Thursday, May 14, 2009

எம்பெருமானிலும் எம்பெருமானார் ஏற்றம்

1. எம்பெருமான் படி:

'அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன், அன்று ஆரணச்சொல் கடல் கொண்ட ஒண்பொருள் கண்டளிப்ப, பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட...'

எம்பெருமான், கிருஷ்ணாவதாரத்தில் உபநிஷத் ஸாரமாகிய பகவத் கீதையைத் தானே உபதேசித்தான். அவ்வுபதேசன் அர்ச்சுனனைத் தவிர மற்ற யாருக்கும் பயன்படவில்லையே என்று வருத்தப்பட நேர்ந்தது. அர்ஜுனனுக்கும் பூர்த்தியாகப் பயன்பட்டிருக்குமோவென்று சந்தேகிக்கவும் இடமுளது.

1. எம்பெருமானார் படி:

'... தானுமவ்வொண்பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன், எம் இராமானுசன் தன் படியிதுவே'.

ஆனால், எம்பெருமானாரோ எம்பெருமான் உபதேசித்தும் பயனளிக்காத அந்தக் கீதையைக் கொண்டே உலகோர்களெல்லாரையும் திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆளாக்கினார்.

2. எம்பெருமான் படி:

'மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே, கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம்...'


இந்நிலவுலகில் அநேக அவதாரங்களை எம்பெருமான் எடுத்தும் அவன் திவ்விய சொரூபத்தை அறிந்து ஜனங்கள் திருந்தவில்லை. ('அவஜானந்தி மாம் மூடா:') என்னை மூடர்கள் அவமானப்படுத்துகிறார்கள் என்று வருந்தும்படி நேர்ந்தது.

2. எம்பெருமானார் படி:

(அந்த உலகோர்களெல்லாம்) 'அண்ணல் இராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே, நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணர்க்கு ஆயினரே'.

ஆனால், எம்பெருமானாருடைய அவதாரம் எம்பெருமானுடைய அவதாரத்தைக் காட்டிலும் சிறந்தது. ஏனெனில் எம்பெருமானார் அவதரித்த பின்னர் ஸம்ஸாரிகள் அறிவுக்குத் தக்கபடி ஞானத்தைப் புகட்டி எல்லாரையும் ஞானவான்களாக்கிப் பகவானுக்கு அடிமைகளாக்கினார்.

3. எம்பெருமான் படி:

'ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொறும் நைபவர்க்கு, வானம் கொடுப்பது மாதவன்...'

எம்பெருமான் யாவரொருவர் ஞானத்தினால் பக்தி, பரபக்தி, பரமபக்தி என்னும் நிலைகளையடைந்து ஸம்ஸாரத்தில் இருப்புக்கொள்ளாமல் துடிதுடிக்கிறார்களோ அவர்களைச் சிரமப்படுத்தியே அவர்களுக்கு மோக்ஷமளிக்கிறான்.

3. எம்பெருமானார் படி:

'வல்வினையேன் மனத்தில், ஈனங்கடிந்த இராமானுசன் தன்னை எய்தினார்க்கு அத்தானம் கொடுப்பது தன், தகவென்னும் சரண் கொடுத்தே'.

ஆனால், எம்பெருமானாரோ கிருபாமாத்திரப் பிரஸந்நாசாரியராகையால் ஒரு அதிகாரமும் பெறமுடியாத அடியார்களையும், அவர்களுடைய பாபங்களைப் போக்கி அவர்களைத் தம் திருவருளால் திருத்தி அவர்களும் மோக்ஷம் அடையும் படிச் செய்வார்.

4. எம்பெருமான் படி:

'சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள், அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென்றனக்கன்றருளால், தந்தவரங்கனும் தன் சரண் தந்திலன்...'

பிரளய காலத்தில் கரணங்களே பரங்களின்றி இருந்த சேதனர்களுக்குச் சிருஷ்டி காலத்தில் அவைகளைக் கொடுத்துச் சேதனர்களை ஸம்ஸாரத்தில் தள்ளி தன் சுயநலத்தைக் கருதித் தன் லீலாரஸத்திற்குச் சேதனரை எம்பெருமான் ஆளாக்குகிறான்.

4. எம்பெருமானார் படி:

'தானது தந்து, எந்தை இராமானுசன் வந்தெடுத்தனன் இன்று என்னையே'.

ஆனால், எம்பெருமானாரோ தாய் போல் பிரியபரராய், தந்தைபோல் ஹிதபரராய் பகவானுடைய திருவடிகளைக் காட்டிக் கொடுத்து நம்மை ஸம்ஸாரத்திலிருந்து உத்தரிப்பித்தார். ஆகவே, எம்பெருமானாருடைய பரமகிருபை ஏற்றத்தையுடையதாகும்.

5. எம்பெருமான் படி:

'தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக், கூராழி கொண்டு குறைப்பது...'

எம்பெருமான் தன் ஆஞ்ஞா ரூபமான வேதங்களின் கட்டளைப்படி நடவாதவர்களைத் தம் சக்கராயுதத்தைக் கொண்டு நிரஸிப்பான்.

5. எம்பெருமானார் படி:

'கொண்டலனைய வண்மை ஏரார் குணத்து எம் இராமானுசன் அவ்வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே'.

ஆனால், எம்பெருமானாரோ பாஹ்யர்களையும் குத்ருஷ்டிகளையும் வாதப் போரில் அப்போதப்போது திருவுள்ளத்தில் உதிக்கின்ற நல்ல யுக்திகளைக் கொண்டு கண்டித்துவிடுவர்.

1 comment:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இதுக்கு அடியேன் என்ன பின்னூட்டம் இடுவேன்?....

எம்பெருமானார் படி >= எம்பெருமான் படி!

இல்லையில்லை!

எம்பெருமானார் படி > எம்பெருமான் படி!