Wednesday, May 13, 2009

முன்னுரை

கண்ணுக்குப் புலப்படாத பரம்பொருளைத் தெரிந்து பக்தி புரியவும் அதனால் எம்பெருமானுடைய கிருபைக்குப் பாத்திரர்களாகவும் வேண்டிய நமக்கு, பகவத் சரித்திரங்களைக் காட்டிலும் அவனுடைய உண்மையடியார்களுடைய திவ்விய சரிதங்களே ஏற்றவைகளாம்.

பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற ஒவ்வொருவரிடத்தும் அவரவர் ஏற்றத்திற்குத் தக்கவாறு தெய்வத்தன்மையும் அவரவர் தாழ்விற்குத் தக்கவாறு மிருகத் தன்மையும் இருக்கக் காண்கிறோம். நம்மிடத்திலுள்ள தெய்வத்தன்மை வளர்ச்சி பெறவும் மிருகத்தன்மை குறைந்து மடியவும் நம்மைப்போல் மனிதராய் நம் கண் முகப்பே மஹான்களாய் விளங்கப்பெற்றவர்களுடைய சரிதங்களே (நம்மைத் திருத்துவதற்கு) ஏற்ற கருவிகளாகும். இத்தகைய மஹான்கள் எக்குலத்தவராயினும், எம்மதத்தவராயினும், எத்தேசத்தவராயினும், இந்நிலத்தேவர்களுடைய சரிதங்களே நம்முடைய உஜ்ஜீவனத்திற்கு உற்ற துணையாகும்.

உலகம் நிறைந்த புகழுடைய மஹாவித்வான் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய ஸ்வாமிகளும் மற்றைப் பெரியோர்களும் நமக்கு மஹான்களின் சரிதங்களை அரிய பெரிய நூல்களாக உதவி புரிந்திருக்க அடியேன் இச்சிறு நூலை வெளியிடுவது அவசியமற்றதாகும். ஆனால் அடியேன் சொந்த குணானுபவத்திற்காக எழுதிய இதனை ஸ்வாமிகள் கடாக்ஷிப்பதற்காகக் கூசிய நெஞ்சினனாய் அனுப்பினேன். ஸ்வாமிகள் கிருபை கூர்ந்து ஆக்ஞாபித்ததைச் சிரமேற்கொண்டு இதைப் பதிப்பிக்கலானேன்.

இது சிறுவர்களும் சிறுமிகளும் சுலபமாய் மனதில் வாங்கிக் கொள்ளப் பயன்படுமென்றும், பின்னர் பெரிய நூல்களை வாசிக்க ஒரு தூண்டுகோலாயிருக்குமென்றும் நம்புகிறேன்.

ஆசாரியர்களில் தலைசிறந்தவரான எம்பெருமானாருடைய சரிதத்தை அடியேன் பக்திவசனாய் எழுதினேன். இதனைக் கண்ணுறும் பெரியோர்கள் இதில் மலிந்து கிடக்கும் பிழைகளைப் பொறுத்து அடியேனைக் கடாக்ஷிக்கப் பிரார்த்திக்கிறேன்.

அடியார்க்கடியன்,
M. தேவராஜராமானுஜதாஸன்.

23, ஜெனரல் முத்தியா முதலி தெருவு ஜி.டி.,
சென்னை.
14 - 9 - 50

No comments: