகீதை ஏழாம் அத்யாயத்தில் பகவானைத் தொழாரும் தொழுவாருமாகிய 'துஷ்க்ருதிந: ஸுக்ருதிந:' என்று கூறப்பட்ட இருவகை உயிர்களை எனினுமாம். தொழாராகிய துஷ்க்ருதிகள் நராதமர், மாயை கவர்ந்த மதியினர், அஸுரஸ்வபாவமுள்ளவர், மூடர் என்று நால்வகையினர் எனவும், தொழுவாராகிய ஸுக்ருதிகள் ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தி, ஞானி என நால்வகையினர் எனவும், இவருள் ஞானி அத்யர்த்த ப்ரியனான மேன்மையனெனவும், அப்பெருந்தகையோன் கிடைத்தற்கரியோனெனவும், அவனே ஸர்வம் வாஸுதேவனென்னும் ஞானவான் எனவும் அருளிச் செய்தலால் தொழாரும் தொழுவாருமாகிய இருவகை உயிர்களின் பக்கலில் என்றாலும் பொருந்தும்.

'ஆருயிர் தொகுத்து' என்றது கிடைத்தற்கரிய உயிர்களாகிய தெய்வஸம்பத்து நிறைந்த ஞானிகளாகிய பரமைகாந்திகளைத் தன்னடிநீழலிற் குழாங்கொளச் செய்து என்றவாறாம். ஆருயிர் - 'ஸமஹாத்மா ஸுதுர்ல்லப:' என்றபடி தனக்குங் கிடைக்கரிய மஹாத்மாக்கள் எ-று. வாஸுதேவ தருச்சாயையை விட்டுப் புறம்போகாத பெருந்தகையார் அவரே என்க. மஹாத்மா என்பதே ஆருயிர் எனப்பட்டதெனினும் பொருந்தும். தொகுத்து என்றதனால் கிடைத்தற்கரிய இப்பரமைகாந்திகளைத் தன்னடி நீழலில் திரள்வித்தது பகவத் ப்ரயத்நமென்று காட்டியவாறு. ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய முடிவில் 'அத்யர்த்தப் பிரியம் ஞாநிநம் லப்த்வா' (இவ்வளவென்று சொல்லற்கரிய ப்ரீதியுடையவனாகிய ஞானியைத் தன் பேறாக அடைந்து) என்று ச்ரி பாஷ்யகாரர் உரைத்தருளுதலான் அளவிடப்படாத பிரியனாகிய ஞானியைப் பரதெய்வம் தன் லாபமாக அடைதல் கருத்தல்லது 'ஞானி பரதெய்வத்தை அடைந்து' என்பது ஆழ்வார் கருத்தாகாமை கண்டுகொள்க.

இனி, ஈண்டு மருங்கு என்றது சுற்றம் எனக்கொண்டு, இருவகையுயிராயுள்ள சுற்றத்திற் கிடைத்தற்கரிய தன் ஆத்மஸமாநரான அரியஞானிகளைத் தொகுத்து எனினுமாம். 'ஞானீ த்வாத்மைவ மேமதம்' (ஞானியோ என்னுயிரே யென்பது என் கொள்கை) என்னும் ச்ரி கீதையால் ஞானி பகவானுக்கு ஆத்மாவாதல் தெளியலாம். தீயவுயிரையும் சுற்றமென்றது, வெறுக்கின்ற அவர் பாலும் உறைதலானும் அவரையும் சன்மசன்மாந்தரங் காத்துச் சேறலானும், அவர்க்கும் அருள இருக்குந் தாயும் தந்தையும் தானாதலானும், அவரையும் மகவென்று கருதித் திருத்தமுயறல் காட்டியவாறு. 'தாய் தந்தை எவ்வுயிர்க்குந் தான்' என் இவ்வாழ்வாரே அருளிச்செய்தலானிதனுண்மையுணர்க. 'பிதா மாதாச ஸர்வஸ்ய' என்பது மஹாபாரதம். சுத்தஸத்வநிஷ்டரான பரமைகாந்திகளைத் தொகுத்து நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பிற் றொன் மிகு பெருமரம் என இயைக்க. தொகுத்துப் பரப்பில் மிகு மரம் என்க.

No comments: