Wednesday, May 13, 2009

ஸ்ரீ காஞ்சீபுரம் மஹாவித்வான் உபந்யாஸ கேஸரி P.B. அண்ணங்கராசாரியரின் புனைந்துரை

ஸ்ரீ காஞ்சீபுரம் மஹாவித்வான் உபந்யாஸ கேஸரி P.B. அண்ணங்கராசாரியரின் புனைந்துரை

பரம பாகவத மணியும் ஸ்ரீ வைஷ்ணவ ரத்னமுமான நம் தேவராஜுலு நாயுடு காருவை நான் 25 ஆண்டுகளாக அறிவேன். இவர் அரசாஙக வூழியத்திலிருக்கும் போதே அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு. அப்போதே இவருடைய பகவத்பாகவத பக்திச் சிறப்பையும் சம்பிரதாயப் பொருள்களில் ஊற்றத்தையுங்கண்டு விலக்ஷண வ்யக்தியென்று வியந்தேன். இவர் தமது உத்யோகத்திலிருந்து விச்ராந்தியடைந்து, இரவும் பகலும் ஸம்பிரதாய நூலாராய்ச்சிகளிலும் பகவத்கதா ச்ரவணங்களிலும் மிகமிக ஈடுபட்டதனால் அடிக்கடி இவருடைய பழக்கம் நமக்கு வாய்த்தது.

பிள்ளைலோகாசாரியர் முமுக்ஷுப்படியில் 'இப்படியிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களேற்ற மறிந்து உகந்திருக்கை' என்று சாதித்தருளியபடி இவர்பால் நமக்கு உண்டான உகப்பு நமது நெஞ்சும் எம்பெருமானது திருவுள்ளமுமே அறிந்ததாகும். 'இந்தளத்திலே தாமரை பூத்தாற்போலே' என்று ஆசாரியர்கள் அருமருந்தாகச் சாதிக்கும் திருமொழியை இவரைக் காணும்போதெல்லாம் நாம் நினைப்பதுண்டு.

இப்படி நம்முடைய பேருவகைக்கு இலக்கானவிவர் சமீப காலத்தில் எம்பெருமானார் திவ்விய சரித்திரமொன்று எழுதி நமது பார்வைக்கு அனுப்பினார். அப்போது நம் தேவப்பெருமாளுடைய வைகாசித் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அச்சமயம் மஹா விவேகிகளான நமது பல நண்பர்களும் வந்து கூடியிருக்கையில் அப்புத்தகம் கிடைக்கவே பலரும் அதனைப் படிக்க நேர்ந்தது. உண்மையில் அவர்களனைவரும் உள்ளம் பூரித்தனர். இக்காலத்து மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடியவகையில் இஃது எழுதப்பட்டுள்ளதென்று மனமாரப் புகழ்ந்து கூறினார்கள். நமக்கும் அதுவே கருத்தாயிற்று. இதனை அச்சிட்டு வெளியிடுதல் நலமென்று நாமே உகந்து உணர்த்தினோம். இதனால் ஆஸ்திக பக்தர்கள் மிக்க பயன்பெறுவார்கள் என்று திண்ணமாக எண்ணுகின்றோம்.

பண்டைச் சரித்திரங்களில் கேள்வியறிவுகள் பலர்க்குப் பலவாறாக இருக்குமாதலால் இவர் கேட்டறிந்தவாறாகச் சில வரலாறுகள் இதில் அருமையாக அமைந்துள்ளன. ஸ்வாமி இராமானுஜருடைய அவதாரத்திற்கு முன் திருக்கச்சிநம்பிகள் அவரது திருத்தந்தையார்க்கு உபாயானுஷ்டான முறை தெரிவித்தருளினதாக எழுதப்பட்டுள்ள கதை போல்வன அவ்வகுப்பிற் சேர்ந்தனவென்க.

எழுத்து மூலமாக உலகுக்கு உதவி புரியவெழுந்த இப்பரமபாகவதர் இங்ஙனமே மேன்மேலும் உதவி புரிய வேணுமென்பதும் நமது ஆவல்.

இங்ஙனம்,
ஸ்ரீ காஞ்சீ - பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராசாரியார்.

காஞ்சீபுரம்,
1 - 7 - 1950.

3 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யாரின் தமிழைப் படிக்கத் தான் எவ்வளவு சுவையாக இருக்கிறது! (இவர் பின்னாளைய PB அல்லவா?)

Raghav said...

அழகான அருமையானதொரு தமிழ் கடிதம்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவி. இவர் அண்மைக்கால பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் தான்.